முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சொதப்புவதற்கான நிஜக் காரணம்

நாம் இந்திய மட்டையாளர்கள் அனைவரும் சுழல் பந்தை சிறப்பாக ஆடத்தக்கவர்கள் என கற்பனையைக் கொண்டுள்ளோம். ஆனால் அது உண்மையல்ல. சூழலை ஆடும் திறன் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக தமிழக, ஆந்திர வீரர்கள் சிறப்பாக சுழலை ஆடுவார்கள், ஆனால் மும்பை வீரர்களுக்கு - கவாஸ்கருக்குப் பிறகு வந்தவர்கள் குறிப்பாக - சச்சின், ரோஹித், ரஹானே உள்ளிட்டு சுழலை ஆடுவதில் ஒரு பிரச்சினை உள்ளது. (ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே விதிவிலக்கு) குறிப்பாக எல்.பி.டபுள்யூ, பவுல்ட் ஆவது. சச்சின் ஸ்வீப் ஆடி இந்த குறையை எதிர்கொண்டாலும் அவரும் தன் கடைசிக் காலத்தில் இவ்வாறே தொடர்ந்து சுழல் பந்துக்கு அவுட் ஆகிக் கொண்டிருந்தார். என்னுடைய கணிப்பு படி மும்பை மட்டையாளர்களில் பலருக்கும் சுழல் பந்தை வீச்சாளரின் கையில் இருந்தே வாசித்து அதற்கு ஏற்ப காலாட்டத்தை முன்னெடுக்கும் திறன் இல்லை. அவர்கள் பந்து ஆடுதளத்தில் விழுந்த பிறகே அதை கணித்தாடுகிறார்கள். ஆகையால் அது திரும்புமா நேராக வருமா என்பதை ஊகிக்க முடியாமல் ஒன்று கண்மூடித்தனமாக ஸ்வீப் செய்கிறார்கள் அல்லது பின்னங்காலுக்கு சென்று தடுத்தாட முயன்று அவுட் ஆகிறார்கள்.

சூர்யகுமாரைப் பொறுத்தவரையில் அவர் டி20 போட்டிகளில் சுழல் பந்தை மிட்விக்கெட்டுக்கு ஸ்பீவ் செய்வதாலும் இறங்கி லாங்க் ஆன், லாங் ஆப்புக்கு மேலே சிக்ஸர் அடிப்பதாலும் நாம் அவரை சுழலுக்கு எதிரான நல்ல மட்டையாளர் என நினைக்கிறோம். ஆனால் அதிரடி என்பது பல சமயங்களில் ஒருவரது பலவீனத்தை மறைப்பதற்கான உத்தி மட்டுமே. சமகால மே.இ தீவு மட்டையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களாலும் இம்மாதிரி சுழலை விளாச முடியும். ஆனால் இயல்பாக ஆட சொன்னால் சூர்யகுமாரைப் போன்றே அவுட் ஆகிவிடுவார்கள். சூர்யாவும் முழுநீளத்தில் விழுந்து சுழலும் பந்தின் / குறைவும் வேகப்பந்தின் திசையை கணிக்க முடியாமலே கடந்த முறை இந்தியாவில் ஆஸி அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் டக் அடித்தார். அதே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் சுழலும் ஆடுதளத்தில் அவர் தடுத்தாட முடியாமல் தான் அவுட் ஆனார். இது அவருக்கு தடுப்பாட்டத்தின் போது பந்தின் திசையை கணித்து கால்களை நகர்த்தும் திறன் குறைவு என்பதைக் காட்டுகிறது. காலாட்டத்தைப் பொறுத்தவரையில் வேகமாக ஸ்விங் ஆகும் பந்தை சமாளிப்பதும் சுழன்று திரும்பும் பந்தை எதிர்கொள்வதும் ஒன்றே. இரண்டிலும் முன்கூட்டிய கணிப்பும் காலாட்டத்தைக் கொண்டு சரியாக எதிர்கொள்ளலும் அவசியம். சூர்யாவின் இந்த பலவீனமே சில நேரங்களில் அவர் ஸ்விங் பந்துக்கும் திணற வைக்கிறது.

சூர்யாவின் ஐ.பி.எல் ஸ்டிரைக் ரேட்டைப் பார்ப்போம். அவர் இடதுகை சுழலர்களுக்கு எதிராக 109 ஸ்டிரைக் ரேட்டிலே ஆடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் இந்த வகை பந்துக்கு எதிராகவே அதிக முறை அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஐ.பி.எல்லில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் 151-159 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார். சுழல் பந்திற்கு எதிராக 141 ஸ்டிரைக் ரேட்டில் அடிக்கிறார். இதற்கு கால் சுழலர்கள் அந்தளவுக்கு கட்டுப்பாட்டுடன் வீச மாட்டார்கள் என்பதும், டி20களில் அவர்கள் சற்று வைடாக வீச முயல்வார்கள், சூர்யா அப்போது அவர்கள் கவருக்கு மேலாக அடித்துவிடுவார் அல்லது பாயிண்ட் பகுதிக்கு வெட்டி ஆடுவார் என்பதும் காரணம் என நினைக்கிறேன். பந்தை அவர்கள் நேராக வீச ஆரம்பித்தால் சூர்யா திணறுவார். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சூர்யா இந்தியாவில் 19 சராசரியையும் வெளிநாடுகளில் 27 சராசரியையும் கொண்டுள்ளார். ஏனென்றால் வெளிநாடுகளில் அவர் அதிகமாக தரமான சுழல் பந்தை ஆடத் தேவையிருக்கவில்லை. சர்வதேச டி20 போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட் ஆக்கியுள்ளவர்கள் கால்சுழலர்கள் - இஷ் சோதி மற்றும் ரஷீத். அதே போல சர்வதேச டி20 போட்டிகளில் இடதுகை வேகவீச்சாளர்களுக்கு எதிராக சூர்யாவின் சராசரி 43.25. ஆனால் இடதுகை சுழலுக்கு எதிரான சராசரி 16.75. ஒருநாள் போட்டிகளில் இடதுகை சுழலுக்கு எதிராக அவர் 4 முறைகள் எல்.பி.டபுள்யு ஆகியிருக்கிறார்.

சூர்யாவின் இந்த பலவீனத்தை சுட்டிக் காட்டிய ஒரே கிரிக்கெட் நிபுணர் இங்கிலாந்தின் நசீர் ஹுசேன் தான். இவர் தான் முன்பு சச்சினின் இதே பலவீனத்தை கணித்து ஆஷ்லி கைல்ஸ் எனும் இடதுகை சுழலரை ரவுண்ட் தெ விக்கெட் வந்து போட வைத்து சச்சினைக் கட்டுப்படுத்தி வீழ்த்தவும் செய்தார்.

டி20களில் சூர்யாவின் ஆட்டம் அதிரிபுதிரானது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் ஆடும் ஓவர்களில் (சராசரியாக 10-18 அல்லது 14-20) தரமான சுழல் பந்தை அதிகம் ஆட வேண்டி வராது என்பதே. வேகப்பந்தை எதிர்பாராத பல இடங்களில் அடிக்கும் அபாரமான திறன் அவருக்கு உள்ளதும், அவருக்கு எதிராக அந்த ஓவர்களில் தோளுக்கு மேல் துள்ளும் உயரப்பந்துகளை வேகவீச்சாளர்களால் வீச முடியாது என்பதும் மற்றொரு காரணம். ஆக சூர்யாவின் வலிமையும் டி20யின் வடிவமும் அவர் ஆடுகிற சந்தர்பத்தின் அழுத்தங்களும் அவருக்கு சாதகமாகி விடுகின்றன. வீச்சாளர்கள் அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டுமே யோசித்து வீசுகையில் அவர்களை பலவிதங்களில் அடிக்கிற கடமை மட்டுமே சூர்யாவுக்கு இருக்கும். அவுட் ஆவதைப் பற்றின சிந்தனையே இருக்காது. அதே நேரம் சூர்யா ஐம்பது ஓவர் போட்டிகளில் ஆட வரும் போது அவர் தரமான சுழலை தடுத்தும் ஒற்றை ஓட்டங்களுக்கு கறந்தும் ஆட வேண்டி வருகிறது. அதுவே அவரது பலவீனம். பெரிய ஷாட்டுகளுக்கு சென்று அவர்களுடைய ஆட்டமுறையை இவர் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுடைய பந்தின் திசையை சரியாக கணித்து தடுத்தாடவும் இவருக்கு வராது. அதை மறைக்க தொடர்ந்து ஸ்வீப் செய்ய முயன்றும் பின்னங்காலுக்கு சென்றும் கவர் பகுதியில் தட்டிவிட முயன்றும் அவுட் ஆவதே சூர்யாவுக்கு வழக்கம். ஆனால் நம் வர்ணனையாளர்களும் நிபுணர்களும் சூர்யாவுக்கு இன்னும் ஐம்பது ஓவர் போட்டிகளின் வேகம் பிடிபடவில்லை எனத் தவறாக இதைப் பார்க்கிறார்கள். இந்திய அணி நிர்வாகமோ அவரை 50 ஓவர் போட்டியின் கடைசி 20 ஓவர்களில் ஆட வைத்தால் பிரச்சினையை சரிசெய்யலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மத்திய மட்டை வரிசை பலவீனமானது என்பதால் சூர்யா 5வது எண்ணில் ஆடினாலும் 30 ஓவர்களுக்குள் ஆட வேண்டி வருகிறது. அவர் அங்குதான் சிக்கிக் கொள்கிறார்.

சூர்யா டி20யில் ஒரு மேதையாகத் தெரிவதன் காரணம் அவர் சுழலும் ஆடுதளங்களிலோ சிறந்த சுழல்பந்துக்கு எதிராகவோ ஆடத் தேவையிருப்பதில்லை என்பதே. இந்த சுழல் பந்து பலவீனத்தை எப்படியாவது சரிபண்ணாமல் அவரால் 50 ஓவர், டெஸ்ட் போட்டி வடிவங்களில் மத்திய ஓவர்களில் ஆட முடியாது. அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிப்பதால் மட்டுமே அவரை ஒரு சிறந்த வீரராக்க முடியாது. கூரை மீதேற்றி பறக்க விட்டால் மட்டும் கோழி வானில் உயரப்பறக்கப் போவதில்லை.  

ப்போதைக்கு சூர்யாவுக்கு வாய்ப்பளித்து நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக சுழலை நன்றாக ஆடக் கூடிய சஞ்சு சாம்சனுக்கு அவ்வாய்ப்புகளைக் கொடுக்கலாம். 24 போட்டிகளில் 23 சராசரி கொண்டுள்ளார் சூர்யா. ஆனால் சஞ்சுவோ 11 ஒருநாள் போட்டிகள் ஆடி 66 சராசரி கொண்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...