Skip to main content

தேர்தல் ஆணைய முறைகேடு 2



 

ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ள முறைகேடுகள் வாக்காளர் பட்டியலிலும் வாக்களிப்பிலும் நடக்காமல் இருக்க என்ன வழி?

ஒன்றிய அரசின் மிதமிஞ்சிய அதிகாரம் கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மக்களே உணர்ந்து போராடி அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொணர வேண்டும்.
ஒன்றிய அரசு ஆட்சியில் உள்ள ஐந்தாண்டுகளும் அவ்வபோது கருத்துக்கணிப்பின் வழியாக விசாரிக்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டும். அரசைத் தொடர்ந்து கண்காணித்து மட்டுப்படுத்தும் நேரடி அதிகாரத்தை பொதுமக்களுக்கும் நீதிமன்றம், என்.ஜி.ஓ போன்ற அமைப்புகளுக்கு கொடுப்பதுதான் சரியான மக்களாட்சிக்கு இடமளிக்கும். தொடர்ந்து கருத்துக்கணிப்புகள் வழியாக ஆளும் அரசைத் தண்டிக்கும் சட்டங்களும் வகுக்கப்பட வேண்டும். ஒருமுறை வென்றால் அடுத்த தேர்தல் வரை யாரும் கையை வைக்க முடியாது எனும் பாதுகாப்பு ஆபத்தானது. இப்போது பாருங்கள் - ஊடக முதலாளிகளை மோடி அரசு தன் கட்டுக்குள் வைத்துள்ளது. யாரும் வாயைத் திறப்பதில்லை. தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் ஆதார் போன்ற சான்றுகளைக் கொண்டு வாக்காளர்களை ஏற்கலாமே எனக் கேட்க அதை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்தது. தேர்தல் ஆணையம் மோடியின், அமித் ஷாவின் கைப்பாவைகள் என்பதால் பிரமரும் உள்துறை அமைச்சருமே உச்சநீதிமன்றத்தை புறங்கையால் டீல் பண்ணிவிட்டார்கள் என்பதே உண்மை. ஒட்டுமொத்தமாக அவர்கள் யாரையும் மதிப்பதோ பொருட்படுத்துவதோ இல்லை. பாராளுமன்றத்தில் இந்தியா பாக் போர் குறித்து எழுப்பப்பட்ட எந்த கேள்விகளுக்கும் மோடி அரசு சரிவர பதிலளிக்க முன்வரவில்லை. அதற்கெல்லாம் அவசியமில்லை என நினைக்கிறார்கள். இப்போது அவர்களை ஒட்டி தேர்தல் ஆணையமும் ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு அமைதிகாக்கிறது. சத்தியப் பிரமாணம் செய்துசொல்லுங்க என அவரிடம் கேட்கிறது.
இதன் பெயர்தான் மக்களாட்சியா? முன்பு ஜெர்மனியில் ஹிட்லர் இப்படித்தான் ஆண்டார். இந்தியாவின் மிகப்பெரிய பாசாங்கு இந்த மக்களாட்சி எனும் சொல்தான்.
நாளை காங்கிரஸோ வேறு கட்சியோ ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் மோடியைப் பிரதியெடுக்க மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? மனசட்சியையும் கொள்கையையும் நம்பி எப்படி ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைப்பது? காவலர்களை யார் காவல் காப்பது, கண்காணிப்பது என ஜூவனெல் கேட்டார். அது எக்காலத்திற்கும் ஏற்ற கேள்வி. பிரதமரை யார் கண்காணிப்பது, கட்டுப்படுத்துவது? மக்களவை முழுக்க அவரது ஆதரவாளர்கள் இருந்தால்? எதிர்க்கட்சிகள் கையறு நிலையில் இருந்தால்? ஊடகங்களும் நீதித்துறையும் அவரது அடிமைகளாக மாறினால்? மக்களே ஒவ்வொருமுறையும் தெருவுக்கு வந்து போராட வேண்டும் எனில் அதை ஊக்கப்படுத்தும், அம்மக்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் உண்டா? இல்லை. ஆக மக்களும் செயலற்றுப் போகிறார்கள். வேறெந்த அமைப்பிலும் இப்படித் தன்னிகரற்ற அதிகாரம் ஒரு சிலருக்கு மட்டுமென இருப்பதில்லை.
ஆட்சியில் முறைகேடுகள் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் மக்களால் அரசு கேள்விக்குள்ளாக்கப்பட்டு அதனால் தாம் பெற்ற நாடாளுமன்ற இடங்களுக்கு வேட்டு வைக்கப்படும், எதிர்காலத்தில் தேர்தலில் நிற்பதற்கு தடை வரும் எனும் சட்டம் வரவேண்டும். அதை நடைமுறைப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறை வரவேண்டும். ஒரு நல்ல அரசு எப்போதுமே நெருக்கடியில் இருக்க வேண்டும். ஜாலியாக கடவுளைப் போல இருக்கக்கூடாது. இருந்தால் அது மோசமான ஆட்சிக்கே வழிவகுக்கும். ஸ்திரமான அரசை விட ஸ்திரமற்ற அரசே நல்லது என்பதே வரலாறு சொல்லும் உண்மை. ஸ்திரமற்ற அரசிலே ஜனநாயகம் தழைக்கும்.
தேர்தல் ஆணையத்தின் படத்தில் மக்கள் காறி உமிழ்ந்து அதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். இன்று வேறெதையும் செய்ய முடியாதென நினைக்கிறேன்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...