முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.கே மணி




கடந்த சில நாட்களாக எம்.கே மணியைப் பற்றி எழுதப்படும் பல உணர்ச்சிகரமான அஞ்சலிக் குறிப்புகளைப் படித்துக் கொண்டிருந்தேன். எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனதில் இருந்து பகிரப்படும் வருத்தமும் மரியாதையும். ஒருவருடைய மதிப்பையும் அன்பையும் பெற நாம் அவர்களை முதலில் சமமாக மதிக்க வேண்டும், அவர்களுக்கு எதிர்பார்ப்பின்றி நேரத்தை கொடுக்க வேண்டும். நேரம் மதிப்பற்றது, நாம் அதை வீணடிப்போமே அன்றி அடுத்தவருக்கு கொடுக்க மாட்டோம். எம்.கே மணி இதையெல்லாம் செய்திருக்கிறார், முன்தீர்மானம் இன்றி, மதிப்பிடாமல், ஒதுக்காமல் பழகியிருக்கிறார். அதனால் தான் இத்தனை பேர்களை அவரது இழப்பு சஞ்சலப்படுத்தியிருக்கிறது. இயக்குநர் மிஷ்கின் மணியின் கடைசிக் கால மருத்துவ செலவுகளைப் பார்த்திருக்கிறார் எனத் தெரிய வந்த போது மிகவும் நெகிழ்ந்தேன். மிஷ்கின் இதே போல தனக்கு தெரியாதவர்களுக்காகவும் யோசிக்காமல் உதவ தலைப்படக் கூடியவர் தான். இம்மாதிரி நல்ல விசயங்களை ஒரு இழப்பின் போதுதான் தெரிந்துகொள்கிறோம், அது துரதிஷ்டமானது என்றாலும் வாழ்க்கை மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு சின்ன விசயத்துக்கும் எதாவது ஒரு பெறுமதியை திரும்ப எதிர்பார்த்து நம்மை நாடுவோர் சூழ்ந்த உலகில் இப்படியான ஒரு தரப்பும் இருப்பது ஒரு அற்புதம்


எம்.கே மணியின் எழுத்தைப் படித்திருக்கிறேன். அவரிடம் உரையாடியதில்லை. அவருடைய பாணியும், நம்பிக்கைகளும் என்னுடையவற்றில் இருந்து வெகுவாக விலகி நிற்பவை. பிறந்தநாள் வாழ்த்துக்களை சியர்ஸோடு அவர் சொல்வதை ஏற்றிருக்கிறேன். கமல் விசயத்தில் சண்டை போட்டிருக்கிறேன். ரொம்ப கூலான ஒரு சினிமா ரசிகர் என்றே நினைத்தேன். ஆனால் அவரது வாழ்க்கை இவ்வளவு துயரானதாக, எழுத்தில் சாகசம் புரிபவராக இருந்திருக்கிறார் எனத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் அவரை அணுகி பழகியிருப்பேன்


அவரது கதைகளில் ஒரு வினோதமான மனநிலை இருக்கும் என பலரும் சொல்வது உண்மை தான் - அவை துல்லியமான கதையாகாமல் இருக்கலாம், ஆனால் பாத்திர அமைப்பில், நடையில் அவருடைய ஒரு தனித்துவம் இருக்கும். தன் இறுதி சில ஆண்டுகளில் மட்டுமே ஏகத்துக்கு எழுதியிருக்கிறார். ரெட்டை வேட சினிமாவில் ஒரு நாயகன் வேறு ஊருக்கு குடும்பத்திற்கு அடையாளம் மாறி வந்து பரபரப்பாக நடந்துகொண்டு அசத்துவாரே அதே மாதிரி.


அவருக்கு என் அஞ்சலி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...