முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாஜக அரசின் இஸ்லாமிய வெறுப்பரசியல் எப்படி மோசமான போர்த்தந்திரமாகியது

 






எதிர்க்கட்சிகள் பாஜகவின் காலாட்படையாகிவிட்ட நிலையில் இப்போது காங்கிரஸின் இடத்தில் இருந்து பாஜகவின் மோசமான போர்த்திட்டம், தவறுகளை அம்பலப்படுத்தி விமர்சிப்பது கரன் தாப்பரின் The Wire தான். அருண் ஷௌரியின் பேட்டியில் வரும் விமர்சனம் அவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது (தொடுவழியை முடிவில் போடுகிறேன்):

1) அருண் ஷௌரி முதலில் சொல்வது மோடி அரசு போர் நிறுத்தம் செய்வதாகச் சொல்லிவிட்டு எப்போது வேண்டுமானாலும் இது நடக்கும் எனக் கூறுவது தவறு என்பது. எப்போதுமே ஒரு தேசத்தால் போர்த் தயார் நிலையில் இருக்க முடியாது. மேலும் நாளையே ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்து அப்போது நம்மால் போர்த் தொடுக்க இயலாவிடில் இந்திய அரசின் மீதான உலகளவிலான நம்பிக்கை குலையும். எப்படிப் பார்த்தாலும் முன்கூறாக ஒன்றை அறிவிப்பது, பஞ்ச் டயலாக் விடுவது அரசின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும். அது நல்லதல்ல.

2) இந்திய அரசு மிதமிஞ்சி அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறது. அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல. அது பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இந்தியாவையும் சமாதானப்படுத்தும். வணிக உறவை ரத்து செய்வேன் என மிரட்டிப் பணிவைத்தேன், குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினேன் என்று சொல்லி அவமானப்படுத்தும். அதற்கு சீனா மேலான நம்பத்தகுந்த பங்காளி என்கிறார் அவர் (சீனா இன்னும் ஆபத்தானது என்பதே என் கருத்து). அதனால் பரவலான கூட்டாளிகளின் வலைத்தொடர்பில் இருந்தபடி இந்தியா பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பதே நல்ல பயனளிக்கும்.

3) இந்தியா யுத்தம் தொடுப்பதற்குப் பதிலாக உளவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். பெஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தீவிரவாதிகள் இங்கு வந்து தங்கியிருந்தார்கள், தாக்குதலுக்குப் பின்பும் அவர்கள் அப்பகுதியிலேயே இரு மணிநேரங்கள் ராணுவ உடையில் இருந்தார்கள் எனப்படுகிறது. எனில் ஏன் உளவுத்துறை எச்சரிக்கவில்லை? (அவர்கள் இரண்டு நாட்கள் மாமனார் வீட்டில் இருந்து உண்டு விழாவைச் சிறப்பித்துவிட்டு எதிரி மன்னன் போர்த் தொடுக்கப் போகிறான் மன்னா என்று வந்து சொன்னபோது இங்கே விமானப்படைத் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.) இதைச் சரி செய்யாமல் போர்த்தொடுப்போம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் கடன் தேவைப்படும்போதெல்லாம், அங்கு ராணுவம் நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் இங்கு தீவிரவாதிகளை அனுப்புவார்கள். சீனாவின் பலம்பொருந்திய ஆயுதங்களும் படைகளும் இருக்கும்வரை பாகிஸ்தான் அஞ்ச வேண்டியிருக்காது. கடைசியில் வந்து காப்பாற்ற பிக்பாஸ் அமெரிக்காவும் உள்ளதே. ஆக சரியான தீர்வு நம்மை நமது உளவுத்துறையை பலப்படுத்துவதுதான்.

4) தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது உலகம் முழுக்கவிருந்து அதைக் கண்டித்தார்கள். இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக கண்டித்தார்கள், காஷ்மீர மக்கள் பேரணி நடத்தினார்கள். அரசின் முடிவுக்கு துணை நிற்பதாகச் சொன்னார்கள். இதுவரைச் சரி - ஆனால் அரசு தயங்கி நேரத்தை வீணடித்து கடைசியில் விமானத் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்தபோது அதை என்னதான் ஊடகங்கள் மிகையாகப் பெருக்கினாலும் மக்கள் நம்ப மறுத்தார்கள். மக்களின் பரவலான உணர்ச்சிகரமான ஆதரவு இருக்கவில்லை (சங்கிகள் எப்போதும் போல கத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.). அதனாலே போர்த்தளபதிகளை - குறிப்பாகப் பெண்களை - வைத்து ஊடக சந்திப்பை மோடி அரசு நடத்தியது, அவராக வந்து அறிவிக்கவில்லை, அவர் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது என்கிறார் ஷௌரி. இது ஏற்கத்தக்கதாக உள்ளது.

5) ஒரு நல்ல அரசானது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அதுவே ராஜதந்திரம் - நாம் இந்நாட்டின் இஸ்லாமியர்களை விரோதிகளாகப் பாவித்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. மேலும் பாகிஸ்தான் சொல்வது உண்மையெனும் பிம்பம் ஏற்படும். இந்தியா ஒரு இந்துத்துவ அரசு எனும் எதிர்மறைப் பிம்பம் ஒழியாமல் இந்திய அரசால் தீவிரவாதத்துக்கு எதிராக வலிமையாகப் போர்தொடுக்க முடியாது. இதேபோலத்தான் மோடி தன் குஜராத்தைத் தாண்டி பிற மாநிலங்களையும், பிற மக்களையும் தன் மக்களாக நினைக்க வேண்டும், சமத்துவமாகப் பாவிக்க வேண்டும், தமிழர்களை ஒதுக்கக் கூடாது என்கிறார். இதை மிக முக்கியமான பார்வையாகக் கருதுகிறேன். உ.தா., காஷ்மீர மக்கள் தீவிரவாதத்தைக் கண்டித்து நடத்திய பேரணியை மோடியின் அரசுப் பாராட்டி அரவணைத்திருக்க வேண்டும். நம் எதிரிகள் தீவிரவாதிகளே, இஸ்லாமியர் அல்லர் என வலியுறுத்தியிருந்தால் உலகின் ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கும். மேலும், தன் மக்களை பாரபட்சமின்றி நேசிப்பதே ஒரு அரசின் தர்மம். இந்த அரசு காஷ்மீரத்து ஜனங்களை ஏதிலிகளாக மாற்றிவிட்டது. காஷ்மீர் நமது என்று சொல்வதற்குப் பதில் காஷ்மீரிகள் நம்மவர்கள் எனத் திரும்பத்திரும்பக் கோர வேண்டும். அதுவே சிறந்த அரசியல், அதுவே அசலான போர்த்தந்திரம்.

https://youtu.be/BC85sTVTCuE?si=6ZGA8gNQ36qVHZHD

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...