Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் காதல்

 


கேள்வி: அழகான பெண்கள் ரொம்ப பிகு பண்ணிக் கொள்வதால் ஆண்கள் தகுதி குறைவான பெண்களை நாடும் அவல நிலை ஏற்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட பெண்களுக்கான சந்தை மதிப்பும் இதனால் உயர்ந்துவிட அவர்கள் முன்னவர்களை விட அதிகமாக பிகு பண்ண ஆண்களின் நிலை கந்தரகோலமாகி விடுகிறதே. இதற்கு என்ன செய்ய?

பதில்: பெண்ணுடலை எந்த தகுதியும் கோராமல் நாடுவதே சிறப்பானது, அதுவே இயல்பானது, ஆகையால் அதுவே என் தீர்வும். மரபணு ரீதியாக பார்த்தாலும் அழகான பெண்ணிடம் எந்த உயர்வான திறனும் இல்லை. மேற்பூச்சு இல்லாமல் மனிதர்களை எதிர்கொள்வதே அழகு. ஒரு எளிய மிருகமாக நான் இதையே நம்புகிறேன். இந்த ஆன்மீகம், காதல் போன்ற அபத்தங்களை நான் நம்பாததது இதனாலே.

இந்த உலகின் மிகப்பெரிய வக்கிரம் பிடித்த மனிதன் காதலைக் கண்டுபிடித்தவனே. காதல் கேவலமானது என்பதல்ல என் பிரச்சினை. காதல் அழகானதே. ஆனால் அது ஒரு அழகான பொய். காதல் ஒரு மதசார்பற்ற பக்தியுணர்வு. எப்படி ஒரு கல்லில் கடவுளைக் காண்கிறோமோ அப்படியே ஒரு பெண்ணுடலில் நாம் காதலியைக் காண்கிறோம். எப்படி கல் என்பது வெறும் கல்லோ, அப்படியே பெண்ணுடலும் வெறும் உடல் தான். வெறும் உடல் எனும் போது எல்லா உடல்களும் ஒன்று தான். நாம் காதலுணர்வை 'வென்று' விட்டால் இயல்பாக நம் உலகில் சமத்துவம் வந்துவிடும். பிராயிட் சொன்னதைப் போல நமது பாதுகாப்பின்மை, தாழ்வுணர்வு, போதாமை உணர்வு ஒவ்வொன்றுமே பாலியல் போட்டியில் நமது தவிர்க்க முடியா தோல்விகளில் இருந்தும், பொருளாதார ரீதியான ஏற்றத்தாவில் இருந்தும் பிறக்கிறது. சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பாலியல் தேர்வில் நம் தெரிவுகளை நியாயமற்றதாக்கி நம்மை பலவீனமான போட்டியாளனாக்கி நம் முதுகெலும்பை ஒடித்து விடும் போது, அத்துடன் கூடுதலாக அழகும் ஆரோக்கியம் குறித்த பாவனைகளும் சேரும் போது உலகின் மிக மிக அசமத்துவமான செயலாக காதல் அமைந்து விடுகிறது. இந்த முற்போக்காளர்கள் எப்படி இவ்வளவு மோசமான அநீதியால் ஆன காதலை கொண்டாடுகிறாரக்ள் என்பது ஒரு புதிரே. ஆனால் இதற்கான பதிலை நாம் இறையியலில் தேட முடியும்.

எப்படி உலகம் ஏற்றத்தாழ்வானது, அநீதியானது, ஆனால் இறைவன் வழியாக பார்க்கையில் உலகம் பிழையற்றதாகி விடும் என இறையிலாளர்களும் பக்திமான்களும் கூறுவார்களோ அப்படியே காதல் குறித்து அதன் ஆராதகர்களும் கூறுவார்கள் (இதை தத்துவத்தில் கடப்புநிலை வாதம் என்பார்கள்.) உலகின் மிக ஆபாசமான அபத்தமான சிந்தனை இதுவே.

அதனாலே சொல்கிறேன் அழகு எனும் அளவுகோலின் அடிப்படையிலான காதல் ஒழிவதும், மனிதன் பாலுணர்வின் அடிப்படையில் மட்டும் தூய்மையாக தன் துணையை நாடுவதுமே நியாயமான மனித உறவுகளுக்கு வழிவகுக்கும். அதற்காக கட்டற்ற பாலியலே சரியானது என நான் கூறவில்லை. நாம் விரும்பும் பாலியல் துணையுடன் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை நாம் நேரடியாக சொல்ல முடியாது - ஏனென்றால் மொழி எனும் போதை நம்மை ஆட்டிப் படைக்கிறது. அதனால் நாம் 'பொய்' சொல்லியே ஆக வேண்டி இருக்கிறது. அதே நேரம் நமக்குள் காதல் என்பது ஒரு பெரும் பொய் எனும் தெளிவு வேண்டும். இது இருந்தால் ஆண்கள் பெண்ணுக்காக அலைந்து சோர்வடைய வேண்டியிராது.  

ஒரு வியப்பான விசயம் - நான் ஊரில் வாழ்ந்த காலத்தில் என் அப்பா தலைமுறை ஆட்கள் இந்தளவுக்கு காதல் மீது பித்தாக இருந்து அதைக் குறித்தே சதா சர்வ நேரமும் சிந்திப்பதை நாம் கண்டதில்லை. அவர்களுக்கு ஒரு பெண்ணை பெண்ணாக மட்டும் காணும் இயல்பு இருந்தது. ஆனால் எழுபது, எண்பது, தொண்ணூறுகளுக்குப் பிறகு, குறிப்பாக என் தலைமுறையினருக்குப் பின்னரே அதிகமாக ஒரு பெண்ணை பெண் அல்லாமல் பாவித்து பேரழகியாக, தேவதையாக, பெரும் உவகையின் திறப்பாக பார்க்கும் கற்பனாவாதம் அதிகரித்துள்ளது. வியப்பாக இந்த தலைமுறைகளில் தான் ஆண்களுக்கு செக்ஸில் திருப்தியடையும், செக்ஸை தேவையான அளவுக்கு அனுபவிக்கும் சாத்தியங்கள் குறைந்து வந்துள்ளன, ஆண்கள் தம்மை தகுதியற்றவர்களாக அதிகமாக உணர்ந்து வந்துள்ளனர், அவர்களுடைய தாழ்வுணர்வே காதல் மயக்கமக தோற்றமெடுத்துள்ளது.

பெண்ணை பெண்ணாக பார்க்க ஒரு துணிச்சல், தன்னம்பிக்கை வேண்டும், அது இல்லாத போது நாம் அவளை ஒரு மீ-இருப்பாக நோக்க தலைப்படுகிறோம், அவளை அடையாமலே அவளைக் கடந்து போக முயல்கிறோம் (லக்கான் இதை கனவு மயக்கம் கொண்ட மிகுகற்பனை (fantasy) என்று தன் உளவியலில் கூறுகிறார்.) இந்த தலைமுறைகளை சேர்ந்த ஆண்களையே பெண்கள் அதிகமாக தகுதி குறைவானவர்களாக நினைக்கிறார்கள், அவமதிக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள். பெண்களிடம் செருப்படி அதிகமாக வாங்க வாங்க இந்த ஆண்கள் அதிபயங்கர காதலர்களாக மாறுகிறார்கள். (லக்கான் இந்த நோய்மையை neurosis என்கிறார். அதனால் காமத்தை அடைய எண்ணாமலே காமத்தை நாட உத்தேசித்து துவங்கி இடத்திலே திரும்பத் திரும்ப சுவரில் மோதிக்கொண்டு நிற்பது.)

நம்மை விட இவ்விசயத்தில் நாய்களுக்கு அதிக திறனுள்ளது - எதிர்பாலினத்தின் பாலுறுப்பையும், மூத்திரத்தையும் முகர்ந்து பார்த்து அதன் ஆரோக்கியம், மனநிலை, அது உண்ணும் உணவு என ஒவ்வொன்றையும் துல்லியமாக கணித்துணரும் திறன் அதற்குண்டு என்பதால் நம்மை போல இல்லாத சங்கதிகளைப் பார்த்து ஏமாந்து காதலில் விழும் பைத்தியக்காரத்தனத்தை நாய்கள் செய்வதில்லை. ஒரு இணையைப் பார்த்ததும் அதன் முழுமையான ஹெல்த் ரிப்போர்ட், உளவியல் நிலை பரிசோதனை அறிக்கையை அது கையில் எடுத்துக் கொண்டு வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கிறது. அதுவும் ஒரு சில நொடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவதை நாம் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் மனிதர்கள் ஒரு பெண்ணின் எழுதப்பட்ட கண்களையும் போலி கண்ணிமைகளையும் பார்த்து சொக்கி விழுந்து அவளை தான் காதலிப்பதாக ஏமாந்து போகிறான். அதைத் தாண்டி அவளைக் காணும் துணிச்சல் அவனுக்கு ஒரு போதும் வருவதில்லை. அவளுடைய பாலியல் திறன் என்ன, ஆரோக்கிய நிலை என்ன, மன அமைப்பு என்ன, குழந்தை பெறும் திறன் என்ன என ஒன்றுமே தெரியாத பத்தாம்பசலியாக அவன் இருக்கிறான். அதனாலே நாய்கள் நம்மை விட சிறந்த காதலர்கள் என நான் நினைக்கிறேன். அதனாலே மனிதர்களை விட விலங்குகள் இடத்து எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

Comments

Popular posts from this blog

நடிகையரின் பிம்பச்சிறை - அழகு ஏன் ஒரு பிரச்சினையாகிறது?

  ( இது நவம்பர் 2025 இல் எழுதப்பட்ட கட்டுரை . டிசம்பர் 2025 உயிர்மையில் வெளியானது . ஆனால் இப்போதும் படிக்கத்தக்க ஒரு முக்கிய பிரச்சினைதான் இது என்பதால் பகிர்கிறேன் .) அண்மையில் கௌரி கிஷன் தன்னைக் குறித்து ஒரு யுடியூபர் உருவக்கேலிக் கேள்வியை எழுப்பியதாகச் சொல்லி அதை விமர்சித்த சம்பவத்தைப் பார்த்தேன் . தன் திறமையாலே தான் ஜொலிக்க விரும்புவதாகவும் , செறிவான வேடங்களிலே நடிக்க முயல்வதாகவும் அவர் கூடுதலாகச் சொன்னார் . எனக்கு இதுதான் பிரச்சினையின் மையம் , அவரது உடல் எடை அல்ல என்று தோன்றுகிறது . ஏன் ஆண்கள் மீது என்றுமே இவ்வகை கேள்விகள் வைக்கப்படுவதில்லை என்றால் தமிழ் சினிமா அவர்களை மட்டுமே நடிகர்களாகக் காண்கிறது . நடிகைகள் பார்வை இன்பம் அளிக்கிற பொம்மைகள் . அவர்கள் எவ்வளவுதான் புகழ் பெற்றாலும் விதவிதமான பாத்திரங்களை அவர்களால் பூண முடியாது . வந்து சிரித்து கவர்ச்சியாக நடனமாடி க்யூட் முகபாவனைகள் காட்டிவிட்டுப் போய்விட வேண்டும் . முப்பது படங்களில் நடித்தாலும் அந்த முப்பதும் ஒரே வேடம்தான் . வணிகப் பட நாயகர்கள...

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

சாகும்வரை பொழுதுபோக்கு

  "Indeed, we may have reached the point where cosmetics has replaced ideology as the field of expertise over which a politician must have competent control." - Amusing Ourselves to Death, Neil Postman "ஒரு அரசியல் தலைவர் முழுமையான ஆளுகை கொண்டிருக்க வேண்டும் என நம்பிய கருத்தியலை வெளித்தோற்றம் பதிலீடாக்கி விட்ட ஒரு புள்ளியை நாம் இன்று எட்டி விட்டிருக்கிறோம்." "சாகும்வரை பொழுதுபோக்கு", நீல் போஸ்ட்மேன்