முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டும் வேட்கை



அக்டோபர் 6, 2024இல் மெரீனாவில் நடந்த வானூர்த்திக் கண்காட்சிக்காக 13 லட்சம் பேர்கள் எல்லா சிரமங்களையும் தாண்டி வந்தார்கள், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்று, 4 பேர்கள் உயிரிழந்தார்கள் என்றால் அதற்கு சமூகவலைதளத்தில் கிடைத்த வைரல் கவனமும் அது விடுமுறை தினமென்பதும் மட்டுமல்ல காரணம் - இது முற்றதிகார சமூகங்களில் தோன்றும் ஒரு பெருவிழைவாகும்: நவதாராளவாதத்தின், நகரமயமாக்கலில், பணப்பெருக்கத்தின், அதனால் தோன்றும் தீவிர ஏற்றத்தாழ்வுகளின், தனிமனிதவாதத்தின், போதாமைகள், தனிமை, பதற்றத்தின் விளைவு என்னவென்றால் மக்கள் பெருங்கூட்டமாகத் திரள்வதற்கு ஒரு வாய்ப்புக்காக காத்துக்கிடப்பார்கள். ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலே மக்கள் கடலெனப் பெருகி வந்துவிடுவார்கள். பொழுதுபோக்குத் தளங்களில் பெருங்கூட்டம் பெருகுவதைப் பாருங்கள். காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்காவிடில் திரண்டவர்களைக் கலைக்கவே முடியாது; விடியவிடிய ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டாடத் தலைப்படுவார்கள். ஏதோ ஒரு உணர்ச்சி உந்துததால் மக்கள் போய்த் திரண்டால் அதன் பிரதான அரசியல் / போராட்ட நோக்கத்தைக் கைவிட்டு வெற்றுக்கேளிக்கையாக, பிடிவாதமான கூடுகையாக அது நிலைக்கிறதுஉங்கள் கோரிக்கையை ஏற்கிறோம் என்று அரசு சொன்னால்கூட அதைச் செவிகொடுத்துக் கேட்காமல் எதாவது நொள்ளை சொல்லி கலைய மறுப்பார்கள். அரசே அடித்துக் கலைத்தால்தான் உண்டு. ஏனென்றால் திரளும் அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கும் கிளுகிளுக்கும் சந்தோஷமும் தனிமையின்மையும் ஒப்பற்றவை. அதனால் தான் முற்றதிகார சமூகங்களில் பிரமாண்ட போராட்டங்களைக் கூட நீடித்தக் கேளிக்கை கொண்டாட்டமாக நாம் மாற்றுகிறோம். தமிழ்நாட்டில் நடந்த அரசியலற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இருந்து அண்மையில் கொல்கொத்தாவில் அரசுக்கு எதிராக நடந்த மருத்துவர்களின் பாட்டும் கொண்டாட்டமுமான தொடர் போராட்டமும் உதாரணங்கள். முன்பிருந்த நேரடிப் போர்கள் இன்றில்லை. செயற்கைத் தொழில்நுட்பத்தைக்கொண்டு ஏவுகளையும் குண்டுகளும் வீசி நடத்தும் தொலைதூரக் கட்டுப்பாட்டு யுத்தங்களில் மக்கள் கொல்லப்படுவார்கள், ஆனால் போரில் பங்கேற்று தேசத்துக்காக தியாகம் செய்து பெருந்திரள் அடையாளத்தின் பகுதியாகும் வாய்ப்பு மக்களுக்கு இன்று கிடைப்பதில்லை. அந்த இல்லாமையையும் இத்தகைய கூட்டங்கள் ஈடுசெய்கின்றன என நினைக்கிறேன். இந்த திரளுதல்கள் இன்று வெகுமக்களின் வன்முறையற்ற மென்யுத்தமாகிறது.


இந்தியாவில் இது மோடியிடமிருந்துதான் ஆரம்பித்தது - அவரது பிரச்சாரம் என்பது முழுமையான கேளிக்கை விளையாட்டுதான். அதன் நாயகன், மையம் அவர்தான். டிவி, சமூகவலைதளம் மூலமாக அவர் இப்பிரச்சாரக் கூட்டங்களில் தன்னையும் பார்வையாளர்களையும் பலகோடி மடங்குப் பெருக்கிக்கொண்டார். மெய்நிகர் பிரமாண்டக் கூட்டத்தின் அதிகாரத்தை அவர் பயன்படுத்துவதுடன் மக்களையும் அதை உணரவைப்பார். மற்றபடி அவர் மக்களின் அண்மையை விரும்பாதவர், கவனத்துக்காக மட்டும் ஆசைப்படுபவர். அவர் ஒரு கூட்டத்தின் நடுவே போய்நின்று மக்களுடன் கலந்து கொண்டாட விரும்பமாட்டார். அதனாலே அவருக்கு ஊடகங்கள் தேவைப்படுகின்றன. அதனாலே அவரது கூட்டங்களில் மக்கள் போய்த் திரண்டு தள்ளுமுள்ளு, நெரிசல், மிதியோட்டம் எதிலும் ஈடுபடமாட்டார்கள். இன்னொரு விசயம், மக்கள் இன்று தலைவர்கள், சித்தாந்தம், லட்சியத்துக்காகத் திரள விரும்புவதில்லை. அவர்கள் தமக்காகவே, தமது மகிழ்ச்சிக்காகவே, தமது போதாமையை திரளின் ஆற்றலால் நிரப்புவதற்காகவே திரள்கிறார்கள். ஆகையால் தற்படம் எடுக்கவும் விளையாடவும் சுயவிளம்பரம், சுயதகவல்பரப்பு செய்யவுமே திரள்கிறார்கள். தம்மை மறக்கவும் தம்மைப் பிறர் மறக்காதிருக்கவுமே திரள்கிறார்கள்


முற்றதிகாரத்தை நோக்கி நகரும் சமூகங்களில் இத்தகைய சமுத்திரத் திரளலுக்காக மக்கள் ஏங்கிக்கொண்டே இருப்பதை நம்மால் சுலபத்தில் புரிந்துகொள்ள முடியாது. அது நம் உபமனத்தில் இருந்து நம்மை செலுத்தும். ஒருமுறை புத்தாண்டு இரவின்போது நான் கடற்கரை நோக்கிச் செல்ல முயன்று சில மணிநேரங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டதும், எப்படியாவது அங்கு போய்சேரவேண்டும் என்று என் மனம் யோசிக்காமலே யோசித்துக்கொண்டிருந்ததையும் அடிக்கடி நினைத்துக்கொள்வேன். நான் ஏன் மக்கள் கூட்டத்தின் நடுவே போக அன்றிரவு ஆசைப்பட்டேன்? எது என்னைப் பிடிவாதமாக செலுத்திக்கொண்டிருந்தது? கண்களைக் கட்டிவிட்டதைப் போல என்னை மாற்றியது எது? அதுதன் அண்மையில் மெரினாவை நோக்கியும் 13 லட்சம் பேர்களை செலுத்தியிருக்கிறது. 1930களில் ஜெர்மனியில் ஹிட்லரைப் பார்க்க அவர் எங்குபோனாலும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் அவரைப் பார்ப்பதையே தம்மை மகத்தானவர்களாக உணரவைக்கும் என்பதாலே திரண்டார்கள். அதற்கான கதையாடலை உருவாக்கியது, தன்னை அதீதமானத் திறமையும் ஆற்றலும் அதிகாரமும் படைத்தவராக நிகழ்த்தியதுமட்டுமே ஹிட்லரின் சாதனை. இம்மாதிரிக் கூட்டங்களில் ஹிட்லர் அவற்றின் துவக்கத்தையும் முடிவையும் நியாயத்தையும் மட்டுமே அளித்தார். மிச்சத்தை மக்களே தம் உணர்ச்சிப்பெருக்கால் ஏற்படுத்திக்கொண்டார்கள். அவரைப் பயன்படுத்தி தனிமனிதர்கள் தம்மைக்கடந்து ஹிட்லரைவிட பிரமாண்டமான ஒரு இருப்பாக தம்மை உணர்ந்துகொண்டார்கள். இன்றைய சமூகங்களுக்கு ஹிடலர் கூடத் தேவையில்லை - ஹிட்லரின் தோற்றமயக்கம், மெய்நிகர் குறியீடு போதும். பத்தாயிரம் அடி நீளத் தோசை, பத்து லட்சம் ஏக்கர் நீளமான சாலை, கடலளவுக்குப் பெரிய நீச்சல்குளம் என எதைக் காட்டினாலும் கோடிக்கணக்கானவர்கள் வந்துவிடுவார்கள். பார்க்க அல்ல, தம்மை தோசையாக, சாலையாக, நீச்சல்குளமாக மாற்றிக்கொள்ள


நாம் இதை நிர்வாகக் குறைபாடு என்று விமர்சிக்கலாம். உண்மைதான். ஆனால் நோய் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பதைப்போலத்தான் அது. உண்மையில் அது தீர்வல்ல. அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூட்டமோ கட்டுப்படுத்தும் கட்டமைப்புகள், பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்ல பிரச்சினை, இந்த அரசியலின்மை, முழுமையான கேளிக்கை நோக்கிலான கூட்டங்களே அடிப்படையில் அதிக ஆபத்தானவை. கண்மூடித்தனமாக மக்களை சாவை நோக்கிப் பிடித்துத்தள்ளுவது அரசியலின்மையின் செலுத்துவிசைதான். இந்த சமூக நோய்மையிலிருந்து மக்களை விடுவிக்கவேண்டும்.


 பிரமாண்ட கூட்டங்களை விட சிறிய கூட்டங்களே ஆரோக்கியமானவை. அதாவது மக்கள் திருவிழாக்களில் தம் சொந்த ஊர்களில், சொந்த கிராமத்தினருடன் மட்டும் திரள்வது, நகரங்களிலும் ஒவ்வொரு பகுதியிலாக நண்பர்கள், பரிச்சயக்காரர்களுடன் திரள்வது, ஒரு நோக்கத்துக்காக, அரசியல் லட்சியத்துக்காகத் திரள்வது ஆரோக்கியமானது. முற்றதிகாரத்தைத் தோற்கடிக்க நாம் பிரமாண்டத்தை முதலில் எதிர்க்கவேண்டும்.


பின்குறிப்பு: வானூர்தி கண்காட்சிக்காக 13 லட்சம் பேர்கள் வருவதைப் பார்க்கும்போது விஷ்ணுபுரம் கூட்டத்திற்கு ஆயிரம் பேர் திரள்வது ஒன்றும் பெரிய விசயமில்லை, அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது. எப்படி வானூர்த்திகளைப் பார்ப்பவர்களை விட வானூர்திகளைத் தாம் பார்ப்பதை வேடிக்கை பார்க்கத் திரள்பவர்களே அதிகமாக வருகிறார்களோ அப்படித்தான் இலக்கியத்துக்காக அன்றி இலக்கியத்துக்காகக் கூடும் தம்மைப் பார்க்கவே சிறிய கூட்டமாக மக்கள் வருகிறார்கள். அவர்கள் பங்கேற்பாளர்கள் அல்ல கேளிக்கை விரும்பிகள், சுயநுகர்வோர்கள். வெற்றாக மேம்போக்காக வேடிக்கைப் பார்ப்பது, பொழுதை அந்த இன்மையால் நிரப்பி திகைப்பதுதான் அவர்களின் நோக்கம். கூட்டம் முடியும்போது நீங்கள் மகத்தான ஒன்றை அடைந்துவிட்டீர்கள் என்று ஜெயமோகன் அவர்களை நோக்கி கிறித்துவப் போதகரைப் போலச் சொல்லிவிடுவார். எதையோ செய்துவிட்டோம் எனும் திருப்தியை விட முடிஞ்சுது எனும் திருப்தியையே அது அவர்களுக்குக் கொடுக்கும். ஏனென்றால் இத்தகைய கூட்டங்களில் பதற்றமே நாம் நமது தனிமைக்கு, போதாமைக்குத் மீண்டும் திரும்பவேண்டுமே எனும் அச்சம்தான். அதனால் முடித்துவைக்க முத்தாய்ப்பான உரைகள் அவசியம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...