முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோன்ஸ்டாஸிடம் சிக்கிக் கொண்ட பும்ரா

 

கிரேக்க எழுத்தாளரைப் போன்ற பெயர் கொண்ட சேம் கோன்ஸ்டாஸின் உள்ளூர் போட்டி ஆட்டங்களை நேற்று பார்த்தபோதே அவர் இதைத்தான் இன்று பும்ரா, சிராஜுக்கு எதிராகப் பண்ணப்போகிறார் என எனக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் அவர் அதில் வெற்றிபெறுவார் என நான் ஊகிக்கவில்லை. துவக்க மட்டையாளராக அவருக்கு சரியான காலாட்டம் இல்லை, உள்ளே வரும் பந்துக்கு போதுமான தடுப்பாட்டம் இல்லை. அவர் ஒன்று முன்னங்காலுக்கு வந்து சமநிலைத் தவறி ஸ்டம்புக்கு குறுக்கே சரிந்து LBW ஆவார் அல்லது பந்தை மிஸ் பண்ணி பவுல்ட் ஆவார். ஆகையால் அவரது சிறந்த உத்தி அவரது வலிமையான டி20 ஷாட்களை - ரிவர்ஸ் ஸ்கூப், ராம்ப் - ஆடுவதுதான். பந்துவீச்சாளர் இன்னும் முழுநீளத்தில் வீசினால் அவர் ஸ்டம்புகளை விட்டு ஆப் பக்கத்தில் கவருக்கு மேல் அடிப்பார் அல்லது மிட் விக்கெட்டுக்கு அடிப்பார். அடுத்து பந்து வீச்சாளர் அரைக்குழியாகப் போட்டால் பின்னால் சென்று பைன் லெக், பேக்வெர்ட் ஸ்கொயர் லெக்குக்கு புல் / ஹூக் அடிப்பார். சும்மா அழகுக்கு நேராக டிரைவ் செய்யவும் செய்வார். ஒட்டுமொத்தமாக 5-6 ஷாட்களை வைத்து ஓடும் வண்டியே சேம் கோன்ஸ்டாஸ். என்ன பிரச்சினை என்றால் இதை வேகவீச்சாளர்கள் எதிர்பாராமல் திகைத்துப் போவதால் அவர்கள் தொடர்ந்து அவரது வலிமைக்கே பந்துவீசிக் கொண்டிருப்பர். இதுதான் இன்று நடந்தது. இன்று அவர் அடித்த பந்துகளின் நீளத்தையும் திசையையும் பார்த்தால் நான் சொல்வது புரியும். இதுவே இனி எல்லா போட்டிகளிலும் நடக்கும்.

2000இல் இருந்து ஆட்டத்தைப் பார்ப்பவர்களுக்கு இது சேவாகின் ஸ்டைல் என்று தெரியும். ஒரே வித்தியாசம் அவர் ஸ்கூப், ரேம்ப் அடிக்க மாட்டார். ஸ்டம்புகளை விட்டு நின்று பந்து விரட்டவோ வெட்டவோ செய்வார். அவரது தடுப்பாட்டம் பலவீனமானது என்பதால் அவரைத் தூக்கிவிடலாம் என நினைத்து அவுட் ஸ்விங் போட முயன்று வேகவீச்சாளர்கள் மாட்டிக்கொள்வார்கள். அவர்களுக்கு நிலைமை புரியும் முன்பு அரை சதத்தைக் கடந்துவிடுவார், சதமும் அடிப்பார். 10இல் 4 போட்டிகளில் சேவாக் இப்படி ரன் அடித்தால் 4 போட்டிகளில் ஸ்லிப்பிலோ கீப்பரிடமோ கேட்ச் கொடுத்து அவுட் ஆவதால் பந்து வீச்சாளர்களுக்கு போலியான நம்பிக்கையைக் கொடுப்பார். இது ஒரு சுழல் - அவர் அவுட் ஆவதாகக் காட்டுவதாலே அவருக்கு நிறைய அடிக்கும் பந்துகளை வேகவீச்சாளர்கள் கொடுப்பார்கள். இந்தப் பொறியில் சிக்காதவர்களே கிடையாது. ஆனால் சேவாக்கின் ஆட்டவாழ்வின் கடைசிக் காலத்தில் வேகவீச்சாளர்கள் அவருக்கு பந்தை உள்ளே மட்டும் வீசிக் கட்டுப்படுத்தினார்கள் - அதாவது மிடில் ஆண்ட் லெக் ஸ்டம்பில். அதுவும் கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் இருந்தால் சேவாக் அந்த திசைக்கு வரும் பந்துக்குத் திணறினார்.
எ.பி டிவில்லியர்ஸும் இப்படித்தான். அவரையும் வழக்கமான நீளத்தையும் திசையையும் வைத்துக் கட்டுப்படுத்த முடியாது. அவருக்கு ஒன்று கால் சுழலை வெளியே வீச வைக்கவேண்டும் அல்லது ரவுண்ட் தெ விக்கெட் வந்து பந்தை உள்ளே கொண்டு வரவேண்டும். அப்போது அவரால் ரேம்ப், ஸ்கூப் அடிக்க முடியாது, விட்டு பந்தை வெட்டவோ தூக்கவோ முடியாது. ஐ.பி.எல்லில் இதை அவருக்கு எதிராக வெற்றிகரமாக முயன்றார்கள். ஆனால் டிவில்லியர்ஸுக்கு இருக்கும் ஷாட்களின் சாத்தியங்கள் கான்ஸ்டஸிடம் இல்லை என்பதால் அவருக்கு ரவுட் தெ விக்கெட் வந்து பந்தை உள்ளே (மிடில் மற்றும் லெக் ஸ்டம்பில்) அரை நீளத்தில் வீசிவிட்டு, எட்டு களத்தடுப்பாளர்களை மிட் விக்கெட், ஸ்கொயர் லெக், பைன் லெக், லெக் ஸ்லிப், ஷார் மிட் விக்கெட் எனப் பெரும்பகுதி கால்பக்கமாக நிறுத்தி அவரை அடிக்க விடாமல் தடுத்தாலே அவர் எதாவது ஒரு பந்துக்கு LBW ஆவார்; அல்லது குறைந்தது அவரை ஆஸ்திரேலிய நிர்வாகம் கொண்டு வந்த நோக்கம் நிறைவேறாது - பும்ராவைத் தாக்கி நிலைகுலையச் செய்வது. கோலியை விட்டு அவரது தோளை மோதவிடாமல் இந்தியா இந்த வியூகத்தை இரண்டாவது இன்னிங்ஸில் முயலவேண்டும். இன்னொரு யுக்தி பந்தை 6வது ஸ்டம்பில் மிக வைடாக வீசுவது. ஆனால் இது மிகவும் மெதுவாக பந்து நின்று வரும் ஆடுதளங்களில் மட்டுமே எடுபடும்.
ஆனால் இதை இந்தியா உடனடியாக செய்வார்கள் என எனக்குத் தோன்றவில்லை. அவரது தடுப்பாட்ட control percentage 56 சொச்சமாக குறைவாக உள்ளதால் அவரை ஸ்லிப்பிலே தூக்கலாம் என நம் வேகவீச்சாளர்கள் வெறித்தனமாக நம்புவார்கள். அது ஒரு இன்னிங்ஸில் நடந்தாலும் அவர் அடுத்த இன்னிங்ஸில் திரும்பவும் பொளந்து கட்டுவார்.
அடிக்க விரும்பும் மட்டையாளருக்கு அடிக்க பந்தைக் கொடுக்காமல் இருந்தாலே அவரது பாதி ஆட்டம் காலியாகி விடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.