Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பாராளுமன்ற தேர்தல்: சாதி, மத வாக்குப் பங்கீடும் அதன் அரசியலும்

 

2024 பாராளுமன்ற தேர்தலில் சாதி-மதம் அடிப்படையிலான வாக்கு சதவீதத்தைப் பற்றி ஒப்பீனியன் தமிழ் அலைவரிசையில் ஒரு தரவை முன்வைத்தார்கள் - அதிகமாக தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்கு வந்துள்ளது. இங்குள்ள தலித்துகளை பாஜக தன் வசம் இழுக்க ஒரு புறம் முயன்று வருகிறது, தலித் அறிவுசமூகம் (intelligensia) மறைமுகமாகவும், சில உதிரி கட்சிகள் நேரடியாகவும் பாஜகவை ஆதரிக்கின்றனர் என்றாலும் கணிசமானோர் இன்னமும் திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களே. வேறு சில மாநிலங்க்ளிலோ பாஜக வந்து இட ஒதுக்கீட்டைப் பறித்து விடுமோ எனும் பயம் தலித் சமூகங்களுக்கு இருந்தது. தமழ்நாட்டில் அப்பயம் இல்லாவிடினும் திராவிட கட்சிகளின் பகுதியாக தம்மைக் காண்கின்றனர் என நினைக்கிறேன். அதற்குரிய சமூகப்பொருளாதார காரணங்கள் இங்கு உள்ளன.

அதே நேரம் பழங்குடிகளின் வாக்குகள் கணிசமாக பாஜக கூட்டணிக்குப் போயுள்ளது. அதற்கான முயற்சிகளை சில மாநிலங்களில் பாஜக செய்தது, முர்முவை ஜனாதிபதி ஆக்கியது ஆகியவற்றை வைத்து இதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இன்னொரு பக்கம், ஆதிக்க சாதியினரின் வாக்குகள் நியாயமக பாஜகவுக்கே போயிருக்க வேண்டும். அதுவும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு போயுள்ளது. இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி இத்தனைக்கும் பொருளாதார மறுபங்கீடு, சமத்துவம் பற்றி பேசியது. இந்த சாதிகள் வழங்கிய ஆதரவை எந்த சமூக உளவியலின், பொருளாதார நோக்கத்தின் அடிப்படையில் பார்க்க முடியும்? தெரியவில்லை.

இன்னொரு ஆச்சரியம் இஸ்லாமியரின் வாக்குகளில் அனேகமாக பாதி பாஜகவுக்கு சென்றுள்ளது. இஸ்லாமியர்களை ஊடுருவல்காரர்கள், அதிக பிள்ளைகள் பெற்று நாட்டின் வளத்தை சுரண்டுபவர்கள் என்று என்னென்னமோ மோடி சொல்லி வெறுப்பை வளர்த்தாரே, அது இஸ்லாமியரை பெருவாரியாக பாஜகவுக்கு எதிராக திரட்டியிருக்க வேண்டுமே? 2019இலும் வடக்கே இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமாக பாஜகவுக்கு சென்றன. அது ஒரு பெரும் சதவீதம் அல்ல என்பதால் பாஜக அதை 'கோருவதில்லை', ஆனால் உள்ளுக்குள் அதைத் திரட்ட வேலை செய்கிறது. பெங்களூரில் இஸ்லாமியர் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகளை வாங்கிக் கொடுப்பதை, அவர்களை உள்ளிழுப்பதை கவனித்திருக்கிறேன். சில இடங்களில் தயங்காமல் பிரதிநுத்துவமும் கொடுக்கிறார்கள் என்றாலும் பெருவாரியாக பாஜகவின் நிலைப்பாடு "உங்களுக்கு உதவுவோம், உங்கள் நடைமுறை வாழ்வை கெடுக்க மாட்டோம், எங்களுடன் நில்லுங்கள், எங்கள் பிரச்சாரம் உங்களுடைய அன்றாட பரிவர்த்தனைகளை பாதிக்காது " என்பதே. கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையை பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் தமது ஊழல் மீது கவனம் திரும்பாதிருக்க முன்னெடுத்தது. அண்மையிலும் ஒரு மதக்கலவரத்தை காதலின் விளைவான கொலையை வைத்து நிகழ்த்த முயன்றது. ஆனால் இது போன்ற உதிரி சம்பவங்களைத் தவிர்த்து நோக்கினால் அவர்கள் இஸ்லாமியருக்கு நேரடியான அச்சுறுத்தல் அரசியலை செய்வதில்லை.

இன்னொரு பக்கம், பாஜகவுக்கு தெளிவான இஸ்லாமிய வாக்காள வியூகம் உள்ளது. பாஜக இந்துக்களை எப்படி தேர்தலின் போது ஒற்றைத் திரளாகப் பார்க்காமல், சாதி அடிப்படையில் பிரிக்கிறார்களோ அவ்வாறே இஸ்லாமியர்களையும் நோக்குகிறது. குறிப்பாக பாஸ்மண்டா என சொல்லப்படும் 'கைவிடப்பட்ட' பிற்படுத்தப்பட்ட, தலித் இஸ்லாமிய சமூகங்களை பாஜக தன் வயப்படுத்த தொடர்ந்து முயல்கிறது என பெய்யாத் அலி தெரிவிக்கிறார். இவர்கள் இஸ்லாமிய சமூகத்தினுள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறவர்கள், தீண்டாமையை அனுபவிப்பவர்கள், ஏழைகளாக துன்புறுகிறவர்கள். 2022இல் ஹைதாபாதில் நடந்த டாஸ்மண்டா இஸ்லாமியருக்கான பாஜக தேசிய நிர்வாகிகள் சந்திப்பை அவர் உதாரணமாக சுட்டுகிறார். பாஜக இஸ்லாமியரை துண்டுபடுத்தி உள்ளது - அவர்களை இந்திய வம்சாவழி இஸ்லாமியர், அந்நிய இஸ்லாமியர் (பதான்கள், சயித்துகள்) எனப் பிரிக்கிறது. பூர்வ இந்திய இஸ்லாமியருக்கான நிதியையும் வாய்ப்பையும் அந்நிய இஸ்லமியர் (டாஸ்மண்டா அல்லாதவர்கள்) சுரண்டிக் கொழுப்பதாக பாஜக பிரச்சாரம் செய்கிறது. அதாவது இந்துக்களிடம் வந்து உங்கள் தாலியையும், தங்கத்தையும், சொத்தையும் எருமை மாட்டையும் இஸ்லாமியருக்கு கொடுப்பாகள் என்று சொல்லிவிட்டு அதையே சற்று மாற்றி "உயர்சாதி இஸ்லாமியருக்கு கொடுப்பார்கள்" என டாஸ்மண்டா இஸ்லாமியரிடம் சொல்கிறார்கள். இந்த அணி திரட்டல் பாஜகவுக்கு தேர்தல் பலன்களை அளித்துள்ளதாக பெய்யாத் அலி கூறுகிறார். அதாவது இஸ்லாமியர் ஒரு மதரீதியான தனிக்கூட்டமாக இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பதில்லை. அவர்கள் உடைபட்ட திரளாக இரு பக்கமும் வாக்களிக்கிறார்கள்.

தமது மதத்துக்காக வாக்களிப்பார்களா, அல்லது சாதிக்காகவா என பெய்யாத் தான் உத்தரபிரதேச பெஸ்மண்டா இஸ்லாமியரிடம் நடத்திய கருத்துக்கணிப்பில் கேட்கும் போது அவர்கள் சாதிக்காகத் தான் என்கிறார்கள். ஹிலால் அகமது 2019க்குப் பின்னர் இஸ்லாமியரின் வாக்களிப்பு தேர்வு மிகவும் சிக்கலாகி, பிளவுபட்டுள்ளது, அவர்கள் ஒற்றை அடையாளத்தின் கீழ் திரள்வதில்லை என்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் 'டாஸ்மண்டா இஸ்லாமியர்' குறித்து கூகிளில் அதிகமாக தேடப்படுகிறது. அதாவது, 90களுக்குப் பிறகு இந்து தலித்துகள், பற்படுத்தப்பட்டோருக்கு நிகழ்ந்த அணிதிரளல் இப்போது இஸ்லாமியருக்குள்ளும் நிகழ்கிறது.

இதன் அடிப்படையிலே காங்கிரஸ் இஸ்லாமிய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி தேர்தல் பரப்புரையில் விவாதித்தது; அந்த இடத்தில் பாஜக மாட்டிக் கொண்டு கொஞ்சம் அடிவாங்கியது. இந்த பாராளுமன்ற தேர்தலில் - ஒரு கணக்கெடுப்பு படி - இந்தியா கூட்டணிக்கு சற்று அதிகமாகவே இஸ்லாமியர் வாக்களித்துள்ளனர், ஒட்டுமொத்தமாக அல்லர்.

இங்கு இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் கவனிக்க வேண்டும். அல்ஜசீரா இதழில் சயீப் காலித் எழுதிய கட்டுரையொன்றில் ஏன் ராகுல் காந்தி தன் நன்றி உரையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிடவில்லை எனக் கேட்கிறார். அது மட்டுமல்ல இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரையிலோ கொள்கை அறிக்கையிலோ இஸ்லாமியரை தனியாக குறிப்பிடவில்லை என்கிறார். இது பாஜக ஏற்படுத்தியுள்ள இஸ்லாமிய வெறுப்புவாதத்தின் பொறியில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிப்பதற்காகவே என நினைக்கிறேன். மேலும் இஸ்லாமியர் எனும் மத அடிப்படைப் பிரிவு ஒரு கற்பிதமே என காங்கிரஸும் பிற கட்சியினரும் உணர்ந்துள்ளனர். பிராந்திய, சாதிய, வர்க்க நலன்களை கணக்கில் கொள்ள முயல்கிறார்கள், இது நடைமுறை எதார்த்தத்தை கணக்கில் கொண்டது என்பது என பார்வை. சுமார் 20 கோடி இநதிய இஸ்லாமியர் ஒற்றை அடையாளம் அல்லர்.

இதை கவனிக்காமல் விடுவது, இஸ்லாமியர் தம்மை நாடு கடந்த ஒரு சர்வதேச மக்கள் தொகையாக மத அடிப்படையில் அடையாளம் காண்கிறார்கள் என சித்தரிப்பது ஊடகங்கள் இஸ்லாமிய சமூகத்துக்கு இழைக்கும் ஒரு அநீதி. உண்மையில் அவர்கள் இந்தியாவுக்குள் கூட ஒற்றை மத அடையாளத்தின் பாலான திரள் அல்லர். அவர்களை வகுப்பு, சாதி ரீதியாக அணுகுவதும், வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதுமே (பிளவுபடுத்துவது அல்ல) சரி.

இதைத் தாண்டி பல காரணங்களும் இருக்கக் கூடும் - யாராவது ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி காரணங்களைக் கண்டறிந்தால் நன்றாக இருக்கும்.

சாதி, மத திரள்களின் ஆதரவு ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறும். ஒவ்வொரு மாநிலத்திலும் கூட அங்குள்ள ஒவ்வொரு பிராந்தியத்திலும் சமூகப்பொருளாதார, அரசியல் பங்கீட்டு நிலையைப் பொறுத்தும் மாறும். உதாரணமாக, மேற்கு வங்காளத்தில் இஸ்லாமியர்கள் டி.எம்.ஸியை ஆதரித்ததைப்போல தீவிரமாக பிற மாநிலங்கள் அனைத்திலும் இந்திய கூட்டணிக் கட்சியினரை ஆதரிக்கவில்லை.
ஆகையால் இந்த தேர்தலில் கிடைத்துள்ள சாதி, மத வாக்குகளை வைத்து சாதி, மத திரள் உருவாக்கத்தை, அதன் சார்பை யாரும் ஒரு கருத்துருவாக்கமாக முன்வைக்க முடியாது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...