Skip to main content

என்னைப் பற்றி

My photo
ஆர். அபிலாஷ்
ஆர். அபிலாஷ் (பி. 1980, பத்மநாபபுரம்) ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 24 வருடங்களாக உயிர்மை, காலச்சுவடு, ஆனந்த விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரை 5 நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மற்றும் மொழியாக்கங்கள் என தமிழில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஆங்கிலத்தில் 4 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவரது “கால்கள்” நாவலுக்கு 2014-ல் சாகித்ய அகாதெமி யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது. 2016-ல் பாஷா பரிஷத் விருதும் பெற்றார். R. Abilash (b. 1980) is a writer and scholar with a PhD in English Literature from the University of Madras. Over a 24-year career, he has been a prolific contributor to major Tamil literary and mainstream journals like Uyirmai and Ananda Vikatan. He has authored over 40 books in Tamil, including five novels, short stories, and translations of Western and Haiku poetry, alongside four academic works in English. He was awarded the Sahitya Akademi Yuva Puraskar in 2014 for his novel Kaalgal and the Bhasha Parishad Award in 2016 for his literary contributions.

Catharsis



புரவி இலக்கியக் கூடுகையின்போது ஶ்ரீனிவாசன் எனும் வாசகர் பேசினார். அவர் தன் வாசிப்பனுபவத்தைக் குறிப்பிடுகையில் "நிழல் பொம்மை" நாவல் தன் மனத்தை வெகுவாக பாதித்துவிட்டது என்றார். நாவலை வாசித்து முடித்தபோது தான் கழிப்பறைக்குச் சென்று தனிமையில் இருந்து கதையைப் பற்றி யோசித்ததாகவும் அப்போதுதான் முன்பு பணியாற்றிய நிறுவனம் குறித்து தனக்கிருந்த அகச்சிக்கல்கள் மறைந்து மனம் தெளிவானதாகவும், வெளியே வந்த சற்று நேரத்தில் தன் மனம் மீண்டும் சஞ்சலமுற்றதாகவும் சொன்னார். என்னை இந்த அனுபவப் பகிர்வு மிகவும் கவர்ந்தது. நான் கூட்டம் முடிந்ததும் அவரிடம் உரையாடினேன். அவர் சொல்ல வந்ததென்ன?
அவர் சொன்னார், "நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து விலகினேன். நீண்ட காலமாகப் பணியாற்றிய இடம் அது. என் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரித்து வெளியேற்றினார்கள். எப்போதுமே அதை நினைக்கையில் கடுங்கோபம் வரும். பார்ப்பவர்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லி நிறுவனத்தைத் திட்டுவேன். இந்நாவலைப் படித்தபின்னர்தான் என் கோபம் தணிந்தது. இப்போது அவர்கள் எனக்குச் செய்தது ஒன்றும் தவறில்லை என்று தோணுகிறது."
இப்படியெல்லாம் இந்நாவலைப் படித்துவிட்டு ஒருவர் உணர்வார் என அதை எழுதும்போது நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஒரு நாவலில் பல்வேறு தருணங்கள் உண்டு. அவற்றில் எதாவது ஒன்று ஒரு பட்டாம்பூச்சியைப் போல நம் நெஞ்சில் வந்து அமரும். அது நம் உலகை சில கணங்கள் வண்ணங்களால் நிறைக்கும். இது நம் வாசிப்பின் மிகவு அந்தரங்கமான விளைவுதான். அடுத்து, நம்மை இன்னொருவராக நினைத்து அவரிடத்தில் இருந்து சிந்தித்துப் பார்ப்பது. இதை அரிஸ்டாட்டில் catharsis (அகத்தைத் தூய்மையாக்குவது) என்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக, களங்கமற்ற நிலையில் வாசிக்கையிலே இது நிகழும்.
கதாபாத்திரத்துடன் நாம் வாசகராக ஒன்றிப் போய் அவரிடம் இருந்து உலகைப் பார்க்கையில் அது நம் உலகம் ஆகிறது. அடுத்து புனைவுலகமும் மறைகிறது. நம் அனுபவத்தைக் கொண்டு நாம் புனைவுலகை மீளெழுதுகிறோம். அப்பாத்திரம் அனுபவத்ததை இன்னும் உக்கிரமாக நாம் அனுபவிக்கிறோம்.
நான் அடிப்படையில் கல்நெஞ்சுக்காரன் என்பதால் எந்தப் புனைவையும் படித்து catharsis அடைந்ததில்லை. புனைவைப் படிக்கையில் இது செய்யப்பட்டது, திட்டமிட்டு எழுதப்பட்டவை இப்பகுதிகள் என உணர்வு இருந்துகொண்டே இருக்கும். சிலநேரங்களில் நானே அப்பகுதிகளை படிக்கையில் என் கையால் கூடவே நானும் எழுதிக் கொண்டுபோவதைப் போலத் தோன்றும்.
சில விதிவிலக்குகள் உண்டு - புனைவில் மதுவருந்தும் காட்சிகள் வரும்போது எனக்குத் தவறாமல் குடிக்கும் ஆசை வருவதுண்டு. காமமும் அப்படித்தான். மனமுடைய வைப்பதற்குப் பதிலாக புனைவுகள் என்னை புலணுணர்வு சார்ந்து கிளர வைக்கின்றன. ஆனால் என் ஆன்மாவைக் கிளர வைக்கிற எந்த நாவலையும் சிறுகதையையும் இதுவரைப் படித்ததில்லை.

கவிதைகள் மட்டுமே தவறாமல் என்னை மனம் உடையச் செய்கின்றன. என் மனநிலையை, அணுகுமுறையை மாற்றவும் செய்திருக்கின்றன.

ஆகையால் இவ்வளவு உணர்ச்சிகரமாக வாசிக்கும் வாசகர்களைக் காண்கையில் பெரும் திகைப்பு ஏற்படுகிறது. நாம் சுவரைப் பார்க்கையில் அவர்கள் அங்கு கண்ணுக்குப் புலப்படாத கதவொன்றைக் கண்டு திறந்து உள்ளே போய்விடுகிறார்கள். சுவரைப் பாதுகாகிறவனாக நான் அசந்து போகிறேன். என் படகில் ஏறி இருட்டில் வந்தவர்கள் சட்டென நீரில் குதித்து மறைந்துபோகிறார்கள். படகோட்டியாக நான் திகைத்துப் பார்க்கிறேன். இத்தருணங்களில் புனைவெழுத்தாளராக எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கிறது.

Popular posts from this blog

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

“கழிமுகம்” - நிஜம் ஒரு மொபைல் விளையாட்டாகிறது -

பெருமாள் முருகனின் நாவல் கலையின் மையச்சுழல் என ஒன்று உண்டெனில் அது ஒரு கருத்தோ நம்பிக்கையோ அல்ல ; அது ஒரு நகைமுரணாகவே இருக்கும் . அவரை சர்ச்சையின் , பிரசித்தத்தின் மலையுச்சிக்கே கொண்டு போய்த் தள்ளிய “ மாதொரு பாகனில் ” இருந்து 2018 இல் வந்த “ கழிமுகம் ” வரை பார்த்தோமானால் ஒரு குறிப்பிட்ட தொனியை , வடிவ ஒழுங்கை அவர் பின்பற்றுவதைக் காணலாம் - கதை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் நோக்கில் கூறப்படுவதாக , அந்த பாத்திரமே பாதிக்கப்பட்ட தரப்பாக , நமது இரக்கத்தைக் கோரும் தரப்பாக ஒரு கட்டம் வரை காட்டுவார் , ஆனால் நாவலின் இறுதி நான்கு அத்தியாயங்களில் தலைகீழாக்கி விடுவார் ; யார் அதுவரை தவறானவரோ அவர் நியாயமானவராக நமக்குத் தோற்றமளிப்பார் . இதை ஒரு திருப்பமாக அன்றி தன் கதைகூறல் தொனியின் நுணுக்கம் மூலமாகவே பெருமாள் முருகன் நமக்கு உணர்த்துவார் . இந்த நாவலில் குமராசுரர் என மத்திய வயது ஒரு அரசு ஊழியர் வருகிறார் . அவரது மத்திய வர்க்க வாழ்க்கையின் பாசாங்கை , பாசாங்கை , மேம்போக்கான வீராப்புகளை , பாவனைகளை பெருமாள் முருகன் ஏக...