முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரஹானேவின் எதிர்காலம்



தொடர்ந்து ரன்கள் அடிக்காத ரஹானேவுக்கு ஏன் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பளித்துக் கொண்டே இருக்கிறது என முன்னாள் இங்கிலாந்து அணித்தலைவர் மைக்கேல் வாஹ்ன் அண்மையில் கேள்வி எழுப்பினார். ஆம், கடந்த நான்கு வருடங்களாகவே ரஹானே அவ்வப்போது தான் அரைசதம், சதம் அடிக்கிறார். என்ன ஒவ்வொன்றும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிப்பவையாக இருந்தன. இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. 2017இல் கருண் நாயர் முச்சதம் அடித்தது நினைவிருக்கும். அப்போது அவர் ரஹானேவின் இடத்திலே ஆடினார். அப்போது ரஹானே ஒன்று பிரமாதமான ஆட்டநிலையில் இல்லை. இந்தியாவில் தடவிக்கொண்டே இருந்தார், வெளிநாட்டு பவுன்ஸ் ஆகும் ஆடுதளங்களில் மட்டும் துடிப்பாக ஆடுவார். நியாயமாக இந்திய நிர்வாகம் கருண் நாயரை அடுத்து வந்த வங்கதேசத் தொடரில் ஆட வைத்திருக்க வேண்டும், ஆனால் அதற்குப் பதில் அவரை நீக்கி விட்டு ரஹானேவை கொண்டு வந்தார்கள். தனக்கு கருண் நாயர் மீது நம்பிக்கையோ விருப்பமோ இல்லை என கோலி காட்டினார். ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்து விட்டு அப்படியே தூக்கி விட்டார். கருணுக்கும் சூர்யகுமார் யாதவைப் போல மனவலிமை இல்லை - கோலி போன்றவர்களின் அதிரடி கோபம், வெறுப்பை ஆகியவற்றை அவருக்கு கையாளத் தெரியவில்லை. அப்படியே காணாமல் போய் விட்டார். ஆனால் ரஹானே தொடர்ந்து தட்டுத்தடுமாறி ஆடி வந்தார். இப்போது அவருடைய தன்னம்பிக்கை முழுக்க மறைந்து விட்டது. அவரை நீக்கினால் அது அவருக்கே ஆசுவாசமாக இருக்கும் நிலை. ஆனால் வேறொரு பிரச்சனை உள்ளது. அது தான் இங்கு முக்கியம்.


ரஹானே துணைத்தலைவர். அணிக்காக ஆடும் ஒரு வீரர். அவருக்கு வயது 32. இப்போது அவர் நீக்கப்பட்டால் ஒருவேளை ஸ்குவாடில் தக்க வைப்பட்டாலும் அவர் திரும்ப வருவது சுலபம் அல்ல. இளம் வீரர்கள் அந்த இடத்தை இனிப்பு மிட்டாய் போல எடுத்து முழுங்கிக் கொள்வார்கள். ஒருவேளை ஸ்குவாடில் இருந்து வெளியே அனுப்பி உள்ளூர் ஆட்டங்களில் ரன் அடித்து வரச் சொன்னாலும் சிக்கல் உள்ளது - இந்த கொரோனா காலகட்டத்தில் எந்தளவுக்கு உள்ளூர் ஆட்டங்கள் இனி நடைபெறும்? அப்படியே நடைபெற்றாலும் ரஹானேவால் ரன்களை சுழல்பந்தாளர்களுக்கு எதிராக அடிக்க முடியுமா? அப்படியே ஒரு வருடத்தில் அவர் நல்ல ஆட்டநிலைக்கு வந்தாலும் அப்போது அவருக்கு வயது 33 ஆகி விடும். அணியில் இருந்து விலக்கப்பட்ட எந்த மூத்த வீரர் 33 வயதுக்கு மேல் திரும்ப தேர்வு பண்ணப்பட்டிருக்கிறார் சொல்லுங்கள் - 10இல் 1 வாய்ப்பு தான் அதற்கு. இப்போது நீக்கப்பட்டால், காயங்கள் எதிர்பாராமல் ஏற்பட்டு சிலரால் ஆட முடியாமல் போனால் ஒழிய, ரஹானேவின் ஆட்டவாழ்வு ஒரு முடிவுக்கு வந்து விடும். போன வருடம் தான் ஆஸ்திரேலியாவில் நம்மை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றி வெற்றிபெறச் செய்த சாம்பியன் அவர். ஆனால் ஒரே வருடத்தில் அவருடைய ஆட்டக்காலம் முடிவது ஒரு துன்பியலாகவே இருக்கும்.


இதைக் கருத்திற்கொண்டு தான் ரஹானேவுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கலாமே என சாஸ்திரி-கோலி கூட்டணி நினைக்கிறார்கள் என்பது என் கணிப்பு. என்ன பிரச்சனை என்றால் கோலி பாவம் கருதி வாய்ப்பு கொடுத்தாலும்,  ஒரு எண்ணுக்குக் கீழே அனுப்பி அவர் தன்னம்பிக்கையை கூடுதலாக நிலைகுலைய பண்ணி விடுகிறார். இப்படி அசிங்கப்படுவதற்கு ரஹானே ஒரு வருடம் வனவாசம் போவதே நல்லது. வாழ்வு அற்புதங்களால் ஆனது என அவர் நம்ப வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.