முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கண்ணுக்குத் தெரியாத ஒன்று

பரகலா பிரபாகர் இவ்வளவு தீவிரமாக மோடியை எதிர்ப்பதும் அதற்கு சம்மந்தமே இல்லாமல் அவர் மனைவி மத்திய அமைச்சராக இருப்பதும் சாதாரண விசயம் அல்ல. அவர்கள் ஒரு உத்தமமான தம்பதியாக அல்லாத பட்சத்தில் கணவர் இவ்வளவு கடுமையாக அரசைத் தாக்கிய பின்னர் மனைவியால் அவரது முகத்தைப் பார்த்துப் பேசக் கூட இயலாது. அதையும் மீறி அவர்கள் கண்ணியத்துடன் பொதுவெளியில் இப்பிரச்சினையை கையாள்வதாக நான் ஆரம்பத்தில் நினைத்து சிலாகித்தேன். ஆனால் இப்போதெல்லாம் நான் யாரையும் சுலபத்தில் நம்புவதில்லை. அரசியலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இருப்பவர்களின் எல்லா பேட்டிகள், பொதுவெளி கருத்துக்களுக்கும் பின்னால் ஒரு அஜெண்டா இருக்கும். பிரபாகருக்கும் நிச்சயமாக இருந்தாக வேண்டும்? அது என்ன என்பது இப்போதைக்கு தெளிவாக இல்லை.

பரகலா பிரபாகரின் பெற்றோர் காங்கிரஸை சேர்ந்தவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிரபாகர் இளமையில் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனனாமிக்ஸிலும் ஜெ.என்.யுவிலும் படித்தார், அங்கே நிர்மலா சீத்தாராமனை சந்திக்க் இருவரும் காதலித்து மணந்தார்கள்  என்றும் அறிவோம். ஆனால் இவை புறவயமான தகவல்களே. ஆனால் சுவாரஸ்யமான தகவல் அவர் 2000இன் துவக்கத்தில் பா.ஜ.கவின் ஆந்திர பிரதேச செய்தித் தொடர்பாளராக இருந்தவர் என்பது. (பின்னரே பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு போகிறார். ) ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள்ளின், மோடியின் அரசியலை, சித்தாந்தத்தை இவ்வளவு கடுமையாக விமர்சிக்கும் ஒருவர் எப்படி ஒன்றுமே அறியாமலா அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தார்? அதுவும் காங்கிரஸ் கட்சி பின்னணி கொண்டவர் எனும் போது? அதுவும் பாபர் மசூதி இடிப்பு, இஸ்லாமியருக்கு எதிரான கலவரங்கள் நடந்து முடிந்து சூடு ஆறாத காலம் அது எனும் போது? மதவாதத்திற்கு எதிராக புத்தகம் ஏழுதும் ஒருவருக்கு அப்போது நடந்தவை எல்லாம் கொடூரங்களாக,நாட்டின் மத சார்பின்மையை ஒழித்து இந்தியாவை சில நூற்றாண்டுகள் பின்னுக்கு நகர்த்தியதாகத் தோன்றவில்லையா?

அடுத்து 2018இல் சந்திரபாபு நாயுடுவுக்கும் பாஜகவுக்குமான உறவு கசக்கும் வரை பிரபாகர் முதல்வரின் ஆலோசகர் எனும் தன் பதவியை பாஜக கூட்டணி அரசில் தக்க வைத்திருந்தார். நாயுடு மோடியைத் தாக்கிப் பேசியதால் மனம் புண்பட்டே அவர் பதவியை ராஜினாமா பண்ணினார். அதுவரை ஒன்றிய அரசுக்கு நெருக்கமாகவே இருந்தார். கடந்த 6 ஆண்டுகளாகத் தான் ஜனநாயக காவலராக, முற்போக்கு அரசியல் சிந்தனையாளராக
அவருக்கு புத்துயிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனாலே திடீர் புனிதர்கள் சந்தேகத்துக்கு உரியவர்கள்.    

கரன் தாப்பர் ஒரு கேள்வியின் போது நிர்மலா சீத்தாராமனின் பெயரைக் குறிப்பிட்டு "நான் இவ்வளவு நேரமும் தெளிவாகவே அவர் பெயரைக் குறிப்பிடாமல் இருக்கிறேன்" என்று சொல்லி விட்டு நகர்ந்த போது பிரபாகரின் முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது. அதன் பிறகு சில நிமிடங்கள் அவர் மோடி மீதான விமர்சனத்தைக் குறைத்துக் கொண்டு பூசி மெழுகினார். அவர் இயல்பு நிலைக்கு வர சற்று நேரமெடுத்தது. இதை தன் விமர்சனத்தை தனிப்பட்ட உறவு சார்ந்ததாக மாற்றக் கூடாது எனும் கண்ணியமாகப் பார்க்கலாம். அல்லது ஏதோ ஒரு விதத்தில் நிர்மலா சீத்தாராமனின் தூண்டுதலினாலே பிரபாகர் அவ்வப்போது வந்து கடுமையாக ஒன்றிய அரசை விமர்சிக்கிறார் என்றும் பார்க்கலாம். ஒருவர் அமைச்சரவையில் இருப்பதாலே அவர் முழு திருப்தியுடன் அதிகாரத்துடன் இருக்கிறார் எனப் பொருளில்லை. சில நேரங்களில் கட்சிக்குள் இருந்தபடி உட்கட்சி கோபங்களை இப்படி வெளியே  ஆளை வைத்து தீர்த்துக் கொள்வார்கள். கேட்டால் அவர் வேறு கட்சி, நான் வேறு கட்சி என சொல்லிக் கொள்ளலாம். தமிழக அரசியலில் கூட இப்படி சொந்த கட்சிக்கு வெளியே இருந்து - கருத்தாளர்கள், காசுக்கு கூவும் யுடியூபர்கள், ஓய்வுபெற்ற ஊடகக்காரர்களை வைத்து - கட்சித் தலைமையைத் தாக்க வைக்கும்  தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். கட்சிக்குள் அழுத்தத்தை உண்டு பண்ண, சில அணிகளை பலவீனமாக்க இந்த உத்தியை பயன்படுத்துவார்கள். இவ்விசயத்திலும் அப்படி இருக்கலாம். அல்லது கடந்த சில ஆண்டுகளாகவே அவருக்கு வேறேதோ நோக்கம் இருக்கலாம். அல்லது இது வெறும் ஊகமாக தவறாகவும் கூட இருக்கலாம்.

ஆனால் ஒன்று, மேற்தட்டினரைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியல் பேசினால் ஏதாவது ஒரு ஆதாயம், அதற்கான அஜெண்டா, தொலைநோக்குத் திட்டம் இருந்தே தீரும். வெற்று லட்சியவாதத்துக்காக காலத்தையும் தொண்டையையும் வீணடிப்பவர்கள் மத்திய வர்க்க தொண்டர்கள் மட்டுமே.

பின்னால் நடப்பது தெரியாத வரை முன்னால் நடப்பது அழகாகத் தான் தெரியும். அவர் சொல்வதெல்லாம் சரியே, ஆனால் "அவர்" ஏன் பேசுகிறார் என்பது பிரச்சினையாக உள்ளது. நீங்கள் ஒன்றும் அந்தளவுக்கு நல்லவர்கள் இல்லையே பாஸ்? கணவனுக்கும் மனைவிக்கும் தெரிந்தே தான் இந்த முரண் அரசியல் நிகழ்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...