இம்முறை தில்லி சென்றிருந்த போது பல இடங்களில் மோடியின் பின்னால் யோகி பணிவாக நிற்கும் படங்களைப் பார்த்தேன். அவர்களுடைய எதிர்காலத் திட்டம் அது, நம்மை அதை நோக்கித் தயாரிக்கிறார்கள் எனத் தெளிவாகியது. அதற்காக யோகியை நம் மீது திணிக்கிறார்கள் என்றில்லை. இப்போது கூட யோகிக்கு ஓட்டுப்போட சொன்னால் வடக்கர்கள் குதித்தோடி வருவார்கள் என எனக்கு அங்கு கிடைத்த அனுபவம் உணர்த்தியது. நம் மக்களுக்கு மோடியை விட பொருத்தமான தலைவர் யோகி தான். அவர் பிரதமர் ஆனால் இந்த தேசம் அதன் 'ஒரிஜினலான'விலங்கு நிலையை அடைந்து விடும் என நம்புகிறேன். "புதுப்பேட்டை" படத்தில் தனுஷ் சொல்வார், "நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு புதுச்சட்டை போட்டு செண்ட் அடிச்சு பளிச்சின்னு இருக்கக் கூடாது. உடனே அவன் தாலியறுத்தான், இவன் வெட்டிட்டான், அவங்க கூட சேர்ந்துட்டான்னு சொல்லுவீங்க. நான் உடனே கத்தியைத் தூக்கிட்டு ரோட்ல ஓடணும். அதானே?" நமது நாட்டின் எதிர்காலத்தை நினைக்கையில் இதுதான் நினைவுக்கு வருகின்றது. கொஞ்ச நாளில் எல்லாரையும் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓட வைப்பார்கள்!
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments