முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வயோதிகத்தின் சாபம்

வாழ்க்கையின் துயரங்களில் ஒன்று சில பத்தாண்டுகளுக்குப் பிறகு வயோதிகத்தின் நிழலில் வாழும் ஒரு மதிப்புக்குரியவரைச் சந்தித்து அவர் முழுக்க மனதளவில் உருக்குலைந்து, எந்த தொடர்புமின்றி கடுமையான கருத்துக்களையும் காழ்ப்புணர்வையும் கொட்டுவதை செய்வதறியாது பார்த்து நிற்பதுதான். காலம் மிகமிக வேகமாக ஓவியமொறை நீரில் நனைத்து உருவழிப்பதைப் போல மாற்றிவிடுகிறது. அவரா இவர் எனத் திகைத்து நிற்கிறோம். குறிப்பாக வயோதிகத்தால் மூளையின் முன்பகுதியில் உள்ள நரம்பணுக்கள் பாதிக்கப்படும்போது கருணையற்றவர்களாகவும், தன் சிந்தனைக்கு நடப்புலகில் பொருத்தமில்லை என உணராதவர்களாகவும், கற்பனையாலான கூண்டுக்குள் தம்மைச் சிறைவைத்தவர்களாகவும் மாறுகிறார்கள். அவர்களுடன் உரையாடும்போது நாம் சொல்வது எதுவும் அவர்களது மனத்துக்குள் பதிவதில்லை என்பதையும் உணர்கிறோம். அது நம்மை வாயிருந்தும் ஊமையாக மாற்றுகிறது. ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்கள் சிந்திக்கும் பாங்கும் மனநிலையும் மாறுவதைக் கண்டு திகைக்கிறோம். வயோகத்தின்போது மனிதர்கள் கனிவதாக சொல்லப்படுவது எல்லாருக்கும் பொருந்தாது. என் தோழி ஒருவர் தனது வயதான மாமியாருக்கு உடல்நலமில்லாமல் போனபோது அவரது கொடூரமான நடத்தையை, பேச்சைப் பொறுக்கமுடியாமல் தவித்தார். கடுமையான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டார். என்னுடைய நண்பரொருவர் இதற்குத் தீர்வொன்றைச் சொன்னார்: என்ன சொன்னாலும் பதில் சொல்லாமல் கேட்டுவிட்டு வந்துவிட வேண்டும். இதைவிட அவர்களுடன் வாழ்வோருக்கு வேறு தற்காப்பில்லை என்றார் அவர். நாம் இந்தப் பக்கத்தைப் பற்றி அதிகமும் பேசுவதில்லை.

இன்னொரு பக்கம், இதற்கு விதிவிலக்கானவர்களையும் அனுமதினமும் காண்கிறேன். இயற்கை அவர்கள் ஆசீர்வதித்து நமக்கு அணுக்கமானவர்களாக, அன்பானவர்களாக விட்டுவைக்கிறது. ஆனால் கொஞ்சம் பிசகினால் அவர்களை இயற்கை நரகத்துக்குள் தள்ளி நம் கையையும் கோத்துவிடுகிறது. உடலுக்கு வரும் நோயைவிட இது கொடியது. ஏனென்றால் இதற்கு சிகிச்சையில்லை. மேலும் அவர்கள் சிகரத்தின் உச்சத்தில் இருந்து சட்டென கீழே பள்ளத்தில் விழுகிறார்கள். அதைக் காணவே கூடுதல் வருத்தமாக இருக்கிறது. இயற்கை கொடியது என்று தோன்றுகிறது. நமக்கும் இப்படி ஆகிவிடக் கூடாதே எனும் சுயநலமான அச்சமும் ஏற்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...