முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்து டி20 அணியின் வேகப்பந்து வீச்சும் இந்திய மட்டையாட்டத்தின் பிரச்சினையும்

இங்கிலாந்து தன் டி20 அணியில் இம்முறை இரண்டு முழுநேர சுழலர்களை மட்டுமே கொண்டு வந்தனர். ஆனால் இந்தியாவோ தன் அணியில் நான்கு சுழலர்களைக் கொண்டு ஆடுகிறது. ஆகையால் இங்கிலாந்தின் அணித்தேர்வு முட்டாள்தனமானது என்று ஶ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கூறினர். நானும் அப்படியே கருதினேன். ஆனால் அவர்களுடைய தேர்விற்குப் பின்னால் அபாரமான திட்டமொன்று இருந்தது என்பதை தொடரின் இரண்டாவது ஆட்டத்தின்போதே புரிந்துகொண்டேன்



கடந்த சில ஆண்டுகளாகவே நமது மட்டையாளர்கள் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் ஆடப் போகும்போது பந்தை நான்காவது, ஐந்தாவது குச்சிகளில் தொடர்ந்து வீசி அவர்களை வெளியேற்றுகிறார்கள். பந்தை உள்ளே வீசுவதே இல்லை. ஏனென்றால் உள்ளே வரும் பந்தைக் கூட இந்திய மட்டையாளர்கள் காலை நகர்த்தி ஆப் பக்கமாக அடித்தார்கள். பந்தை வெளியே வீசினால் அவர்கள் அதை மட்டையால் தொடும் நோக்கில் நகர்ந்து வருவர்கள் எனக் கருதி வைடாக வீசி சற்றே உள்ளே கொண்டு வந்தோ நேராகச் செல்ல வைத்தோ தடுப்பாட வைத்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்தார்கள் எதிரணி வேகவீச்சாளர்கள். கோலி, ரஹானே, புஜாரா என நமது மட்டையாளர்கள் இப்படித்தான் திணறினார்கள். ஆனால் டி20யில் பந்து அந்தளவுக்கு நகராது, பவுன்ஸும் ஆகாது, நன்றாகத் தெறித்துக் கொண்டு சிக்ஸர் போகும் என்பதால் வைடாக வீசுவது நல்ல உத்தியல்ல. நமது மட்டையாளர்கள் வழக்கம்போல முழுநீளத்திலும் குறைநீளத்திலும் விழும் பந்துகளை விளாசி சுற்றிச்சுற்றிக் காட்டினார்கள். சஞ்சு சாம்ஸன் பந்தைவிட்டுத்தட்டிகவர், எக்ஸ்டிரா கவருக்கு மேலாக தூக்கி விரட்டுவார் என்றால் சூர்யாவோ குச்சிகளுக்குப் பின்னால் எல்லா திசைகளுக்கும் விளாசுவார். ரிங்கு, அபிஷேக் ஷர்மாவின் வலிமை நேராகவும் கவர் பகுதியிலும் அடிப்பது. இந்திய அணி மட்டையாட்டத்தைக் காணவே எதிரணிக்குப் பயமாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து ஒன்றை கவனித்தார்கள் - பிரச்சினை திசையில் இல்லை, நீளத்தில் இருக்கிறது. இந்தியா பின்னங்காலுக்குப் போய் பெரிதாக அடிப்பதேயில்லை. நீங்கள் ஹெட், வார்னர் போன்ற வீரர்களின் பெரிய ஷாட்களை கவனித்தால் பின்னால் போய்த்தான் பந்தைத் தூக்குவார்கள். ஆனால் இந்திய அணியிலோ முன்பு முன்னங்காலிலும் பின்னங்காலிலும் ஆக்ரோஷமாக அடிப்பதற்கு டெண்டுல்கர் போன்ற ஒருவராவது இருந்தார். இப்போது யாருமே இல்லை. (ரோஹித் ஷர்மாவும் டி20யில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். ரஹானே டி20 ஆடுவதில்லை.) இங்கிலாந்து வேகவீச்சாளர்களில் நான்கு பேரும் 140-150 வேகத்துக்கு வீசுபவர்கள். அவர்கள் மிக வேகமாக பந்தை நடுக்குச்சியில் இருந்து விலாப்பக்கமோ ஆப் பக்கமிருந்து நடுக்குச்சிக்கோ வீசுவார்கள். ஒரு பந்தைக் கூட வெளியே வீசுவதில்லை. உள்ளே வரும் பந்தையும் நம் மட்டையாளர்களால் குச்சிகளை விட்டு அடிக்க முடியாது. குச்சிகளுக்கு குறுக்கே சென்று midwicket, fine leg பகுதிகளுக்கு புல் / ஹூக் அடிக்கவே முடியும். ஆனால் அங்கேயும் தடுப்பாளர்களை நிறுத்தி வைத்துவிடுகிறார்கள். மேலும் நம் ஆட்களுக்கு அங்கே பின்னங்காலில் அடிக்க வராது. கடைசி இரண்டு போட்டிகளில் அவர்களில் 90% மேல் பந்துகளை நம்மை விரட்டவே அனுமதிக்கவில்லை. இதில்தான் இந்திய மட்டையாளர்கள் திகைத்துப் போனார்கள்.


இரண்டாவது போட்டியில் இந்தியா தட்டுத்தடுமாறி வென்றாலும் அதில் உண்மையான வெற்றியாளர்கள் இங்கிலாந்தே என்று நான் நினைத்தேன். அவர்களுடைய வேகப்பந்து வீச்சு அவ்வளவு அழகாக நெருப்பாக இருந்தது. சென்னையின் ஆடுதளத்தின் பவுன்ஸ் அவர்களுக்கு உதவியது, மூன்றாவது போட்டியில் ராஜ்கோட்டில் அந்தளவுக்கு உதவாது என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அந்த ஆடுதளத்திலும் பந்தை குத்தி உள்ளே கொண்டு வந்தபோது, ஒழுக்கத்துடன் தொடர்ந்து குறைநீளத்தில் வீசிக்கொண்டே இருந்தபோதுதான் அவர்களுடைய திட்டத்தின் மேதைமை எனக்கு விளங்கியது. நாம் பொதுவாக சஞ்சு சேம்ஸன் பவுன்சருக்கு எதிராகத் திணறியதைப் பற்றித்தான் பேசுகிறோம். ஆனால் அனேகமாக எல்லாருக்குமே அந்த நீளம் சிம்மசொப்பமாக உள்ளது. அஷ்வினின் யுடியூப் சேனலில் இதைப் பற்றின விவாதம் நடந்ததை கவனித்தேன். பந்தை குறைநீளத்தில் உள்ளே கொண்டு வந்து சஞ்சுவை விரட்டவே விடாமல் இங்கிலாந்து கட்டுப்படுத்தியதை அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் சொல்லாமல் விட்டது மற்ற மட்டையாளர்களுக்கும் இதுவே நடக்கிறது என்பது. அதனாலே அவர்கள் நான்கு வேகவீச்சாளர்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 16 ஓவர்களில் அவர்கள் 80 பந்துகளையும் அப்படியே வீசும்போது இந்தியாவின் கணிசமான ஷாட்கள் அசாத்தியமாகின்றன (இதுவே இரண்டு முழுநேர சுழலர்களை அவர்கள் கொண்டு வந்தால் இந்த திட்டத்தைப் பின்பற்றுவது சிரமமாகும்.). கையைக் கட்டியது போலாகி விடுகிறது. என்ன மாதிரி ஆடுதளமென்றாலும் இதே மாதிரி வீசுவதே அவர்களுடைய நோக்கம். இதை 1932-33இல் ஆஸ்திரேலியாவின் பிரேட்மேனுக்கு எதிராக இங்கிலாந்து பிரயோகித்த bodyline வியூகத்துடன் நாம் ஒப்பிடலாம். வழக்கமாக 100 சராசரியில் ஆடும் பிரேட்மேன் அந்த தொடரில் 56.57 சராசரியுடன் 396 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார். என்னவொரு மகத்தான வீரர் என்று பாருங்கள். (இதுவே கோலி, ரோஹித், கில் உள்ளிட்ட நமது இன்றைய இந்திய மட்டையாளர்கள் எனில் பாடி லைனுக்கு எதிராக 10-20 சராசரியுடன் 100 ஓட்டங்களே எடுத்திருப்பார்கள்.) இங்கிலாந்தின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான பிரண்டம் மெக்கல்லத்தையும், புள்ளியல் வல்லுநர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்


 இந்தியாவுக்கு இந்த பொறியில் இருந்து விடுபட ஒரே வழிதான் இப்போது உள்ளது. அஷ்வின் சொல்வதைப்போல மைதானத்தின் பக்கவாட்டு எல்லைக்கோடுகள் குறைவாக இருக்க வேண்டும். பின்னங்காலுக்குப் போய் பவுன்ஸரை லேசாக அரைகுறையாகத் தட்டினாலே சிக்ஸர் போக வேண்டும். அப்போது சஞ்சு, சூர்யா போன்றவர்கள் ஜொலிப்பார்கள். வழக்கமான பெரிய மைதானங்களில் இது பெரும் பிரச்சினையாகவே தொடரப் போகிறது. இனி ஓரளவுக்கு நல்ல வேகவீச்சாளர்களைக் கொண்டுள்ள எதிரணிகள் எல்லாருமே நான்கு வேகவீச்சாளர்களுடன் சரியான திட்டத்துடன் வருவார்கள். இந்திய மட்டையாளர்களால் இதற்கு உடனடியாக தீர்வு கண்டுபிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால் இயல்பாகவே பின்னங்காலில் நன்றாக ஆடக்கூடியவர்கள் நம்மிடம் இப்போது இல்லை. சஞ்சுவும் சூர்யாவும் மெல்லமெல்ல இதற்குத் தீர்வு காண்பார்கள்தாம். ஆனால் அதற்குள் தோல்விகள் அதிகமாகி அணிக்குள் பல மாற்றங்கள் வரும். இடதுகை ஆட்டக்காரர்களால் இதே பந்துகளை பின்னால் வெட்டியாட முடியும், விட்டு தூக்கி அடிக்க முடியும் என்பதால் அவர்களை அதிகமாக கொண்டு வருவார்கள். ரிஷப் பண்ட் கூட உள்ளே வரலாம் (அவரால் இயல்பாகவே இந்த வியூகத்தை நன்றாக கையாள முடியும்.).  இங்கிலாந்தின் இந்த வியூகம் ஒருவேளை இந்திய அணியின் மட்டையாட்ட வரிசையையே எதிர்காலத்தில் மாற்றும் நிலையை உருவாக்கக் கூடும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...