Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

தக் லைப்



இவர்கள் குரல் வளையிலே மிதித்துக் கொல்லப்பார்த்த அளவுக்கு ஒன்று "தக் லைப்" மோசமான படமில்லை. கிட்டத்தட்ட திரிஷா வரும்வரை படத்தை நன்றாகவே எழுதியிருந்தார்கள். பகைவரின் மகனை வளர்த்தால் அவன் எதிர்காலத்தில் தன் பகையை உணர்ந்து தன்னை வளர்த்தவரைக் கொல்ல வந்தால் என்னவாகும் என்பதே ஒற்றைவரி. அதாவது "நாயகனில்" கேல்கர் எனும் ஒரு காவல் ஆய்வாளரை நாயக்கர் கொல்வார். அவரது மகனைத் தன் மகனைப் போல வளர்ப்பார். ஆனால் கடைசியில் அவன் கையாலே சுடப்பட்டு இறப்பார். "தக் லைப்" கேல்கரின் மகனுக்கும் நாயக்கருக்குமான உறவை இன்னொரு பின்னணியில் பேசுகிற கதை. யோசித்துப் பார்த்தால் இது சுவாரஸ்யமான வித்தியாசமான கதைதான்.
ஆனால் உப-கதைவரி ஒன்றையும் மணிரத்னம் எடுத்துக் கொள்கிறார். வளர்ப்பு மகனும் அப்பாவும் ஒரே பெண்ணை நேசிக்கிறார்கள். ஈடிபல் காம்பிளக்ஸ். பொதுவாக ராஜ்ஜியங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது பெண்களைக் கைப்பற்றுவது குறியீடாக மாறும். மணிரத்னம் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார். திரிஷாவின் பாத்திரமான இந்திராணி இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அழிவதைச் சொல்கிறார். ஆனால் அப்போது கதை இந்திராணியின் கதையாகி விடுகிறது. இவ்வளவு வலுவான சிக்கலான பாத்திரத்தை மூன்றாவது பாத்திரமாக கதையில் வைக்கவே கூடாது. வைத்தாலும் அவருக்கான திரைவெளியை வெகுவாகக் குறைத்திருக்க வேண்டும்.
திரிஷா வந்ததுமே நாயகனின் (கமல் + சிம்புவின் பாத்திரங்கள்) உடனடித் தேவை, இலக்கு என்னவெனும் குழப்பமும் கூடவே வருகிறது. ஆக்ஷன் படங்களின் பெரிய பலவீனமே பெண்கள்தாம். பெண்களை சும்மா ஊறுகாயாக இப்படங்களில் வைத்துக் கொள்வதே பாதுகாப்பு.
இன்னொரு பிரச்சினை கமல்ஹாசனின் பாத்திரம் - அவர் நல்லவரா கெட்டவரா எனும் குழப்பம் நன்றாகவே கொண்டு வரப்பட்டுள்ளது - முதல் மட்டும் கடைசி காட்சியில் அவர் சிம்புவின் பாத்திரத்திடம் பாசத்தைப் பொழியும் இடங்களைத் தவிர. ஒருவிதமான ruthless grey பாத்திரமாக அவரை எழுதியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் - ஏனென்றால் இது அதைப் பேச வேண்டிய காலகட்டமே.
அடுத்து, இத்தகைய கொடூர பாத்திரங்களுக்கும் (மாபியா தலைவர்கள், கொலைகாரர்கள்) ஒரு அறம், விழுமியங்கள் இருக்கும். அதைப் படத்தின் துவக்கத்திலேயே சரியாக நிறுவ வேண்டும். "காட்பாதரில்" அப்பா கார்லியானோ தன் குடும்பத்தினரிடம் பிரியமானவர், நட்புக்காக இறங்கி வேலை செய்பவர், தனக்கான நிபந்தனைகளைக் கொண்டவர் எனக் காட்டுகிறார். அடுத்து உடனேயே போதை மருந்து வியாபாரி சொலோஸாவுடனான காட்சி வருகிறது. அதில் கார்லியானோ தான் போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட மாட்டேன், அது தன் அரசியல் தொடர்புகளை ஒழித்துவிடும் என மறுக்கிறார். என்னதான் சுயநலமான காரணம் என்றாலும் இது அவர் மீதான நல்லபிப்பிராயத்தை உருவாக்குகிறது. அதனாலே அவர் தாக்கப்படும்போது நாம் அவருக்காக வருந்துகிறோம். "தக் லைப்பில்" இதைச் செய்ய மெனெக்கெடவில்லை.
ஒரு நல்ல கதையை ஏதேதோ காரணங்களுக்காக மோசமாக எழுதிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. கமல் முன்னெப்போதையும் விட நுட்பமாக நடித்திருக்கிறார் - குறிப்பாக திரிஷாவை அவர் டான்ஸ் பாரில் பார்க்கும்போது வெளிப்படுத்தும் பார்வை. சிம்புவின் பாத்திரமான அமரனை அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது புதிதாகத் தன் உடல்மொழியில் குறிப்புணர்த்துகிறார். அவரது அபாரமான நடிப்புக்காகவே கவனித்துப் பார்த்தேன். வயதான பின் கமல் இன்னும் சிறந்த நடிகராகிவிட்டதாகவே தோன்றுகிறது.
இன்னொரு விசயம் - இடைவேளையின் போதான திருப்புமுனை (சக்திவேலை அமரனும் பிறரும் சேர்ந்து கொல்ல முயல்வது) வருகிறது அல்லவா, அதுதான் இப்படத்திற்கான சரியான துவக்கம். அங்கிருந்து நான்லீனியரில் (Kill Bill போல) கதையைக் கொண்டு போயிருக்க வேண்டும். என்னதான் சதானந்தின் மருமகனை சக்திவேலின் ஆட்கள் கொல்வதனால் ஏற்பட்ட நிகழ்வுகளாலே பின்னர் இந்த கொலை முயற்சி நடக்கிறது என்றாலும் சக்திவேல் பாத்திரத்தின் want கொலை முயற்சிக்குப் பின்னரே தோன்றுகிறது.
துவக்கத்தை இடைவேளையில் வைத்துவிட்டதால் அதன்பிறகு கதையை நகர்த்துவதற்கான அவகாசமே இல்லாமல் போகிறது. வேலைக்குப் போகிற அவசரத்தில் காலையுணவை அமுக்குவதைப் போல கதையை ஜெட்வேகத்தில் கொண்டு போகிறார்கள். எதையுமே நியாயப்படுத்தவோ பில்ட் அப் பண்ணவோ முடியவில்லை.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...