முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தீக்குச்சியும் எரிகல்லும்

நான் பன்னிரெண்டு வயதிருக்கும் போதே - எழுத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது என்றாலும் - எழுத்தாளராவது என முடிவெடுத்தேன். என் பதினாறாவது வயதில் நவீன கதைகள் எழுதத் தொடங்கினேன். அப்போதே எனக்கு தீவிர இலக்கிய குழுக்களுடன் பரிச்சயம் இருந்தது. எழுதினால் பதிலுக்கு ஒன்றுமே கிடைக்காது என்று தெரிந்திருந்தது. அதனால் என்றுமே எனக்கு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏமாற்றமும் இருந்ததில்லை. பணப்போதாமை இருக்கும் போது மட்டும் ஒரு கசப்பு வரும் - இவ்வளவு எழுத்துக்காக உழைக்கிறோமே, நம்மை சுரண்டுகிறார்களே என்று சில நாட்கள் மனதுக்குள் குமுறுவேன். அவ்வளவுதான். அண்மையில் தான் புத்தகங்களின் முதலீடு, விற்பனை, லாபம், மதிப்புரிமை குறித்து ஒரு தெளிவு ஏற்பட்டது - சிறந்த விற்பனை ஒரு நூலுக்கு ஏற்பட்டாலும் எழுத்தாளன் அதில் இருந்து ஒரு பெண் பூக்கட்டி ஒரு மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு மடங்கே சம்பாதிக்க முடியும்; இத்தனைக்கும் அவன் அதற்காக ஒரு ஆண்டு முழுக்க முதுகொடிய எழுத வேண்டும். அந்த சொற்ப தொகைகையும் தராமல் ஏமாற்ற அனுமதிக்காமல் வாங்குவதே திறமை தான் எனும் போது அதன் அளவைப் பற்றி யோசிக்கவே முடியாது.

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது மற்ற துறைகளில் எழுத்துக்கு உள்ள பணமதிப்பு தான். இந்த ஆண்டின் துவக்கத்தில் நான் ஒரு இணையத்தொடருக்காக சில மாதங்கள் வேலை செய்தேன். என்னிடம் தாம் ஒரு தொடரின் கதையை ஓராண்டுக்கு மேலாக விவாதித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எனக்கு பேசிக்கொண்டே இருப்பதில் நம்பிக்கையில்லை. வரைவாக எழுதிப் பார்த்தாலே குற்றங்குறைகள் புரியும். அதனால் நான் அவர்கள் சொன்ன கதை வரிகளில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு இரண்டு நாட்களில் ஒரு கதை வரைவை எழுதி அனுப்பினேன். அடுத்தடுத்த விவாதங்களில் அதை வளர்த்தெடுத்தோம். ஒட்டுமொத்த திரைக்கதைக்கான வரைவையும் எழுதி 25 அத்தியாயங்களின் சுருக்கத்தை எழுதிக் கொடுத்தேன். அதற்கு அவர்கள் அளித்த முன்தொகை 4 புத்தகங்களுக்கு எனக்கு பத்தாண்டுகள் கிடைக்கப் போகும் மதிப்புரைக்கு சமானம். ஆனால் நான் அந்த வேலையை செய்ய குறைந்த காலத்தையே எடுத்துக் கொண்டேன். இப்போது நான் திருத்தி எழுதி வரும் நாவலுக்கு செலவிட்ட நேரத்திற்கு நூறில் ஒரு மடங்கே அது. என் நாவலுக்கு நான் செலுத்தும் உழைப்பில் ஆயிரத்தில் ஒரு மடங்கு ஒரு இணையத்தொடருக்கு செலவிட்டால் போதும். (நான் ஒரு நாவலுக்காக தினமும் 4-8 மணிநேரங்கள் என்றும் மூன்றாண்டுகள் உழைக்கிறேன் என்றால் எத்தனை மணிநேரங்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள்.) அண்மையில் ஒரு நவீன கவிஞரும் இதை என்னிடம் சொன்னார் - ஒரு திரைக்கதையை குறைந்த காலத்தில் எழுதி தான் சம்பாதித்த பணம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக; மனதுக்குள் நாட்கணக்காக ஊறப்போட்டு தீவிரமான மனநிலையில் எழுதி பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு சில ஆயிரம் விருப்பக்குறிகள் பெறலாம்; ஆனால் அதை விட வேகமாக ஒரு திரைப்பாடலை எழுதி கணிசமான தொகையைப் பெற முடியும். அதற்கான வாய்ப்புகள் பல நேரங்களில் தீவிர படைப்பாளிகளுக்கு மறுக்கப்படுவதால் அவர்கள் ஒரு பக்கம் இருட்டில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருக்க வேண்டி வருகிறது.

வெகுஜன ஊடகங்களுக்கு எழுதும் போது பார்முலாவே முக்கியம். அது பிடிபட்டுவிட்டால் எழுத முடியும். ஆனால் இலக்கிய நாவல்கள் எந்த பார்முலாவுக்குள்ளும் அடங்காது; ஏகப்பட்ட சிக்கல்களையும் குழப்பங்களையும் உள்ளுக்குள் கொண்டிருக்கும். அதற்கு செலவிடும் உழைப்பில் சிறுபகுதி போதும் நீங்கள் சினிமாவிலும் டிவியிலும் சாதிக்க. ஆனால் இலக்கியத்துக்காக ரத்தத்தை சிந்தினால் கிடைப்பது ரெண்டாயிரமும் மூவாயிரமும். பணம் மட்டுமல்ல சமூக கவனம், அங்கீகாரம், பாராட்டுக்களும் ஒரு கவர்ச்சி நடிகைக்கோ குக்வித் கோமாளிகோ கிடைப்பதில் எழுத்தாளனுக்கு லட்சத்தில் ஒரு மடங்கு கூட இல்லை. சிலர் எழுத்தாளர்களுக்கு சமூக அக்கறை இல்லையென்பதால் சமூகமும் அவர்களை பதிலுக்கு உதாசீனிக்கிறது என்கிறார்கள். எனில் கவர்ச்சி நடிகை, குக்வித் கோமாளிகள் சமூகத்துக்காக தினமும் கொடியேந்தி போராட்டம் பண்ணுகிறார்களா?

இங்கு இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல திறமையான பாரம்பரிய இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகளுக்கும் ‘பொத்திக்கிட்டு போ’ என்றே தமிழ் சமூகம் சொல்கிறது. பொதுச்சமூகம் என்று நான் படிப்பறிவு குறைவானவர்களை சொல்லவில்லை, நன்கு படித்த, பணம் படைத்தவர்களையும் சேர்த்தே, மாணவக்கண்மணிகளையும் சேர்த்தே சொல்கிறேன். இது ஒரு ஆழமான சமூக உளவியல் பிரச்சினை - இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எழுதி சம்பாதிக்க வேண்டுமெனில் அதற்கான வாய்ப்புகளை வெளியே நாட வேண்டும். அல்லாவிடில் ஒரு சின்ன வட்டத்துக்காக கடைசி வரை எழுத வேண்டும். அந்த வட்டம் பத்து அங்குல விட்டத்தில் இருந்து பன்னிரெண்டு அங்குலங்களாக அடுத்த சில பத்தாண்டுகளில் வளரலாம். அவ்வளவுதான். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அடுத்து, பரவலாகப் படிக்கப்படுவதற்கும், எழுத்துக்காக நிறைய சன்மானம் பெறுவதற்கும் தரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கேரளாவில் கொண்டாடப்படும் எம்.டி வாசுதேவன் நாயரையும், சக்கரியாவை எடுத்துக் கொண்டால் அவர்களை விட பல மடங்கு மேலான இருபது படைப்பாளிகளையாவது என்னால் தமிழில் காட்ட முடியும். தமிழின் சாதனையாளர்களுடன் ஒப்பிட்டால் அவர்கள் குழந்தைப் பையன்கள். தீப்பெட்டியில் உரசும் தீக்குச்சிக் கதைகள் எழுதினவர்கள். அவர்கள் எழுதி மட்டுமே புகழுடனும் பொருளுடனும் வாழ முடிந்ததனால் என்ன பயன்? இதை நான் ஆறுதலுக்காக சொல்லவில்லை - இதுவே உண்மை. ஒரு எழுத்துக் கலைஞனாக நாம் பெரும் உயரங்களை எட்டுவதே மகிழ்ச்சியும் பெருமையும். எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், நமக்கு சிலையே வைத்தாலும் பூமியை நோக்கி பாய்ந்து வரும் எரிகல்லைப் போன்றதொரு நாவலை எழுதும் மகத்தான அகந்தைக்கு ஒப்பாகாது. இந்த சமூகம் விஜய் படத்தைப் பார்த்து தலைகீழாக குதித்துக் கொண்டிருக்கட்டும். நமக்கென்ன?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.