முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வாதிகாரமும் வீட்டுரிமையாளர்களும்




சர்வாதிகாரமும் வீட்டுரிமையாளர்களும்
வாடகை வீட்டு உரிமையாளர்களுக்கும் குடியிருப்பவர்களுக்கும் இடையிலான இவ்வாரத்தைய நீயா நானா விவாதத்தைப் பார்க்கையில் ஒரு விசயம் புலப்பட்டது - இன்னும் வீட்டு உரிமையாளர்களுக்கு தம் வீட்டில் குடிவருவோர் தம் குடும்பமோ தமக்குக் கிழ் வாழும் மக்களோ அல்ல எனும் தெளிவு வரவில்லை, இயல்பாகவே ஒரு நிலக்கிழார் மனோபாவம் வந்து விடுகிறது. அதனாலே குடியிருப்போரின் நடத்தை, உணவுப்பழக்கம், அவர்கள் வீட்டுக்குள் பேசக் கூடிய ஒலியளவு என ஒவ்வொன்றையும் கட்டுப்படுத்துகிறார்கள். என் நண்பர் ஒருவர் சொன்னர். அவர் கீழ்த்தளத்தில் வசிக்கிறார். உரிமையாளர் மேற்தளத்தில். அவரது படுக்கையறைக்கு மேலே தான் உரிமையாளரின் படுக்கையறையும். அதனால் இவர் இங்கே இரவின் அமைதியில் மெதுவாகப் பேசினால் கூட மேலே இருக்கும் அவருக்குக் கேட்டு விடும். கொஞ்சம் சத்தமாக கணவனும் மனைவியும் பேசினால் அது நள்ளிரவென்றாலும் உடனே உரிமையாளரிடம் இருந்து போன் வந்து விடும். அதனால் படுக்கையறையில் கணவனும் மனைவியும் குசுகுசுவென்றே எப்போதும் பேசுவார்களாம். “இதெல்லாம் கூட பிரச்சினை இல்லையா… நைட்டு உறவு வைத்துக் கொண்ட பின் அந்த சத்தம் அவருக்குக் கேட்டு விடுமோ என இருவரும் ஒரு கவலையுடனே இருப்போம்.” இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை.
விரும்பியோ விரும்பாமலோ வீட்டுரிமையாளர்கள் ஒருவித தந்தை அல்லது தாயின், ஒழுக்கவாதியின், சர்வாதிகாரியின் மனநிலையுடன் செயல்படத் தொடங்கி விடுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் வீடு-குடும்பம்-வீட்டின் உரிமையாளனான ஆண் எனும் அமைப்பை மீறி யோசிக்க இயலவில்லை. ஒரு குடும்பம் என்றால் நான்கு சுவர்களுக்குள் ஒரு ஒழுங்குடன், சட்டதிட்டத்துக்கு ஏற்ப வாழ்பவர்கள். அதற்குள் சதா ஒரு கண்காணிப்பு இருக்கும். ஒருவர் தனது உபரி வீட்டை வாடகைக்கு விடும் போது அதையும் தன் குடும்பமே என உபமனதில் நினைக்கத் தொடங்குகிறார்கள். உரிமையாளர் ஆணோ பெண்ணோ அவர்களுக்கு தன் வீட்டில் இருக்கும் தனது பொறுப்பில் இல்லாத மற்றொரு குடும்பத்தின் மீது அதிகாரம் செலுத்தி சுவை பார்க்கும் விருப்பம் தம்மையறியாதே ஏற்படுகிறது. இதில் ஆண்களை விட பெண் உரிமையாளர்கள் இன்னும் மோசம். அவர்கள் ஒரு மாமியாரின் பாத்திரத்தை அந்த ‘வாடகை குடும்பத்தின்’ பால் எடுத்துக் கொண்டு சின்னச் சின்ன விசயங்களை எல்லாம் கண்டிப்புடன் கண்காணித்து கட்டுப்படுத்துகிறார்கள். சிலர் வாடகை செலுத்தும் குடும்பத்தின் பெண்களே பொதுவிடத்தை பெருக்கி சுத்தம் பண்ண வேண்டும், விளக்கை போட வேண்டும், கோலம் இடவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் (நீயாநானாவிலே சொன்னார்கள்). என்னுடைய சொந்த ஊரில் ஒரு வீட்டு உரிமையாளர் அம்மா நாள் முழுக்க தன் வாடகை வீட்டுக்காரர்களையே வேவு பார்த்துக் கொண்டிருப்பார். குறிப்பாக வாடகை வீட்டு ‘குடும்பத் தலைவன்’ வெளியே போன பின்னர் அங்கு யாராவது ஆண்கள் வருகிறார்களா என அந்த அம்மா கண்கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டிருப்பாராம். வந்தால் - அவர்கள் பொது நண்பர்களாகவோ எதாவது வேலையாகவோ வந்திருப்பார்கள் - உடனே அந்த பெண்ணின் கணவனை அழைத்து போட்டுக் கொடுத்து விடுவார். அத்துடன் “இதோ பாருப்பா இது என் வீடு. இங்கே ஒழுக்கமா எந்த தப்பும் பண்ணாம வாழணும். இல்ல ஊர்ல என் மானம் போயிடும்” என வேறு சொல்லுவாராம். சென்னையிலும் இந்த வேலையை பக்கத்து வீட்டுப் பெண்களே செய்வதுண்டு என ஊடகங்களில் பணி செய்யும், தனியாக வசிக்கும் பெண்கள் சிலர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த பெண்கள் சொந்த வீட்டுக்காரர்களாக இருப்பார்கள். இவர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு வாடகை வீட்டுப் பெண்கள் பாலியல் ஒழுக்கத்தைப் பற்றின பல புரளிகளைப் பரப்புவது, விசாரணை செய்வது என கண்காணிப்பு அரசியல் பண்ணுவார்கள்.
நீயா நானாவில் வாடகைக்காரர்கள் நாய் வளர்க்கக் கூடாது, அசைவம் சமைக்கக் கூடாது, சத்தமாக பேசுவோ புழங்கவோ கூடாது, ஆணி அடிக்கக் கூடாது, சுவரில் குழந்தைகள் கிறுக்கக் கூடாது என கட்டுப்பாடுகளை விதிப்பதை, மாற்றுமதத்தவருக்கு வீடு மறுப்பதை, கூடுதலாக மின்கட்டணம் வசூலிப்பதை குறிப்பிட்டார்கள். தண்ணீர் தட்டுப்பாடு உள்ள ஊர்களில் கைக்குழந்தை இருந்தால் வீடு கொடுக்க மாட்டார்களாம். இன்னும் சிலர் அப்பா, அம்மா, கொழுந்தனார், நண்பர்கள் வந்தால் எவ்வளவு நாட்கள் அதிகபட்சமாக தங்கலாம் என்பதற்கு கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் கூட பரவாயில்லை - வாடகைக்காரர்கள் ஓட்டலில் இருந்து அசைவம் வாங்கி வந்து சாப்பிட்டாலும் அது வீட்டு உரிமையாளரை தொந்தரவு பண்ணுகிறது. ஏனென்றால் தான் சைவம் பின்பற்றும் மாதங்களில் தன் வாடகைக்காரர்களும் சைவமே சாப்பிட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஒரு சில வீட்டுரிமையாளர்களுக்கு தம் சொந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்களே தம் வீட்டில் வாடகைக்கு இருக்க வேண்டும் என பிடிவாதம் உள்ளது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக இங்கு பெங்களூரில் வீட்டு உரிமையாளர்கள் சற்று முற்போக்காக இருக்கிறார்கள். வாடகையாளர்களை சற்று சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறார்கள். அதை மோசமாக சுரண்டுகிற வாடகைக்காரர்களும் உண்டு.
குறிப்பாக, இங்கே உள்ள மலையாளி இளைஞர்கள் வார இறுதிகளில் அடிக்கும் கொட்டம் மிக மோசமானது. சனிக்கிழமை இரவு ஆனால் ஆண்களும் பெண்களுமாக வீட்டுக்குள் பார்ட்டி பண்ணுவார்கள். அதிகமாக சத்தத்தில் இசை முழங்க வீட்டிலிருந்து ஆட ஆரம்பித்து அப்படியே தெருவுக்கு வருவார்கள். அதிக போதையில் கத்தி கூப்பாடு போடுவார்கள். ஊரே கேட்க நள்ளிரவில் பாட்டுப் பாடுவார்கள். நான் தூங்க முடியாமல் சிரமப்பட்டிருக்கிறேன். குறிப்பாக ஒரு வீட்டில் ஐந்து இளைஞர்கள் வசிக்கிறார்கள். சனிக்கிழமை ஜுரம் ஏற்பட்டதும் அந்த வீட்டில் குறைந்தது ஆணும் பெண்ணுமாக 15 பேராவது திரண்டு பெரும் ஓசை எழுப்பி அலம்பல் பண்ணுவார்கள். தெருவில் உள்ள சொந்த வீட்டுக்காரர்கள் ஒன்று கூடி அடிக்கடி இவர்களை காவல் நிலையத்திற்கு புகார் செய்து இரவோட இரவாக கைது பண்ண வைப்பார்கள். உடனே அவர்களுடைய வீட்டு உரிமையாளர் நேரே காவல் நிலையம் போய் தன் வாடகையாளர்களுக்கு தான் ஜாலியாக இருக்க அனுமதி கொடுத்திருப்பதாக தெரிவித்து அவர்களை அழைத்து வந்து விடுவார். ஏனென்றால் அவரும் மலையாளி. இந்த இளைஞர்களுக்கு மதுப்பொத்தல்களை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு நட்பானவர். இப்படி பலவிதமான உரிமையாளர்கள் இங்கே இருக்கிறார்கள். அதை மோசமாக சுரண்டி தம் பெயரை கேரளத்து இளைஞர்கள் கெடுத்தும் வருகிறார்கள். சென்னையில் என்றால் ஒரே நாளில் இவர்களை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். ஆனால் இங்கே நேர்மாறான சூழல்.
ஒழுக்கமான கண்ணியமான வாடகைக்காரர்கள் உள்ள இடத்தில் அதிகாரம் செலுத்தும் உரிமையாளர்களும், ஆர்ப்பாட்டமும் சீர்கேடும் மிக்க வாடகைக்காரர்களைக் கொண்ட இடத்தில் உரிமையாளர்கள் ரொம்ப கனிவாகவும் இருக்கிறார்கள். "எங்க வீட்டுப் பிள்ளை" போல அவர்கள் இங்கும் இவர்கள் அங்கும் இருந்தால் நியாயமாக இருக்கும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...