Skip to main content

தமிழ் சமூகத்தின் இரண்டு அடிப்படையான தேவைகள்


"சாய் வித் சித்ராவில்" தேவிபாலாவின் பேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இளைஞனாக இருந்த போது அவரையும், பின்னர் அவரது பேட்டிகளையும் படித்திருக்கிறேன். தெளிவான மனிதர். ஆனால் 'உழைப்பாளி' என்று கூற முடியாது.
கடுமையான இலக்கை வைத்து அதை நோக்கி அன்றாடம் முயல்வதையே நான் உழைப்பென்று சொல்வேன். பார்முலா படி தினமும் பக்கங்களாக எழுதித் தள்ளுவது அசல் உழைப்பல்ல. அது எந்திரத்தனமாக உடலையும் மேலோட்டமாக மூளையையும் பயன்படுத்தும் உழைப்பு மட்டுமே. உ.தா., ஒரு முறை ஆனந்த விகடன் நிறுவனர் அவரது பத்திரிகையில் தான் எழுதி வந்த தொடரில் சில ஆய்வுத் தகவல்களை சேர்க்கும்படி கோப்புகளை, பேப்பர் கட்டிங்குகளைத் தந்து சொன்னதாகக் குறிப்பிடுகிறார். ஒரு எழுத்தாளன் உண்மையில் இந்த ஆய்வுகளை சில மாதங்கள், ஆண்டுகளாவது செய்திருப்பான். நூறு பக்கங்களை எழுதும் முன்பு நீண்ட காலம் சிந்தித்துத் திட்டமிட்டு அத்திட்டத்தைத் திருத்தி, அதற்காக ஆய்வுகள் செய்து எழுதி முடித்து அதையும் பத்திருபது முறைகள் முழுமையாகத் திருத்தினாலே ஒரு நல்ல (வணிக / இலக்கிய) நாவல் உருவாகும். மேற்கில் சில வணிக எழுத்தாளர்கள் கூட இந்தளவுக்கு நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் தமிழில் என்னாயிற்று என்றால் தொடர்கதை, பாக்கெட் நாவல் எனும் பெயரில் வணிக எழுத்தாளர்கள் கண்மண் தெரியாமல் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டார்கள். தினமும் நான்கு, ஐந்து நாவல்களை எழுத வைக்கப்பட்டார்கள். அக்கதைகளுக்குள் அவர்கள் ஈடுபடவோ சிந்தித்து திட்டமிட்டு எழுதி செதுக்கவோ கால அவகாசம் இல்லை. பாலகுமாரன் பேசியே கொடுத்து விடுவார். அவரது செயலாளர் அதை எழுதி அச்சுக்கு கொடுப்பார். இன்று எனில் அவர் கூகிளின் பேச்சில்-இருந்து-எழுத்துக்கு மென்பொருளை பயன்படுத்தி இருப்பார். எனக்கு சில நாட்கள் வேறொரு படைப்பை எழுதிவிட்டு திரும்ப நாவலுக்கு சென்றால் சில சங்கதிகள் மறந்து தொடர்புவிட்டுப் போயிருக்கும். திரும்ப விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க வாசித்து எடிட் செய்து மனம் லயிக்க வேண்டும். இவர்களுக்கு அப்படியான எந்த வாய்ப்புகளும் இருக்கவில்லை. ஒரு மாதம் 5-8 நாவல்கள், வருடத்திற்கு 50-10, பத்தாண்டுகளுக்கு ஆயிரம் என எழுதினார்கள். இது மூட்டை தூக்குவதைப் போல எழுதினாலே சாத்தியம். சரியாக உழைத்தால் இருபது ஆண்டுகளில் 10-20 நாவல்களே சாத்தியம். நான் இலக்கிய நாவல்களை சொல்லவில்லை. மேற்கில் கூட சிறந்த / பிரசித்த வணிக எழுத்தாளர்கள் 1500 நாவல்களை எழுதியதில்லை. மலையாளத்திலும் இருக்காது என நினைக்கிறேன்.
ஒருவிதத்தில், நமது சமூகத்தில் 50-75% மக்கள் வணிக நாவல்களைப் படித்திருந்தால் இவர்கள் வருடத்திற்கு இவ்வளவு நாவல்களை எழுதத் தேவையிருந்திருக்காது. நம் காலத்தில் வாழும் சேத்தன் பகத்தைப் பாருங்கள். கொஞ்சமாக எழுதி அதை பல கோடி பிரதிகள் விற்று சம்பாதித்து சொகுசாக வாழ்ந்திருக்கலாம். நம் சமூகத்தில் மிக சொற்பமானவர்களே அந்த காலத்திலும் இந்த வணிக நாவல்களைப் படித்தார்கள் என்பதே எதார்த்தம். அதனாலே வணிக எழுத்தாளர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் எழுதும் துன்பமான வாழ்க்கை வாய்த்தது. இன்னொரு விசயம் எல்லா சமூகங்களிலும் வணிக வாசிப்புக்கு ஒரு நிலையான நுகர்வோர் / வாசகர்கள் இருப்பார்கள். நீங்கள் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ கடந்த 300 ஆண்டுகளாக வணிக இலக்கியத்தின் வரலாற்றைத் தொட்டுக் காட்ட முடியும். ஆனால் தமிழில் மட்டுமே தொலைக்காட்சி தொடர்களுடன் தொடர்கதைகளும் வணிக நாவல்களும் நின்று மெல்ல மெல்ல காணாமல் போயின. அதன் பொருள் அவர்களுக்கு நிலையான வாசகர்கள் இல்லை, தற்காலிக வாசகர்களே என்பது. கூத்துக்கலை, மேடை நாடகம் போன்ற வெகுஜன கலைகளுக்கும், வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடங்கள், பொருட்களுக்கும் இதைச் சொல்லலாம். நாம் ஆணுறையைப் போலவே வெகுஜன கலைகளையும், வரலாற்றையும் பாவிக்கிறோம். அந்தந்த காலத்துக்கு ஏற்ப பயன்படுத்திவிட்டு உருவி கடாசி விடுகிறோம். இது மற்றொரு அவலம்.
கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் கூட இவர்களை விட அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்களை விட கூடுதலான நேரமும் வசதியும் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவர்களுடைய நாவல்களை இன்றும் ஓரளவுக்கு ரசித்துப் படிக்க முடிகிறது. 80, 90களில் இந்த ஆயிரக்கணக்கில் எழுதியவர்களுடைய படைப்புகளை இன்று அவர்களாலே படிக்க முடியாது. மனித உழைப்பை அர்த்தமற்றதாக்கி வீணடிப்பதென்றால் உண்மையில் இதுதான். தெளிவாக சொல்கிறேன் - வணிக இலக்கியத்தை நான் வீண் என்று கூறவில்லை; எந்திரத்தில் மாவரைப்பதைப் போல அதைப் பண்ண வைப்பது நேர வீணடிப்பு என்கிறேன். இது உழைப்புக்கே அவமானம் விளைவிப்பது என்கிறேன்.
வார இதழ்களின் இந்த மலைமலையான தேவைக்கு ஏற்ப வணிக எழுத்து மாவைத் துப்பும் எந்திரமாக்கப்பட்ட பின்னர் அத்தகைய பணியை செய்யத்தக்கவர்களே ஊக்கப்படுத்தப்பட்டார்கள். அதனாலே சுஜாதா தேவி பாலாவிடம் “இவ்வளவு வேகமா எழுதாதே” என அறிவுரை கூறுகிறார். ஆனால் நான் சுஜாதாவே அதிகமாக எழுதியவர் என்பேன். அவர் தான் எழுதியதை 10% ஆகக் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். குறிப்பாக அந்த துப்பறியும் கதைகளும், விஞ்ஞானப் புனைவு சிறுகதைகளும். சுஜாதாவின் படைப்பு மனம் சென்ற இடம் பெண் மனமும், ஆண் - பெண் உறவைப் பற்றின மத்தியமர் கதைகளுமே. வேறு கதைகளில் அவர் பார்முலா படி எழுதுவார். ஆனால் அதிலும் எழுத்து நடையில் ஒரு நேர்த்தியைக் கடைபிடித்தார். வேறு வேலை இருந்ததால் அவருக்குப் பிறரைப் போல “மூட்டை தூக்கும்” அவசியம் ஏற்படவில்லை.
நான் சொல்வதை தேவிபாலா போன்றவர்களும் உணர்ந்திருப்பார்கள். என்ன அவர்களுக்கு உலகியல் தெளிவு அதிகம் - முழுநேர எழுத்தாளராகி வீடு, சொத்து என வாங்கிக் குவித்தார்கள். அவர்கள் தாம் எழுதியதைத் திரும்பிப் பார்க்கப் போவதில்லை. பார்க்க வங்கி இருப்புத் தொகையும் சொத்துக்களும் இருக்கின்றன.
ஆனால் தேவி பாலாவைப் போன்றவர்கள் மேல்மட்டம் மட்டுமே. அவர்களுக்குக் கீழ் எந்த வகையிலும் பொருளீட்ட இயலாத அப்பாவி கூலி படைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களும் கடுமையான உழைப்பாளிகள் தாம் - நான் இதைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். நான் ஆரம்பத்தில் வேலை பார்த்த ஈ பப்ளிஷிங் நிறுவனத்தில் ஒரு காவலர் இருந்தார். அவரை ஒருமுறை பத்திரிகையில் பேட்டி எடுக்க வந்தார்கள். யார்ரா இவர் என விசாரித்தால் அவர் தான் ஆயிரக்கணக்கில் கதைகளை பிரசுத்துள்ளதாக சொன்னார். ஆனால் அவர் பணமீட்டவோ பெயர் பெறவோ இல்லை.
அதே நேரம் இம்முறை சித்ரா லஷ்மணனின் பேட்டியைப் பார்த்த போது மேலும் சில விசயங்கள் தோன்றின -
வணிக எழுத்தாளர்களோ இலக்கிய எழுத்தாளர்களோ அவர்களுக்கு மனிதர்களை அவதானிக்கும் பண்பு, ஒரு கூர்மை இருக்கிறது.
ஆனால் வணிக எழுத்தாளர்களுக்கு இயல்பாகவே சமூகமாக்கல் பண்பு இருக்கிறது. சமூகப்பொருளாதார வளம் மிக்கவர்களைப் புழகத் தெரிகிறது. அப்பண்பு இன்றைய இலக்கிய படைப்பாளிகளுக்கும் வந்துவிட்டது. இதில் விதிவிலக்கே இல்லை. இதை நான் ஒரு தர மதிப்பீடாகவும் வைக்கவில்லை. நாம் வாழ்வது பணத்தாலும் அதிகாரத்தாலும் ஆன உலகம். இங்கு அப்படி மட்டுமே வாழ முடியும். இந்த பேட்டியை பார்த்த நாட்களில் நான் சாரு க.நா.சு பற்றி பேசிய மாஸ்டர் கிளாஸையும் பார்த்துக்கொண்டிருந்தேன். க.நா.சுவைப் போல ஒரு படைப்பாளி இந்த காலத்தில் வாழவே முடியாது என உறுதியாகக் கூறுவேன். ஒரு மனிதனைக் குடும்பத்துக்குள், உறவுகளுக்குள் வைத்துப் பாதுகாக்கும் பண்பு அன்று இருந்தது. வேலையே பார்க்காமல் யாரோடும் ஒட்டாமல் அவன் நாடோடியாகத் திரிந்தாலும் காப்பாற்றப்படுவான். ஆனால் இன்று பணவீக்கம், பண மதிப்பு வெகுவாக குறைந்து, குடும்பங்கள் உடைந்து மனிதர்கள் தனித்தனியாகி அனாதைகள் ஆகி விட்டார்கள். இன்று க.நா.சு பிறந்தால் ஒன்று சாமர்த்தியசாலியாக மாறி வசதியாக இருந்திருப்பார் அல்லது தெருவில் கிடந்து இறந்திருப்பார். யாராவது ஒரு யுடியூப் சேனல்காரர் அவரை பிரசித்தமாக்கி சில வாரங்களுக்கு கண்டெண்ட் ஆக்கியிருப்பார். இதையே நான் விக்கிரமாதித்யனுக்கும் சொல்வேன். ஜி.நாகராஜன் எனில் இந்த காலத்தை வேறுவகையில் ரசித்திருப்பார். அவர் வேறு வகை. காலமே - சமூக நிலை + பொருளாதாரம் - மனிதர்களின் இயல்பைத் தீர்மானிக்கிறது.
ஒரு சந்தேகம் - உழைத்து முடித்த பின் பாக்கெட் நாவல் படிக்காத, சினிமா பார்க்காத, இசை கேட்காத நேரத்தில் நமது 90% மக்கள் என்ன செய்திருப்பார்கள்? 70களுக்குப் பிறகு மக்கள் தொகையும் குறைந்துவிட்டது. இன்று செல்பேசியும் இணையமும் வந்த பின்னர் மக்கள் செக்ஸை அனுபவிக்கும் நேரமும் குறைந்துவிட்டது. இன்று அந்த செல்பேசிக்குள் உற்றுப்பார்த்தபடி என்ன பண்ணுகிறார்கள் எனப் புரிகிறது. ஆனால் அன்று இரண்டுக்கு மேல் வேண்டாம் பாப்பா என அரசாங்கம் மிரட்டிக்கொண்டிருந்த போது வெகுமக்கள் என்னதான் செய்திருப்பார்கள்?
எனக்குத் தெரிந்து தமிழகத்தில் இரு துறைகள் மட்டுமே காலந்தோறும் வளர்ந்து வந்திருக்கிறது. மது (இன்றைய கஞ்சா) + உணவு. அதாவது செக்ஸின் தேவை குறைந்த பின்னரும் கூட இவற்றின் தேவை அதிகரித்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும் போது நம் சமூகத்தைப் பற்றி என்ன தெரிகிறது?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...