Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

"ரோஸ்மேரியின் குழந்தை"



சில புத்தகங்களை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்து மாய்வோம். ஐரா லெவினின் Rosemary's Baby அப்படியாக நேற்றுமுதல் என்னை ஒரு மயக்கத்திலேயே வைத்திருந்தது. (சிலர் ரொமான் பொலான்ஸ்கி இதைத் தழுவி எடுத்த அந்த அபாரமான படத்தை பார்த்திருப்பீர்கள்.)

இதை காத்திக் புனைவு (Gothic), மர்மக் கதை, உளவியல் டிராமா என எப்படி வேண்டுமெனிலும் வகைப்படுத்தலாம். என்னை வெகுவாக கவர்ந்தது எவ்வளவு சாமர்த்தியமாக நுணுக்கமாக இந்நாவலை ஐரா லெவின் எழுதியிருக்கிறார் என்பது. ஸ்டீபன் கிங் இவரை "மர்ம நாவல்களின் ஸ்விஸ் கைக்கடிகார வல்லுநர்" என்று சிறப்பித்தது சும்மா அல்ல.

லெவின் வசனங்களை எழுதும் பாணி சிலாகிக்கத்தக்கது. வசனங்களை ஒரு தகவலையோ உணர்ச்சியையோ எண்ணத்தையோ வெளிப்படுத்துவதற்காக மட்டுமன்றி ஒரு மறைமுகப் பொருள் கொண்ட விளையாட்டுத்தனம் மிக்கவையாக எழுதுவார். நாம் சுஜாதாவிடம் வசனங்களில் சுட்டித்தனத்தை மட்டும் பார்ப்போம், ஆனால் லெவின் நகைமுரணை, மறைபொருளையும் வசனங்களில் உணர்த்துவார். இவர் இதைத்தான் சொல்கிறாரா என நம்மை ஒரு கணம் சந்திக்க வைப்பார்.

இந்த நகைமுரண் வசனங்களில் மட்டுமல்ல கதைகூறலிலும் முக்கிய இடம்பிடிக்கிறது. தன் கணவன் கய்யுடன் வாடகைக்கு ஒரு பெரிய வீட்டைத் தேடும் ரோஸ்மேரியின்  பார்வையில் second personஇல் கதை சொல்லப்படுகிறது. அவர்கள் ஒரு பழமையான பாரம்பரிய தோற்றம் கொண்ட பெரிய வீடொன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ரோஸ்மேரியின் நண்பர் ஒருவர் அந்த வீட்டில் சில துர்மரணங்கள் நடந்துள்ளன, அங்கு மாந்திகம் பயிலும் சாத்தான் வழிபட்டாளர்கள் முன்பு இருந்துள்ளார்கள் என்று கூறியதையும் மீறி அவர்கள் அந்த வீட்டுக்கு குடிபெயர்கிறார்கள். அதன் பின்னர் என்னென்ன துர்சம்பவங்கள் நடந்து ஒரு பெரும் துயர நிக்ழ்வில் போய் முடிகின்றன என்பதே மீதிக் கதை. ஆனால் இந்த நண்பர் எழுப்பும் சந்தேகங்கள் முதல் ரோஸ்மேரிக்கு குழந்தை பிறந்து இறப்பது வரை அவளுடைய மனப்பிரமையாக இருக்கலாம் என பின்னர் அறிந்து கொள்ளும் போது எந்தளவுக்கு மெல்ல மெல்ல உண்மை போன்றே பொய்கள் இந்த புனைவுக்குள் ஊடுருவி உருக்கொள்கின்றன என வியப்பேற்படுகிறது. புனைவில் நகைமுரண் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இப்படைப்பு.

இந்த நாவல் persecution complex பற்றியது - அதாவது சதா நாம் ஒடுக்கப்படுகிறோம், நம்மை சிக்க வைக்க திட்டமிட்டு வலைவிரிக்கிறார்கள், அந்த சதித்திட்டத்தில் நமக்கு நெருக்கமானவர்களுக்கும் பங்குள்ளது எனும் பீதி, அதனாலான உளச்சிக்கல் நவீன உலகில் ஒரு பண்பாடாகவே மாறி உள்ளது. மற்றமை மீதான சந்தேகம், ஒவ்வாமை, அச்சமாக இது உருக்கொள்கிறது, சுதந்திர எண்ணம் கொண்டவர்கள், விளிம்புநிலையாளர்கள், உதிரிகள் மீது வெறுப்புக் கலாச்சாரமாக இது வளர்ந்து பீதியுணர்வால் நடத்தப்படும் ஒரு கூட்டு மனப்பிரமையாக பேருருவம் எடுக்கிறது. அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் witch huntingஆக (எதிர்-கிறித்துவ நம்பிக்கையாளர்கள் என சிலரை அடையாளப்படுத்தி கொல்வது, விசாரித்து ஒடுக்குவது), இருபதாம் நூற்றாண்டில் மெக்கார்த்தியின் நிர்வாகத்தில் கம்யூனிஸ்டுகள் என்று அப்பாவிகள் மீது நடத்தப்பட்ட களையெடுப்பு நடவடிக்கையாக இது அரசியல் வடிவெடுத்தது. இதன் பெண்ணிய பரிணாமத்தையே ஐரா லெவின் "ரோஸ்மேரியின் குழந்தை" நாவலில் சித்தரிக்கிறார்.  

ஒரு நவீன படித்த உயர் மத்திய வர்க்க பெண்ணான ரோஸ்மேரி தன் பெற்றோர், உறவினரிடம் இருந்து விலகி மாற்றுமத்தவனான தன் கணவனுடன் வாழ்பவள். அவளுக்கு சில நேரம் தான் உலகில் இருந்து முழுக்க தனிமைப்பட்டிருப்பதாக, காதலுக்காக திருமணம் செய்துகொண்டு தன்னை ஒரு வளர்ப்புநாயாக ஒரு ஆணுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டதாகத் தோன்றுகிறது. இந்த கண்மூடித்தனமான பயம், தனிமை, கோபம் மெல்ல மெல்ல கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான கோட்டை அழித்து விட்டால் என்னவாகும் என்பதே இந்நாவல். ஐரா லெவினின் மற்றொரு பிரசித்தமான நாவல் The Stepford Wives - இது மற்றொரு தீவிர பெண்ணிய மனக்கிலேசத்தை, கொடுங்கனவை பரிசீலிக்கிறது: கணவனின் மகிழ்ச்சிக்கு இணங்க வாழும் நிறைவான பெண்கள் ஒருவேளை மாயமந்திரத்தால் எந்திரப்பெண்களாக மாற்றப்பட்டவர்கள் என்றால், அவர்களுக்கு மத்தியில் சுதந்திர சிந்தனை கொண்ட ஒரு இளம்பெண் மாட்டிக் கொண்டால் என்னவாகும்?

ஐரா லெவினின் அனேகமான நாவல்கள் திரைபடமாக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் அவை அடிப்படையில் திரைக்கதை வடிவில் எழுதப்பட்டவை எனத் தோன்றுகிறது. "ரோஸ்மேரியின் குழந்தை" இலக்கிய நுட்பத்துடன் எழுதப்பட்ட ஒரு வெகுஜன நாவலே. ஏனென்றால் இதன் கதை ஒரு செறிவான  நாவலுக்கு ஏற்ற சிக்கலான ஒன்றல்ல. இதன் பலமும் பலவீனமும் இதன் நேரடியான எளிய கதையும் கூறலுமே. கதையமைப்பின் வேலைப்பாடுகளும் மொழியின் லாவகமுமே வாசகர்களை கட்டிப் போடுகிறது.

குறிப்பாக இந்நாவலின் கடைசி மூன்று அத்தியாயங்கள் சரியாக எழுதப்படவில்லை. ஒருவித மீளக்கூறலும், அதுவரையிலான நிகழ்வுகளுக்கு விளக்கமளிக்கும் படியாகவும் இவை எழுதப்பட்டது கதைக்கு சரியான முடிவை அளிக்கத் தவறுகிறது. நான் இதன் கிளைமேக்ஸை எழுதியிருந்தால் ரோஸ்மேரியின் மனச்சிக்கலை அம்பலப்படுத்தாமல் அவள் சொல்வது உண்மைதானோ என வாசகனை கடைசி வரை நினைக்க வைத்துவிட்டு முடிவில் ரோஸ்மேரியின் கோணத்தில் இருந்து முற்றிலும் வேறொரு வாழ்க்கைப் பார்வையை தருவதாக முடிவை அளித்திருப்பேன்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...