30-40 பேர்கள் மட்டுமே வருவார்கள். ஒவ்வொருவரும் புத்தகத்தை வாங்கிப் படித்துவிட்டு வருவார்கள். புத்தகத்தைப் பற்றி தம் கருத்தை வெளிப்படையாகச் சொல்வார்கள். முகஸ்துதி, வெற்றுப் பேச்சுக்கள் இல்லை. சிலர் விரிவாக ஆழமாக அலசுவார்கள். சற்றும் எதிர்பாராத ஒரு கண்ணோட்டத்தை, வாசிப்பை முன்வைப்பார்கள். கடந்த முறை "தாயைத்தின்னி" நாவலுக்கான கூட்டம் நடந்தபோது அப்படித்தான் இருந்தது. ஒரு புத்தகத்தைப் பற்றி முப்பதுக்கும் மேற்பட்ட மூளைகள் தம் கற்பனையால் 2 மணிநேரங்களாகப் புதியபுதிய களங்களைக் கண்டடைந்து விவாதித்து முன்னகர்வது வியப்பான அனுபவமாக இருந்தது. அலங்காரப் பேச்சுக் கூட்டங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போன நான் அன்று உற்சாகமாகிப் போனேன். இலக்கியத்துக்கு பெருங்கூட்டம், படோடாபம், விளம்பரம், லாபியிங் ஆகிய விசயங்களைவிட தீவிரமான விவாதங்களும், முழுக்கமுழுக்க பிரதியைக் குறித்த வினாக்களும் குறுக்கீடுகளுமே முக்கியம்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments