Skip to main content

ஜடேஜாவா அஷ்வினா?



ஏன் இந்த நான்காவது டெஸ்ட் வரை அஷ்வினுக்கு ஏன் கோலி வாய்ப்பளிக்கவில்லை எனும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பார்வை இது:


ஜடேஜாவின் மட்டையாட்டத்துக்காக மட்டுமே கோலி அவரைத் தொடர்ந்து அணியில் எடுக்கிறார். ஆனால் ஜடேஜாவால் பெரிதாக ரன் எடுக்கவும் இயலவில்லை. தொழில்நுட்பத்தை விட அவருடைய தாழ்வுணர்வு, பதற்றம், நிதானமின்மை சில வாய்ப்புகளை இத்தொடரில் அவர் வீணாக்க ஒரு காரணம். ஒரு பந்து வீச்சு ஆல்ரவுண்டரை மட்டையாளராக மாற்றுவது கோலியின் நோக்கம். அது இப்போது வரை பலன் தரவில்லை. இன்னொரு சிக்கல் இது அஷ்வினை விட மேலான பந்து வீச்சாளரா ஜடேஜா எனும் கேள்வி அல்ல என்பது. இந்தியாவின் மோசமான மட்டையாட்டம் குறித்த கவலையே தொடர்ந்து ஜடேஜாவை ஒரு வேகத்தடுப்பாக கோலி மட்டையாட்ட வரிசையில் பயன்படுத்தக் காரணம். இன்றைய போட்டியில் கூட ரஹானே, பண்டுக்கு முன்னர் ஜடேஜாவை அவர் களமிறக்கினார். என்ன பிரச்சனை என்றால் கோலி எண் 4க்குப் பிறகு வரும் எந்த மட்டையாளர் மீதும் நம்பிக்கை இல்லை. அதே நேரம் ரஹானேவை அணியில் இருந்து நீக்கவும் துணிச்சல் இல்லை. இந்த அரசியலின் விளைவாகவே அஷ்வின் பலிகொடுக்கப்படுகிறார். கோலி தன் பாட்டுக்கு ஆட்டச்சூழலைக் கொண்டு அஷ்வினின் தேர்வின்மையை நியாயப்படுத்துகிறார். ஆனால் அது உண்மை அல்ல. 


இன்னொருவர் இந்த குழப்படியால், அரசியலால் பயன்பெற்றிருக்கிறார் - அவர் ஜோ ரூட். ஒருவேளை அஷ்வின் இந்த முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருந்தால் ரூட் ஐநூறுக்கு மேல் ரன்களை எடுத்திருக்க மாட்டார். போன ஆஸ்திரேலிய தொடரில் அஷ்வினின் பந்து வீச்சு தான் அப்போது ஒருநாள் போட்டிகளில் அபாரமான ஆட்டநிலையில் இருந்த ஸ்மித்தை சரிவை நோக்கித் தள்ளியது. இல்லாவிடில் அவர் இப்போது ரூட் செய்ததை செய்திருப்பார்.


 கோலியின் அணித்தலைமையானது வெற்றிப் பாதையில் அணி செல்லும் போது சிறப்பாகவும், தோல்வியை தொலைவில் கண்டதுமே படுமோசமாகவும் மாறுவதற்கு அவருடைய உணர்ச்சிகரமான அணுகுமுறையே காரணம் என நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தன்னாலும் ரன்கள் குவிக்க முடியவில்லை, தன் சகவீரர்களும் சொதப்புகிறார்கள் எனும் போது அவருடைய வியூகங்கள் மிக மோசமாகி விடும். நெருக்கடியின் போது அமைதியாக வியூகம் வகுத்து அணியை முன்னெடுத்து செல்ல முடிவதில்லை என்பதுடன் ரொம்ப அதர்க்கமான முடிவுகளையும் அவர் அதிமுக்கியமான தருணங்களில் எடுப்பார். இது மட்டுமே அவருடைய முக்கிய குறை - ராட்சத ராட்டினம் போல அவர் அணியை மாற்றி விடுகிறார்; ஒன்று உச்சத்தில், அடுத்த நொடி தலைகீழாக. இந்த தீவிர எதிர்நிலைகளை அவர் கைவிட்டால் இந்திய அணி மேம்படும் என்பதே உண்மை. 


ஆனால் மற்றபடி ஒரு டெஸ்ட் அணித்தலைவராக கோலி தோனியை விட மேலானவர், பல சாதனைகள் படைத்தவர் என்பதை நான் மறுக்கவில்லை. பல சமயங்களில் கோலி தன் நடவடிக்கைகளால் எனக்கு தமிழ்  சிறுபத்திரிகை உலகின் குடிகாரர்களை நினைவுபடுத்துகிறார். ஒருநொடி மகத்தான இலக்கிய சங்கதிகளைப் பேசிக் கொண்டிருப்பார்கள். தோளில் கையிட்டு கன்னத்தில் முத்தமிடுவார்கள். அடுத்து நொடி ஒரே உதை, வசவுகள், “உன்னை இந்த நொடி கொல்லாமல் விட மாட்டேன்” எனும் பாய்ச்சல்கள். கோலி அடுத்த ஜென்மத்தில் நம் ஊரில் ஒரு ‘குடிகார இலக்கிய’ படைப்பாளியாகப் பிறக்க அனைத்து தகுதிகளும் படைத்தவர் எனத் தோன்றுகிறது.


 இப்போட்டியைப் பொறுத்தமட்டில், ஆடுதளம் பெரிதாக சுழன்று நாம் அஷ்வினை மிஸ் பண்ணுவோம் என்று தோன்றவில்லை. 3-4 நாட்களுக்குள் முடிந்து போகும் எனத் தோன்றுகிறது. யார் சோகமாக பால்கனியில் இருந்து பார்ப்பார்கள் என உங்களுக்கே தெரியும்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...