Skip to main content

அதுவா முக்கியம்?

பாரிஸ் ரெவ்யூ பேட்டி ஒன்றில் வில்லியம் ஸ்டைரனிடம் அவர் படித்த பல்கலையில் ஒரு மாணவராக பங்கெடுத்த புனைவு எழுதும் கலை வகுப்பைப் பற்றிக் கேட்கிறார்கள். அந்த வகுப்பில் தான் தனக்கு நாவல் எழுதும் ஆர்வம் மேலெடுத்து தீவிரமாக எழுத வந்ததாக குறிப்பிடுகிறார். கூடவே இன்னொரு விசயத்தையும் சொல்கிறார் - அமெரிக்காவில் புனைவுக் கலையை கற்பிக்கும் வகுப்புகள் அதிகம். கூடவே வேறு நுண்கலைகளையும் இலக்கிய நூல் வாசிப்பு, கொஞ்சம் கோட்பாடு என கலந்து ஒரு பட்டயப் படிப்பாகவே நடக்கும். ஆண்டு தோறும் பல்லாயிரம் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுவார்கள். இவர்களில் எத்தனை பேர் எழுத்தாளர்களாகி நிலைப்பெறுவார்கள்? மிகச்சிலர் தாம். மிச்ச பேர்? அவர்கள் அத்திறனைக் கொண்டு வேறு துறைகளில் நுழையலாம். ஆனால் முக்கியமான கேள்வி வேறு: எழுதுவதற்கான திறமை தான் ஒருவருடைய வெற்றியைத் தீர்மானிக்கிறதா அல்லது பயிற்சியும் அறிவுமா? ஸ்டைரன் இயல்பான திறமையே அடிப்படையான காரணி என்கிறார். ஒரு புனைவுக் கலை ஆசிரியரின் உண்மையான பணி உமியை அரிசியில் இருந்து பிரிப்பது, தவறான ஆட்களை ஊக்கப்படுத்தி நேரத்தை வீணடிக்காமல் இருப்பது தான் என்றும் சொல்கிறார். இதைக் கேட்க சரிதான் எனத் தோன்றினாலும் இது மிகவும் சிக்கலானது. திறமையை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது.

நான் ஆன்லைனில் நாவல் வகுப்பை ஆரம்பிக்கும் முன்பு கல்லூரியில் இளம் மாணவர்களுக்கு நாவல் வகுப்பெடுத்தேன். அப்போது சிலருடைய எழுத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு உள்ள அபாரமான திறமையை அடையாளம் கண்டுகொள்வேன். அவர்களை சற்று கூடுதலாக ஊக்கப்படுத்தி எழுத தூண்டுவேன். பின்னரே நான் புரிந்துகொண்டேன் திறமையென்பது வக்கணையான நடையோ பாத்திர அமைப்பிலும் காட்சி ஒழுங்கிலும் உள்ள பிடிப்போ அல்ல என்று. சிலருக்கு சின்னச்சின்ன அவதானிப்புகள் இயல்பாகவே வரும். மொழியிலும் ஒரு லாவகம் இருக்கும். ஆனால் இதுவல்ல திறமை. இவை எழுத்தின் ஒரு அங்கம் மட்டுமே. நான் குத்துச்சண்டை பயில ஆரம்பித்த போது என் பயிற்சியாளர் உன்னிடம் கை வேகம் இருக்கிறது என்றார். அப்போது எனக்கு ஜில்லென்று இருந்தது. எனக்குத் திறமை உண்டென நினைத்தேன். ஆனால் போகப் போகத் தான் அது ஒரு கடல், வாழ்நாள் முழுமையையும் கோரும் தேடல் எனப் புரிந்துகொண்டேன். வேகம் எல்லாம் சரிதான், ஆனால் தடுக்கத் தெரியாவிட்டால் என்ன பயன்? ஒரு நிமிடத்துக்கு மேல் ஆடும் போது மூச்சுக் கிடைக்காவிட்டால் என்ன பயன்? தளர்ந்ததும் குத்தில் வலு இல்லாமல் போனால் என்ன பயன்? புதிய உத்திகளை மனத்தால் கற்பனை செய்து கண்ணிமைக்கும் நேரத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் என்ன பயன்? பயிற்சி, உழைப்பின் போது ஒருவருக்குள் அதுவரை உறங்கிக்கொண்டிருந்த திறமை மலர்கிறது, இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வரும் ஒரு மலரைப் போல. அதற்கான முயற்சியை எடுப்பதும் திறமையின் பகுதி தான். ஆற்றலும் திறமை தான், மனமும் திறமை தான், உடலும் திறமை தான், ஒழுக்கமும் திறமை தான். இதில் ஒன்றை மற்றொன்றில் இருந்து பிரிக்க முடியாது. இது எழுத்துக்கும் அப்படியே பொருந்தும் எனப் பின்னர் நான் புரிந்துகொண்டேன். என்னுடைய வகுப்பில் அப்போது மிகவும் திறமையாளர்கள் என அடையாளம் காண்கிறவர்கள் ஒரு கதையையோ நாவலையோ எழுதி முடிக்கத் திணறுவார்கள், கொஞ்சம் சுமார் என நினைத்தவர்களோ திறமையற்றவர் என முடிவு செய்தவரோ தம் படைப்பை தொடர்ந்து முயன்று முடிக்கும் போது வாவ் எனத் தோன்றும். இன்னும் சில ஆண்டுகளில் அவர் மேம்பட்டுக் கொண்டே வரும் போது பெருமையாக இருக்கும். இத்திறமை இவ்வளவு நாளும் எங்கே இருந்தது? அத்திறமை எங்கே போயிற்று? அதனாலே நான் திறமையாளர்களை அடையாளம் காண்பதை நிறுத்தினேன். சில எழுத்தாளர்களிடம் இயல்பிலேயே ஒரு தேடல் இருக்கும், ஒரு வினோதம் இருக்கும், அது அவர்களுக்கு ஒரு கூர்மையைக் கொடுக்கும், ஆனால் அது எல்லாரிடமும் உள்ளதுதான், அதை சிலர் கண்டுபிடிக்கிறார்கள், சிலர் அதன் மீது மண்ணைப் போட்டு மூடிவிடுகிறார்கள். இந்த உண்மையை நான் வெகுபின்னால் தான் புரிந்துகொண்டேன். அதனாலே நான் ஒரு இளம் படைப்பாளியைப் படித்ததும் இவர் வேஸ்ட் என நினைப்பதை நிறுத்தினேன். இந்த உலகில் வீண் என யாரும் இல்லை என இப்போது நம்புகிறேன். எழுத்து என்பது ஒரு ஆன்மீக மலர்ச்சி. திறமையில்லை எனக் கருதுவது ஒருவருக்கு ஆன்மாவே இல்லை என நம்புவதற்கு சமம். சிலருக்கு தம் ஆன்மாவை மூடியிருக்கும் இருட்டை விலக்கி அதன் மீது கிடக்கும் கண்டாமுண்டா சாமான்களை அகற்றி கண்டுபிடிக்கவே ஒரு ஆயுள் ஆகிவிடும், சிலருக்கு அது ஒரு வருடத்திற்குள், சில நாட்களுக்குள் நடக்கும். ஆனால் அதற்கான முயற்சி அனைவருக்கும் ஆனது.

எழுத்தோ எந்த ஒரு கலையைப் பயில்வதோ அது மட்டுமே அல்ல. அது வாழ்க்கையைப் பயின்று நம்மையே கண்டடைவது. அதில் ஒரு பயிற்சியாளர் / ஆசிரியர் ஒரு வழிகாட்டி, நெறியாளர், அறிவு ஆசான் மட்டுமே. என்ன மாதிரி படைப்பை அவர் எழுதுவார் என்பது இரண்டாம் பட்சமே. அவர் தன் தேடலைக் கண்டடைகிறாரா என்பதே முக்கியம். அவர் சில தோல்வி அடைந்த நாவல்களை எழுதி தன் ஆன்மாவைத் திறக்கிறார் எனில் திறக்கட்டுமே!

ஒரு பாட்டி கறுத்த பித்தளைப் பாத்திரங்களை எடுத்துப்போட்டு மண்ணையும் புளியையும் வைத்து தேய்த்துக் கழுவுகிறார். பளபளவென அவை துலங்கும் வரை தேய்க்கிறார். அங்கு மண்ணும் புளியுமா முக்கியம்?

கூடுதல் தகவல்: பிப்ரவரி-மே மாதங்கள் நடக்கும் 2024 ஆண்டிற்கான நாவல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள் ஆன்லைன் வகுப்பு இருக்கைகளுக்கான பதிவு ஆரம்பித்தாகிற்று. ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ள 9790929153

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...