முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நிதீஷ் குமார் ரெட்டியும் மிச்ச அணியும்

 


நிதீஷ் குமார் ரெட்டி கிட்டத்தட்ட ஒரு சூப்பர் ஸ்டார்தான் - அவரது நிதானம், பின்னங்கால் ஷாட்கள், அம்பத்தி ராயுடு பாணியில் மட்டையைப் பிடித்து தடுக்கும், அடிக்கும் நளினம், பந்துக்கு சில மைக்ரோ நொடிகள் முன்பே தயாராகும் திறமை, கைகள் பந்தைச் சந்திக்கும் - கிட்டத்தட்ட தோனியிடம் கண்ட - வேகம் என பல விசயங்கள் இன்றைய சதத்தில் கவர்ந்தன. அவரைப் பார்க்க 28 வயதான வீரரின் முதிர்ச்சி தெரிகிறது. 21 வயதைப் போன்றே இல்லை. அவர் சதம் அடித்தபின்னர் ஒரு காலை மடித்து அமர்ந்து பொறுமையாக தலைக்கவசத்தை மட்டை மீது வைத்து அழகு பார்த்து கையை உயர்த்தி கொண்டாடியது கவித்துவமாக இருந்தது. ஏதோ சீரியல் கில்லர் தன் வசமுள்ள எலும்புக் கூட்டை ஒழுங்குபடுத்திப் பார்ப்பதைப் போல அல்லது மனத்தை ஒருமுகப்படுத்தி நிதானமாக இரு என அவர் தனக்கே சொல்லிக்கொள்வதைப் போல.

இன்னொரு பக்கம், நிதீஷ் குமாரின் இந்த பொறுமை ரிஷப் பண்டிடம் இருந்தால் அவர் இந்நேரம் கூடுதலாக பத்து சதங்கள் எடுத்திருப்பார். டி20யில் கேப்டன் கூட ஆகியிருப்பார். கடந்த நியுசிலாந்து தொடரில் பண்ட் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆடினார். ஆனால் அப்போதே அவர் தன் உடற்தகுதியிலும், விளைவாக கீப்பிங்கிலும் திணறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த ஆஸி பயணத்தின்போது எனக்கு பண்டின் உடற்தகுதி குறிதது கேள்விகள் இருந்தன - அவருக்கு முதுகிலோ முட்டியிலோ ஏதோ பிரச்சினை இருக்கிறது, அதனால்தான் 50 பந்துகளுக்கு மேல் நின்றாட அவர் தயங்கி சீக்கிரமாக அடித்துமுடித்துக் கிளம்ப விழைகிறார். இன்று அவர் ஸ்கூப் அடிக்கப் பார்த்து அவுட் ஆகி கவாஸ்கரிடம் கடுமையாகத் திட்டுவாங்கினார். "முட்டாள் முட்டாள், இப்படியா ஆடுவது? நிலைமையைக் கருத்திற் கொள்ள வேண்டாமா, களத்தடுப்பு அமைப்பைப் பார்க்க வேண்டாமா?" என்றெல்லாம் சீறிய கவாஸ்கர் பண்ட் நியாயமாக ஆஸி டிரெஸ்ஸிங் ரூமுக்கே போகவேண்டும் என்றார். இத்தொடரில் பண்டுக்கு ஓய்வளித்துவிட்டு ஜூரலை ஆட வைத்திருக்க வேண்டும். ரோஹித் நியுசிலாந்து தொடருடன் ஓய்வறிவித்திருக்க வேண்டும். அவர் காயத்தில் இருந்து திரும்பிய பின்னர் ரொம்ப அதிகமான போட்டிகளை ஆடிவிட்டார். என்னதான் அவரே விரும்பியிருந்தாலும் அவருக்கு அவ்வப்போது ஓய்வு கொடுத்திருக்கவேண்டும். வெற்றிபெறும் நோக்கமன்றி சமாளிக்கும் உத்தேசத்துடன் வீரர்களை அணியில் எடுத்தால் இப்படித்தான் ஆகும்.
கிரிக்கெட் திறமை அளவுக்கு உடற்தகுதி, உடல்-மன ஆற்றல், புத்துணர்ச்சி அவசியமானது. நிதீஷ்குமார் ரெட்டிக்கும் ரோஹித், பண்ட், கோலி, சிராஜுக்கும் அதுதான் வித்தியாசம். பும்ரா என்னதான் களைத்திருந்தாலும் அவரது அணித்தலைமை குறித்த கனவு அவரைச் செலுத்துகிறது. அதனால் வெறியுடன் வீசுகிறார். இத்தொடரில் அவர் பின்வாங்கியிருந்தால் அணித்தலைமையை கில் / ராகுலுக்கு கொடுத்திருப்பார்கள்.
நான்காவது டெஸ்ட் ஆட்டத்தை நிதீஷும் வாஷிங்டனும் ஓரளவுக்கு காப்பாற்றியிருக்கிறார்கள் என்றாலும் நிதீஷால் இன்னொரு ஐம்பது ரன்களை எடுக்க முடிந்தால் மட்டுமே ஆஸி அணி பின்னங்காலுக்குப் போவார்கள். ஆட்டம் டிராவை நோக்கிப் போகும். அல்லது ஆடுதளம் தலைகீழாக மோசமானால் ஆட்டம் முடிவை நோக்கிப் போகும். 350 மேல் ஆஸி அணி எடுத்து இந்தியாவை நாளை மாலைக்குள் கடைசி செஷனில் ஆட வைத்து பந்து மேலும் கீழுமாகச் சென்றால் அவர்கள் வெற்றியடைவார்கள். 270க்குள் இலக்கை இந்தியா விரட்டினால், ஆடுதளமும் தொடர்மழை, வெயிலற்ற மந்தநிலை காரணமாக இப்படியே தட்டையாகத் தொடர்ந்தால் இந்தியா சுலபத்தில் வெல்லும். ஆனால் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் கடுமையாகப் போராடும் என்றும், மழையும் கூடத் துணை வந்தால் டிராவுக்கான வாய்ப்பு பிரகாசம் என்றும் தோன்றுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...