முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.டி வாசுதேவன் நாயர் - அஞ்சலி



எம்.டி வாசுதேவன் நாயர் - அஞ்சலி

எனக்கு மலையாளத்தில் வாசிக்கத் தெரியாது என்பதால் எம்.டியின் சிறுகதைகளையும் நாவல்களையும் பெரும்பாலும் மொழிபெயர்ப்பிலோ ஒலிநூலாகவோ மட்டுமே கேட்டிருக்கிறேன். சில நூல்களுக்கு தமிழில் விமர்சனக் குறிப்பும் எழுதினேன். இளமையில் அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது - முதல் காரணம் அவருடைய பாத்திரங்களில் எதாவது ஒரு பாரித்த இழப்புணர்வு இருந்தது. அவர் பீமனை எழுதினாலும் சற்றே சாதாரணமானவராக, குறைகள் கொண்ட மத்திய வர்க்க ஆளின் மனநிலையுடனே படைப்பார்கள். சின்ன பயமொன்று அவரது பாத்திரங்களை எப்போதும் ஆட்கொண்டிருக்கும். அது அவர்களை பலவீனர்களாக்கும். அவரது தறவாட்டு வீடும், அங்கு வாழும் மக்களும் கூட எப்போது வேண்டுமானாலும் மூழ்கலாம் எனும் கப்பலில் செல்லும் பயணிகளைப் போன்றே உணர்வார்கள். எல்லாருமே தப்பித்து ஓடிக்கொண்டிருப்பர். சமூகச் சூழலில் இருந்து, அவமானத்தில் இருந்து, கவலையில், வறுமையில், விதியில் இருந்து. துன்பியல் நாயகர்களின் பலவீனங்களும், இன்பியல் நாயகர்களின் சாதாரணத்தன்மையும் அவரது நாயகர்களிடம் கலந்திருக்கும். அதாவது வேடிக்கையான ஒருவர் நம்மை அழவைப்பதைப் போன்றே அவர்களது நடத்தையிருக்கும். பீமனையும் அப்புண்ணியையும் நான் இப்படியே பார்க்கிறேன். சதியன் சந்துவிடம் கூட இந்த அப்பாவித்தன்மை உண்டு. கொஞ்சம் பிசகினால் நாம் சிரித்துவிடக் கூட பலவீனம் கொண்ட துன்பியல் நாயகன். மிக உயர்ந்த குணங்களும் திறமையும் கம்பீரமும் படைத்தவர்களாக தன் துன்பியல் நாயகர்களை அவர் நாவல்களிலோ சினிமாவிலோ படைத்ததில்லை. அவரது "ஷெர்லாக்" என்றொரு கதையில் நாயகன் தன்னைப் பூனையாகவே உணர்வான். அவன் எவ்வளவு அலட்சியமாக, திமிராக நடந்துகொள்ள முயன்றாலும் அவன் தான் வெறும் பூனைதான் என உணர்ந்து தன்னிலைக்கு மீள்வான், அதை அவர் வாசகருக்கும் உணர்த்தியபடி இருப்பார். இதுவே எம்.டியின் நாயகர்களின் தனிச்சிறப்பு என நினைக்கிறேன்.

எனக்கு அவரது சிறுகதைகளின் கட்டுக்கோப்பு, அதிலுள்ள உருவகங்கள், நளினமான மொழி, அந்நியமாதல் பிடிக்கும். அவரது நாவல்களிலும் இந்த கவித்துமான தன்மையை, துயரக் காவிய தொனியை அதிக உணர்ச்சியில்லாத கட்டுப்பாடான மொழியில் வெளிக்காட்டும் பாங்கு உண்டு. "மஞ்ஞு" போன்ற சிறிய நாவல்களும் சில சிறுகதைகளும் கிட்டத்தட்ட கவிதையைப் போன்றே வடிவம் கொண்டவை.

என்னதான் அவர் முற்போக்காளர் என்றாலும், கேரளா முற்போக்கு இடதுசாதி பூமியென்றாலும் தம் நிலங்களையும் பாரம்பரிய வீட்டையும் பூர்வீக சமூக அந்தஸ்தையும் பொருளாதார வலிமையையும் இழந்த ஆதிக்கச் சாதியினரை பொதுச்சமூகத்தின் குறியீடாக மாற்றியதை யாரும் பெரிதாக அங்கு எதிர்த்ததாகத் தெரியவில்லை. இதுவே வங்காளத்தில் பிபூதி பூஷன் வேறொரு வடிவில் எழுதிய சங்கதி. இங்கு தமிழில் நகரமயமாக்கலால் சமூகக் கட்டுமானம் தகர்ந்தபோது அப்படியொரு கதையாடல் உருவாகவே இல்லை. நமது நவீன இலக்கியம் நகரமயமாக்கலைக் கொண்டாடியது, விமர்சித்தது, ஆனால் கிராம வாழ்க்கை குறித்த இழப்புணர்வைப் பேசவில்லை. இம்மாதிரி சமூக மாற்றம் சார்ந்த துயரங்களை எழுதுவதன் பிரச்சினை என்னவெனில் அவற்றை நாம் ஒட்டுமொத்தமான மனித குலத்தின் இருத்தலியல் துயரமாக, இருப்பின் புதிரின் உருவகமாக மாற்றாவிடில் புதிய காலகட்டம் தோன்றும்போது அக்கதைகள் அர்த்தமிழக்கும். மேலோட்டமாகத் தோன்றும். நாலுகெட்டு, காலம், அசுரவித்துக்கெல்லாம் இதுதான் நடந்தது.

நான் என் முப்பதுகளில் எம்.டியைப் படித்தபோது அவர் வெகுசாதாரணமான, உள்ளீடற்ற அதே நேரம் நளினமான ஸ்டைலான எழுத்தாளர் என்று தோன்றியது. அவரது அழகான மொழிநடையில் பிளாஸ்டிக் தன்மை உள்ளதாக, அவரது கதைகளை அவர் செயற்கையாகக் கட்டுப்படுத்துவதாக நினைத்தேன். ஒரு கண்ணாடிக் கோப்பை தவறி விழுந்ததும் நொறுங்குவதைப் போல அவரது கதைகள் மறுவாசிப்பில் உடைந்து சிதறின. அதனாலே நேற்று மலையாள டிவிகளில் எம்.டியை மகத்தான படைப்பாளி, மேதை என்றெல்லாம் அங்குள்ள ஊடகங்களும் இலக்கியவாதிகளும் புகழ்வதைக் கேட்டபோது அது மிகையென்று தோன்றியது. இவருக்குப் போய் ஏன் இவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்று கேட்கத் தோன்றியது.

எம்.டியிடம் பெரிய பிரச்சினை அவரிடம் தத்துவார்த்தமான தேடலோ எழுத்துக்குள் ஆடையக் கழற்றி வைத்து மூழ்குகிற துணிச்சலோ இல்லையென்பது. தன்னை மிகவும் கண்ணியமாகக் காட்ட அவர் மிகவும் பிரயாசைப்பட்டார் எனத் தோன்றுகிறது. தனிமனிதப் பிறழ்வுகளைச் சமூகச் சரிவுகளுடன் இணைப்பதையும், தனிமனிதத் தனிமையை இதன் வழியாகக் காண்பதையும் ஒழிய அவர் வேறெதையும் செய்யவில்லை. ஆனால் பெருங்கூட்டத்தின் நடுவிலும் கடும் தனிமை இருக்கிறது, பிறழ்வற்றுத் திரிவோர் மிகக்கொடூரமான குற்றங்களைப் புரிகிறார்கள். இதை எம்.டி பார்த்ததில்லை. அவர் கற்பனையான உலகம் ஒன்றை தனக்குள் உருவாக்கி அதற்குள் பதுங்கி வாழ்ந்துவிட்டார், அங்கு அவருக்கு பதிலில்லாத கேள்விகள் இல்லை, சுலபத்தில் தீர்வும் உண்டு. அங்கு இருமை மிகத் தெளிவாக நிறுவப்பட்டிருக்கும். இது முற்போக்குவாதியாக அவருக்கு அறம் சார்ந்த சிக்கல்கள் இன்றி உலகைப் பார்க்க உதவியது. ஆனால் இது பொய்யெனும் சர்க்கரைப் பாகில் முக்கியெடுத்த கொஞ்சம் கசப்பான பண்டம் மட்டுமே, அவரைப் போன்ற படித்த மத்திய வர்க்கத்தை ஏமாற்றும் போதை வஸ்து இது. இது நிஜம் அல்ல என்று மலையாளத்தில் யாரும் அவரிடம் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

இது முதிர்ந்த வாசகனாக என் பார்வை. ஆனால் இளமைக் காலத்தில் அவர் எனக்குப் பெரும் உவகையைத் தந்தார் என்பது உண்மையே.
அவர் திரைக்கதை எழுதிய படங்களில் "சதயம்", "தாழ்வாரம்", "சுகிர்தம்" பிடித்தமானவை.

அவருக்கு என் அஞ்சலி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.