Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தீக்குச்சியும் எரிகல்லும்

நான் பன்னிரெண்டு வயதிருக்கும் போதே - எழுத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது என்றாலும் - எழுத்தாளராவது என முடிவெடுத்தேன். என் பதினாறாவது வயதில் நவீன கதைகள் எழுதத் தொடங்கினேன். அப்போதே எனக்கு தீவிர இலக்கிய குழுக்களுடன் பரிச்சயம் இருந்தது. எழுதினால் பதிலுக்கு ஒன்றுமே கிடைக்காது என்று தெரிந்திருந்தது. அதனால் என்றுமே எனக்கு எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஏமாற்றமும் இருந்ததில்லை. பணப்போதாமை இருக்கும் போது மட்டும் ஒரு கசப்பு வரும் - இவ்வளவு எழுத்துக்காக உழைக்கிறோமே, நம்மை சுரண்டுகிறார்களே என்று சில நாட்கள் மனதுக்குள் குமுறுவேன். அவ்வளவுதான். அண்மையில் தான் புத்தகங்களின் முதலீடு, விற்பனை, லாபம், மதிப்புரிமை குறித்து ஒரு தெளிவு ஏற்பட்டது - சிறந்த விற்பனை ஒரு நூலுக்கு ஏற்பட்டாலும் எழுத்தாளன் அதில் இருந்து ஒரு பெண் பூக்கட்டி ஒரு மாதம் சம்பாதிக்கும் பணத்தில் பத்தில் ஒரு மடங்கே சம்பாதிக்க முடியும்; இத்தனைக்கும் அவன் அதற்காக ஒரு ஆண்டு முழுக்க முதுகொடிய எழுத வேண்டும். அந்த சொற்ப தொகைகையும் தராமல் ஏமாற்ற அனுமதிக்காமல் வாங்குவதே திறமை தான் எனும் போது அதன் அளவைப் பற்றி யோசிக்கவே முடியாது.

என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது மற்ற துறைகளில் எழுத்துக்கு உள்ள பணமதிப்பு தான். இந்த ஆண்டின் துவக்கத்தில் நான் ஒரு இணையத்தொடருக்காக சில மாதங்கள் வேலை செய்தேன். என்னிடம் தாம் ஒரு தொடரின் கதையை ஓராண்டுக்கு மேலாக விவாதித்துக் கொண்டிருப்பதாக சொன்னார்கள். எனக்கு பேசிக்கொண்டே இருப்பதில் நம்பிக்கையில்லை. வரைவாக எழுதிப் பார்த்தாலே குற்றங்குறைகள் புரியும். அதனால் நான் அவர்கள் சொன்ன கதை வரிகளில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு இரண்டு நாட்களில் ஒரு கதை வரைவை எழுதி அனுப்பினேன். அடுத்தடுத்த விவாதங்களில் அதை வளர்த்தெடுத்தோம். ஒட்டுமொத்த திரைக்கதைக்கான வரைவையும் எழுதி 25 அத்தியாயங்களின் சுருக்கத்தை எழுதிக் கொடுத்தேன். அதற்கு அவர்கள் அளித்த முன்தொகை 4 புத்தகங்களுக்கு எனக்கு பத்தாண்டுகள் கிடைக்கப் போகும் மதிப்புரைக்கு சமானம். ஆனால் நான் அந்த வேலையை செய்ய குறைந்த காலத்தையே எடுத்துக் கொண்டேன். இப்போது நான் திருத்தி எழுதி வரும் நாவலுக்கு செலவிட்ட நேரத்திற்கு நூறில் ஒரு மடங்கே அது. என் நாவலுக்கு நான் செலுத்தும் உழைப்பில் ஆயிரத்தில் ஒரு மடங்கு ஒரு இணையத்தொடருக்கு செலவிட்டால் போதும். (நான் ஒரு நாவலுக்காக தினமும் 4-8 மணிநேரங்கள் என்றும் மூன்றாண்டுகள் உழைக்கிறேன் என்றால் எத்தனை மணிநேரங்கள் எனக் கணக்கிட்டுப் பாருங்கள்.) அண்மையில் ஒரு நவீன கவிஞரும் இதை என்னிடம் சொன்னார் - ஒரு திரைக்கதையை குறைந்த காலத்தில் எழுதி தான் சம்பாதித்த பணம் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக; மனதுக்குள் நாட்கணக்காக ஊறப்போட்டு தீவிரமான மனநிலையில் எழுதி பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டு சில ஆயிரம் விருப்பக்குறிகள் பெறலாம்; ஆனால் அதை விட வேகமாக ஒரு திரைப்பாடலை எழுதி கணிசமான தொகையைப் பெற முடியும். அதற்கான வாய்ப்புகள் பல நேரங்களில் தீவிர படைப்பாளிகளுக்கு மறுக்கப்படுவதால் அவர்கள் ஒரு பக்கம் இருட்டில் அமர்ந்து புலம்பிக் கொண்டு இருக்க வேண்டி வருகிறது.

வெகுஜன ஊடகங்களுக்கு எழுதும் போது பார்முலாவே முக்கியம். அது பிடிபட்டுவிட்டால் எழுத முடியும். ஆனால் இலக்கிய நாவல்கள் எந்த பார்முலாவுக்குள்ளும் அடங்காது; ஏகப்பட்ட சிக்கல்களையும் குழப்பங்களையும் உள்ளுக்குள் கொண்டிருக்கும். அதற்கு செலவிடும் உழைப்பில் சிறுபகுதி போதும் நீங்கள் சினிமாவிலும் டிவியிலும் சாதிக்க. ஆனால் இலக்கியத்துக்காக ரத்தத்தை சிந்தினால் கிடைப்பது ரெண்டாயிரமும் மூவாயிரமும். பணம் மட்டுமல்ல சமூக கவனம், அங்கீகாரம், பாராட்டுக்களும் ஒரு கவர்ச்சி நடிகைக்கோ குக்வித் கோமாளிகோ கிடைப்பதில் எழுத்தாளனுக்கு லட்சத்தில் ஒரு மடங்கு கூட இல்லை. சிலர் எழுத்தாளர்களுக்கு சமூக அக்கறை இல்லையென்பதால் சமூகமும் அவர்களை பதிலுக்கு உதாசீனிக்கிறது என்கிறார்கள். எனில் கவர்ச்சி நடிகை, குக்வித் கோமாளிகள் சமூகத்துக்காக தினமும் கொடியேந்தி போராட்டம் பண்ணுகிறார்களா?

இங்கு இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல திறமையான பாரம்பரிய இசைக்கலைஞர்கள், ஓவியர்கள், தத்துவவாதிகளுக்கும் ‘பொத்திக்கிட்டு போ’ என்றே தமிழ் சமூகம் சொல்கிறது. பொதுச்சமூகம் என்று நான் படிப்பறிவு குறைவானவர்களை சொல்லவில்லை, நன்கு படித்த, பணம் படைத்தவர்களையும் சேர்த்தே, மாணவக்கண்மணிகளையும் சேர்த்தே சொல்கிறேன். இது ஒரு ஆழமான சமூக உளவியல் பிரச்சினை - இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.

எழுதி சம்பாதிக்க வேண்டுமெனில் அதற்கான வாய்ப்புகளை வெளியே நாட வேண்டும். அல்லாவிடில் ஒரு சின்ன வட்டத்துக்காக கடைசி வரை எழுத வேண்டும். அந்த வட்டம் பத்து அங்குல விட்டத்தில் இருந்து பன்னிரெண்டு அங்குலங்களாக அடுத்த சில பத்தாண்டுகளில் வளரலாம். அவ்வளவுதான். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அடுத்து, பரவலாகப் படிக்கப்படுவதற்கும், எழுத்துக்காக நிறைய சன்மானம் பெறுவதற்கும் தரத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கேரளாவில் கொண்டாடப்படும் எம்.டி வாசுதேவன் நாயரையும், சக்கரியாவை எடுத்துக் கொண்டால் அவர்களை விட பல மடங்கு மேலான இருபது படைப்பாளிகளையாவது என்னால் தமிழில் காட்ட முடியும். தமிழின் சாதனையாளர்களுடன் ஒப்பிட்டால் அவர்கள் குழந்தைப் பையன்கள். தீப்பெட்டியில் உரசும் தீக்குச்சிக் கதைகள் எழுதினவர்கள். அவர்கள் எழுதி மட்டுமே புகழுடனும் பொருளுடனும் வாழ முடிந்ததனால் என்ன பயன்? இதை நான் ஆறுதலுக்காக சொல்லவில்லை - இதுவே உண்மை. ஒரு எழுத்துக் கலைஞனாக நாம் பெரும் உயரங்களை எட்டுவதே மகிழ்ச்சியும் பெருமையும். எவ்வளவுதான் பணத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், நமக்கு சிலையே வைத்தாலும் பூமியை நோக்கி பாய்ந்து வரும் எரிகல்லைப் போன்றதொரு நாவலை எழுதும் மகத்தான அகந்தைக்கு ஒப்பாகாது. இந்த சமூகம் விஜய் படத்தைப் பார்த்து தலைகீழாக குதித்துக் கொண்டிருக்கட்டும். நமக்கென்ன?

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...