முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜடேஜாவா அஷ்வினா?



ஏன் இந்த நான்காவது டெஸ்ட் வரை அஷ்வினுக்கு ஏன் கோலி வாய்ப்பளிக்கவில்லை எனும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பார்வை இது:


ஜடேஜாவின் மட்டையாட்டத்துக்காக மட்டுமே கோலி அவரைத் தொடர்ந்து அணியில் எடுக்கிறார். ஆனால் ஜடேஜாவால் பெரிதாக ரன் எடுக்கவும் இயலவில்லை. தொழில்நுட்பத்தை விட அவருடைய தாழ்வுணர்வு, பதற்றம், நிதானமின்மை சில வாய்ப்புகளை இத்தொடரில் அவர் வீணாக்க ஒரு காரணம். ஒரு பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டையாளராக மாற்றுவது கோலியின் நோக்கம். அது இப்போது வரை பலன் தரவில்லை. இன்னொரு சிக்கல் இது அஷ்வினை விட மேலான பந்து வீச்சாளரா ஜடேஜா எனும் கேள்வி அல்ல என்பது. இந்தியாவின் மோசமான மட்டையாட்டம் குறித்த கவலையே தொடர்ந்து ஜடேஜாவை ஒரு வேகத்தடுப்பாக கோலி மட்டையாட்ட வரிசையில் பயன்படுத்தக் காரணம். இன்றைய போட்டியில் கூட ரஹானே, பண்டுக்கு முன்னர் ஜடேஜாவை அவர் களமிறக்கினார். என்ன பிரச்சனை என்றால் கோலி எண் 4க்குப் பிறகு வரும் எந்த மட்டையாளர் மீதும் நம்பிக்கை இல்லை. அதே நேரம் ரஹானேவை அணியில் இருந்து நீக்கவும் துணிச்சல் இல்லை. இந்த அரசியலின் விளைவாகவே அஷ்வின் பலிகொடுக்கப்படுகிறார். கோலி தன் பாட்டுக்கு ஆட்டச்சூழலைக் கொண்டு அஷ்வினின் தேர்வின்மையை நியாயப்படுத்துகிறார். ஆனால் அது உண்மை அல்ல. 


இன்னொருவர் இந்த குழப்படியால், அரசியலால் பயன்பெற்றிருக்கிறார் - அவர் ஜோ ரூட். ஒருவேளை அஷ்வின் இந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தால் ரூட் ஐநூறுக்கு மேல் ரன்களை எடுத்திருக்க மாட்டார். போன ஆஸ்திரேலிய தொடரில் அஷ்வினின் பந்து வீச்சு தான் அப்போது ஒருநாள் போட்டிகளில் அபாரமான ஆட்டநிலையில் இருந்த ஸ்மித்தை சரிவை நோக்கித் தள்ளியது. இல்லாவிடில் அவர் இப்போது ரூட் செய்ததை செய்திருப்பார்.


 கோலியின் அணித்தலைமையானது வெற்றிப் பாதையில் அணி செல்லும் போது சிறப்பாகவும், தோல்வியை தொலைவில் கண்டதுமே படுமோசமாகவும் மாறுவதற்கு அவருடைய உணர்ச்சிகரமான அணுகுமுறையே காரணம் என நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தன்னாலும் ரன்கள் குவிக்க முடியவில்லை, தன் சகவீரர்களும் சொதப்புகிறார்கள் எனும் போது அவருடைய வியூகங்கள் மிக மோசமாகி விடும். நெருக்கடியின் போது அமைதியாக வியூகம் வகுத்து அணியை முன்னெடுத்து செல்ல முடிவதில்லை என்பதுடன் ரொம்ப அதர்க்கமான முடிவுகளையும் அவர் அதிமுக்கியமான தருணங்களில் எடுப்பார். இது மட்டுமே அவருடைய முக்கிய குறை - ராட்சத ராட்டினம் போல அவர் அணியை மாற்றி விடுகிறார்; ஒன்று உச்சத்தில், அடுத்த நொடி தலைகீழாக. இந்த தீவிர எதிர்நிலைகளை அவர் கைவிட்டால் இந்திய அணி மேம்படும் என்பதே உண்மை. 


ஆனால் மற்றபடி ஒரு டெஸ்ட் அணித்தலைவராக கோலி தோனியை விட மேலானவர், பல சாதனைகள் படைத்தவர் என்பதை நான் மறுக்கவில்லை. பல சமயங்களில் கோலி தன் நடவடிக்கைகளால் எனக்கு தமிழ்  சிறுபத்திரிகை உலகின் குடிகாரர்களை நினைவுபடுத்துகிறார். ஒருநொடி மகத்தான இலக்கிய சங்கதிகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். தோளில் கையிட்டு கன்னத்தில் முத்தமிடுவார்கள். அடுத்து நொடி ஒரே உதை, வசவுகள், “உன்னை இந்த நொடி கொல்லாமல் விட மாட்டேன்” எனும் பாய்ச்சல்கள். கோலி அடுத்த ஜென்மத்தில் நம் ஊரில் ஒரு ‘குடிகார இலக்கிய’ படைப்பாளியாகப் பிறக்க அனைத்து தகுதிகளும் படைத்தவர் எனத் தோன்றுகிறது.


 இப்போட்டியைப் பொறுத்தமட்டில், ஆடுதளம் பெரிதாக சுழன்று நாம் அஷ்வினை மிஸ் பண்ணுவோம் என்று தோன்றவில்லை. 3-4 நாட்களுக்குள் முடிந்து போகும் எனத் தோன்றுகிறது. யார் சோகமாக பால்கனியில் இருந்து பார்ப்பார்கள் என உங்களுக்கே தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...