முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகன்" பற்றி பாலு

ஹாய் அபிலாஷ்,


‘ரசிகன்’ நாவலை வாசித்தேன். 


உங்களுடைய அ-புனைவு நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றையும் தங்களின் கட்டுரைகளையும் வைத்துச் சொல்வதானால் நீங்கள் எனது அபிமான எழுத்தாளர். ஆனால் உங்களின் சிறுகதைத் தொகுப்பான ‘தேவி’ என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதனாலேயே உங்களின் புனைவெழுத்து பக்கம் வர தாமதாகிவிட்டது. ’தேவி’ படித்துவிட்டு நான் வந்த ஒரு முன்முடிவு ‘அபிலாஷுக்கு புனைவு கைகூடவில்லை’ என்பது. அ-புனைவு எழுத்தாளராக இருக்கும்போது ஏற்படும் தர்க்க நோக்கம் புனைவழகியலை நெருங்கவிடாமல் செய்கிறதோ என்ற சந்தேகமும் இருந்தது. ‘ரசிகன்’ என் முன்முடிவுகளையெல்லாம் தகர்த்துவிட்டது.


இந்நூலைப் பற்றி எனக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம், இது முழுக்க முழுக்க இலக்கியத்தைப் பற்றிய Spoof நாவல். தமிழ் சினிமாவுக்கு மிர்சி சிவாவின் ‘தமிழ்ப்படம்’ போல ‘ரசிகன்’ தமிழிலக்கியத்தைப் பகடி செய்வதாகவே நினைக்கிறேன்.


நாவலின் முதலிரு பகுதிகளில் பல இடங்களில் சிரித்துக்கொண்டே படித்தேன். ஆனால் இறுதி அத்தியாயம் முற்றிலும் மாறுபட்ட உணர்வை அளித்தது. சாதிக் தன் நாவலை எரிக்கும் அத்தியாயம் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. அறிவின் மீது அகங்காரத்தைப் புகுத்திப் பார்த்த சாதிக் கடைசியில் மூளை சிதறி சாவது போன்ற படிமம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. நான் வாசித்த வரையில் சாதிக்கின் மரணம் அளவுக்கு வேறெந்த புனைவுக் கதாபாத்திரத்தின் இறப்பும் என்னை பாதித்ததில்லை. அதற்குக் காரணம், இது நீண்ட நாவல் என்பதாலா அல்லது சாதிக்கின் ஏதோவொரு குணாதிசயம் நெருக்கமாக இருக்கிறது என்பதாலா எனத் தெரியவில்லை! 


இந்நாவலுக்காக நீங்கள் கையிலெடுத்திருக்கும் அபத்தவாத எழுத்து முறை ஆரம்பத்தில் பல இடங்களில் முகம் சுளிக்க வைத்தாலும், இந்தப் படைப்பு கோரும் எழுத்துமுறை அதுவே! குறிப்பாக, சாதிக்கின் பிணத்தைக் கட்டித் தழுவி பிரவீணா அழும்போது சுற்றி நின்றவர்கள் அவளைக் காமத்துடன் பார்க்கும் படிமத்தை மறக்கவே முடியாது. அவுட்ஸ்டாண்டிங்!


அடுத்ததாக ‘கால்கள்’ வாசிக்க இருக்கிறேன். ‘நிழல் பொம்மை’ நாவலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.


அன்புடன்

பாலு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.