முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யானையென்றால் பானை

எழுத்தாளர்களுக்கு நிதியுதவி அளிப்பது மொழிக்கும், பண்பாட்டுக்கும் மிகப்பெரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச புத்தகக் கண்காட்சிக்காக விமான, ஐந்து நட்சத்திர அறைச் செலவுகளுக்காக நிதியில் கால்வாசி இருந்தாலே அரசு இதைச் செய்ய முடியும். ஒரு பட்டிமன்ற / வெகுஜனப் பேச்சாளர் ஒரு மணிநேரம் புத்தகத் திருவிழாவில் பேச ஒரு லட்சம் கொடுக்கிறார்கள். அதனால் சமூகத்துக்கு, பண்பாட்டுக்கு, மொழிக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. பொதுச்சமூகமும் இதை வெற்றுக்கேளிக்கைக்கு மேல் முக்கியமாகப் பொருட்படுத்துவதில்லை. கேட்டதும் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் பாரதியின், பாரதிதாசனின் வரிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவை இன்றுவரையிலும் மேற்கோள்காட்டப்பட்டுக் கொண்டும், பாடப்பட்டும் வருகின்றன. தமிழுக்கு வெளியே மாணவர்களுக்கு அறியப்பட்ட பெருமாள் முருகனாலும், இமையத்தாலும், அம்பையாலும் தமிழுக்கு எவ்வளவு பெருமையென்பதை மாற்றுமொழிக்காரர்கள் அவர்களை உயர்வாகப் பேசும்போது நாம் உணர்கிறோம். அண்மையில் பெருமாள் முருகன் வந்திருந்தபோது என் கல்லூரியில் ஆயிரத்துக்குமேல் மாணவர்கள் திரளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரங்கில் இடமில்லாததால் 100 பேர்களுக்குள்ளாகவே அனுமதிக்க முடிந்தது; அதற்காக நிறைய பேர் என்னிடம் வருந்தினர்கள். அப்போதும், அவரது நூல்களில் கையெழுத்து வாங்க நீண்ட வரிசை தோன்றியபோதும் எனக்கு ஒரு சக தமிழ் எழுத்தாளராகப் பெருமையாக இருந்தது. இதுவே சாரு நிவேதிதா வந்து மாணவர்களிடம் உரையாற்றியபோதும் பெரும் உற்சாக அலை எழுந்தது. இதயபூர்வமாக அவர்களை அவரை நேசித்ததை நான் கண்டேன். இன்னும் சில தமிழ் எழுத்தாளர்கள் எங்கள் மாணவர்களிடம் முன்பு உரையாடும்போதும் நான் இதையே உணர்ந்திருக்கிறேன். இதுவே நான் திண்டுக்கல் லியோனியையும் பாரதி பாஸ்கரையும் விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷையும் டெய்லர் அக்காவையும் மதுரை முத்துவையும் அழைத்துப் போயிருந்தால் இருந்திருக்குமா? கவன ஈர்ப்பு இருந்திருக்கும், ஆனால் நம்மையும் நம் மொழியையும் கேவலமாகப் பார்த்திருப்பார்கள். கேரளாவை எடுத்துக்கொள்வோம் - அவர்கள் சசி தரூரை, அருந்ததி ராயை, எம்.டியை தம் மொழியின் பெருமையாகப் பார்ப்பார்கள். ஒரு மிமிக்றி கலைஞரோ இன்புளுவன்ஸரோ தோன்றினால் அவர்கள் அதை ரசிக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தெரியும் ஷக்கீலாவுக்கும் சன்னி லியோனுக்கும் மேல் அவர்களுக்கு மதிப்பில்லை என்று. ஏனென்றால் தம் மனத்துக்குள் ஆழமாகப் போய் சிந்தனையை மாற்றும், கற்பனையை வளமாக்கும் படைப்பாளியே பொழுதுபோக்காளரை விட எக்காலத்திலும் மேலானவர். கம்பனின், இளங்கோவின் காலத்தில் வாழ்ந்த ஆடற்கலைஞர்களைப் பற்றி விதந்தோதும் குறிப்புகள் எங்காவது உண்டா? பாரதி பாஸ்கருக்கும், பர்வீன் சுல்தானாவுக்கும் உள்ள அறிவின் எல்லை அவ்வளவுதான். அவர்களுக்கு புக்கர் பரிசையோ நோபல் பரிசையோ அளித்து கௌரவிப்பார்களா? மதுரை முத்துவின் ஜோக்குகள் தமிழுக்குப் பெருமை என்று முதல்வர் என்றாவது டிவீட் போட்டு வாழ்த்துவாரா? அவருக்குத் தெரியும் சாகித்ய அகாடெமி விருதாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் வாழ்த்துப் போட்டாலே அது தமிழ்நாட்டுக்குப் பெருமையென்று. நான் இவர்களெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. அவர்கள் தாராளமாக ஊரூராகப் போய் கல்லா கட்டட்டும். அவர்கள் வருடத்திற்கு 30-50 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்பது ஒரு கணக்கு. ஆனால் இவர்களுக்கு அரசின் வரிப்பணத்தை ஒரு லட்சத்தை ஒரு மணிநேரத்துக்கு கொடுக்காமல் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுத நிதியுதவியாகக் கொடுத்தால் அவரால் மூன்று மாதங்களில் பணக்கவலையின்றி எழுதி பிரசுரிக்க முடியும். அந்நூல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் புகழை நிலைநாட்டக் கூடும். போலிப் பேச்சாளர்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது அது விழலுக்கு இறைத்த நீர் எனப் புரிந்துகொள்வதில்லை என்பதே அவலம்.

தமிழ்நாட்டு அரசின் இலக்கும், திட்டங்களும் மிகச்சிறப்பானவை, உயரிய நோக்கம் கொண்டவை. ஆனால் அவற்றை செயல்படுத்த அனுப்பப்படும் சந்தர்ப்பவாத அமைப்பினரும், அதிகாரிகளும் இதை முடிந்தளவுக்கு சிதைக்கவே முயல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இவ்வாறான உயரிய நோக்கமோ அதை நிறையேற்றும் அறிவோ இல்லை. ஒன்று தமக்குத் தேவையானவர்களுக்கு பணம் பெற்றுத்தர விரும்புகிறார்கள் அல்லது தரப்பட்ட வேலையை எப்படியாவது முடித்தால்போதும் என அலுத்துக்கொள்கிறார்கள். பம்மல் கே சம்மந்தத்தில் கமல் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து தட்டச்சு செய்பவரிடம் சொல்வாரே "யோவ் எதைச் சொன்னாலும் அப்படியே டைப் அடிச்சிருவியா?" என்று அப்படித்தான் இந்த அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். யார் என்ன பட்டியல் கொடுத்தாலும் கண்மூடிக்கொண்டு அழைத்து நடத்தி விடுவார்கள். யாரை மதிப்பது, யாரை விடுப்பது என ஒரு எழவும் தெரியாது. அதிகாரிகள் ஒருங்கிணைக்கும்வரை, சந்தர்ப்பவாதிகள் முடிவெடுக்கும்வரை இப்பிரச்சினைகள் இப்படித்தான் தொடரும்.

முதல்வரின் நல்ல ஆணைகள் எப்படியெல்லாம் கோளாறாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு வேறொரு உதாரணம் தருகிறேன் - ஒரு ஏழை எழுத்தாளருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருது கிடைக்கிறது. அவரை உடனே போய் நேரடியாகப் பார்த்து வாழ்த்துங்கள் என்று திமுக தலைமையிடம் இருந்து கட்டளை பறக்கிறது. அந்த ஊர்க்கார நிர்வாகிகள், பக்கத்து ஊர்க்காரர்கள், அதற்கடுத்த ஊர்க்காரர்கள், வட்டம், மாவட்டம் எனப் புற்றீசலாகப் பெருகி எழுத்தாளருக்கு வீட்டுக்குப் படையெடுக்கிறார்கள். அதனால் தான் மிகவும் நொந்து போனதாக அந்த எழுத்தாளர் சொன்னார். "இதெல்லாம் பெருமையல்லவா? நானெல்லாம் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் ஊரே கொண்டாடுகிறதே எனப் பெருமைப்பட்டிருப்பேனே" என்றேன் நான். அதற்கு அந்த எழுத்தாளர் தனக்கு நடந்த துயரத்தை விளக்கினார் - வரும் நிர்வாகிகள் மாலை போட்டு, பொன்னாடை போர்த்துகிறார்கள். (பணமொன்றும் கொண்டு வருவதில்லை). அவர்களை அமர வைக்க அவர் அவரது சிறியவீட்டில் வீட்டில் இடமில்லை. அதனால் முற்றத்தில் பந்தல் போடுகிறார். அதற்குப் பணம் வேண்டுமே. வட்டிக்கு வாங்குகிறார். அடுத்து வருகிறவர்களுக்கு தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்து உபசரிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் முழுக்க பொன்னாடை போர்த்த வந்தவர்களுக்கு உபசரணை செய்ததில் அந்த எழுத்தாளர் நொடிந்துபோய் கடனாளி ஆகிவிட்டார். தனக்கு மூன்று லட்சம் செலவு, அது சாகித்ய அகாடெமி பரிசுத்தொகையைவிட அதிகம் என்றார். யோசித்துப் பாருங்கள் - வாழ்த்திவிட்டு வரச்சொன்னால் வெறுங்கையோடா போவது? ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு நிதிதிரட்டிக் கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது கையில் வீட்டுதவிப் பொருட்கள், நகையென்று கொண்டு போயிருக்கலாம் (சாரு தன் கழுத்தின் தன் வாசகர் அளித்த கனத்த தங்கச்சங்கிலி மின்ன வருகிறார் பாருங்கள்.). அல்லது “ஐயா உங்கள் நிலை மோசமாக இருக்கிறது, நாங்கள் நிதிதிரட்டி உங்கள் வீட்டைப் பெரிதாக்கிக் கட்டித் தருகிறோம்” என்று இந்த கட்சி நிர்வாகிகள் சொல்லியிருக்க வேண்டும். (கேரளாவில் அப்படித்தான் ஒரு கவிஞருக்கு ஊரே திரண்டு வீடு கட்டுக்கொடுத்தது.) அந்த எழுத்தாளராவது சங்கோஜத்தைவிட்டு கேட்டிருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை - இப்படித்தான் முதல்வர் உயர்ந்த நோக்கத்துடன் எதையாவது உத்தரவிட்டால் இவர்கள் புகுந்து தலைகீழாக நிறைவேற்றுகிறார்கள். யானை என்றால் பானையாக்கி விடுகிறார்கள்.

இனி குமாரநந்தனின் பதிவைப் படியுங்கள்.
ஆர். அபிலாஷ்
*******

புத்தகக் கண்காட்சியில் பேசும் பேச்சாளர்களில் பத்துக்கு மூன்று பேரிடம், நீங்கள் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் குறித்து வாசகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும் வகையில் பேச வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்துவிட்டால் போகிறது இதற்கு எதற்கு இத்தனை பிரச்னை?
அப்போ எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சி மேடையில் பேசக் கூடாது என்கிறீர்களா?
பேசலாமே? எழுத்தாளர்கள் என்றாலே அவர்களுக்கு பேச வராது என்பதாகவும் அல்லது மேடையில் சரளமாகப் பேசுபவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது என்பது போலவும் எதற்கு கட்டமைக்க வேண்டும்? பேச்சாளர்கள் எங்காவது கட்டண உரை நிகழ்த்துகிறார்களா? ஆனால் எத்தனை எழுத்தாளர்கள் கட்டண உரை நிகழ்த்துகிறார்கள்? இதிலிருந்தே தெரியவில்லையா? பேச்சாளர்களைவிடவும் நன்றாகப் பேசக் கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று? அவர்களைப் போன்றவர்களைப் பேச வைக்கலாம். பேச்சாளர்களுக்குத் தருவதைப் போன்றே அவர்களுக்கும் சன்மானம் தரலாம்.
அப்போது மேடையில் சரளமாகப் பேசத் தெரியாத எழுத்தாளர்கள், பேசத் தெரிந்த எழுத்தாளர்கள் என அவர்களை இரண்டாகப் பிரித்து ஏற்ற தாழ்வுகளை உண்டாக்க வேண்டுமா?
வேண்டாமே அவர்களுக்கு பேச்சாளர்களைவிட அதிகம் சன்மானம் கொடுங்கள். சாகித்ய அகாடமி விருதுத் தொகையை 25 லட்சமாக உயர்த்துங்கள். நூலக ஆணை பெரும் புத்தகங்களுக்கு வெறும் பேப்பர் காசை விட குறைவாக மதிப்பிட்டு தொகை வழங்குவதற்கு பதிலாக எழுத்தாளர்களுக்கு வாரிக் கொடுங்கள். எழுத்தாளர்களாக இருந்தாலும் வாழ்வாதாரத்திற்காக வேறு பணிச் சுழலில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அறிவித்து அவர்கள் முழு நேர எழுத்தாளர்களாக இயங்க ஊக்குவியுங்கள். ஒரு அரசு மனது வைத்தால் எழுத்தாளர்களை இன்னும் எப்படியெல்லாமோ மேன்மைப் படுத்தலாம்.
அப்படியெல்லாம் செய்தால் எழுத்தாளர்கள் எல்லாம் ஏன் எங்களைப் பேச விடுங்கள் பேச விடுங்கள் என புலம்பப் போகிறார்கள். தயவு செய்து என்னைப் பேசவெல்லாம் சொல்லாதீர்கள் நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்ல மாட்டார்களா?
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பேச்சாளர்களுக்கு அதிகப் பணம் கொடுப்பதால்தான் எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சி மேடையில் ஏன் பேச்சாளர்களைப் பேச வைக்கிறீர்கள்? என கேட்பதைப் போன்ற தொனி இருக்கிறதே?
அப்படி இல்லை. அடிப்படை என்னவோ புறக்கணிப்புக்கு எதிரான மனநிலைதான் என்றாலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என ஒரு குழுவினர் கூக்குரல் எழுப்பினால் ஏற்கனவே நல்ல கவனிப்பில் இருப்பவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அதன் அர்த்தம் அல்ல.

- குமார நந்தன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...