முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"ரசிகன்" பற்றி பாலு

ஹாய் அபிலாஷ்,


‘ரசிகன்’ நாவலை வாசித்தேன். 


உங்களுடைய அ-புனைவு நூல்கள் சிலவற்றைப் படித்திருக்கிறேன். அவற்றையும் தங்களின் கட்டுரைகளையும் வைத்துச் சொல்வதானால் நீங்கள் எனது அபிமான எழுத்தாளர். ஆனால் உங்களின் சிறுகதைத் தொகுப்பான ‘தேவி’ என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. அதனாலேயே உங்களின் புனைவெழுத்து பக்கம் வர தாமதாகிவிட்டது. ’தேவி’ படித்துவிட்டு நான் வந்த ஒரு முன்முடிவு ‘அபிலாஷுக்கு புனைவு கைகூடவில்லை’ என்பது. அ-புனைவு எழுத்தாளராக இருக்கும்போது ஏற்படும் தர்க்க நோக்கம் புனைவழகியலை நெருங்கவிடாமல் செய்கிறதோ என்ற சந்தேகமும் இருந்தது. ‘ரசிகன்’ என் முன்முடிவுகளையெல்லாம் தகர்த்துவிட்டது.


இந்நூலைப் பற்றி எனக்கு ஏற்பட்ட முதல் அபிப்பிராயம், இது முழுக்க முழுக்க இலக்கியத்தைப் பற்றிய Spoof நாவல். தமிழ் சினிமாவுக்கு மிர்சி சிவாவின் ‘தமிழ்ப்படம்’ போல ‘ரசிகன்’ தமிழிலக்கியத்தைப் பகடி செய்வதாகவே நினைக்கிறேன்.


நாவலின் முதலிரு பகுதிகளில் பல இடங்களில் சிரித்துக்கொண்டே படித்தேன். ஆனால் இறுதி அத்தியாயம் முற்றிலும் மாறுபட்ட உணர்வை அளித்தது. சாதிக் தன் நாவலை எரிக்கும் அத்தியாயம் உண்மையில் மெய் சிலிர்க்க வைத்தது. அறிவின் மீது அகங்காரத்தைப் புகுத்திப் பார்த்த சாதிக் கடைசியில் மூளை சிதறி சாவது போன்ற படிமம் இன்னும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. நான் வாசித்த வரையில் சாதிக்கின் மரணம் அளவுக்கு வேறெந்த புனைவுக் கதாபாத்திரத்தின் இறப்பும் என்னை பாதித்ததில்லை. அதற்குக் காரணம், இது நீண்ட நாவல் என்பதாலா அல்லது சாதிக்கின் ஏதோவொரு குணாதிசயம் நெருக்கமாக இருக்கிறது என்பதாலா எனத் தெரியவில்லை! 


இந்நாவலுக்காக நீங்கள் கையிலெடுத்திருக்கும் அபத்தவாத எழுத்து முறை ஆரம்பத்தில் பல இடங்களில் முகம் சுளிக்க வைத்தாலும், இந்தப் படைப்பு கோரும் எழுத்துமுறை அதுவே! குறிப்பாக, சாதிக்கின் பிணத்தைக் கட்டித் தழுவி பிரவீணா அழும்போது சுற்றி நின்றவர்கள் அவளைக் காமத்துடன் பார்க்கும் படிமத்தை மறக்கவே முடியாது. அவுட்ஸ்டாண்டிங்!


அடுத்ததாக ‘கால்கள்’ வாசிக்க இருக்கிறேன். ‘நிழல் பொம்மை’ நாவலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.


அன்புடன்

பாலு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...