Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் சொதப்புவதற்கான நிஜக் காரணம்

நாம் இந்திய மட்டையாளர்கள் அனைவரும் சுழல் பந்தை சிறப்பாக ஆடத்தக்கவர்கள் என கற்பனையைக் கொண்டுள்ளோம். ஆனால் அது உண்மையல்ல. சூழலை ஆடும் திறன் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக தமிழக, ஆந்திர வீரர்கள் சிறப்பாக சுழலை ஆடுவார்கள், ஆனால் மும்பை வீரர்களுக்கு - கவாஸ்கருக்குப் பிறகு வந்தவர்கள் குறிப்பாக - சச்சின், ரோஹித், ரஹானே உள்ளிட்டு சுழலை ஆடுவதில் ஒரு பிரச்சினை உள்ளது. (ஷ்ரேயாஸ் ஐயர் மட்டுமே விதிவிலக்கு) குறிப்பாக எல்.பி.டபுள்யூ, பவுல்ட் ஆவது. சச்சின் ஸ்வீப் ஆடி இந்த குறையை எதிர்கொண்டாலும் அவரும் தன் கடைசிக் காலத்தில் இவ்வாறே தொடர்ந்து சுழல் பந்துக்கு அவுட் ஆகிக் கொண்டிருந்தார். என்னுடைய கணிப்பு படி மும்பை மட்டையாளர்களில் பலருக்கும் சுழல் பந்தை வீச்சாளரின் கையில் இருந்தே வாசித்து அதற்கு ஏற்ப காலாட்டத்தை முன்னெடுக்கும் திறன் இல்லை. அவர்கள் பந்து ஆடுதளத்தில் விழுந்த பிறகே அதை கணித்தாடுகிறார்கள். ஆகையால் அது திரும்புமா நேராக வருமா என்பதை ஊகிக்க முடியாமல் ஒன்று கண்மூடித்தனமாக ஸ்வீப் செய்கிறார்கள் அல்லது பின்னங்காலுக்கு சென்று தடுத்தாட முயன்று அவுட் ஆகிறார்கள்.

சூர்யகுமாரைப் பொறுத்தவரையில் அவர் டி20 போட்டிகளில் சுழல் பந்தை மிட்விக்கெட்டுக்கு ஸ்பீவ் செய்வதாலும் இறங்கி லாங்க் ஆன், லாங் ஆப்புக்கு மேலே சிக்ஸர் அடிப்பதாலும் நாம் அவரை சுழலுக்கு எதிரான நல்ல மட்டையாளர் என நினைக்கிறோம். ஆனால் அதிரடி என்பது பல சமயங்களில் ஒருவரது பலவீனத்தை மறைப்பதற்கான உத்தி மட்டுமே. சமகால மே.இ தீவு மட்டையாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்களாலும் இம்மாதிரி சுழலை விளாச முடியும். ஆனால் இயல்பாக ஆட சொன்னால் சூர்யகுமாரைப் போன்றே அவுட் ஆகிவிடுவார்கள். சூர்யாவும் முழுநீளத்தில் விழுந்து சுழலும் பந்தின் / குறைவும் வேகப்பந்தின் திசையை கணிக்க முடியாமலே கடந்த முறை இந்தியாவில் ஆஸி அணிக்கு எதிராக தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் டக் அடித்தார். அதே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும் சுழலும் ஆடுதளத்தில் அவர் தடுத்தாட முடியாமல் தான் அவுட் ஆனார். இது அவருக்கு தடுப்பாட்டத்தின் போது பந்தின் திசையை கணித்து கால்களை நகர்த்தும் திறன் குறைவு என்பதைக் காட்டுகிறது. காலாட்டத்தைப் பொறுத்தவரையில் வேகமாக ஸ்விங் ஆகும் பந்தை சமாளிப்பதும் சுழன்று திரும்பும் பந்தை எதிர்கொள்வதும் ஒன்றே. இரண்டிலும் முன்கூட்டிய கணிப்பும் காலாட்டத்தைக் கொண்டு சரியாக எதிர்கொள்ளலும் அவசியம். சூர்யாவின் இந்த பலவீனமே சில நேரங்களில் அவர் ஸ்விங் பந்துக்கும் திணற வைக்கிறது.

சூர்யாவின் ஐ.பி.எல் ஸ்டிரைக் ரேட்டைப் பார்ப்போம். அவர் இடதுகை சுழலர்களுக்கு எதிராக 109 ஸ்டிரைக் ரேட்டிலே ஆடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலும் அவர் இந்த வகை பந்துக்கு எதிராகவே அதிக முறை அவுட் ஆகி உள்ளார். ஆனால் ஐ.பி.எல்லில் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவர் 151-159 ஸ்டிரைக் ரேட்டில் ஆடுகிறார். சுழல் பந்திற்கு எதிராக 141 ஸ்டிரைக் ரேட்டில் அடிக்கிறார். இதற்கு கால் சுழலர்கள் அந்தளவுக்கு கட்டுப்பாட்டுடன் வீச மாட்டார்கள் என்பதும், டி20களில் அவர்கள் சற்று வைடாக வீச முயல்வார்கள், சூர்யா அப்போது அவர்கள் கவருக்கு மேலாக அடித்துவிடுவார் அல்லது பாயிண்ட் பகுதிக்கு வெட்டி ஆடுவார் என்பதும் காரணம் என நினைக்கிறேன். பந்தை அவர்கள் நேராக வீச ஆரம்பித்தால் சூர்யா திணறுவார். 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சூர்யா இந்தியாவில் 19 சராசரியையும் வெளிநாடுகளில் 27 சராசரியையும் கொண்டுள்ளார். ஏனென்றால் வெளிநாடுகளில் அவர் அதிகமாக தரமான சுழல் பந்தை ஆடத் தேவையிருக்கவில்லை. சர்வதேச டி20 போட்டிகளில் அவரை அதிகமுறை அவுட் ஆக்கியுள்ளவர்கள் கால்சுழலர்கள் - இஷ் சோதி மற்றும் ரஷீத். அதே போல சர்வதேச டி20 போட்டிகளில் இடதுகை வேகவீச்சாளர்களுக்கு எதிராக சூர்யாவின் சராசரி 43.25. ஆனால் இடதுகை சுழலுக்கு எதிரான சராசரி 16.75. ஒருநாள் போட்டிகளில் இடதுகை சுழலுக்கு எதிராக அவர் 4 முறைகள் எல்.பி.டபுள்யு ஆகியிருக்கிறார்.

சூர்யாவின் இந்த பலவீனத்தை சுட்டிக் காட்டிய ஒரே கிரிக்கெட் நிபுணர் இங்கிலாந்தின் நசீர் ஹுசேன் தான். இவர் தான் முன்பு சச்சினின் இதே பலவீனத்தை கணித்து ஆஷ்லி கைல்ஸ் எனும் இடதுகை சுழலரை ரவுண்ட் தெ விக்கெட் வந்து போட வைத்து சச்சினைக் கட்டுப்படுத்தி வீழ்த்தவும் செய்தார்.

டி20களில் சூர்யாவின் ஆட்டம் அதிரிபுதிரானது. அதற்கு ஒரு முக்கிய காரணம் அவர் ஆடும் ஓவர்களில் (சராசரியாக 10-18 அல்லது 14-20) தரமான சுழல் பந்தை அதிகம் ஆட வேண்டி வராது என்பதே. வேகப்பந்தை எதிர்பாராத பல இடங்களில் அடிக்கும் அபாரமான திறன் அவருக்கு உள்ளதும், அவருக்கு எதிராக அந்த ஓவர்களில் தோளுக்கு மேல் துள்ளும் உயரப்பந்துகளை வேகவீச்சாளர்களால் வீச முடியாது என்பதும் மற்றொரு காரணம். ஆக சூர்யாவின் வலிமையும் டி20யின் வடிவமும் அவர் ஆடுகிற சந்தர்பத்தின் அழுத்தங்களும் அவருக்கு சாதகமாகி விடுகின்றன. வீச்சாளர்கள் அவரை எப்படி கட்டுப்படுத்துவது என்று மட்டுமே யோசித்து வீசுகையில் அவர்களை பலவிதங்களில் அடிக்கிற கடமை மட்டுமே சூர்யாவுக்கு இருக்கும். அவுட் ஆவதைப் பற்றின சிந்தனையே இருக்காது. அதே நேரம் சூர்யா ஐம்பது ஓவர் போட்டிகளில் ஆட வரும் போது அவர் தரமான சுழலை தடுத்தும் ஒற்றை ஓட்டங்களுக்கு கறந்தும் ஆட வேண்டி வருகிறது. அதுவே அவரது பலவீனம். பெரிய ஷாட்டுகளுக்கு சென்று அவர்களுடைய ஆட்டமுறையை இவர் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுடைய பந்தின் திசையை சரியாக கணித்து தடுத்தாடவும் இவருக்கு வராது. அதை மறைக்க தொடர்ந்து ஸ்வீப் செய்ய முயன்றும் பின்னங்காலுக்கு சென்றும் கவர் பகுதியில் தட்டிவிட முயன்றும் அவுட் ஆவதே சூர்யாவுக்கு வழக்கம். ஆனால் நம் வர்ணனையாளர்களும் நிபுணர்களும் சூர்யாவுக்கு இன்னும் ஐம்பது ஓவர் போட்டிகளின் வேகம் பிடிபடவில்லை எனத் தவறாக இதைப் பார்க்கிறார்கள். இந்திய அணி நிர்வாகமோ அவரை 50 ஓவர் போட்டியின் கடைசி 20 ஓவர்களில் ஆட வைத்தால் பிரச்சினையை சரிசெய்யலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இந்திய மத்திய மட்டை வரிசை பலவீனமானது என்பதால் சூர்யா 5வது எண்ணில் ஆடினாலும் 30 ஓவர்களுக்குள் ஆட வேண்டி வருகிறது. அவர் அங்குதான் சிக்கிக் கொள்கிறார்.

சூர்யா டி20யில் ஒரு மேதையாகத் தெரிவதன் காரணம் அவர் சுழலும் ஆடுதளங்களிலோ சிறந்த சுழல்பந்துக்கு எதிராகவோ ஆடத் தேவையிருப்பதில்லை என்பதே. இந்த சுழல் பந்து பலவீனத்தை எப்படியாவது சரிபண்ணாமல் அவரால் 50 ஓவர், டெஸ்ட் போட்டி வடிவங்களில் மத்திய ஓவர்களில் ஆட முடியாது. அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிப்பதால் மட்டுமே அவரை ஒரு சிறந்த வீரராக்க முடியாது. கூரை மீதேற்றி பறக்க விட்டால் மட்டும் கோழி வானில் உயரப்பறக்கப் போவதில்லை.  

ப்போதைக்கு சூர்யாவுக்கு வாய்ப்பளித்து நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக சுழலை நன்றாக ஆடக் கூடிய சஞ்சு சாம்சனுக்கு அவ்வாய்ப்புகளைக் கொடுக்கலாம். 24 போட்டிகளில் 23 சராசரி கொண்டுள்ளார் சூர்யா. ஆனால் சஞ்சுவோ 11 ஒருநாள் போட்டிகள் ஆடி 66 சராசரி கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...