கேள்வி: அழகான பெண்கள் ரொம்ப பிகு பண்ணிக் கொள்வதால் ஆண்கள் தகுதி குறைவான பெண்களை நாடும் அவல நிலை ஏற்படுகிறது. இந்த இரண்டாம் கட்ட பெண்களுக்கான சந்தை மதிப்பும் இதனால் உயர்ந்துவிட அவர்கள் முன்னவர்களை விட அதிகமாக பிகு பண்ண ஆண்களின் நிலை கந்தரகோலமாகி விடுகிறதே. இதற்கு என்ன செய்ய?
பதில்: பெண்ணுடலை எந்த தகுதியும் கோராமல் நாடுவதே சிறப்பானது, அதுவே இயல்பானது, ஆகையால் அதுவே என் தீர்வும். மரபணு ரீதியாக பார்த்தாலும் அழகான பெண்ணிடம் எந்த உயர்வான திறனும் இல்லை. மேற்பூச்சு இல்லாமல் மனிதர்களை எதிர்கொள்வதே அழகு. ஒரு எளிய மிருகமாக நான் இதையே நம்புகிறேன். இந்த ஆன்மீகம், காதல் போன்ற அபத்தங்களை நான் நம்பாததது இதனாலே.
இந்த உலகின் மிகப்பெரிய வக்கிரம் பிடித்த மனிதன் காதலைக் கண்டுபிடித்தவனே. காதல் கேவலமானது என்பதல்ல என் பிரச்சினை. காதல் அழகானதே. ஆனால் அது ஒரு அழகான பொய். காதல் ஒரு மதசார்பற்ற பக்தியுணர்வு. எப்படி ஒரு கல்லில் கடவுளைக் காண்கிறோமோ அப்படியே ஒரு பெண்ணுடலில் நாம் காதலியைக் காண்கிறோம். எப்படி கல் என்பது வெறும் கல்லோ, அப்படியே பெண்ணுடலும் வெறும் உடல் தான். வெறும் உடல் எனும் போது எல்லா உடல்களும் ஒன்று தான். நாம் காதலுணர்வை 'வென்று' விட்டால் இயல்பாக நம் உலகில் சமத்துவம் வந்துவிடும். பிராயிட் சொன்னதைப் போல நமது பாதுகாப்பின்மை, தாழ்வுணர்வு, போதாமை உணர்வு ஒவ்வொன்றுமே பாலியல் போட்டியில் நமது தவிர்க்க முடியா தோல்விகளில் இருந்தும், பொருளாதார ரீதியான ஏற்றத்தாவில் இருந்தும் பிறக்கிறது. சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பாலியல் தேர்வில் நம் தெரிவுகளை நியாயமற்றதாக்கி நம்மை பலவீனமான போட்டியாளனாக்கி நம் முதுகெலும்பை ஒடித்து விடும் போது, அத்துடன் கூடுதலாக அழகும் ஆரோக்கியம் குறித்த பாவனைகளும் சேரும் போது உலகின் மிக மிக அசமத்துவமான செயலாக காதல் அமைந்து விடுகிறது. இந்த முற்போக்காளர்கள் எப்படி இவ்வளவு மோசமான அநீதியால் ஆன காதலை கொண்டாடுகிறாரக்ள் என்பது ஒரு புதிரே. ஆனால் இதற்கான பதிலை நாம் இறையியலில் தேட முடியும்.
எப்படி உலகம் ஏற்றத்தாழ்வானது, அநீதியானது, ஆனால் இறைவன் வழியாக பார்க்கையில் உலகம் பிழையற்றதாகி விடும் என இறையிலாளர்களும் பக்திமான்களும் கூறுவார்களோ அப்படியே காதல் குறித்து அதன் ஆராதகர்களும் கூறுவார்கள் (இதை தத்துவத்தில் கடப்புநிலை வாதம் என்பார்கள்.) உலகின் மிக ஆபாசமான அபத்தமான சிந்தனை இதுவே.
அதனாலே சொல்கிறேன் அழகு எனும் அளவுகோலின் அடிப்படையிலான காதல் ஒழிவதும், மனிதன் பாலுணர்வின் அடிப்படையில் மட்டும் தூய்மையாக தன் துணையை நாடுவதுமே நியாயமான மனித உறவுகளுக்கு வழிவகுக்கும். அதற்காக கட்டற்ற பாலியலே சரியானது என நான் கூறவில்லை. நாம் விரும்பும் பாலியல் துணையுடன் ஒரு நியாயமான ஒப்பந்தத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை நாம் நேரடியாக சொல்ல முடியாது - ஏனென்றால் மொழி எனும் போதை நம்மை ஆட்டிப் படைக்கிறது. அதனால் நாம் 'பொய்' சொல்லியே ஆக வேண்டி இருக்கிறது. அதே நேரம் நமக்குள் காதல் என்பது ஒரு பெரும் பொய் எனும் தெளிவு வேண்டும். இது இருந்தால் ஆண்கள் பெண்ணுக்காக அலைந்து சோர்வடைய வேண்டியிராது.
ஒரு வியப்பான விசயம் - நான் ஊரில் வாழ்ந்த காலத்தில் என் அப்பா தலைமுறை ஆட்கள் இந்தளவுக்கு காதல் மீது பித்தாக இருந்து அதைக் குறித்தே சதா சர்வ நேரமும் சிந்திப்பதை நாம் கண்டதில்லை. அவர்களுக்கு ஒரு பெண்ணை பெண்ணாக மட்டும் காணும் இயல்பு இருந்தது. ஆனால் எழுபது, எண்பது, தொண்ணூறுகளுக்குப் பிறகு, குறிப்பாக என் தலைமுறையினருக்குப் பின்னரே அதிகமாக ஒரு பெண்ணை பெண் அல்லாமல் பாவித்து பேரழகியாக, தேவதையாக, பெரும் உவகையின் திறப்பாக பார்க்கும் கற்பனாவாதம் அதிகரித்துள்ளது. வியப்பாக இந்த தலைமுறைகளில் தான் ஆண்களுக்கு செக்ஸில் திருப்தியடையும், செக்ஸை தேவையான அளவுக்கு அனுபவிக்கும் சாத்தியங்கள் குறைந்து வந்துள்ளன, ஆண்கள் தம்மை தகுதியற்றவர்களாக அதிகமாக உணர்ந்து வந்துள்ளனர், அவர்களுடைய தாழ்வுணர்வே காதல் மயக்கமக தோற்றமெடுத்துள்ளது.
பெண்ணை பெண்ணாக பார்க்க ஒரு துணிச்சல், தன்னம்பிக்கை வேண்டும், அது இல்லாத போது நாம் அவளை ஒரு மீ-இருப்பாக நோக்க தலைப்படுகிறோம், அவளை அடையாமலே அவளைக் கடந்து போக முயல்கிறோம் (லக்கான் இதை கனவு மயக்கம் கொண்ட மிகுகற்பனை (fantasy) என்று தன் உளவியலில் கூறுகிறார்.) இந்த தலைமுறைகளை சேர்ந்த ஆண்களையே பெண்கள் அதிகமாக தகுதி குறைவானவர்களாக நினைக்கிறார்கள், அவமதிக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள். பெண்களிடம் செருப்படி அதிகமாக வாங்க வாங்க இந்த ஆண்கள் அதிபயங்கர காதலர்களாக மாறுகிறார்கள். (லக்கான் இந்த நோய்மையை neurosis என்கிறார். அதனால் காமத்தை அடைய எண்ணாமலே காமத்தை நாட உத்தேசித்து துவங்கி இடத்திலே திரும்பத் திரும்ப சுவரில் மோதிக்கொண்டு நிற்பது.)
நம்மை விட இவ்விசயத்தில் நாய்களுக்கு அதிக திறனுள்ளது - எதிர்பாலினத்தின் பாலுறுப்பையும், மூத்திரத்தையும் முகர்ந்து பார்த்து அதன் ஆரோக்கியம், மனநிலை, அது உண்ணும் உணவு என ஒவ்வொன்றையும் துல்லியமாக கணித்துணரும் திறன் அதற்குண்டு என்பதால் நம்மை போல இல்லாத சங்கதிகளைப் பார்த்து ஏமாந்து காதலில் விழும் பைத்தியக்காரத்தனத்தை நாய்கள் செய்வதில்லை. ஒரு இணையைப் பார்த்ததும் அதன் முழுமையான ஹெல்த் ரிப்போர்ட், உளவியல் நிலை பரிசோதனை அறிக்கையை அது கையில் எடுத்துக் கொண்டு வேண்டுமா வேண்டாமா என முடிவெடுக்கிறது. அதுவும் ஒரு சில நொடிகளிலேயே ஒரு முடிவுக்கு வந்துவிடுவதை நாம் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் மனிதர்கள் ஒரு பெண்ணின் எழுதப்பட்ட கண்களையும் போலி கண்ணிமைகளையும் பார்த்து சொக்கி விழுந்து அவளை தான் காதலிப்பதாக ஏமாந்து போகிறான். அதைத் தாண்டி அவளைக் காணும் துணிச்சல் அவனுக்கு ஒரு போதும் வருவதில்லை. அவளுடைய பாலியல் திறன் என்ன, ஆரோக்கிய நிலை என்ன, மன அமைப்பு என்ன, குழந்தை பெறும் திறன் என்ன என ஒன்றுமே தெரியாத பத்தாம்பசலியாக அவன் இருக்கிறான். அதனாலே நாய்கள் நம்மை விட சிறந்த காதலர்கள் என நான் நினைக்கிறேன். அதனாலே மனிதர்களை விட விலங்குகள் இடத்து எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

Comments