முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதுவா முக்கியம்?

பாரிஸ் ரெவ்யூ பேட்டி ஒன்றில் வில்லியம் ஸ்டைரனிடம் அவர் படித்த பல்கலையில் ஒரு மாணவராக பங்கெடுத்த புனைவு எழுதும் கலை வகுப்பைப் பற்றிக் கேட்கிறார்கள். அந்த வகுப்பில் தான் தனக்கு நாவல் எழுதும் ஆர்வம் மேலெடுத்து தீவிரமாக எழுத வந்ததாக குறிப்பிடுகிறார். கூடவே இன்னொரு விசயத்தையும் சொல்கிறார் - அமெரிக்காவில் புனைவுக் கலையை கற்பிக்கும் வகுப்புகள் அதிகம். கூடவே வேறு நுண்கலைகளையும் இலக்கிய நூல் வாசிப்பு, கொஞ்சம் கோட்பாடு என கலந்து ஒரு பட்டயப் படிப்பாகவே நடக்கும். ஆண்டு தோறும் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள். இவர்களில் எத்தனை பேர் எழுத்தாளர்களாகி நிலைப்பெறுவார்கள்? மிகச்சிலர் தாம். மிச்ச பேர்? அவர்கள் அத்திறனைக் கொண்டு வேறு துறைகளில் நுழையலாம். ஆனால் முக்கியமான கேள்வி வேறு: எழுதுவதற்கான திறமை தான் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிக்கிறதா அல்லது பயிற்சியும் அறிவுமா? ஸ்டைரன் இயல்பான திறமையே அடிப்படையான காரணி என்கிறார். ஒரு புனைவுக் கலை ஆசிரியரின் உண்மையான பணி உமியை அரிசியில் இருந்து பிரிப்பது, தவறான ஆட்களை ஊக்கப்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருப்பது தான் என்றும் சொல்கிறார். இதைக் கேட்க சரிதான் எனத் தோன்றினாலும் இது மிகவும் சிக்கலானது. திறமையை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

நான் ஆன்லைனில் நாவல் வகுப்பை ஆரம்பிக்கும் முன்பு கல்லூரியில் இளம் மாணவர்களுக்கு நாவல் வகுப்பெடுத்தேன். அப்போது சிலருடைய எழுத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு உள்ள அபாரமான திறமையை அடையாளம் கண்டுகொள்வேன். அவர்களை சற்று கூடுதலாக ஊக்கப்படுத்தி எழுத தூண்டுவேன். பின்னரே நான் புரிந்துகொண்டேன் திறமையென்பது வக்கணையான நடையோ பாத்திர அமைப்பிலும் காட்சி ஒழுங்கிலும் உள்ள பிடிப்போ அல்ல என்று. சிலருக்கு சின்னச்சின்ன அவதானிப்புகள் இயல்பாகவே வரும். மொழியிலும் ஒரு லாவகம் இருக்கும். ஆனால் இதுவல்ல திறமை. இவை எழுத்தின் ஒரு அங்கம் மட்டுமே. நான் குத்துச்சண்டை பயில ஆரம்பித்த போது என் பயிற்சியாளர் உன்னிடம் கை வேகம் இருக்கிறது என்றார். அப்போது எனக்கு ஜில்லென்று இருந்தது. எனக்குத் திறமை உண்டென நினைத்தேன். ஆனால் போகப் போகத் தான் அது ஒரு கடல், வாழ்நாள் முழுமையையும் கோரும் தேடல் எனப் புரிந்துகொண்டேன். வேகம் எல்லாம் சரிதான், ஆனால் தடுக்கத் தெரியாவிட்டால் என்ன பயன்? ஒரு நிமிடத்துக்கு மேல் ஆடும் போது மூச்சுக் கிடைக்காவிட்டால் என்ன பயன்? தளர்ந்ததும் குத்தில் வலு இல்லாமல் போனால் என்ன பயன்? புதிய உத்திகளை மனத்தால் கற்பனை செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் என்ன பயன்? பயிற்சி, உழைப்பின் போது ஒருவருக்குள் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த திறமை மலர்கிறது, இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரும் ஒரு மலரைப் போல. அதற்கான முயற்சியை எடுப்பதும் திறமையின் பகுதி தான். ஆற்றலும் திறமை தான், மனமும் திறமை தான், உடலும் திறமை தான், ஒழுக்கமும் திறமை தான். இதில் ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரிக்க முடியாது. இது எழுத்துக்கும் அப்படியே பொருந்தும் எனப் பின்னர் நான் புரிந்துகொண்டேன். என்னுடைய வகுப்பில் அப்போது மிகவும் திறமையாளர்கள் என அடையாளம் காண்கிறவர்கள் ஒரு கதையையோ நாவலையோ எழுதி முடிக்கத் திணறுவார்கள், கொஞ்சம் சுமார் என நினைத்தவர்களோ திறமையற்றவர் என முடிவு செய்தவரோ தம் படைப்பை தொடர்ந்து முயன்று முடிக்கும் போது வாவ் எனத் தோன்றும். இன்னும் சில ஆண்டுகளில் அவர் மேம்பட்டுக் கொண்டே வரும் போது பெருமையாக இருக்கும். இத்திறமை இவ்வளவு நாளும் எங்கே இருந்தது? அத்திறமை எங்கே போயிற்று? அதனாலே நான் திறமையாளர்களை அடையாளம் காண்பதை நிறுத்தினேன். சில எழுத்தாளர்களிடம் இயல்பிலேயே ஒரு தேடல் இருக்கும், ஒரு வினோதம் இருக்கும், அது அவர்களுக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கும், ஆனால் அது எல்லாரிடமும் உள்ளதுதான், அதை சிலர் கண்டுபிடிக்கிறார்கள், சிலர் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிவிடுகிறார்கள். இந்த உண்மையை நான் வெகுபின்னால் தான் புரிந்துகொண்டேன். அதனாலே நான் ஒரு இளம் படைப்பாளியைப் படித்ததும் இவர் வேஸ்ட் என நினைப்பதை நிறுத்தினேன். இந்த உலகில் வீண் என யாரும் இல்லை என இப்போது நம்புகிறேன். எழுத்து என்பது ஒரு ஆன்மீக மலர்ச்சி. திறமையில்லை எனக் கருதுவது ஒருவருக்கு ஆன்மாவே இல்லை என நம்புவதற்கு சமம். சிலருக்கு தம் ஆன்மாவை மூடியிருக்கும் இருட்டை விலக்கி அதன் மீது கிடக்கும் கண்டாமுண்டா சாமான்களை அகற்றி கண்டுபிடிக்கவே ஒரு ஆயுள் ஆகிவிடும், சிலருக்கு அது ஒரு வருடத்திற்குள், சில நாட்களுக்குள் நடக்கும். ஆனால் அதற்கான முயற்சி அனைவருக்கும் ஆனது.

எழுத்தோ எந்த ஒரு கலையைப் பயில்வதோ அது மட்டுமே அல்ல. அது வாழ்க்கையைப் பயின்று நம்மையே கண்டடைவது. அதில் ஒரு பயிற்சியாளர் / ஆசிரியர் ஒரு வழிகாட்டி, நெறியாளர், அறிவு ஆசான் மட்டுமே. என்ன மாதிரி படைப்பை அவர் எழுதுவார் என்பது இரண்டாம் பட்சமே. அவர் தன் தேடலைக் கண்டடைகிறாரா என்பதே முக்கியம். அவர் சில தோல்வி அடைந்த நாவல்களை எழுதி தன் ஆன்மாவைத் திறக்கிறார் எனில் திறக்கட்டுமே!

ஒரு பாட்டி கறுத்த பித்தளைப் பாத்திரங்களை எடுத்துப்போட்டு மண்ணையும் புளியையும் வைத்து தேய்த்துக் கழுவுகிறார். பளபளவென அவை துலங்கும் வரை தேய்க்கிறார். அங்கு மண்ணும் புளியுமா முக்கியம்?

கூடுதல் தகவல்: பிப்ரவரி-மே மாதங்கள் நடக்கும் 2024 ஆண்டிற்கான நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் ஆன்லைன் வகுப்பு இருக்கைகளுக்கான பதிவு ஆரம்பித்தாகிற்று. ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ள 9790929153

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புதிய சட்டை அணிந்த புராதன மனநிலை

 ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன்.  அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஹிட்லர் விஜய்

  விஜய் முதல்வர் ஆன நாளன்றே நான் அவர் ஒரு பாசிஸ்ட் என்று விரிவாக எழுதினேன். ஏன் பதவியேற்றவுடனே சொல்கிறீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். ஆனால் ஒரு எழுத்தாளராக கூர்மையான நுண்ணுணர்வும் அவதானிப்பும் எனக்குண்டு. நான் அவர் ஏன் ஒரு பாசிஸ்ட், அவரது ஆளுமை எப்படி கருணையற்ற ஒன்று என்றும், ஹிட்லரின் பிரச்சார பாணிக்கும் இவர்களுடைய பாணிக்குமான ஒற்றுமையைப் பற்றியும் எழுதினேன். பதவியேற்ற சில வாரங்களிலேயே அவரது பாசிஸ அரசியல் அடுத்தடுத்து வெளிப்பட்டது. அவரைக் கேலி செய்ததற்காக பத்து போலீஸ் ஜீப்புகளில் அன்பானந்தம் எனும் இளைஞரின் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்து துன்புறுத்தினார்கள். விஜய்யின் கட்சிக்காரர் ஒரு ஜென் ஸி திமுக அமைப்பின் இளைஞரை அடித்துத் துன்புறுத்தி இருக்கிறார். அவர் இஸ்லாமியர் என்று தவறாகப் புரிந்து கொண்டு சுன்னத் செய்த உன் ஆண்குறியை அறுப்பேன் என்று மிரட்டியிருக்கிறார். இன்னும் அடுத்தடுத்து மிக மோசமான காட்டாற்சியை, அடக்குமுறை இந்த மாநிலம் பார்க்கப் போகிறது. விஜய் அடிப்படையில் ஒரு கோமாளி ஹிட்லர். திமுக இவரைப் போன்றோரைத் துணிந்து எதிர்த்தடிக்க வேண்டும். பனையூரைச் சுற்றி வளைத்து பிரம்மாண்ட...