முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“நிழல் பொம்மை” - ஒரு நேர்முகம்




எழுத்தாளர் திலீப்குமார் எனக்கு மிகவும் பிடித்த புனைவெழுத்தாளர், அபாரமான உளவியல் கூர்மையுடன் மொழிக்கட்டுப்பாட்டுடன் மிகச்சிறந்த சிறுகதைகளை எழுதியவர். அவர் எனது “நிழல் பொம்மை” நாவலைப் படித்துவிட்டு அது நன்றாக எழுதப்பட்டுள்ளதாகப் பாராட்டினார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்தேன். அவர் எனது நாவல் குறித்து இவ்வாரம் நடைபெறவுள்ள ஊட்டி இலக்கிய விழாவில் என்னுடைய உரையாடவிருந்தார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட தவிர்க்க இயலாத நெருக்கடியால் அவரால் நிகழ்வுக்கு வர முடியவில்லை. அதனால் தன் கேள்விகளை என்னிடம் பகிர்ந்திருந்தார். அக்கேள்விகளுக்கான பதில்களை இங்கே பகிரலாம் என இருக்கிறேன்:
திலீப் குமார்: முதலில், "நிழல் பொம்மை" நாவலுக்காக என் வாழ்த்துகள்...
1) இந்த நாவலை எழுத உங்களுக்கு ஆரம்ப உந்துதலாக இருந்த ஓரிரு எழுத்தாளர்கள் குறித்தும் அதன் தொடர்ச்சியாக இந்த நாவல் உருவான விதம் குறித்தும் உங்கள் அறிமுக குறிப்பில் விளக்கியுள்ளீர்கள். அதையே இங்கு கூடியிருக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் இன்னும் சற்று விரிவாக கூறமுடியுமா?
ஆர். அபிலாஷ்: வாழ்த்துகளுக்கு என் நன்றியும் அன்பும். காப்காவின் “விசாரணை” நாவலின் தாக்கம் குறித்து நாவலின் முன்னுரையில் சொல்லியிருந்தேன். அவரது “கோட்டை” நாவலையும் நான் குறிப்பிட வேண்டும். காப்காவின் இந்நாவல்களை இரு விதங்களில் படிக்கலாம்: ஒன்று, கண்ணுக்குப் புலப்படாத அதிகாரம், மர்மமான சர்வாதிகாரம் நம்மை தனக்கு ஏற்ப அலைகழிப்பதை, வடிவமைப்பதை, அதன் பிடியில் இருந்து விலக முடியாமல் நாம் தவிப்பதை, உள்ளும் புறமுமாக மேலதிகாரத்தின் தாக்கத்திற்கு எதிர்வினையாற்ற நாம் உருமாறுவதை காப்கா சித்தரிக்கிறார். இன்னொன்று, முழுக்க இருண்மையான, எங்குமே என்றுமே தோன்றாத, தோன்ற முடியாத தெய்வமொன்றை நோக்கிய தேடல், அதைக் குறித்த விசாரணை, அதன் வியர்த்தத்தை விவாதிக்கும் காப்கா மனிதன் தன் அடையாளத்தை, சுயத்தை, இருத்தலை அந்த முடிவற்ற தேடலின் ஊடாக காண்கிறானா இல்லையா எனும் கேள்வியையும் எழுப்புகிறார். இரு வாசிப்புகளும் நமக்கு அபாரமான திறப்புகளை அளிக்கின்றன. நான் என் நாவலுக்கு முதல் வாசிப்பு தந்த அக ஊக்கத்தை எடுத்துக்கொண்டேன். அதன் தடங்களில் பயணித்தே இந்நாவலை என் பாணியில் எழுதினேன். இதில் காப்காவின் இருத்தலியத்தையோ ஆன்மீகத்தையோ மொழியையோ பார்க்க முடியாது. முழுக்க என் பாணியிலான புனைவுதான் இது. காப்கா ஒரு தூண்டுகோல் மட்டுமே.
இன்னொரு எழுத்தாளர் கூட்ஸி. என்னால் கூட்ஸியின் “மானக்கேடு” நாவலின் நாயகனை ஒத்த பாத்திரத்தை உருவாக்க முடியவில்லை. அவனுக்கான இடம் நம் உலகில் இல்லை. அதனால் நிறைய பயப்படுகிற, குழப்பமாக எல்லாவற்றையும் எதிர்கொள்கிற சாமான்யனையே நாயகனாக்கினேன். அவனது பிறழ்வு, சிக்கல்கள், தாழ்வுணர்வை எதிர்கொள்கையில் அவன் தனக்கும் பிறருக்கும் ஏற்படுத்தும் பிரச்சினைகள் என்று எழுதினேன். மேலும் கூட்ஸியின் தென்னாப்பிரிக்காவில் இனவாத வெறுப்பு, அவநம்பிக்கை, ஒழுக்க மீறல், பாவம் குறித்த பிரக்ஞை பிரதானம் என்றால் இன்றைய உலகில் நிகழும் என் கதையில் நாயகின் தடைகள் முழுக்க வேறாக இருந்தன: அவன் இந்தியன் என்பதால் தான் யாரெனும் கேள்வி ஒவ்வொரு தவறின் உச்சத்தில் நிற்கும்போதும் அவனுக்கு எழுகிறது, அவன் தன்னைக் கடந்து செல்ல எத்தனித்தபடியே இருக்கிறான். இதற்கான ஆன்மீகமான தளத்தையும் நான் கதைக்குள் நாடினேன். அதற்கு பிளேட்டோவையும் நகுலனையும் பயன்படுத்தினேன். இப்படி பல இடங்களில் இருந்து பெற்ற தூண்டுதல்களைக் கொண்டு என் கதைக்குத் தேவைப்படுகிற உலகை, அதன் பாதைகளை, வரைபடத்தை, உடல்களை, அகவுலகை, தத்துவத்தை, விழுமியங்களை, கண்டுபிடிப்புகளை நானே உருவாக்கினேன்.
***
திலீப் குமார்: 2) இந்த நாவலின் பிரதான பாத்திரம் தமிழ் புனைவுகளில் இதுவரை உருவகிக்கபடாத ஒன்றாக உள்ளது. முற்றிலும் விசேஷமான ஒரு உடலமைப்பை கொண்ட இப்பாத்திரத்தை சிறிதும் மிகைப்படுத்தாமல் நம்பகத்தன்மை மிக்கதாக வார்ப்பதில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?
நான் முதலில் நாயகப் பாத்திரத்தை என்னைப் போன்றே உருவாக்கினேன். ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால் என் நண்பர் ஒருவரை மனத்தில் கொண்டு புதிதாக எழுதினேன். அதற்காக ஆய்வுகளை மேற்கொண்டேன், புத்தகங்களைப் படித்தேன். ஆனாலும் ஒரு காட்சியை எழுதும்போது அவர் எந்த இடத்தில் இருக்கிறார், அவரால் என்னவெல்லாம் முடியும், முடியாது என கவனித்து எழுதுவது சிரமமாக இருந்தது. உ.தா., சிறுவயதில் அவர் எப்படி கழிப்பறைக்கு சென்று மூத்திரம் கழித்திருப்பார்? ஜன்னல் அவருக்கு மேலாக இருக்குமா? புத்தகத்தை கையில் வைத்து படிக்க சிரமமாக இருக்குமா? தன் குறியைத் தொடுமளவுக்கு அவரது கை நீளமாக இருக்குமா என ஏராளமான கேள்விகள் எனக்கு இருந்தன. என் நண்பரை உன்னிப்பாக தொடர்ந்து கவனிப்பது, கற்பனை செய்வது என மெனக்கெட வேண்டியிருந்தது. ஆனால் அந்த சவாலே என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
***
ஆர். அபிலாஷ்: 3) கருத்தியல் ரீதியாகவும் இப்படைப்பு
நம் சமகால வாழ்வின் பல முக்கிய புள்ளிகளைத் தொடுகிறது.
அரசியல் , பாலியல், அரசு எந்திரங்கள், நிறுவனங்கள் என்று பலவற்றை குறித்து நுட்பமாகவும விரிவாகவும் விவாதிக்கிறது இந்த நாவல்.
இன்றைய பின் நவீனத்துவ உலகில் ஒரு தனி மனிதனின் யதார்த்த மற்றும் உளவியல் அனுபவங்கள் அனைத்திலும் நிறுவனங்கள் ஊடுருவி கட்டுப்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன. தனிமனிதர்களுக்குரிய சுதந்திரமான, அந்தரங்க வெளி என்பது சிறுக சிறுக அபகரிக்கப்பட்டு வருகிறது. இந்த "தனிமனிதனுக்கும் நிறுவனயமாதலுக்கும்" இடையேயான போர்தான் இன்று நம் வாழ்வின் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்த ஒடுக்குமுறையின் தீவிரத்தையும் அதை எதிர்கொள்வதில் உள்ள சிரமங்களையும், ஒரு பிரஜையாகவும் படைப்பாளியாகவும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஆர். அபிலாஷ்: மிகச்சிறந்த அவதானிப்பு இது. அற்புதமான இக்கேள்விக்கு நன்றி. நான் ஒரு பிரஜையாகவும் படைப்பாளியாகவும் மட்டுமல்ல தனிமனிதராகவே இச்சூழலால் மிகவும் பாதிக்கப்படுகிறேன். முற்றதிகாரமும் நிறுவனமயமாதலும் என்னை எந்தளவுக்கு மாற்றுகின்றன என உணர்ந்ததால் ஏற்பட்ட பரிதவிப்பைக் கடக்கவே இந்நாவலை ஓரே மூச்சில் கிட்டத்தட்ட 22 நாட்களில் இரவு பகலாக எழுதினேன். எழுதி முடித்ததும் சில மாதங்கள் நிம்மதியாக உணர்ந்தேன். ஆனால் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை சகமனிதர்களிடையே காண்கையில் அதிகாரமும் நிறுவனமும் மனிதர்களை இந்தளவுக்கு எந்திரமாக, விழுமியமோ நேசமோ அற்றவர்களாக மாற்றுமோ என அதிர்ச்சியாகிறேன். இன்னும் நிறைய எழுதினால் ஒழிய என்னால் இந்தச் சூழலின் வருத்தங்களில் இருந்து, காயங்களில் இருந்து விடுபட முடியாது என நினைக்கிறேன். நான் எழுதி எழுதியே இதிலிருந்து வெளிவர வேண்டும்.
*****
திலீப் குமார்: 4) அழகியல் மற்றும் , கருத்தியல் ரீதியாக தமிழ்ச்சூழலில் இந்த நாவலின் பொருத்தப்பாடு குறித்து கூறுங்கள்.
ஆர். அபிலாஷ்: நான் வாசித்தவரையில் சமகாலத் தமிழ்ச்சூழலில் இவ்வகையான பாத்திரமோ நெருக்கடிகளோ இல்லை. ஆனால் எழுபது, எண்பதுகளுக்குப் போனால் ஆதவன், சம்பத், நகுலன் உள்ளிட்டு பலரும் இச்சூழலையும் ஆன்மீக நெருக்கடியையும் பற்றிப் பேசியிருக்கிறார்கள். என் நாவலின் பொருத்தப்பாடு 40-50 ஆண்டுகளுக்குப் பின்னால் உள்ள இலக்கியத்துடன்தான் என நினைக்கிறேன்.
***
திலீப் குமார்: 5) தமிழ் வாசகர்களிடையே இந்த நாவல் எத்தகைய வரவேற்பை பெற்றது?
ஆர். அபிலாஷ்: இன்னும் பரவலான எதிர்வினைகள் வரவில்லை. எழுத்தாள நண்பர்கள் வாசித்தவரையில் நல்ல வாசிப்பனுபவம் உள்ளதாகச் சொன்னார்கள். முருகேச பாண்டியன் வெகுவாகக் கொண்டாடினார். இரண்டு மணிநேரத்துக்கு மேலாக அவர் உற்சாகம் வடியாமல் நாவல் குறித்து பேசியது என்னை மகிழ்ச்சியில் தள்ளியது. அப்போதே நாவலுக்காக நான் பட்டபாடுகளுக்கு பலன் கிடைத்ததாக ஒரு எண்ணம் ஏற்பட்டது. மேலும் வாசகர்களின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
***
திலீப் குமார்: 6) பொதுவாக தற்கால நவீன தமிழ் இலக்கியம் குறித்து உங்கள் கருத்துகளை சுருக்கமாக பகிர்ந்து கொள்ள முடியுமா?
ஆர். அபிலாஷ்: புனைவுகள் மேலும் மேலும் புறவயமாக மாறிவருவதாக நினைக்கிறேன். புதிய அனுபவங்கள், தரவுகள் அதைக் குறித்த கவர்ச்சி வாசகர்களிடமும் அதிகமாகி வருகிறது. அடுத்து, கதையை சுவாரஸ்யமாக வேகமாக நகர்த்த வேண்டும் எனும் அழுத்தம் கூடி வருகிறது. மொழியை அடர்த்தியாக்கினால் அதை கூர்ந்து கவனித்து வாசிப்போர் குறைந்து வருகிறார்கள் என்று சொல்ல மாட்டேன், வேகமாக மேம்போக்காக படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என்பேன்; இதனால் கொஞ்சம் நுட்பமாக, வித்தியாசமாக எழுதினாலே கதை நகரவில்லை, குழப்பமாக உள்ளது என்று புகார் தெரிவிக்கிறார்கள். இது என் சக எழுத்தாளர்களுக்கு வரும் விமர்சனங்களை வைத்து நான் புரிந்துகொண்டுள்ள விசயம். அதாவது வாசகர் பரப்பு மிகவும் கலைந்து போயுள்ளது. இது புதிய புனைவுகளையும் பாதிக்கிறது. புனைவில் முன்பிருந்த வழிகாட்டிகள் இன்றில்லை, அல்லது அவர்களைப் பயன்படுத்த இளம் படைப்பாளிகள் பெரிதும் முயல்வதில்லை அல்லது ஒரு இடைவெளி விழுந்துவிட்டது. விமர்சித்தாலே முகம் சுண்டிப்போய் விடுகிறார்கள், உறவைத் துண்டிக்கிறார்கள் என்பதால் யாருமே வாசித்து உண்மையைச் சொல்லவோ விமர்சித்து காயப்படுத்தி விடுவார்கள் என அஞ்சி கரட்டுப் பிரதியை வாசிக்கக் கொடுக்கவோ தயங்குகிறார்கள். இதையும் மீறி பல நல்ல படைப்புகள் வருகின்றன. எதார்த்தம், பின்நவீன பரீட்சார்த்த இலக்கியம் எனும் இரு போக்குகள் முன்பிருந்ததைப் போன்றே தொடர்கின்றன. நுண்கதைகள் நல்ல கவனம் பெறுகின்றன.
ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பாளிகள் ஒருவிதமான அகநெருக்கடியை, போதாமையைக் கண்டுகொண்டு தமக்கான தனித்துவமான வழிகளில் அதைப் பின் தொடர்ந்து செல்வார்கள், கேள்விகளை எழுப்புவார்கள். அது சமகால புனைவுகளுக்கு இன்னும் நிகழவில்லை என்பது என் வாசிப்பு. ஆனால் அது விரைவில் நிகழத்தான் போகிறது. அதுவே முக்கியமான பாய்ச்சலாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...