Skip to main content

தக் லைப்



இவர்கள் குரல் வளையிலே மிதித்துக் கொல்லப்பார்த்த அளவுக்கு ஒன்று "தக் லைப்" மோசமான படமில்லை. கிட்டத்தட்ட திரிஷா வரும்வரை படத்தை நன்றாகவே எழுதியிருந்தார்கள். பகைவரின் மகனை வளர்த்தால் அவன் எதிர்காலத்தில் தன் பகையை உணர்ந்து தன்னை வளர்த்தவரைக் கொல்ல வந்தால் என்னவாகும் என்பதே ஒற்றைவரி. அதாவது "நாயகனில்" கேல்கர் எனும் ஒரு காவல் ஆய்வாளரை நாயக்கர் கொல்வார். அவரது மகனைத் தன் மகனைப் போல வளர்ப்பார். ஆனால் கடைசியில் அவன் கையாலே சுடப்பட்டு இறப்பார். "தக் லைப்" கேல்கரின் மகனுக்கும் நாயக்கருக்குமான உறவை இன்னொரு பின்னணியில் பேசுகிற கதை. யோசித்துப் பார்த்தால் இது சுவாரஸ்யமான வித்தியாசமான கதைதான்.
ஆனால் உப-கதைவரி ஒன்றையும் மணிரத்னம் எடுத்துக் கொள்கிறார். வளர்ப்பு மகனும் அப்பாவும் ஒரே பெண்ணை நேசிக்கிறார்கள். ஈடிபல் காம்பிளக்ஸ். பொதுவாக ராஜ்ஜியங்கள் ஆக்கிரமிக்கப்படும்போது பெண்களைக் கைப்பற்றுவது குறியீடாக மாறும். மணிரத்னம் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார். திரிஷாவின் பாத்திரமான இந்திராணி இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு அழிவதைச் சொல்கிறார். ஆனால் அப்போது கதை இந்திராணியின் கதையாகி விடுகிறது. இவ்வளவு வலுவான சிக்கலான பாத்திரத்தை மூன்றாவது பாத்திரமாக கதையில் வைக்கவே கூடாது. வைத்தாலும் அவருக்கான திரைவெளியை வெகுவாகக் குறைத்திருக்க வேண்டும்.
திரிஷா வந்ததுமே நாயகனின் (கமல் + சிம்புவின் பாத்திரங்கள்) உடனடித் தேவை, இலக்கு என்னவெனும் குழப்பமும் கூடவே வருகிறது. ஆக்ஷன் படங்களின் பெரிய பலவீனமே பெண்கள்தாம். பெண்களை சும்மா ஊறுகாயாக இப்படங்களில் வைத்துக் கொள்வதே பாதுகாப்பு.
இன்னொரு பிரச்சினை கமல்ஹாசனின் பாத்திரம் - அவர் நல்லவரா கெட்டவரா எனும் குழப்பம் நன்றாகவே கொண்டு வரப்பட்டுள்ளது - முதல் மட்டும் கடைசி காட்சியில் அவர் சிம்புவின் பாத்திரத்திடம் பாசத்தைப் பொழியும் இடங்களைத் தவிர. ஒருவிதமான ruthless grey பாத்திரமாக அவரை எழுதியிருந்தால் படம் நன்றாக வந்திருக்கும் - ஏனென்றால் இது அதைப் பேச வேண்டிய காலகட்டமே.
அடுத்து, இத்தகைய கொடூர பாத்திரங்களுக்கும் (மாபியா தலைவர்கள், கொலைகாரர்கள்) ஒரு அறம், விழுமியங்கள் இருக்கும். அதைப் படத்தின் துவக்கத்திலேயே சரியாக நிறுவ வேண்டும். "காட்பாதரில்" அப்பா கார்லியானோ தன் குடும்பத்தினரிடம் பிரியமானவர், நட்புக்காக இறங்கி வேலை செய்பவர், தனக்கான நிபந்தனைகளைக் கொண்டவர் எனக் காட்டுகிறார். அடுத்து உடனேயே போதை மருந்து வியாபாரி சொலோஸாவுடனான காட்சி வருகிறது. அதில் கார்லியானோ தான் போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட மாட்டேன், அது தன் அரசியல் தொடர்புகளை ஒழித்துவிடும் என மறுக்கிறார். என்னதான் சுயநலமான காரணம் என்றாலும் இது அவர் மீதான நல்லபிப்பிராயத்தை உருவாக்குகிறது. அதனாலே அவர் தாக்கப்படும்போது நாம் அவருக்காக வருந்துகிறோம். "தக் லைப்பில்" இதைச் செய்ய மெனெக்கெடவில்லை.
ஒரு நல்ல கதையை ஏதேதோ காரணங்களுக்காக மோசமாக எழுதிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. கமல் முன்னெப்போதையும் விட நுட்பமாக நடித்திருக்கிறார் - குறிப்பாக திரிஷாவை அவர் டான்ஸ் பாரில் பார்க்கும்போது வெளிப்படுத்தும் பார்வை. சிம்புவின் பாத்திரமான அமரனை அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு காட்சியிலும் எதையாவது புதிதாகத் தன் உடல்மொழியில் குறிப்புணர்த்துகிறார். அவரது அபாரமான நடிப்புக்காகவே கவனித்துப் பார்த்தேன். வயதான பின் கமல் இன்னும் சிறந்த நடிகராகிவிட்டதாகவே தோன்றுகிறது.
இன்னொரு விசயம் - இடைவேளையின் போதான திருப்புமுனை (சக்திவேலை அமரனும் பிறரும் சேர்ந்து கொல்ல முயல்வது) வருகிறது அல்லவா, அதுதான் இப்படத்திற்கான சரியான துவக்கம். அங்கிருந்து நான்லீனியரில் (Kill Bill போல) கதையைக் கொண்டு போயிருக்க வேண்டும். என்னதான் சதானந்தின் மருமகனை சக்திவேலின் ஆட்கள் கொல்வதனால் ஏற்பட்ட நிகழ்வுகளாலே பின்னர் இந்த கொலை முயற்சி நடக்கிறது என்றாலும் சக்திவேல் பாத்திரத்தின் want கொலை முயற்சிக்குப் பின்னரே தோன்றுகிறது.
துவக்கத்தை இடைவேளையில் வைத்துவிட்டதால் அதன்பிறகு கதையை நகர்த்துவதற்கான அவகாசமே இல்லாமல் போகிறது. வேலைக்குப் போகிற அவசரத்தில் காலையுணவை அமுக்குவதைப் போல கதையை ஜெட்வேகத்தில் கொண்டு போகிறார்கள். எதையுமே நியாயப்படுத்தவோ பில்ட் அப் பண்ணவோ முடியவில்லை.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...