முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் - சில கேள்விகள்

எனக்கு ரொம்ப நாட்களாகவே காங்கிரஸ் பாகஜவின் பி டீமோ எனும் சந்தேகம் உள்ளது. ஏனென்றால் பாஜகவை அகற்ற வேண்டும், பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனும் அவேசம் இந்துத்துவாவை விரும்பாத மக்களுக்கும், ஏனைய எதிர்க்கட்சியினருக்கும் உள்ளதைப் போல காங்கிரஸுக்கு இல்லை. இன்று நேற்றல்ல கடந்த பத்தாண்டுகளாகவே தான். நாம் ராகுல் காந்தியின் மோடி எதிர்ப்பை வைத்து மட்டும் காங்கிரஸை மதிப்பிடக் கூடாது என நினைக்கிறேன். காங்கரஸுக்குள் அவர் ஒரு தனிக்குரல் எனும் உணர்வு நமக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
 மூன்று கேள்விகளைம் கேட்கிறேன் -
1) தமிழகத்தில் அதிமுகவை எதிர்ப்பதில் ஒரு எதிர்க்கட்சியாக திமுக காட்டிய முனைப்பில் நூறில் ஒரு சதவீதமாவது காங்கிரசிடம் பாஜகவை எதிர்ப்பதில் இருந்ததுண்டா? ஒரு பக்கம் ராகுல் காந்தி அறிக்கைகளாக விடுவார், மறுபக்கம் மற்ற காங்கரஸ் தலைவர்கள் இருட்டில் பாஜகவுடன் கைகோர்த்தபடி மோடியைப் புகழ்ந்தபடி இருப்பார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக மற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சித்து இப்போது வரை நான் பார்த்ததில்லை.
அடுத்து, (2) கொள்கையளவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான வித்தியாசங்கள் கடந்த முப்பதாண்டுகளில் வெகுவாக குறைந்து விட்டது. ஆகையால் சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்க்க காங்கிரஸால் முடியாமல் போகிறதா? நமக்கு பெரியார், அண்ணா போன்று ஒரு தலைவர் உள்ளது போல காங்கிரஸுக்கு ஒரு இந்துத்துவ எதிர்ப்பு சித்தாந்தி உண்டா? காந்தியே ஒரு மென்வலதுசாரி எனும் போது அவரை வைத்து எப்படி பாஜகவை வீழ்த்த முடியும்? பாஜகவால் காந்தியை தன்வசப்படுத்த முடிகிறது, ஆனால் தமிழகத்தில் பாஜகவால் திராவிட தலைவர்களை அப்படி செய்ய முடிவதில்லை. சித்தாந்த ரீதியாகவே காங்கிரஸ் மிக பலவீனமான மென்வலதுசாரிக் கட்சியாக இருக்கிறது. அதனாலே அவர்களால் சித்தாந்த ரீதியாக பாஜகவை அடிக்க முடிவதில்லை. அதனாலே காங்கிரஸ் தலைமை கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் ஸ்டைலை போலச் செய்ய முயன்றது. தோல்வியும் உற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் பல மக்கள் விரோத முடிவுகளை காங்கிரஸால் தீவிரமாக எதிர்க்க முடியவில்லை. மக்களே தாமாக நின்று போராடி பாஜகவை பின்வாங்க செய்தனர். அப்போதெல்லாம் ராகுல் கூட தள்ளி நின்றே ஆதரவளித்தார். ஏன்? மக்களே பார்த்துக் கொள்வார்கள், நாம் புகுந்து நேரடியாக ஆதரவு கொடுத்தால் அதை பாஜக பயன்படுத்தும் என்றா? ஏன் அவ்வளவு தாழ்வுணர்வு? ஏன் ஒரு திமுகவுக்கோ கம்யூனிஸ்ட் கட்சிக்கோ அந்த அச்சம் இல்லை? கொள்கை அளவிலே இந்த முடிவுகளுக்கு பாதிக்கு பாதி இணங்கக் கூடிய கட்சியாகவே காங்கிரஸ் தலைமை உள்ளது என்பதாலா? காங்கிரஸ் தொடங்கிய திட்டங்களை, காங்கிரஸின் ஆலோசனைகளையே நாங்கள் செயல்படுத்துகிறோம் என பாஜக நியாயப்படுத்தியதில் உண்மை இல்லையா? அதெப்படி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒரே கொள்கை, நிலைப்பாடு சில முடிவுகளில் இருக்க முடியும்? போராடும் மக்களுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட இக்கட்சிக்கு இல்லை, காற்றடிக்கும் திசைக்கு வளைந்து கொடுப்பதைத் தவிர என்பதாலா?

3) இறுதியாக, பாஜகவினர் தொடர்ந்து விமர்சிக்கிற தலைவராக நேரு மட்டுமே ஏன் இருக்கிறார். காந்தியை, இந்திராவை, ராஜீவை, அட மன்மோகன் சிங்கைக் கூட  இந்துத்துவர்கள் தீவிரமாக விமர்சிப்பதில்லையே? மோடி தனக்கு இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உண்டென்று கூட சொல்லி இருக்கிறார். ஏன் வரலாற்றில் நேரு மட்டுமே அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறார்? சித்தாந்த ரீதியாக மற்ற காங்கிரஸ் தலைவர்கள் / பிரதமர்கள் தமக்கு இணக்கமானவர்கள் என பாஜக கருதுகிறதா?

ஆக காங்கிரஸ் இன்று பலவீனமான மாற்றுக் கட்சியாகத் தோன்றுவதற்கு காரணம் ராகுல் அல்ல தானே? அது காங்கிரஸின் அடித்தளத்தில் உள்ள விரிசல்களினால் அல்லவா? 

வலதுசாரிகளுக்கு நேரெதிரான சித்தாந்த தலைமையாக தம்மை அறிந்து கொண்டு மக்களுக்கும் அவ்வாறே தம்மை முன்வைக்காமல் காங்கிரஸால் மோடியை வீழ்த்த முடியுமா? ஒரு ஏ டீம் இருக்கும் போது மக்கள் ஒரு பி டீமுக்கு வாக்களிப்பார்களா? அப்படி வாக்களித்தாலும் அது தொலைநோக்கில் இந்நாட்டுக்கு நல்லதா? 
நேருவின் காலத்தில் காங்கிரஸ் தன்னை ஒரு இடதுதன்மை கொண்ட மையவாத கட்சியாக உருமாற்றியது. அதையாவது ராகுல் தலைமையில் இப்போதுள்ள கட்சியால் செய்ய முடியுமா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.