முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தக் லைப்



இவர்கள் குரல் வளையிலே மிதித்துக் கொல்லப்பார்த்த அளவுக்கு ஒன்று "தக் லைப்" மோசமான படமில்லை. கிட்டத்தட்ட திரிஷா வரும்வரை படத்தை நன்றாகவே எழுதியிருந்தார்கள். பகைவரின் மகனை வளர்த்தால் அவன் எதிர்காலத்தில் தன் பகையை உணர்ந்து தன்னை வளர்த்தவரைக் கொல்ல வந்தால் என்னவாகும் என்பதே ஒற்றைவரி. அதாவது "நாயகனில்" கேல்கர் எனும் ஒரு காவல் ஆய்வாளரை நாயக்கர் கொல்வார். அவரது மகனைத் தன் மகனைப் போல வளர்ப்பார். ஆனால் கடைசியில் அவன் கையாலே சுடப்பட்டு இறப்பார். "தக் லைப்" கேல்கரின் மகனுக்கும் நாயக்கருக்குமான உறவை இன்னொரு பின்னணியில் பேசுகிற கதை. யோசித்துப் பார்த்தால் இது சுவாரஸ்யமான வித்தியாசமான கதைதான்.
ஆனால் உப-கதைவரி ஒன்றையும் மணிரத்னம் எடுத்துக் கொள்கிறார். வளர்ப்பு மகனும் அப்பாவும் ஒரே பெண்ணை நேசிக்கிறார்கள். ஈடிபல் காம்பிளக்ஸ். பொதுவாக ராஜ்ஜியங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது பெண்களைக் கைப்பற்றுவது குறியீடாக மாறும். மணிரத்னம் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார். திரிஷாவின் பாத்திரமான இந்திராணி இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அழிவதைச் சொல்கிறார். ஆனால் அப்போது கதை இந்திராணியின் கதையாகி விடுகிறது. இவ்வளவு வலுவான சிக்கலான பாத்திரத்தை மூன்றாவது பாத்திரமாக கதையில் வைக்கவே கூடாது. வைத்தாலும் அவருக்கான திரைவெளியை வெகுவாகக் குறைத்திருக்க வேண்டும்.
திரிஷா வந்ததுமே நாயகனின் (கமல் + சிம்புவின் பாத்திரங்கள்) உடனடித் தேவை, இலக்கு என்னவெனும் குழப்பமும் கூடவே வருகிறது. ஆக்ஷன் படங்களின் பெரிய பலவீனமே பெண்கள்தாம். பெண்களை சும்மா ஊறுகாயாக இப்படங்களில் வைத்துக் கொள்வதே பாதுகாப்பு.
இன்னொரு பிரச்சினை கமல்ஹாசனின் பாத்திரம் - அவர் நல்லவரா கெட்டவரா எனும் குழப்பம் நன்றாகவே கொண்டு வரப்பட்டுள்ளது - முதல் மட்டும் கடைசி காட்சியில் அவர் சிம்புவின் பாத்திரத்திடம் பாசத்தைப் பொழியும் இடங்களைத் தவிர. ஒருவிதமான ruthless grey பாத்திரமாக அவரை எழுதியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் - ஏனென்றால் இது அதைப் பேச வேண்டிய காலகட்டமே.
அடுத்து, இத்தகைய கொடூர பாத்திரங்களுக்கும் (மாபியா தலைவர்கள், கொலைகாரர்கள்) ஒரு அறம், விழுமியங்கள் இருக்கும். அதைப் படத்தின் துவக்கத்திலேயே சரியாக நிறுவ வேண்டும். "காட்பாதரில்" அப்பா கார்லியானோ தன் குடும்பத்தினரிடம் பிரியமானவர், நட்புக்காக இறங்கி வேலை செய்பவர், தனக்கான நிபந்தனைகளைக் கொண்டவர் எனக் காட்டுகிறார். அடுத்து உடனேயே போதை மருந்து வியாபாரி சொலோஸாவுடனான காட்சி வருகிறது. அதில் கார்லியானோ தான் போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட மாட்டேன், அது தன் அரசியல் தொடர்புகளை ஒழித்துவிடும் என மறுக்கிறார். என்னதான் சுயநலமான காரணம் என்றாலும் இது அவர் மீதான நல்லபிப்பிராயத்தை உருவாக்குகிறது. அதனாலே அவர் தாக்கப்படும்போது நாம் அவருக்காக வருந்துகிறோம். "தக் லைப்பில்" இதைச் செய்ய மெனெக்கெடவில்லை.
ஒரு நல்ல கதையை ஏதேதோ காரணங்களுக்காக மோசமாக எழுதிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. கமல் முன்னெப்போதையும் விட நுட்பமாக நடித்திருக்கிறார் - குறிப்பாக திரிஷாவை அவர் டான்ஸ் பாரில் பார்க்கும்போது வெளிப்படுத்தும் பார்வை. சிம்புவின் பாத்திரமான அமரனை அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது புதிதாகத் தன் உடல்மொழியில் குறிப்புணர்த்துகிறார். அவரது அபாரமான நடிப்புக்காகவே கவனித்துப் பார்த்தேன். வயதான பின் கமல் இன்னும் சிறந்த நடிகராகிவிட்டதாகவே தோன்றுகிறது.
இன்னொரு விசயம் - இடைவேளையின் போதான திருப்புமுனை (சக்திவேலை அமரனும் பிறரும் சேர்ந்து கொல்ல முயல்வது) வருகிறது அல்லவா, அதுதான் இப்படத்திற்கான சரியான துவக்கம். அங்கிருந்து நான்லீனியரில் (Kill Bill போல) கதையைக் கொண்டு போயிருக்க வேண்டும். என்னதான் சதானந்தின் மருமகனை சக்திவேலின் ஆட்கள் கொல்வதனால் ஏற்பட்ட நிகழ்வுகளாலே பின்னர் இந்த கொலை முயற்சி நடக்கிறது என்றாலும் சக்திவேல் பாத்திரத்தின் want கொலை முயற்சிக்குப் பின்னரே தோன்றுகிறது.
துவக்கத்தை இடைவேளையில் வைத்துவிட்டதால் அதன்பிறகு கதையை நகர்த்துவதற்கான அவகாசமே இல்லாமல் போகிறது. வேலைக்குப் போகிற அவசரத்தில் காலையுணவை அமுக்குவதைப் போல கதையை ஜெட்வேகத்தில் கொண்டு போகிறார்கள். எதையுமே நியாயப்படுத்தவோ பில்ட் அப் பண்ணவோ முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...