முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம்

 



இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன்.
தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான். ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு வெளியே வைடாக வீசுவது, எதிர்மறையான களத்தடுப்பை அமைப்பது, மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பது என. இந்தியாவின் சராசரி ரன்ரேட் இரண்டாவது இன்னிங்ஸில் 3.5 ஆக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 4.5 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி முன்னூற்று சொச்சம் இலக்கை சுலபத்தில் அடைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்மைக் காலங்களில் இங்கிலாந்தில் ஆடுதளமானது 5வது நாள்தான் மட்டையாட்டத்துக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் டியூக்ஸ் பந்தும், ஹெவி ரோலரும் மட்டையாட்டத்தை லட்டு சாப்பிடுவதைப் போலாக்குகிறது. அதனால் ஸ்டோக்ஸின் இலக்கு கடைசி நாள் மட்டையாடுவதும் 90 ஓவர்களுக்குள் அடிக்கிற மாதிரியான இலக்கைப் பெறுவதும்தான். அதற்காகத்தான் அவர் எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க மட்டும் போராடுகிறார், விக்கெட்டுகளை எடுக்க அல்ல. ஏனென்றால் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4.5 ரன் ரேட்டில் ஆடியிருந்தால் கடைசி நாள் இலக்கு 450ஐத் தாண்டி இருக்கும். ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்திருக்கும். முதல் 20 ஓவர்கள் பும்ரா நன்றாக வீசி ரன் ரேட்டை 6க்கு கொண்டு வந்தால் அது சேஸிங்கைச் சிக்கலாக்கும். இப்படி ஸ்டோக்ஸ் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கும்விதமே வித்தியாசமானது. அவரிடம் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினாலும் எடுபடாது. முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைந்தால் மட்டுமே ஸ்டோக்ஸ் இந்த அணுகுமுறையைக் கைவிடுவார்.

ஸ்டோக்ஸை ("பேஸ்பாலை") முறியடிக்க முதலில் தட்டையான ஆடுதளத்தில் டாஸ் ஜெயித்தால் இங்கிலாந்தை மட்டையாட வைக்க வேண்டும். அவர்களுடைய ரன் ரேட்டைக் குறைத்து நமது பந்து வீச்சின் ஓவர் ரேட்டையும் குறைக்க வேண்டும். எதிர்மறையான உத்திகளைக் கையாள வேண்டும். அல்லது நாம் முதல் நாள் மட்டையாட நேர்ந்தாலும் ரன் அடிப்பதைவிட அதிக நேரம் மட்டையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 2.5 நாட்களையாவது தின்று விட வேண்டும். எனில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு மட்டையாட அரை நாள்தான் கிடைக்கும். இது அவர்களைக் கடுமையாக வெறுப்பேற்றும் என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்து சிக்கிக் கொள்வார்கள். அதே போல அவர்களுடைய வேகவீச்சாளர்கள் காயம்பட வாய்ப்பு அதிகமாகும். பந்து வீசி ஜெயிக்கவே வாய்ப்பில்லாத ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை இங்கிலாந்து கியூரேட்டர்களும் பந்து தயாரிப்பாளர்களும் ஏற்படுத்தும்போது எதிர்மறை கிரிக்கெட்டின் வழியாக மட்டுமே அதைச் சமாளிக்க முடியும். இதையே இன்று கில் செய்ய முயன்றார். அதிகப் பந்துகளை ஆட முயன்றார். ஒரே பிரச்சினை ஜெய்ஸ்வாலும் பண்டும் இந்த வியூகத்துக்கு ஏற்ப ஆடாமல் அதிக ஷாட்களை ஆட முயன்றார்கள். ஜெய்ஸ்வால் 250 பந்துகளில் சதம் அடிக்க முயன்றிருக்க வேண்டும். எனில் அவரும் கில்லுமாக தலா 300 பந்துகளை ஆடியிருந்தால், இன்னும் சிலர் தலா 100 பந்துகளை எடுத்திருந்தால் ஒரே இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பேஸ்பால் வியூகத்தை நாசமாக்க முடியும் (ஆனால் அவர்கள் வேகமாக ஆடி ஆட்டமிழந்தார்கள்). முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதல்ல எத்தனை நாட்கள் ஆடுகிறோம் என்பதை ஸ்டோஸுக்கு ஆப்படிக்க உதவும். இதை இரண்டு போட்டிகளில் செய்தால் இங்கிலாந்து வேறு வழியின்றி தன் ஆடுதளங்களை மாற்றும் நிலை வரும்.

இதைத்தான் அஷ்வினும் தன் யுடியூப் சேனலில் வலியுறுத்துகிறார். முதல் டெஸ்டில் இந்தியா இதைப் புரிந்துகொள்ளாமல் நான்காவது நாளே பந்துவீச விரும்பி கடைசி ஐந்து விக்கெட்டுகளை வேகமாக அடிக்கும் நோக்கில் தியாகம் செய்தது. ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை ஆடிவிட்டு இங்கிலாந்துக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுதளத்தில் 350-400 என்று இலக்கை அதிகப்படுத்துவார்கள். அதாவது ரன் ரேட்டை உயர்த்துவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்ய சிறந்த மார்க்கம் இங்கிலாந்துக்கு மட்டையாடக் கிடைக்கும் பந்துகளைக் குறைப்பதுதான். இது தடுப்பாட்டம் அல்ல, இங்கிலாந்தில் இதுதான் புத்திசாலித்தனமான ஆட்டம்.

இரண்டாவது டெஸ்டில் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா 450 அடிக்கிறதா என்பதல்ல நாளை மாலை வரையில் அல்லது நாளைக்கு அடுத்த நாள் காலை வரைக்கும் கில், ஜடேஜா, சுந்தரால் ஆட முடியுமா என்பதே இந்தியாவின் எழுச்சிக்கான அளவுகோல். நாளை மதியத்துடன் ஆல் அவுட் ஆனால், அவர்கள் அந்த ஸ்கோரை 100 ஓவர்களில் அடித்துவிட்டு நான்காவது நாள் மாலைக்குள் இந்தியாவை ஆல் அவுட் பண்ணப் பார்ப்பார்கள். இப்போட்டியில் 5வது நாள் இங்கிலாந்து தமக்கு அளிக்கப்படும் எந்த இலக்கையும் சுலபத்தில் விரட்டி அடைந்துவிடும். ரன்கள் அல்ல, நேரமே இப்போட்டியைத் தீர்மானிக்கும் காரணி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...