புத்தக கண்காட்சிகள் வாசிப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு, எழுத்தாளர்களை பிரபலமாக்க அல்ல எனும் வாதம் மிகவும் அபத்தமானது. உலகம் முழுக்க எழுத்தாளர்களை பிரபலமாக்கியே புத்தகங்களை விற்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக அப்படித்தான் உலக புத்தக சந்தை இயங்குகிறது. இங்கு மட்டுமே சுகிசிவம்களும், பர்வீன் சுல்தானாக்களும் மேடையில் தோன்றி பேசினால் புத்தக வாசிப்பு மக்களிடம் ஏற்படும் என நம்புகிறார்கள். அவர்கள் பேசினால் பட்டிமன்ற / பேச்சுக் கலை தான் வளருமே அன்றி, வாசிப்பு அல்ல. ஒரு சோப்பை ஒரு மாடல் அழகியை வைத்து விளம்பரப்படுத்துவதைப் போல ஒரு புத்தகத்தை ஒரு பட்டிமன்ற பேச்சாளரை வைத்து விளம்பரப்படுத்த முடியாது. இரண்டும் இருவேறு பண்டங்கள். இது போன்ற விழாக்களில் பபாசியின் / விழா ஒருங்கிணைப்பாளர்களின் நோக்கம் கூட்டம் சேர்ப்பதே அன்றி புத்தகத்துக்கு வாசகனை உருவாக்குவது அல்ல. தற்காலிகமாக ஒரு கூட்டத்தை உண்டு பண்ணிக் காட்டினால் தம் சோலி முடிந்தது என நினைக்கிறார்கள். எங்காவது ஒரு ஆய்வு பண்ணி சுகிசிவத்தினால் இத்தனை ஆயிரம் புது வாசகர்கள் மாதாமாதம் உருவாகிறார்கள் என நிரூபித்ததுண்டா? இல்லை.

Comments