இம்மாத உயிர்மையில் வந்துள்ள என் நேர்முகத்தில் இருந்து: "நான் என்னை ஒருவித எதிர்விசையாக கருதுகிறேன். என்னை வலப்பக்கமாக திருகி விட்டால் நான் இடப்பக்கமாக இரட்டி வேகத்தில் சுழல்வேன். எனக்கு சதா எதிர்ப்பதற்கு, மறுப்பதற்கு எதாவது ஒன்று இருந்து கொண்டிருக்க வேண்டும். (...) பெரும்பான்மைத் தமிழக மாநிலங்களில் உள்ள உறவுகள் சார்ந்த செண்டிமெண்டுகள், அரசியல், சினிமா, கடவுள், மதம் சார்ந்த மிகையுணர்ச்சி எங்கள் ஊரில் இல்லை. எங்கள் மக்கள் கோயிலுக்குள் நின்றபடியே இயல்பாக பூசாரியையும் கடவுளையும் கலாய்ப்பார்கள், தேவாலயத்திற்குள் இருந்து போதகரை பகடியாக பார்ப்பார்கள்."
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்