முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Catharsis



புரவி இலக்கியக் கூடுகையின்போது ஶ்ரீனிவாசன் எனும் வாசகர் பேசினார். அவர் தன் வாசிப்பனுபவத்தைக் குறிப்பிடுகையில் "நிழல் பொம்மை" நாவல் தன் மனத்தை வெகுவாக பாதித்துவிட்டது என்றார். நாவலை வாசித்து முடித்தபோது தான் கழிப்பறைக்குச் சென்று தனிமையில் இருந்து கதையைப் பற்றி யோசித்ததாகவும் அப்போதுதான் முன்பு பணியாற்றிய நிறுவனம் குறித்து தனக்கிருந்த அகச்சிக்கல்கள் மறைந்து மனம் தெளிவானதாகவும், வெளியே வந்த சற்று நேரத்தில் தன் மனம் மீண்டும் சஞ்சலமுற்றதாகவும் சொன்னார். என்னை இந்த அனுபவப் பகிர்வு மிகவும் கவர்ந்தது. நான் கூட்டம் முடிந்ததும் அவரிடம் உரையாடினேன். அவர் சொல்ல வந்ததென்ன?
அவர் சொன்னார், "நான் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிறுவனத்தில் இருந்து விலகினேன். நீண்ட காலமாகப் பணியாற்றிய இடம் அது. என் மீது பொய்க்குற்றம் சாட்டி விசாரித்து வெளியேற்றினார்கள். எப்போதுமே அதை நினைக்கையில் கடுங்கோபம் வரும். பார்ப்பவர்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லி நிறுவனத்தைத் திட்டுவேன். இந்நாவலைப் படித்தபின்னர்தான் என் கோபம் தணிந்தது. இப்போது அவர்கள் எனக்குச் செய்தது ஒன்றும் தவறில்லை என்று தோணுகிறது."
இப்படியெல்லாம் இந்நாவலைப் படித்துவிட்டு ஒருவர் உணர்வார் என அதை எழுதும்போது நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஒரு நாவலில் பல்வேறு தருணங்கள் உண்டு. அவற்றில் எதாவது ஒன்று ஒரு பட்டாம்பூச்சியைப் போல நம் நெஞ்சில் வந்து அமரும். அது நம் உலகை சில கணங்கள் வண்ணங்களால் நிறைக்கும். இது நம் வாசிப்பின் மிகவு அந்தரங்கமான விளைவுதான். அடுத்து, நம்மை இன்னொருவராக நினைத்து அவரிடத்தில் இருந்து சிந்தித்துப் பார்ப்பது. இதை அரிஸ்டாட்டில் catharsis (அகத்தைத் தூய்மையாக்குவது) என்கிறார். மிகவும் உணர்ச்சிகரமாக, களங்கமற்ற நிலையில் வாசிக்கையிலே இது நிகழும்.
கதாபாத்திரத்துடன் நாம் வாசகராக ஒன்றிப் போய் அவரிடம் இருந்து உலகைப் பார்க்கையில் அது நம் உலகம் ஆகிறது. அடுத்து புனைவுலகமும் மறைகிறது. நம் அனுபவத்தைக் கொண்டு நாம் புனைவுலகை மீளெழுதுகிறோம். அப்பாத்திரம் அனுபவத்ததை இன்னும் உக்கிரமாக நாம் அனுபவிக்கிறோம்.
நான் அடிப்படையில் கல்நெஞ்சுக்காரன் என்பதால் எந்தப் புனைவையும் படித்து catharsis அடைந்ததில்லை. புனைவைப் படிக்கையில் இது செய்யப்பட்டது, திட்டமிட்டு எழுதப்பட்டவை இப்பகுதிகள் என உணர்வு இருந்துகொண்டே இருக்கும். சிலநேரங்களில் நானே அப்பகுதிகளை படிக்கையில் என் கையால் கூடவே நானும் எழுதிக் கொண்டுபோவதைப் போலத் தோன்றும்.
சில விதிவிலக்குகள் உண்டு - புனைவில் மதுவருந்தும் காட்சிகள் வரும்போது எனக்குத் தவறாமல் குடிக்கும் ஆசை வருவதுண்டு. காமமும் அப்படித்தான். மனமுடைய வைப்பதற்குப் பதிலாக புனைவுகள் என்னை புலணுணர்வு சார்ந்து கிளர வைக்கின்றன. ஆனால் என் ஆன்மாவைக் கிளர வைக்கிற எந்த நாவலையும் சிறுகதையையும் இதுவரைப் படித்ததில்லை.

கவிதைகள் மட்டுமே தவறாமல் என்னை மனம் உடையச் செய்கின்றன. என் மனநிலையை, அணுகுமுறையை மாற்றவும் செய்திருக்கின்றன.

ஆகையால் இவ்வளவு உணர்ச்சிகரமாக வாசிக்கும் வாசகர்களைக் காண்கையில் பெரும் திகைப்பு ஏற்படுகிறது. நாம் சுவரைப் பார்க்கையில் அவர்கள் அங்கு கண்ணுக்குப் புலப்படாத கதவொன்றைக் கண்டு திறந்து உள்ளே போய்விடுகிறார்கள். சுவரைப் பாதுகாகிறவனாக நான் அசந்து போகிறேன். என் படகில் ஏறி இருட்டில் வந்தவர்கள் சட்டென நீரில் குதித்து மறைந்துபோகிறார்கள். படகோட்டியாக நான் திகைத்துப் பார்க்கிறேன். இத்தருணங்களில் புனைவெழுத்தாளராக எனக்கு ஆத்மார்த்தமான திருப்தி கிடைக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...