Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

இங்கிலாந்தின் Bazballஐ முறியடிக்கும் வியூகம்

 



இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை ஆடும் பாணி 50 ஓவர் ஆட்டத்துக்கு உரியது. நான் மட்டையாட்டத்தைச் சொல்லவில்லை. வியூகத்தைச் சொல்கிறேன்.
தட்டையான ஆடுதளத்தில் ஐம்பது ஓவர் போட்டியை வெல்ல சிறந்த வழி இரண்டாவதாக மட்டையாடுவதுதான். ஸ்டோக்ஸும் அதனால்தான் பெரும்பாலும் முதலில் பந்துவீசவே விரும்புகிறார். ஆடுதளம் மிகத் தட்டையாக இருக்கும். ஆனாலும் அவருக்கு கவலையில்லை. ஏனென்றால் 20 விக்கெட்டுகளை எடுப்பதற்காக அவர் மெனெக்கெடப் போவதில்லை. இன்றைய மட்டையாளர்கள் எப்படி ஆடினாலும் ஒன்றரை - இரண்டு நாட்களுக்கு மேல் ஆடப் போவதில்லை. அதனால் ஸ்டோக்ஸ் அவர்களது ரன் ரேட்டை மட்டுமே கட்டுப்படுத்த பந்து வீச்சாளர்களைக் கேட்கிறார். இப்போது நிகழ்ந்து வரும் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் (ஹெடிங்லி) இந்தியா முதலில் மட்டையாடி நானூற்று சொச்சம் ரன்களை அடித்தாலும் அவர்களது ரன்ரேட் 4தான். ஆனால் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் ஆடியபோது 4.5 ரன்ரேட்டில் ஆடி அந்த ஸ்கோருக்கு நெருங்கி வந்தார்கள். அடுத்து இந்தியா மட்டையாடியபோது ஸ்டோக்ஸ் இந்தியாவின் ரன் ரேட்டைக் குறைக்கவே பிரயத்தனப்பட்டார், விக்கெட் எடுக்க அல்ல. குறைநீளத்தில், காலுக்கு வெளியே வைடாக வீசுவது, எதிர்மறையான களத்தடுப்பை அமைப்பது, மட்டையாளர்கள் தவறு செய்வதற்காக காத்திருப்பது என. இந்தியாவின் சராசரி ரன்ரேட் இரண்டாவது இன்னிங்ஸில் 3.5 ஆக இருந்தது. நான்காவது இன்னிங்ஸில் ஆடிய இங்கிலாந்து 4.5 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி முன்னூற்று சொச்சம் இலக்கை சுலபத்தில் அடைந்தது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் அண்மைக் காலங்களில் இங்கிலாந்தில் ஆடுதளமானது 5வது நாள்தான் மட்டையாட்டத்துக்கு மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்கள் பயன்படுத்தும் டியூக்ஸ் பந்தும், ஹெவி ரோலரும் மட்டையாட்டத்தை லட்டு சாப்பிடுவதைப் போலாக்குகிறது. அதனால் ஸ்டோக்ஸின் இலக்கு கடைசி நாள் மட்டையாடுவதும் 90 ஓவர்களுக்குள் அடிக்கிற மாதிரியான இலக்கைப் பெறுவதும்தான். அதற்காகத்தான் அவர் எதிரணியின் ரன் ரேட்டைக் குறைக்க மட்டும் போராடுகிறார், விக்கெட்டுகளை எடுக்க அல்ல. ஏனென்றால் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 4.5 ரன் ரேட்டில் ஆடியிருந்தால் கடைசி நாள் இலக்கு 450ஐத் தாண்டி இருக்கும். ஓவருக்கு 5 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டியிருந்திருக்கும். முதல் 20 ஓவர்கள் பும்ரா நன்றாக வீசி ரன் ரேட்டை 6க்கு கொண்டு வந்தால் அது சேஸிங்கைச் சிக்கலாக்கும். இப்படி ஸ்டோக்ஸ் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்கும்விதமே வித்தியாசமானது. அவரிடம் டெஸ்ட் ஆட்டத்தை ஆடினாலும் எடுபடாது. முழுக்க பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுதளம் அமைந்தால் மட்டுமே ஸ்டோக்ஸ் இந்த அணுகுமுறையைக் கைவிடுவார்.

ஸ்டோக்ஸை ("பேஸ்பாலை") முறியடிக்க முதலில் தட்டையான ஆடுதளத்தில் டாஸ் ஜெயித்தால் இங்கிலாந்தை மட்டையாட வைக்க வேண்டும். அவர்களுடைய ரன் ரேட்டைக் குறைத்து நமது பந்து வீச்சின் ஓவர் ரேட்டையும் குறைக்க வேண்டும். எதிர்மறையான உத்திகளைக் கையாள வேண்டும். அல்லது நாம் முதல் நாள் மட்டையாட நேர்ந்தாலும் ரன் அடிப்பதைவிட அதிக நேரம் மட்டையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். குறைந்தது 2.5 நாட்களையாவது தின்று விட வேண்டும். எனில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு மட்டையாட அரை நாள்தான் கிடைக்கும். இது அவர்களைக் கடுமையாக வெறுப்பேற்றும் என்பதால் வித்தியாசமாக எதையாவது செய்து சிக்கிக் கொள்வார்கள். அதே போல அவர்களுடைய வேகவீச்சாளர்கள் காயம்பட வாய்ப்பு அதிகமாகும். பந்து வீசி ஜெயிக்கவே வாய்ப்பில்லாத ஆட்டச்சூழலை, ஆடுதளத்தை இங்கிலாந்து கியூரேட்டர்களும் பந்து தயாரிப்பாளர்களும் ஏற்படுத்தும்போது எதிர்மறை கிரிக்கெட்டின் வழியாக மட்டுமே அதைச் சமாளிக்க முடியும். இதையே இன்று கில் செய்ய முயன்றார். அதிகப் பந்துகளை ஆட முயன்றார். ஒரே பிரச்சினை ஜெய்ஸ்வாலும் பண்டும் இந்த வியூகத்துக்கு ஏற்ப ஆடாமல் அதிக ஷாட்களை ஆட முயன்றார்கள். ஜெய்ஸ்வால் 250 பந்துகளில் சதம் அடிக்க முயன்றிருக்க வேண்டும். எனில் அவரும் கில்லுமாக தலா 300 பந்துகளை ஆடியிருந்தால், இன்னும் சிலர் தலா 100 பந்துகளை எடுத்திருந்தால் ஒரே இன்னிங்ஸில் ஸ்டோக்ஸின் பேஸ்பால் வியூகத்தை நாசமாக்க முடியும் (ஆனால் அவர்கள் வேகமாக ஆடி ஆட்டமிழந்தார்கள்). முதல் இன்னிங்ஸில் எத்தனை ரன்கள் அடிக்கிறோம் என்பதல்ல எத்தனை நாட்கள் ஆடுகிறோம் என்பதை ஸ்டோஸுக்கு ஆப்படிக்க உதவும். இதை இரண்டு போட்டிகளில் செய்தால் இங்கிலாந்து வேறு வழியின்றி தன் ஆடுதளங்களை மாற்றும் நிலை வரும்.

இதைத்தான் அஷ்வினும் தன் யுடியூப் சேனலில் வலியுறுத்துகிறார். முதல் டெஸ்டில் இந்தியா இதைப் புரிந்துகொள்ளாமல் நான்காவது நாளே பந்துவீச விரும்பி கடைசி ஐந்து விக்கெட்டுகளை வேகமாக அடிக்கும் நோக்கில் தியாகம் செய்தது. ஐந்தாவது நாள் உணவு இடைவெளி வரை ஆடிவிட்டு இங்கிலாந்துக்குக் கொடுத்திருந்தால் அவர்கள் தடுமாறியிருப்பார்கள். ஐம்பது ஓவர் கிரிக்கெட்டில் தட்டையான ஆடுதளத்தில் 350-400 என்று இலக்கை அதிகப்படுத்துவார்கள். அதாவது ரன் ரேட்டை உயர்த்துவார்கள். இங்கிலாந்தில் இதைச் செய்ய சிறந்த மார்க்கம் இங்கிலாந்துக்கு மட்டையாடக் கிடைக்கும் பந்துகளைக் குறைப்பதுதான். இது தடுப்பாட்டம் அல்ல, இங்கிலாந்தில் இதுதான் புத்திசாலித்தனமான ஆட்டம்.

இரண்டாவது டெஸ்டில் என்னைப் பொறுத்தவரையில் இந்தியா 450 அடிக்கிறதா என்பதல்ல நாளை மாலை வரையில் அல்லது நாளைக்கு அடுத்த நாள் காலை வரைக்கும் கில், ஜடேஜா, சுந்தரால் ஆட முடியுமா என்பதே இந்தியாவின் எழுச்சிக்கான அளவுகோல். நாளை மதியத்துடன் ஆல் அவுட் ஆனால், அவர்கள் அந்த ஸ்கோரை 100 ஓவர்களில் அடித்துவிட்டு நான்காவது நாள் மாலைக்குள் இந்தியாவை ஆல் அவுட் பண்ணப் பார்ப்பார்கள். இப்போட்டியில் 5வது நாள் இங்கிலாந்து தமக்கு அளிக்கப்படும் எந்த இலக்கையும் சுலபத்தில் விரட்டி அடைந்துவிடும். ரன்கள் அல்ல, நேரமே இப்போட்டியைத் தீர்மானிக்கும் காரணி.

Comments

Popular posts from this blog

செய்யறிவு நம்மை வைத்துச் செய்த கதை

செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"சாய் வித் சித்ரா" போலி விவாதம்

"சாய் வித் சித்ரா" எழுத்தாளர்களின் வட்டமேஜை விவாதம் பார்த்தேன். இலக்கிய எழுத்தாளர்கள் × வணிக எழுத்தாளர்கள் என்ற அந்த விவாதத்தின் மையப்புள்ளியே தவறானது. கடந்த 20 ஆண்டுகளில் அந்த கோடு கரைந்து போய் இன்று இடைநிலை இலக்கியம் × இலக்கியம் எனும் இடமே உள்ளது. அதாவது இன்று பெரும்பாலானவர்க்ள் இடைநிலை இலக்கியம் பக்கமாகத்தான் நிற்கிறார்கள், ஜெயமோகன் உட்பட. இணையம், சினிமா வாய்ப்பு இந்த வீழ்ச்சியை நோக்கி நம்மைச் செலுத்திவிட்டது. சிக்கலான தீவிரமானப் புனைவுகளைப் படிப்பதற்கான பயிற்சியும் நுண்ணுணர்வும் கற்பனையும் கொண்டவர்கள் இன்று மிகவும் குறைவு. முன்பும் அப்படித்தான் இருந்ததா எனத் தெரியவில்லை. இன்று செயல்படுகிற வணிக எழுத்தாளர்கள் கிண்டிலில் அரைகுறைத் தமிழில் மலினமாக எழுதுவோர் மட்டுமே. பட்டுக்கோட்டை பிரபாகர், சுபாவின் தரம் கூட அவர்களிடம் இல்லை (அவர்களிலும் இலக்கியம் படித்து இந்தப் பக்கம் வருவோர் அரிதாக உண்டு). ஆக இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து நடக்கிற ஒரு விவாதமாக அது மாறிவிட்டது. உதாரணமாக, ஜெயமோகனை வாசிப்போர் அதிகரித்ததும் அவரது எழுத்தின் தரம் ரொம்ப கீழே வந்துவிட்டது. மிகையுணர்ச்சி, சினிமாத்தனமா...