Skip to main content

அஞ்சலிப் பாப்பா கிரிக்கெட்


எனக்கு ஆரம்பத்தில் தமிழ் கிரிக்கெட் வர்ணனை பிடிக்கவில்லை. ஆனால் போகப் போக அது கொண்டு வரும் கொண்டாட்ட மனநிலை, குதூகலம், விளையாட்டுத்தனம், கன்னாபின்னா கலாட்டா பிடித்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர். ஜெ பாலாஜி. அவருக்கு முன் தமிழ் வர்ணனை உண்மையிலேயே மரண மொக்கையாக இருந்தது. பெரிதாக அலசலோ விவாதமோ இராது, சரளமான தமிழின்றி கொச்சைத் தமிழில் அரட்டை அடிப்பார்கள். ஆர். ஜெ அதை கிரிக்கெட்டுக்கு சம்மந்தமில்லாத கலாய்ப்பு தமிழாக மாற்றினார். இதன் அனுகூலம் மிக அலுப்பான ஆட்டமோ, பரபரப்பான நெருக்கடியான ஆட்டமோ நம்மால் லகுவாக, மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இது தமிழ் வர்ணனையில் மட்டுமே உள்ளது. ஆங்கில வர்ணனை இன்றும் துளி கூட நகைச்சுவையே இல்லாத தீவிரமான உரையாடலாகவே சற்று உலர்வாக இருக்கிறது. அதுவா இதுவா எனில் நான் இதுவே போதும் என்பேன். ஏனென்றால் ஆங்கில வர்ணனையில் அரசியலும் நாடகமும் அதிகமாகி விட்டது. அவ்வளவு உணர்ச்சி மேலிடல், லட்சியவாதம் தேவையில்லையே, இது ஒரு பொழுதுபோக்கு தானே, நீங்கள் காசுக்குத் தானே பேசுகிறீர்கள் என்று தோன்றுகிறது.
 முன்பு ஆங்கில வர்ணனையில் ஒரு கல்வி புகட்டும் போக்கு இருந்தது (கவாஸ்கர், கிரெக் சாப்பல்). அதற்காகவே நான் கவனித்துக் கேட்டேன். இப்போது மிகச்சிலர் மட்டுமே பார்வையாளர்களைப் பயிற்றுவிக்கிறார்கள். சும்மா டிராமா தான். மேலும் இன்று முன்பை விட பார்வையாளர்களின் கிரிக்கெட் அறிவு அதிகமாகி விட்டது. முன்பு சைனாமேன் பந்துவீச்சு, ரிவர்ஸ் ஸ்விங், ஸ்லிப் பொஸிஷனிங், நுட்பமான ஷாட்களை வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டத் தேவையிருந்தது. இன்று பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கிறது. அந்தளவுக்கு தகவல்கள் மலிந்திருக்கின்றன. ஓரளவுக்கு கிரிக்கெட்டை கவனிக்கிறவர்களுக்கு வர்ணனையின் வழிகாட்டுதல் தேவையில்லை. இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் ஆய்வு செய்தால் ஒரு ஆட்டத்தின் ஸ்கோரை ஒவ்வொரு பத்து ஓவருக்கும் நம்மால் கணிக்க முடிகிறது. கொஞ்சம் கவனித்தால் அடுத்தடுத்து பந்துகள் எங்கு விழப் போகிறது, பெரிய ஷாட்கள் எப்போது வரப்போகின்றன என நிகழும் முன்பே கண்ணில் தெரிகிறது. வர்ணனை நம் சந்தோஷத்துக்கு மட்டுமே. 
பழைய ஆங்கில வர்ணனையாளர்களிடம் மொழி அழகு இருந்தது. ஷாட்களை வர்ணிப்பதைக் கேட்க அவ்வளவு சிலாக்கியமாக இருக்கும். அது ஒரு தனி புலனனுபவத்தைத் தரும். இன்றைய ஆங்கில வர்ணனையாளர்களுக்கு அந்த மொழி வளம் இல்லை.

மேலும் ஆங்கிலத்தில் உள்ள ஒரு எரிச்சல், பொறாமை, கசப்பு, கோபம், ஏகப்பட்ட அரசியல் அவரவர் பிராந்திய, தேசிய அடையாளம் சார்ந்து இருக்கும். தமிழில் அது இல்லை. தமிழ் வர்ணனை சற்று பத்தாம்பசலியாக, வேடிக்கையாக, களங்கமற்றதாக உள்ளது. எப்போதாவது ஶ்ரீகாந்த் “ஓத்த கோலி” என்று மிக இயல்பாக சொல்வார். அதுவும் எனக்குப் பிடித்திருக்கிறது. ஆங்கிலத்தில் யாரும் “பக்கிங் கோலி” என்று சொல்லப் போவதில்லை. சொன்னால் அது பெரிய சர்ச்சையாகி அவரை சிலுவையில் ஏற்றிவிடுவார்கள். தமிழில் அந்தளவுக்கு இல்லை. கிரிக்கெட்டை அவ்வளவு சீரியஸாக பார்க்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். திரையில் சண்டையிடும் எம்.ஜி.ஆரை நோக்கி “வாத்யாரே பிடிச்சுக்கோ” என கத்தியை வீசியவர்களின் மரபில் வந்தவர்கள் அல்லவா நாம்!

தமிழ் வர்ணனையில் பிராமண கொச்சையும் இன்று வெகுவாக குறைந்து வருகிறது. “காற்று வெளியிடை” என பத்ரி நம்மை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். அங்கிருந்து பச்சைப் புல்லு பத்திக்கிச்சுக்கு வந்திருக்கிறார். ஓரளவுக்கு தமிழ் சொற்களைப் பேச முயல்கிறார்கள். இது ஒரு முன்னேற்றம் தான். போகப் போக தமிழ் வர்ணனை இன்னும் மேம்படும் என நினைக்கிறேன்.

இன்னொன்று - கிட்டத்த ஒன்பது பத்து மணிநேரத்திற்கு ஆளாளுக்கு மாற்றி மாற்றி பேசினாலும் ஒருவர் தலா 2-3 மணிநேரங்கள் இடைவிடாமல் பேச வேண்டியிருக்கும். தொடர்ச்சியாக ஒன்றை விவாதிக்க முடியாது. சுருக்கமாக மேலதிகமாக ஓரிரு நிமிடங்களில் சொல்லிவிட்டு விவரணை, கேள்வி, பதில், புள்ளி விபரங்கள் எனப் போய்க்கொண்டே இருக்க வேண்டும், சுவாரஸ்யத்தை தக்க வைக்க வேண்டும். போட்டி குறித்த விபரங்களில் அப்டேட்டாக இருக்க வேண்டும். காதில் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சொல்வதைக் கேட்டு தடுமாறாமல் போகிற போக்கில் தமக்குத் தெரிந்ததைப் போல சொல்ல வேண்டும். வார்த்தை பிசிறக் கூடாது. இதெல்லாம் எளிதல்ல. கேட்க வெட்டி அரட்டை போலத் தோன்றும். ஆனால் நிறைய உழைப்பு இருக்கிறது. (நல்ல ஊதியமும் உண்டு தான்!)

எனக்கு ஒரே ஒரு புகார் தான் - ஆட்டத்தின் போக்கை, கள அமைப்பை, அணித்தலைவரின் வியூகத்தை, அடுத்து விழப்போகும் பந்தை தமிழ் வர்ணனையாளர்கள் கணித்துப் பேசுவது இல்லை. சில நேரங்களில் அரட்டையின் சுவாரஸ்யத்தில் பந்து எங்கே போகிறது என்றே கவனிப்பதில்லை. அது வர்ணனையாளர்களின் தவறு மட்டும் அல்ல. முரளி விஜய் கூர்மையானவர். ரமேஷும் தான். நானி கிட்டத்தட்ட துல்லியமாக பந்து வீச்சாளரின் வியூகத்தை, திசை, நீளத்தை பந்து விழும் முன்பே கணித்து சொல்வதைக் கண்டிருக்கிறேன். ஆனால் அத்தகைய புத்தி கூர்மைக்கு போதுமான இடமிருப்பதில்லை. அதற்கு நாம் ஆர்.ஜெ பாலாஜியைப் பழிக்க முடியாது. நிகழ்ச்சியின் இயக்குநர் / தயாரிப்பாளர் கேளிக்கையையே அறிவினடத்தில் தேர்வு செய்கிறார். அதனாலே அவர் பாலாஜியை மொத்த ஷோவையும் வழிநடத்த விடுகிறார். மெல்ல மெல்ல மற்ற வர்ணனையாளர்கள் அவருடைய பாணியில் பேச ஆரம்பித்ததும் இதனாலே. இது தமிழ் வர்ணனையின் குணநலன் மட்டுமே.

 நான் மலையாள, இந்தி வர்ணனைகளை கவனிப்பதுண்டு. கொஞ்சம் தெலுங்கு வர்ணனையைக் கூடக் கேட்டு தக்கணூண்டு புரிந்துகொள்வேன். இங்குள்ள வேடிக்கை வினோத விக்கல் நக்கல் அங்கு இல்லை. அதுவும் ஶ்ரீகாந்தும் பாலாஜியும் வந்தால் நான் சிரித்துக்கொண்டே இருப்பேன். இந்தியாவே தோற்றாலும் அவர்கள் நம்மை அழ விட மாட்டார்கள். ஒரு களத்தடுப்பு சொதப்பலுக்கு கொந்தளிக்க விடமாட்டார்கள். மோசமான ஷாட் ஆடி அவுட் ஆனாலும் அதையும் அஞ்சலி பாப்பாவின் சேஷ்டைகளைப் போல் காட்டி புன்னகைக்க வைப்பார்கள். சிரிப்பை விட அருமருந்து வேறுண்டா?

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...