முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

யானையென்றால் பானை

எழுத்தாளர்களுக்கு நிதியுதவி அளிப்பது மொழிக்கும், பண்பாட்டுக்கும் மிகப்பெரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும். சர்வதேச புத்தகக் கண்காட்சிக்காக விமான, ஐந்து நட்சத்திர அறைச் செலவுகளுக்காக நிதியில் கால்வாசி இருந்தாலே அரசு இதைச் செய்ய முடியும். ஒரு பட்டிமன்ற / வெகுஜனப் பேச்சாளர் ஒரு மணிநேரம் புத்தகத் திருவிழாவில் பேச ஒரு லட்சம் கொடுக்கிறார்கள். அதனால் சமூகத்துக்கு, பண்பாட்டுக்கு, மொழிக்கு என்ன பயன்? ஒன்றுமில்லை. பொதுச்சமூகமும் இதை வெற்றுக்கேளிக்கைக்கு மேல் முக்கியமாகப் பொருட்படுத்துவதில்லை. கேட்டதும் மறந்துவிடுகிறார்கள். நீங்கள் பாரதியின், பாரதிதாசனின் வரிகளை எடுத்துக்கொள்ளுங்கள், அவை இன்றுவரையிலும் மேற்கோள்காட்டப்பட்டுக் கொண்டும், பாடப்பட்டும் வருகின்றன. தமிழுக்கு வெளியே மாணவர்களுக்கு அறியப்பட்ட பெருமாள் முருகனாலும், இமையத்தாலும், அம்பையாலும் தமிழுக்கு எவ்வளவு பெருமையென்பதை மாற்றுமொழிக்காரர்கள் அவர்களை உயர்வாகப் பேசும்போது நாம் உணர்கிறோம். அண்மையில் பெருமாள் முருகன் வந்திருந்தபோது என் கல்லூரியில் ஆயிரத்துக்குமேல் மாணவர்கள் திரளத் தயாராக இருந்தார்கள். ஆனால் அரங்கில் இடமில்லாததால் 100 பேர்களுக்குள்ளாகவே அனுமதிக்க முடிந்தது; அதற்காக நிறைய பேர் என்னிடம் வருந்தினர்கள். அப்போதும், அவரது நூல்களில் கையெழுத்து வாங்க நீண்ட வரிசை தோன்றியபோதும் எனக்கு ஒரு சக தமிழ் எழுத்தாளராகப் பெருமையாக இருந்தது. இதுவே சாரு நிவேதிதா வந்து மாணவர்களிடம் உரையாற்றியபோதும் பெரும் உற்சாக அலை எழுந்தது. இதயபூர்வமாக அவர்களை அவரை நேசித்ததை நான் கண்டேன். இன்னும் சில தமிழ் எழுத்தாளர்கள் எங்கள் மாணவர்களிடம் முன்பு உரையாடும்போதும் நான் இதையே உணர்ந்திருக்கிறேன். இதுவே நான் திண்டுக்கல் லியோனியையும் பாரதி பாஸ்கரையும் விஜய்டிவி புகழ் ஈரோடு மகேஷையும் டெய்லர் அக்காவையும் மதுரை முத்துவையும் அழைத்துப் போயிருந்தால் இருந்திருக்குமா? கவன ஈர்ப்பு இருந்திருக்கும், ஆனால் நம்மையும் நம் மொழியையும் கேவலமாகப் பார்த்திருப்பார்கள். கேரளாவை எடுத்துக்கொள்வோம் - அவர்கள் சசி தரூரை, அருந்ததி ராயை, எம்.டியை தம் மொழியின் பெருமையாகப் பார்ப்பார்கள். ஒரு மிமிக்றி கலைஞரோ இன்புளுவன்ஸரோ தோன்றினால் அவர்கள் அதை ரசிக்கலாம். ஆனால் அவர்களுக்குத் தெரியும் ஷக்கீலாவுக்கும் சன்னி லியோனுக்கும் மேல் அவர்களுக்கு மதிப்பில்லை என்று. ஏனென்றால் தம் மனத்துக்குள் ஆழமாகப் போய் சிந்தனையை மாற்றும், கற்பனையை வளமாக்கும் படைப்பாளியே பொழுதுபோக்காளரை விட எக்காலத்திலும் மேலானவர். கம்பனின், இளங்கோவின் காலத்தில் வாழ்ந்த ஆடற்கலைஞர்களைப் பற்றி விதந்தோதும் குறிப்புகள் எங்காவது உண்டா? பாரதி பாஸ்கருக்கும், பர்வீன் சுல்தானாவுக்கும் உள்ள அறிவின் எல்லை அவ்வளவுதான். அவர்களுக்கு புக்கர் பரிசையோ நோபல் பரிசையோ அளித்து கௌரவிப்பார்களா? மதுரை முத்துவின் ஜோக்குகள் தமிழுக்குப் பெருமை என்று முதல்வர் என்றாவது டிவீட் போட்டு வாழ்த்துவாரா? அவருக்குத் தெரியும் சாகித்ய அகாடெமி விருதாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் வாழ்த்துப் போட்டாலே அது தமிழ்நாட்டுக்குப் பெருமையென்று. நான் இவர்களெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லவில்லை. அவர்கள் தாராளமாக ஊரூராகப் போய் கல்லா கட்டட்டும். அவர்கள் வருடத்திற்கு 30-50 லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பார்கள் என்பது ஒரு கணக்கு. ஆனால் இவர்களுக்கு அரசின் வரிப்பணத்தை ஒரு லட்சத்தை ஒரு மணிநேரத்துக்கு கொடுக்காமல் ஒரு பெயர் பெற்ற எழுத்தாளர் ஒரு புத்தகம் எழுத நிதியுதவியாகக் கொடுத்தால் அவரால் மூன்று மாதங்களில் பணக்கவலையின்றி எழுதி பிரசுரிக்க முடியும். அந்நூல் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் புகழை நிலைநாட்டக் கூடும். போலிப் பேச்சாளர்களுக்கு இவ்வளவு பணம் கொடுத்து ஊக்கப்படுத்தும்போது அது விழலுக்கு இறைத்த நீர் எனப் புரிந்துகொள்வதில்லை என்பதே அவலம்.

தமிழ்நாட்டு அரசின் இலக்கும், திட்டங்களும் மிகச்சிறப்பானவை, உயரிய நோக்கம் கொண்டவை. ஆனால் அவற்றை செயல்படுத்த அனுப்பப்படும் சந்தர்ப்பவாத அமைப்பினரும், அதிகாரிகளும் இதை முடிந்தளவுக்கு சிதைக்கவே முயல்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இவ்வாறான உயரிய நோக்கமோ அதை நிறையேற்றும் அறிவோ இல்லை. ஒன்று தமக்குத் தேவையானவர்களுக்கு பணம் பெற்றுத்தர விரும்புகிறார்கள் அல்லது தரப்பட்ட வேலையை எப்படியாவது முடித்தால்போதும் என அலுத்துக்கொள்கிறார்கள். பம்மல் கே சம்மந்தத்தில் கமல் நீதிமன்ற வாயிலில் அமர்ந்து தட்டச்சு செய்பவரிடம் சொல்வாரே "யோவ் எதைச் சொன்னாலும் அப்படியே டைப் அடிச்சிருவியா?" என்று அப்படித்தான் இந்த அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள். யார் என்ன பட்டியல் கொடுத்தாலும் கண்மூடிக்கொண்டு அழைத்து நடத்தி விடுவார்கள். யாரை மதிப்பது, யாரை விடுப்பது என ஒரு எழவும் தெரியாது. அதிகாரிகள் ஒருங்கிணைக்கும்வரை, சந்தர்ப்பவாதிகள் முடிவெடுக்கும்வரை இப்பிரச்சினைகள் இப்படித்தான் தொடரும்.

முதல்வரின் நல்ல ஆணைகள் எப்படியெல்லாம் கோளாறாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு வேறொரு உதாரணம் தருகிறேன் - ஒரு ஏழை எழுத்தாளருக்கு ஒன்றிய அரசின் உயரிய விருது கிடைக்கிறது. அவரை உடனே போய் நேரடியாகப் பார்த்து வாழ்த்துங்கள் என்று திமுக தலைமையிடம் இருந்து கட்டளை பறக்கிறது. அந்த ஊர்க்கார நிர்வாகிகள், பக்கத்து ஊர்க்காரர்கள், அதற்கடுத்த ஊர்க்காரர்கள், வட்டம், மாவட்டம் எனப் புற்றீசலாகப் பெருகி எழுத்தாளருக்கு வீட்டுக்குப் படையெடுக்கிறார்கள். அதனால் தான் மிகவும் நொந்து போனதாக அந்த எழுத்தாளர் சொன்னார். "இதெல்லாம் பெருமையல்லவா? நானெல்லாம் உங்கள் இடத்தில் இருந்திருந்தால் ஊரே கொண்டாடுகிறதே எனப் பெருமைப்பட்டிருப்பேனே" என்றேன் நான். அதற்கு அந்த எழுத்தாளர் தனக்கு நடந்த துயரத்தை விளக்கினார் - வரும் நிர்வாகிகள் மாலை போட்டு, பொன்னாடை போர்த்துகிறார்கள். (பணமொன்றும் கொண்டு வருவதில்லை). அவர்களை அமர வைக்க அவர் அவரது சிறியவீட்டில் வீட்டில் இடமில்லை. அதனால் முற்றத்தில் பந்தல் போடுகிறார். அதற்குப் பணம் வேண்டுமே. வட்டிக்கு வாங்குகிறார். அடுத்து வருகிறவர்களுக்கு தேநீரும் சிற்றுண்டியும் கொடுத்து உபசரிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் முழுக்க பொன்னாடை போர்த்த வந்தவர்களுக்கு உபசரணை செய்ததில் அந்த எழுத்தாளர் நொடிந்துபோய் கடனாளி ஆகிவிட்டார். தனக்கு மூன்று லட்சம் செலவு, அது சாகித்ய அகாடெமி பரிசுத்தொகையைவிட அதிகம் என்றார். யோசித்துப் பாருங்கள் - வாழ்த்திவிட்டு வரச்சொன்னால் வெறுங்கையோடா போவது? ஆளுக்கு ஆயிரம் ரூபாய் போட்டு நிதிதிரட்டிக் கொடுத்திருக்க வேண்டும். குறைந்தது கையில் வீட்டுதவிப் பொருட்கள், நகையென்று கொண்டு போயிருக்கலாம் (சாரு தன் கழுத்தின் தன் வாசகர் அளித்த கனத்த தங்கச்சங்கிலி மின்ன வருகிறார் பாருங்கள்.). அல்லது “ஐயா உங்கள் நிலை மோசமாக இருக்கிறது, நாங்கள் நிதிதிரட்டி உங்கள் வீட்டைப் பெரிதாக்கிக் கட்டித் தருகிறோம்” என்று இந்த கட்சி நிர்வாகிகள் சொல்லியிருக்க வேண்டும். (கேரளாவில் அப்படித்தான் ஒரு கவிஞருக்கு ஊரே திரண்டு வீடு கட்டுக்கொடுத்தது.) அந்த எழுத்தாளராவது சங்கோஜத்தைவிட்டு கேட்டிருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை - இப்படித்தான் முதல்வர் உயர்ந்த நோக்கத்துடன் எதையாவது உத்தரவிட்டால் இவர்கள் புகுந்து தலைகீழாக நிறைவேற்றுகிறார்கள். யானை என்றால் பானையாக்கி விடுகிறார்கள்.

இனி குமாரநந்தனின் பதிவைப் படியுங்கள்.
ஆர். அபிலாஷ்
*******

புத்தகக் கண்காட்சியில் பேசும் பேச்சாளர்களில் பத்துக்கு மூன்று பேரிடம், நீங்கள் இலக்கிய படைப்பாளர்களின் படைப்புகள் குறித்து வாசகர்களுக்கு சுவாரஸ்யம் ஏற்படும் வகையில் பேச வேண்டும் என ஒரு நிபந்தனை விதித்துவிட்டால் போகிறது இதற்கு எதற்கு இத்தனை பிரச்னை?
அப்போ எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சி மேடையில் பேசக் கூடாது என்கிறீர்களா?
பேசலாமே? எழுத்தாளர்கள் என்றாலே அவர்களுக்கு பேச வராது என்பதாகவும் அல்லது மேடையில் சரளமாகப் பேசுபவர்கள் எழுத்தாளர்களாக இருக்க முடியாது என்பது போலவும் எதற்கு கட்டமைக்க வேண்டும்? பேச்சாளர்கள் எங்காவது கட்டண உரை நிகழ்த்துகிறார்களா? ஆனால் எத்தனை எழுத்தாளர்கள் கட்டண உரை நிகழ்த்துகிறார்கள்? இதிலிருந்தே தெரியவில்லையா? பேச்சாளர்களைவிடவும் நன்றாகப் பேசக் கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று? அவர்களைப் போன்றவர்களைப் பேச வைக்கலாம். பேச்சாளர்களுக்குத் தருவதைப் போன்றே அவர்களுக்கும் சன்மானம் தரலாம்.
அப்போது மேடையில் சரளமாகப் பேசத் தெரியாத எழுத்தாளர்கள், பேசத் தெரிந்த எழுத்தாளர்கள் என அவர்களை இரண்டாகப் பிரித்து ஏற்ற தாழ்வுகளை உண்டாக்க வேண்டுமா?
வேண்டாமே அவர்களுக்கு பேச்சாளர்களைவிட அதிகம் சன்மானம் கொடுங்கள். சாகித்ய அகாடமி விருதுத் தொகையை 25 லட்சமாக உயர்த்துங்கள். நூலக ஆணை பெரும் புத்தகங்களுக்கு வெறும் பேப்பர் காசை விட குறைவாக மதிப்பிட்டு தொகை வழங்குவதற்கு பதிலாக எழுத்தாளர்களுக்கு வாரிக் கொடுங்கள். எழுத்தாளர்களாக இருந்தாலும் வாழ்வாதாரத்திற்காக வேறு பணிச் சுழலில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை அறிவித்து அவர்கள் முழு நேர எழுத்தாளர்களாக இயங்க ஊக்குவியுங்கள். ஒரு அரசு மனது வைத்தால் எழுத்தாளர்களை இன்னும் எப்படியெல்லாமோ மேன்மைப் படுத்தலாம்.
அப்படியெல்லாம் செய்தால் எழுத்தாளர்கள் எல்லாம் ஏன் எங்களைப் பேச விடுங்கள் பேச விடுங்கள் என புலம்பப் போகிறார்கள். தயவு செய்து என்னைப் பேசவெல்லாம் சொல்லாதீர்கள் நான் ஒரு எழுத்தாளன் என்று சொல்ல மாட்டார்களா?
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பேச்சாளர்களுக்கு அதிகப் பணம் கொடுப்பதால்தான் எழுத்தாளர்கள் புத்தகக் கண்காட்சி மேடையில் ஏன் பேச்சாளர்களைப் பேச வைக்கிறீர்கள்? என கேட்பதைப் போன்ற தொனி இருக்கிறதே?
அப்படி இல்லை. அடிப்படை என்னவோ புறக்கணிப்புக்கு எதிரான மனநிலைதான் என்றாலும் நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என ஒரு குழுவினர் கூக்குரல் எழுப்பினால் ஏற்கனவே நல்ல கவனிப்பில் இருப்பவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பது அதன் அர்த்தம் அல்ல.

- குமார நந்தன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...