Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

பாலுறவும் பாலியல் குற்றமும் ஏன் நிகழ்கின்றன?

அன்புள்ள அராத்து,
வன்புணர்வுக் குற்றங்களை மட்டுமல்ல எந்தக் குற்றத்தையும் தண்டனைகளால், கடும் தண்டனைகளால் கூட, குறைக்க முடியாதென்றே நினைக்கிறேன். என்னை விடுங்கள், ஆய்வுகளும் இதையே சொல்கின்றன. சமூக வெறுப்பு, கூச்சத்தினாலும் முடியாது. தண்டனைகள் குற்றவாளியைத் திருத்தவோ எதிர்காலக் குற்றவாளியைத் தடுக்கவோ அல்ல, குற்றவாளி அல்லாதோரின் திருப்திக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. கடவுளுக்கு பலி கொடுப்பதன் நவீன வடிவமே இன்றைய நவீனத் தண்டனைகள். அவை இல்லாமல் போகும் போது சமூகத்துக்கே பைத்தியம் பிடிக்க ஆரம்பிக்கும். நம்மால் நம்மையே தண்டிக்க முடியாமல் போவதும் குற்றவாளியைத் தண்டிப்பதற்கு ஒரு காரணம். ஒவ்வொரு குற்றமும் நம் அந்தரங்கத்தைத் தீண்டுகிறது. அதனாலே ஆன்மீகப் பொது நிகழ்வைப் போலக் குற்றங்கள் ஒரே சமயம் பொதுவயமாகவும் அந்தரங்கமாகவும் நம்மிடையிலும் நமக்குள்ளும் நிகழ்கின்றன. 

குற்றங்கள் நவீன மனிதனின் அந்தரங்க உலகம். அவனது பாழ்பட்ட ஆன்மீக உலகம். குற்றம் நிகழும் போது கடவுளுடனான உரையாடலைப் போன்றே பொதுசமூகம் இருப்பதில்லை. இது பாலியல், பாலியல் அல்லாத எல்லா குற்றங்களுக்கும் பொருந்தும். குற்றத்தின் போது குற்றவாளி அந்தரங்கமாக தனித்திருக்கிறான், குற்றமே அவன் தன்னில் இருந்து பொதுவுக்கு வரும் போது அம்பலமாவதே. ஒரு சாதாரண செயல் பொதுவுக்கு வரும் போதே அசாதாரண குற்றச்செயல் ஆகிறது. ராணுவம் ஒருவரை சுடும் போது அது அந்தரங்க வெளிக்கு வருவதே இல்லை. அதனாலே அது குற்றமாவதில்லை. ராணுவம் அதனாலே அந்தரங்க வெளி முழுக்க மறுக்கப்பட்டதாக உள்ளது. ஒழுக்கமீறல் என்பது மட்டுமே அவர்களுடைய அந்தரங்க வெளி. அவர்கள் இனப்படுகொலை செய்தால் அது போர்க் குற்றமாவதும், ஒரு தேசம் அதற்குப் பொறுப்பேற்க நேர்வதும், அது நாட்டிலுள்ள எல்லாரையும் 'அம்மணமாக', சங்கடமாக, சுயவெறுப்பு கொள்ள வைப்பது அதனாலே. எந்த தேசியவாதியாலும் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களை ஏற்க முடியாது, எந்த ஜெர்மானிய தேசியவாதியாலும் ஹிட்லரை குற்றவாளி ஆக்க முடியாது - அவை பொதுவில் நிகழ்வதாலே அவற்றை அவர்கள் அந்தரங்கத்துள் கொண்டு வந்தால் அவர்களுடைய தேசியமும் இறையாண்மையும் அதனால் காலியாகி விடும்.

குற்றம் இந்தளவுக்கு சிக்கலான ஒன்று - குற்றத்தைப் புரிந்துகொள்வது தெய்வம், பேய் போன்ற தர்க்கத்துக்கு அப்பாலான அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்கு சமானமானது. நான் குற்றங்களை நியாயபடுத்த இதைச் சொல்லவில்லை. பாலியல் அதன் இயல்பிலேயே குற்றச் செயல் தான் - இருவர் இணங்கிச் செய்யும் போதும் அது குற்றத்திற்கு வெகு அருகில் தான் வருகிறது. ஆகையால் பாலியல் என ஒன்று இருக்கும் வரை மனிதர்கள் குற்றம் புரிந்துகொண்டே இருப்பார்கள். பாலியல் குற்றங்களுக்கு தீர்வு அதற்கு மாற்றாக உலகில் ஆன்மீகத்தை, கடவுள் பக்தியைக் கொண்டு வருவது மட்டுமே. இரண்டும் எதிரிடைகள் - கடவுளும் பேய்களும் அதிகமாக பிரசன்னமாகும் உலகில் பாலியலும் குற்றங்களும் தரும் அந்தரங்க வெளி மனிதனுக்கு குறைவாகவே தேவைப்படும்.

ஆனால் கடவுள் இறந்து போன நவீன உலகில் மனிதன் அந்த ஹேங்க் ஓவரில் குற்றத்தை நாடிக் கொண்டே தான் இருப்பான். இனி கடவுளும் ஆன்மீகவும் மீள வாய்ப்பில்லை. ஆகையால் நான் பக்தியை முன்வைக்கவில்லை, அது தலைவலிக்கு அனாசின் போல பயன்படும் என்றாலும் கூட. நாம் வேறொரு புதிய தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். நவீன மனிதனுக்கு கடவுளற்ற ஒரு ஆன்மீகம் தேவை. 

சிறை, சமூக ஒதுக்கல், அவமதித்தல் எவையும் நமக்கானவை, குற்றவாளி அல்லாதோருக்கானவை,  குற்றவாளியை அவை சீண்டாது. 

- ஆர். அபிலாஷ்

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...