முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலக்கிய சந்தை நடுவே பேச்சாளனுக்கு மேடை அமைக்காதீர்

 


புத்தக கண்காட்சிகள் வாசிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, எழுத்தாளர்களை பிரபலமாக்க அல்ல எனும் வாதம் மிகவும் அபத்தமானது. உலகம் முழுக்க எழுத்தாளர்களை பிரபலமாக்கியே புத்தகங்களை விற்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக அப்படித்தான் உலக புத்தக சந்தை இயங்குகிறது. இங்கு மட்டுமே சுகிசிவம்களும், பர்வீன் சுல்தானாக்களும் மேடையில் தோன்றி பேசினால் புத்தக வாசிப்பு மக்களிடம் ஏற்படும் என நம்புகிறார்கள். அவர்கள் பேசினால் பட்டிமன்ற / பேச்சுக் கலை தான் வளருமே அன்றி, வாசிப்பு அல்ல. ஒரு சோப்பை ஒரு மாடல் அழகியை வைத்து விளம்பரப்படுத்துவதைப் போல ஒரு புத்தகத்தை ஒரு பட்டிமன்ற பேச்சாளரை வைத்து விளம்பரப்படுத்த முடியாது. இரண்டும் இருவேறு பண்டங்கள். இது போன்ற விழாக்களில் பபாசியின் / விழா ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதே அன்றி புத்தகத்துக்கு வாசகனை உருவாக்குவது அல்ல. தற்காலிகமாக ஒரு கூட்டத்தை உண்டு பண்ணிக் காட்டினால் தம் சோலி முடிந்தது என நினைக்கிறார்கள். எங்காவது ஒரு ஆய்வு பண்ணி சுகிசிவத்தினால் இத்தனை ஆயிரம் புது வாசகர்கள் மாதாமாதம் உருவாகிறார்கள் என நிரூபித்ததுண்டா? இல்லை.

என்னுடைய பரிந்துரை எழுத்தாளனை பேச வையுங்கள் என்பதல்ல. சின்னச்சின்ன அமைப்புகளை உருவாக்கி எழுத்தாள பிம்பங்களை உண்டுபண்ணுங்கள். வாசிப்பு ஒரு உயர் பண்பாட்டுச் செயல் எனும் பிம்பத்தை கட்டமையுங்கள். கர்நாடக / இந்துஸ்தானி இசைக்கு ஒரு சந்தையை உருவாக்கிய பாணியில் இதை செய்யுங்கள் என்பதே. எண்ணிக்கை ரொம்ப முக்கியம் அல்ல. மேற்தட்டு, மேல்மத்திய வாசகர்களை உருவாக்கினாலே போதும், மத்திய வர்க்கம் அவர்களால் கவர்ந்திழுக்கப்படும். இம்மாதிரி விசயங்களில் சந்தைப்படுத்தல் உத்தியாளர்களின் பங்களிப்பு அவசியம். பபாசியோ அரசு ஊழியர்களோ இதில் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.
ஏற்கனவே இலக்கிய வாசிப்பு வீழ்ந்து கிடக்கிறது. இதற்கு நடுவே பட்டிமன்ற பேச்சாளர்கள் வேறு வந்து நொய் நொய் என டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...