Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஆண்-பெண் உறவில் சமத்துவத்தின் பிரச்சனை




தனுஷ்-ஐஸ்வர்யா மணமுறிவை ஒட்டி இருவரைப் பற்றியும் வெளிவந்த தகவல்கள் நமது சமூக சூழலில் திருமண உறவுக்குள் அதிகார சமநிலையை தக்க வைத்து, குடும்பம் நிலைபெற செய்ய இரண்டு விசயங்கள் அவசியம் என்பதைக் காட்டின:


1. சாதிய அதிகாரம்: நீங்கள் பணம், சமூக அந்தஸ்தைப் பொறுத்து ஒரே தட்டில் இருந்தாலும் இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் எனில் பிரச்சனை கதவைத் கட்டிக்கொண்டு வரும். தனுஷுக்குப் பதில் ஐஸ்வர்யா தன் சமூகத்தை சேர்ந்த ஒருவரை மணமுடித்திருந்தால் மாமனார், மாமியாரை பொருட்படுத்தாமல், கணவனின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருப்பாரா? மாட்டார். இயல்பாகவே “அத்தை, மாமா” என்று ஒட்டிக் கொண்டிருப்பார். அவரே அதை செய்ய விரும்பாவிடினும் அவரது குடும்பமும் உறவுகளும் அப்படி மரியாதை கொடுக்கும்படி அழுத்தம் செலுத்தி இருப்பார்கள்.

2. இந்த கருத்து சற்று பிற்போக்கானதாகத் தெரியும். ஆனால் இதுவே எதார்த்தம் - ஒவ்வொரு நிலப்பகுதியை அல்லது சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கும் எதிர்பாலினத்தை எதிர்கொள்வதில் ஒரு குறிப்பிட்ட இயல்பு உண்டு. உ.தா., குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்களுக்கு - அவர்கள் எச்சமூகத்தை சேர்ந்தவர்கள் எனினும் - வீட்டுக்குள் கணவனை ஆதிக்கம் செய்யும் இயல்பு உண்டு. கேரளாவிலும் அப்படியே. இந்த ஊரிலுள்ள ஆண்களும் மனதளவில் இதை விரும்புகிறார்கள், வெளியே வேறுவிதமாக கெத்தாக தம்மை காட்டிக் கொண்டாலும். தாய்வழி சமூகங்களாக அப்பகுதியினர் முன்பு இருந்தது ஒரு காரணமா? வங்காள, வட-கிழக்கு மாநிலத்து பெண்களும் ஆண்களும் இவ்வாறானவர்களே. வீட்டுக்குள் ஒரு பாலினத்தின் அதிகமான ஆக்ரோஷமான, ஆதிக்கம் செலுத்தும் உளவியல் மற்றொரு பாலினத்தின் சற்று பணிவான மனநிலையை ஈடு செய்து விடுவதால் பிரச்சனைகள் பெரிதாக வளர்வதில்லை. தமிழக பிராமண சமூக ஆண் பெண்களிடத்தும் - அவர்கள் என்னதான் தாழ்வழி சமூகம் அல்லவெனினும் - இந்த சுபாவத்தை பார்க்கலாம். (இங்கு ஒரு வசதிக்காக பொதுமைப்படுத்துகிறேன் என்பதால் விதிவிலக்குகளும் இருக்கலாம்.) இந்த வகையான பெண்களும் சுதந்திரமானவர்களாக, தன்னிச்சையாக முடிவெடுப்பவர்களாக, குடும்பத்தை சுயமாக நிர்வகிப்பவர்களாக இருப்பார்கள். சில நேரம் அதிகார தொனியுடன் நடந்து கொள்ளவும் செய்வார்கள். இவர்களை மணம் புரியும் ஆண்கள் (அதே சமூகத்தினராக இல்லாத பட்சத்தில்) ஒரு பக்கம் போதுமான சமூக, பொருளாதார அதிகாரம் கொண்டிருந்தபடி வீட்டுக்குள் அடங்கி செல்கிறவர்களாக இருக்கும்பட்சத்தில் பிரச்சனை இருக்காது. ஆனால் அதே அளவுக்கு ஆண் அதிகாரத்தை செலுத்தினால், கோபத்தை காட்டினால், தன்னிச்சையான சுபாவத்தை வெளிப்படுத்தினால் அது பிரிவுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மனநிலை உண்டென்பதல்ல என் பார்வை. ஆனால் தாய்வழி சமூகங்களில் பாலினங்களின் மனப்பான்மை தந்தைவழி சமூகங்களில் இருந்து மாறுபட்டதாக உள்ளது என்கிறேன். 

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து விசயத்தில் கருத்து சொல்வது நமது வேலை அல்ல. மேற்சொன்னவை பொதுவான அனுமானங்கள் மட்டுமே. அவர்களுடைய தனிப்பட்ட விழைவுகள், குடும்ப சூழல் என வேறு காரணங்களும் பிரிவுக்கு முக்கியமாக இருந்திருக்கலாம்.


எது எப்படியோ ஆண்-பெண் உறவில் அதிகார சமநிலையானது இருவரும் ஒரே அதிகாரத்துடன் இருக்கையில் சாத்தியமாவதில்லை. மாறாக, ஒரு கை ஓங்க மற்றொரு இறங்குகையிலே அது சாத்தியமாகிறது. ஒரு சந்தர்பத்தில் இப்படி ஆதிக்கம் செலுத்தும் கை மற்றொரு சந்தர்பத்தில் இயல்பாகவே இறங்குகையில் மறு கை உயர்கிறது, இப்போது அதன் காயம்பட்ட ஈகோ தணிகிறது. இப்படி அமைவது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் தான் என்றாலும், ஒருவருடைய பெற்றோரின் மனவமைப்பு, ஊர் பின்னணி, தாய்வழி / தந்தைவழி சமூகமா ஆகிய விசயங்களை வைத்து, நமக்கு நேரெதிரான மன இயல்பை கொண்டவர்களை ஓரளவுக்கு சரியாக தேர்வு செய்யலாம். 

நவீன திருமண உறவில் ஒரு பெரிய முட்டுக்கட்டை சமத்துவம் குறித்த எதிர்பார்ப்புகள் - வெளியே மிக அசமத்துவமான பால்நிலை இருக்கையில் உள்ளே மட்டும் எப்படி நீங்கள் சமத்துவமாக நடந்து கொள்ள முடியும். ஒருவர் அப்படியே சமத்துவத்துக்காக பணிந்து போனாலும் மற்றவர் அதை பயன்படுத்தி கூடுதலாக ஆதிக்கம் செலுத்தவே வாய்ப்பதிகம். இது சமத்துவ விரும்பியான முதலாமவரை காயப்படுத்தும். மற்றொரு விசயம் காமம் எப்போதும் ஆதிக்கம் செய்வதற்கான முயற்சிகளில், மறைமுகமான வன்முறையில் உயிர்க்கிறது என்பதால் ஆண்-பெண் உறவில் இந்த அதிகார ஊசலாட்டம் இருந்தபடியே தான் இருக்கும். சைக்கிள் பெடலைப் போல ஒன்று அழுத்தப்பட மற்றது உயரும். அப்படி நடக்காமல் இரண்டுமே நகராமல் ஜாம் ஆகிவிட்டால் பிறகு பெடல் உடைவது தான் ஒரே வழி.


மீண்டும் சொல்கிறேன் - இதில் விதிவிலக்குகள் இருக்கலாம்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...