முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூன்று வினாடி வைத்தியர்

முதுகுவலி ஒரு விசித்திரமான பிரச்சனை. கை, காலில் காயம் ஏற்பட்டால் ஓய்வு கொடுத்து சரி செய்வதைப் போல முதுகுக்குப் பண்ண முடியாது. மோசமான காயம் என்றால் மாதக்கணக்கில் படுத்துக் கொண்டிருக்கவும் இயலாது

கை, கால் வலியைப் போல் அல்லாது முதுகு வலி கால்களுக்கும் பரவும். உங்களுடைய எல்லா வேலைகளையும் பரணில் தூக்கிப் போட வைக்கும். அதனாலே நான் முதுகுவலியை கடுமையாக அஞ்சுகிறேன். எனக்கு எல்லா தசை, எலும்பு காயங்கள் குறித்தும் பயம் அதிகம் தான், என்றாலும் முதுகுவலி தான் பட்டியலில் முதலிடம் பிடிக்கும். முதுகுவலி மிக லேசாக தென்பட்டாலும் நான் விடுப்பெடுத்துக் கொண்டு படுத்து ஓய்வெடுப்பேன். மருத்துவரை உடனடியாகக் காண்பேன். ஏனென்றால் சனியன் வந்தால் போகாது என அறிவேன். அதனால் அதை வாசலோடே நிறுத்தி அனுப்பி விடுவது என் வழக்கம்.


ஒரு எழுத்தாளனாக நான் என் கை, கண்ணுக்கு அடுத்தபடியாக முதுகையே மிக முக்கியமாக நினைக்கிறேன்.


முதுகுவலியின் மற்றொரு மர்ம சுபாவம் நமக்கு வேறு பிரச்சனைகள் உடம்பில் ஏற்பட்டாலும் முதுகுவலி மாறுவேஷத்தில் எங்கேயோ பதுங்கிக் கொள்ளும் என்பது. எல்லா பிரச்சனைகளும் வலிகளும் மறைந்த பின்னர்ஹலோ சார்என முதுகுவலி புதரில் இருந்து கைதூக்கிக் கொண்டு எழுந்து வரும். வந்தால் உங்களை ஓட ஓட விரட்டும்.


 இந்த வலிகளில் மனவலியும் சேரும். நான் கடும் மனச்சோர்வில் இருக்கையில், தினமும் அழுது கொண்டிருக்கையில் முதுகுவலி மிகுந்த பரிவுடன் வெளியிலேயே பொறுமையாக நின்றிருக்கும். மனம் சாந்தி அடைந்ததும் அது என்னை ஆறுதல்படுத்தும் நோக்கில் ஒரு பூங்கொத்துடன் வீட்டுக்குள் வரும். இந்த நல்லியல்பை நீங்கள் வேறு வியாதிகளிடம் காண முடியாது.


முதுகுவலிக்கான மருந்து, சிகிச்சை செலவு பிடித்தவை. வலி நிவாரணிகள் என்பதால் சிறுநீரகத்தை பழிவாங்கக் கூடியவை. ஆனால் பிரச்சனை சரியாகும் எனும் உத்தரவாதம் இல்லாதவை. உங்களுடைய ஓய்வு, உடற்தகுதி, அதிர்ஷ்டம் ஆகியனவே காப்பாற்றும். எனக்கு இரு ஆண்டுகளுக்கு முன்பு தோளில் காயம் ஏற்பட்ட போது மருத்துவர் பார்த்து விட்டுசின்ன காயம் தாங்க, மூன்று மாதங்களில் சரியாகி விடும். ரொம்ப மாத்திரை எடுத்துக்க வேண்டாம்என்றார். நானும் காத்திருந்தேன், காத்திருந்தேன், காலத்தின் எல்லை வரை காத்திருந்தேன். அண்மையில் தான் அந்த வலி சரியானது. எல்லா எலும்பு, தசை பிரச்சனைகளுக்கும் இந்த சிக்கல் உண்டு - உடம்பாகத் தான் அவற்றை சரியாக்க முடியும்.


 மணவாழ்க்கை ஓராண்டு என்றால் விவாகரத்து முடிய ஐந்தாறு ஆண்டுகள் என்பதைப் போல் என் நண்பர் ஒருவருக்கு முதுகுவலியென்பது தீராத தலைவலியைப் போல கூடவே தொத்திக் கொண்டது. அவர் பெங்களூர் புறநகரில் உள்ள ஒரு நரம்பு / வர்ம வைத்தியரிடம் சென்றார். போனதும் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பார்கள். அடுத்து அவரை ஒரு மேஜை மீது மல்லாக்க படுக்க வைத்து பெல்ட்டுகளைப் போட்டு மேஜையுடன் கட்டி விடுவார்கள். அடுத்து வைத்தியர் வருவார். சிஷ்யர்கள் என் நண்பரை இறுக்கப் பிடித்துக் கொள்ள வைத்தியர் தன் காலை மடித்து முதுகின் ஓரிடத்தில் வைத்து ஒரு அழுத்து. அவ்வளவு தான். மூன்றே நொடியில் சிகிச்சை முடிந்து விடும். எழுந்ததும் நண்பர் தன் உடல் ஒரு இறகைப் போல ஆகி விட்டதாக உணர்வார். வலியெங்கே என்றுஸ்காட்லாண்ட் யார்டானநமது தமிழக் போலிசாரே வந்து தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. சில நேரம் இப்படி ஊரைப் பார்க்க போன வலி திரும்பாது. சில நேரம் நண்பர் ஓவராக வேலை பார்த்து தொல்லை கொடுத்தால் அது ஏதாவது ஒரு லாரியில் ஏறி திரும்ப வந்து அவரது முதுகில் தொத்திக் கொள்ளும்


துரதிஷ்டவசமாக இந்த நரம்பு / வர்ம வைத்தியருக்கு பெங்களூருக்குள் சீடர்களோ மருத்துவமனைகளோ இல்லை. இருந்தால் அவர் இந்நேரம் கோடீஸ்வரராகி இருப்பார். எல்லா எலும்பு மருத்துவர்களும் ஊரை விட்டே ஓடியிருப்பார்கள். அல்லது இந்த நரம்பு / வர்ம வைத்தியர் நீண்ட தாடி வைத்து கார்ப்பரேட் சாமியாராகி இருந்திருந்தால் இந்நேரம் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதி ஆகியிருப்பார்

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...