Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

காங்கிரஸ் - சில கேள்விகள்

எனக்கு ரொம்ப நாட்களாகவே காங்கிரஸ் பாகஜவின் பி டீமோ எனும் சந்தேகம் உள்ளது. ஏனென்றால் பாஜகவை அகற்ற வேண்டும், பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனும் அவேசம் இந்துத்துவாவை விரும்பாத மக்களுக்கும், ஏனைய எதிர்க்கட்சியினருக்கும் உள்ளதைப் போல காங்கிரஸுக்கு இல்லை. இன்று நேற்றல்ல கடந்த பத்தாண்டுகளாகவே தான். நாம் ராகுல் காந்தியின் மோடி எதிர்ப்பை வைத்து மட்டும் காங்கிரஸை மதிப்பிடக் கூடாது என நினைக்கிறேன். காங்கரஸுக்குள் அவர் ஒரு தனிக்குரல் எனும் உணர்வு நமக்கு தொடர்ந்து கிடைக்கிறது.
 மூன்று கேள்விகளைம் கேட்கிறேன் -
1) தமிழகத்தில் அதிமுகவை எதிர்ப்பதில் ஒரு எதிர்க்கட்சியாக திமுக காட்டிய முனைப்பில் நூறில் ஒரு சதவீதமாவது காங்கிரசிடம் பாஜகவை எதிர்ப்பதில் இருந்ததுண்டா? ஒரு பக்கம் ராகுல் காந்தி அறிக்கைகளாக விடுவார், மறுபக்கம் மற்ற காங்கரஸ் தலைவர்கள் இருட்டில் பாஜகவுடன் கைகோர்த்தபடி மோடியைப் புகழ்ந்தபடி இருப்பார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக மற்ற மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவை விமர்சித்து இப்போது வரை நான் பார்த்ததில்லை.
அடுத்து, (2) கொள்கையளவில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்குமான வித்தியாசங்கள் கடந்த முப்பதாண்டுகளில் வெகுவாக குறைந்து விட்டது. ஆகையால் சித்தாந்த ரீதியாக பாஜகவை எதிர்க்க காங்கிரஸால் முடியாமல் போகிறதா? நமக்கு பெரியார், அண்ணா போன்று ஒரு தலைவர் உள்ளது போல காங்கிரஸுக்கு ஒரு இந்துத்துவ எதிர்ப்பு சித்தாந்தி உண்டா? காந்தியே ஒரு மென்வலதுசாரி எனும் போது அவரை வைத்து எப்படி பாஜகவை வீழ்த்த முடியும்? பாஜகவால் காந்தியை தன்வசப்படுத்த முடிகிறது, ஆனால் தமிழகத்தில் பாஜகவால் திராவிட தலைவர்களை அப்படி செய்ய முடிவதில்லை. சித்தாந்த ரீதியாகவே காங்கிரஸ் மிக பலவீனமான மென்வலதுசாரிக் கட்சியாக இருக்கிறது. அதனாலே அவர்களால் சித்தாந்த ரீதியாக பாஜகவை அடிக்க முடிவதில்லை. அதனாலே காங்கிரஸ் தலைமை கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் ஸ்டைலை போலச் செய்ய முயன்றது. தோல்வியும் உற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவின் பல மக்கள் விரோத முடிவுகளை காங்கிரஸால் தீவிரமாக எதிர்க்க முடியவில்லை. மக்களே தாமாக நின்று போராடி பாஜகவை பின்வாங்க செய்தனர். அப்போதெல்லாம் ராகுல் கூட தள்ளி நின்றே ஆதரவளித்தார். ஏன்? மக்களே பார்த்துக் கொள்வார்கள், நாம் புகுந்து நேரடியாக ஆதரவு கொடுத்தால் அதை பாஜக பயன்படுத்தும் என்றா? ஏன் அவ்வளவு தாழ்வுணர்வு? ஏன் ஒரு திமுகவுக்கோ கம்யூனிஸ்ட் கட்சிக்கோ அந்த அச்சம் இல்லை? கொள்கை அளவிலே இந்த முடிவுகளுக்கு பாதிக்கு பாதி இணங்கக் கூடிய கட்சியாகவே காங்கிரஸ் தலைமை உள்ளது என்பதாலா? காங்கிரஸ் தொடங்கிய திட்டங்களை, காங்கிரஸின் ஆலோசனைகளையே நாங்கள் செயல்படுத்துகிறோம் என பாஜக நியாயப்படுத்தியதில் உண்மை இல்லையா? அதெப்படி ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் ஒரே கொள்கை, நிலைப்பாடு சில முடிவுகளில் இருக்க முடியும்? போராடும் மக்களுக்கு உள்ள கொள்கைத் தெளிவு கூட இக்கட்சிக்கு இல்லை, காற்றடிக்கும் திசைக்கு வளைந்து கொடுப்பதைத் தவிர என்பதாலா?

3) இறுதியாக, பாஜகவினர் தொடர்ந்து விமர்சிக்கிற தலைவராக நேரு மட்டுமே ஏன் இருக்கிறார். காந்தியை, இந்திராவை, ராஜீவை, அட மன்மோகன் சிங்கைக் கூட  இந்துத்துவர்கள் தீவிரமாக விமர்சிப்பதில்லையே? மோடி தனக்கு இந்திரா காந்தி மீது மிகுந்த மரியாதை உண்டென்று கூட சொல்லி இருக்கிறார். ஏன் வரலாற்றில் நேரு மட்டுமே அவர்களுக்கு உறுத்தலாக இருக்கிறார்? சித்தாந்த ரீதியாக மற்ற காங்கிரஸ் தலைவர்கள் / பிரதமர்கள் தமக்கு இணக்கமானவர்கள் என பாஜக கருதுகிறதா?

ஆக காங்கிரஸ் இன்று பலவீனமான மாற்றுக் கட்சியாகத் தோன்றுவதற்கு காரணம் ராகுல் அல்ல தானே? அது காங்கிரஸின் அடித்தளத்தில் உள்ள விரிசல்களினால் அல்லவா? 

வலதுசாரிகளுக்கு நேரெதிரான சித்தாந்த தலைமையாக தம்மை அறிந்து கொண்டு மக்களுக்கும் அவ்வாறே தம்மை முன்வைக்காமல் காங்கிரஸால் மோடியை வீழ்த்த முடியுமா? ஒரு ஏ டீம் இருக்கும் போது மக்கள் ஒரு பி டீமுக்கு வாக்களிப்பார்களா? அப்படி வாக்களித்தாலும் அது தொலைநோக்கில் இந்நாட்டுக்கு நல்லதா? 
நேருவின் காலத்தில் காங்கிரஸ் தன்னை ஒரு இடதுதன்மை கொண்ட மையவாத கட்சியாக உருமாற்றியது. அதையாவது ராகுல் தலைமையில் இப்போதுள்ள கட்சியால் செய்ய முடியுமா?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...