Skip to main content

பாஜக அரசின் இஸ்லாமிய வெறுப்பரசியல் எப்படி மோசமான போர்த்தந்திரமாகியது

 






எதிர்க்கட்சிகள் பாஜகவின் காலாட்படையாகிவிட்ட நிலையில் இப்போது காங்கிரஸின் இடத்தில் இருந்து பாஜகவின் மோசமான போர்த்திட்டம், தவறுகளை அம்பலப்படுத்தி விமர்சிப்பது கரன் தாப்பரின் The Wire தான். அருண் ஷௌரியின் பேட்டியில் வரும் விமர்சனம் அவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது (தொடுவழியை முடிவில் போடுகிறேன்):

1) அருண் ஷௌரி முதலில் சொல்வது மோடி அரசு போர் நிறுத்தம் செய்வதாகச் சொல்லிவிட்டு எப்போது வேண்டுமானாலும் இது நடக்கும் எனக் கூறுவது தவறு என்பது. எப்போதுமே ஒரு தேசத்தால் போர்த் தயார் நிலையில் இருக்க முடியாது. மேலும் நாளையே ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்து அப்போது நம்மால் போர்த் தொடுக்க இயலாவிடில் இந்திய அரசின் மீதான உலகளவிலான நம்பிக்கை குலையும். எப்படிப் பார்த்தாலும் முன்கூறாக ஒன்றை அறிவிப்பது, பஞ்ச் டயலாக் விடுவது அரசின் மீதான நம்பிக்கையைக் குலைக்கும். அது நல்லதல்ல.

2) இந்திய அரசு மிதமிஞ்சி அமெரிக்காவைச் சார்ந்து இருக்கிறது. அமெரிக்கா நம்பத்தகுந்த கூட்டாளி அல்ல. அது பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் நிதியை வாங்கிக் கொடுத்துக்கொண்டே இந்தியாவையும் சமாதானப்படுத்தும். வணிக உறவை ரத்து செய்வேன் என மிரட்டிப் பணிவைத்தேன், குருவி ரொட்டி வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினேன் என்று சொல்லி அவமானப்படுத்தும். அதற்கு சீனா மேலான நம்பத்தகுந்த பங்காளி என்கிறார் அவர் (சீனா இன்னும் ஆபத்தானது என்பதே என் கருத்து). அதனால் பரவலான கூட்டாளிகளின் வலைத்தொடர்பில் இருந்தபடி இந்தியா பாகிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பதே நல்ல பயனளிக்கும்.

3) இந்தியா யுத்தம் தொடுப்பதற்குப் பதிலாக உளவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும். பெஹல்காம் தாக்குதல் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தீவிரவாதிகள் இங்கு வந்து தங்கியிருந்தார்கள், தாக்குதலுக்குப் பின்பும் அவர்கள் அப்பகுதியிலேயே இரு மணிநேரங்கள் ராணுவ உடையில் இருந்தார்கள் எனப்படுகிறது. எனில் ஏன் உளவுத்துறை எச்சரிக்கவில்லை? (அவர்கள் இரண்டு நாட்கள் மாமனார் வீட்டில் இருந்து உண்டு விழாவைச் சிறப்பித்துவிட்டு எதிரி மன்னன் போர்த் தொடுக்கப் போகிறான் மன்னா என்று வந்து சொன்னபோது இங்கே விமானப்படைத் தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.) இதைச் சரி செய்யாமல் போர்த்தொடுப்போம் என்றால் அதற்கு முடிவே இருக்காது. பாகிஸ்தானுக்கு ஐ.எம்.எப் கடன் தேவைப்படும்போதெல்லாம், அங்கு ராணுவம் நம்பிக்கை இழக்கும்போதெல்லாம் இங்கு தீவிரவாதிகளை அனுப்புவார்கள். சீனாவின் பலம்பொருந்திய ஆயுதங்களும் படைகளும் இருக்கும்வரை பாகிஸ்தான் அஞ்ச வேண்டியிருக்காது. கடைசியில் வந்து காப்பாற்ற பிக்பாஸ் அமெரிக்காவும் உள்ளதே. ஆக சரியான தீர்வு நம்மை நமது உளவுத்துறையை பலப்படுத்துவதுதான்.

4) தீவிரவாதத் தாக்குதல் நடந்தபோது உலகம் முழுக்கவிருந்து அதைக் கண்டித்தார்கள். இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக கண்டித்தார்கள், காஷ்மீர மக்கள் பேரணி நடத்தினார்கள். அரசின் முடிவுக்கு துணை நிற்பதாகச் சொன்னார்கள். இதுவரைச் சரி - ஆனால் அரசு தயங்கி நேரத்தை வீணடித்து கடைசியில் விமானத் தாக்குதலை பாகிஸ்தான் மீது தொடுத்தபோது அதை என்னதான் ஊடகங்கள் மிகையாகப் பெருக்கினாலும் மக்கள் நம்ப மறுத்தார்கள். மக்களின் பரவலான உணர்ச்சிகரமான ஆதரவு இருக்கவில்லை (சங்கிகள் எப்போதும் போல கத்திக்கொண்டுதான் இருந்தார்கள்.). அதனாலே போர்த்தளபதிகளை - குறிப்பாகப் பெண்களை - வைத்து ஊடக சந்திப்பை மோடி அரசு நடத்தியது, அவராக வந்து அறிவிக்கவில்லை, அவர் மீதான நம்பகத்தன்மை போய்விட்டது என்கிறார் ஷௌரி. இது ஏற்கத்தக்கதாக உள்ளது.

5) ஒரு நல்ல அரசானது எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும். அதுவே ராஜதந்திரம் - நாம் இந்நாட்டின் இஸ்லாமியர்களை விரோதிகளாகப் பாவித்தால் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாது. மேலும் பாகிஸ்தான் சொல்வது உண்மையெனும் பிம்பம் ஏற்படும். இந்தியா ஒரு இந்துத்துவ அரசு எனும் எதிர்மறைப் பிம்பம் ஒழியாமல் இந்திய அரசால் தீவிரவாதத்துக்கு எதிராக வலிமையாகப் போர்தொடுக்க முடியாது. இதேபோலத்தான் மோடி தன் குஜராத்தைத் தாண்டி பிற மாநிலங்களையும், பிற மக்களையும் தன் மக்களாக நினைக்க வேண்டும், சமத்துவமாகப் பாவிக்க வேண்டும், தமிழர்களை ஒதுக்கக் கூடாது என்கிறார். இதை மிக முக்கியமான பார்வையாகக் கருதுகிறேன். உ.தா., காஷ்மீர மக்கள் தீவிரவாதத்தைக் கண்டித்து நடத்திய பேரணியை மோடியின் அரசுப் பாராட்டி அரவணைத்திருக்க வேண்டும். நம் எதிரிகள் தீவிரவாதிகளே, இஸ்லாமியர் அல்லர் என வலியுறுத்தியிருந்தால் உலகின் ஆதரவு நமக்குக் கிடைத்திருக்கும். மேலும், தன் மக்களை பாரபட்சமின்றி நேசிப்பதே ஒரு அரசின் தர்மம். இந்த அரசு காஷ்மீரத்து ஜனங்களை ஏதிலிகளாக மாற்றிவிட்டது. காஷ்மீர் நமது என்று சொல்வதற்குப் பதில் காஷ்மீரிகள் நம்மவர்கள் எனத் திரும்பத்திரும்பக் கோர வேண்டும். அதுவே சிறந்த அரசியல், அதுவே அசலான போர்த்தந்திரம்.

https://youtu.be/BC85sTVTCuE?si=6ZGA8gNQ36qVHZHD

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...