மக்களின் அடிப்படைப் பிரச்சினை பணமும் ஏற்றத்தாழ்வும் பொருண்மை உலகில் போதாமைகளுமே. ஆனால் அதைக் குறித்து விசனிக்க, கோபிக்க, கொந்தளிக்க, கலவரம் செய்யாமல் மனிதனை ஒரு பக்கம் கடவுள், பணம், பொழுதுபோக்கு தடுக்கிறது எனில் இன்னொரு பக்கம் நாக்பூர் மாதிரியான கலவரங்களும் கோபத்தை வெறுப்புக்கு திசைதிருப்பும், வடிகாலாகின்றன; ஆட்சியாளர்கள் அரியணையில் நீடிக்க உதவுகின்றன. மதம் சார்ந்த மற்றமை (இஸ்லாமியர்) இங்கு ஒரு பொருட்டு மட்டுமே. இஸ்லாமியர் இல்லாவிடில் வேறொரு மற்றமை. இங்கும் எங்கும் எப்போதும் மதவாதம் கலவரத்தை தூண்டாது - அதிருப்தியும் போதாமையுமே கலவரத்தின் எரிபொருள்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments