முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“வீதி சமைப்போம்”


அம்பையின் சிறந்த கதைகளில் ஒன்று இது. இம்மாத உயிர்மையில் வெளியாகி உள்ளது. கதையின் மையம் இதுதான்: ஒரு வீதி அல்லது பகுதியுடன் நமது நினைவுகள், நம்பிக்கைகள், வரலாறு பிணைந்துள்ளது. நாம் அதை நம்முடனே வைத்துக்கொள்ள விரும்புகிறோம். இன்னொரு பக்கம், அந்த வெளி உருமாறிக்கொண்டும், நகர்ந்தபடியும் இருக்கிறது. அழியாதவை, அழிந்து உருமாறுகிறவை எனும் இரு விசைகளுக்கு இடையிலான மோதல்தான் இக்கதை. அம்பை தன் வழக்கப்படி ஒரு குடும்பத்தை, அதன் வரலாற்றை, அக்குடும்பம் வேர்பிடித்த நகரத்தை விவரிக்கிறார். அக்குடும்பத்துப் பாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளை, நிபந்தனைகளை, பாசப்பிணைப்பைக் காட்டுகிறார். ஆண் குடும்பத் தலைவர் பேசினாலும் அவர் மெல்லமெல்ல பின்னகர்ந்து பெண்களின் குரல் அதிகமாகக் கேட்கத் தொடங்கி அவ்வாறே - பெண்ணின் தன்னிலை வெளிப்பாட்டுடன் - கதை முடியவும் செய்கிறது. அம்பையின் முந்தைய கதைகளில் பாசப்பிணைப்பு துன்பப் பிணைப்பாக மாறும் நிலையும் சித்தரிக்கப்படும். ஆனால் இக்கதையில் பாஸிட்டிவிஸ்ட் தன்மை அதிகம் எனத் தோன்றும்போது அவர் ஒரு சிந்தி இனத்துப் பெரியவரான திலீப் ஸக்லானியை முன்னிலைப்படுத்துகிறார். திலீப் தன் கடந்த கால நினைவுகளுக்குள் போகிறார். அவரது பேத்தியான சாவித்திரி நகரியல் ஆய்வாளர். அவள் மும்பை நகரத்தை ஆய்வு பண்ணுவதற்காக வந்திருக்கிறாள். அவளிடம் திலீப் கித்வானி சாலைக்குத் தன் பெயரை அளித்த டாக்டர் சொயித்ராம் பர்தாப்ரய் கித்வானியின் வரலாற்றைச் சொல்கிறார். கித்வானி ஒரு காந்தியவாதி, தியாகி, மக்களுக்காக உழைத்த மருத்துவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து காலமானவர். அவர் பெயரில் ஸி.பி கித்வானி தெரு அழைக்கப்படுகிறது.
அடுத்து பாட்டி தான் ஒரு ஏழை மாணவனான ப்ராபகரின் கல்விக்கு உதவியதையும், அப்பையன் வளர்ந்து பத்திரிகையாளராகி, பின்னர் பெரிய அரசுப் பொறுப்பை ஏற்று அதன் பிறகு அவன் காலமாகிட அவர் பெயரில் ஒரு தெருவும் அங்கு அவன் நினைவில் பேனா ஏந்திய சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்: ப்ராபாகர் கதம் தெரு. கஸ்தூரி அங்கு சென்று பார்ப்பதென முடிவெடுக்கிறாள். தன் சித்தப்பா, சித்தியுடன் போகிறாள். அங்கு போனால் ப்ராபாகரின் நினைவுச் சின்னம் விபத்துகளில் அழிந்துபோய் அதை நகராட்சி அகற்றியிருக்கிறது. அங்கு சோளம் விற்கும் ஆள் அதைப் பற்றிச் சொல்கிறார். இதுதான் கதையின் உச்சம். மிகச்சிறந்த இடம்.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்க சோளம் விற்பவரின் 15 வயது மகள் வருகிறாள். அவளுக்கு அத்தெருவின் வரலாற்றைப் பற்றி, அதன் பெயரைப் பற்றி ஒன்றும் தெரியாது. தான் ஷாப்பிங் போகும் எம்.ஜி சாலையென்றால் மகாத்மா காந்தி தெருவென்பதும் தெரியாது. தன் வாழ்க்கை, தன் தேடல், இலக்கு, சுயநலம், பேஷன் என்று வாழும் இளந்தலைமுறையின் ஒரு பகுதி. கஸ்தூரியும் சித்தியும் சோளக் கொண்டைகளை வாங்கிக்கொண்டு காருக்குள் அமர்கிறார்கள். “கஸ்தூரி தன் சோளக்கொண்டையை மெல்லக் கடித்தாள். உப்பு, புளிப்பு, காரத்துடன் சூடான சோளமணிகள் வாயில் நிரம்பின.” வாயில் நிரம்பும் பலவிதமான சுவைகளின் சங்கமான சோளமணிகள் அந்த மும்பை நகரத்து நினைவுகளாகவும், அந்நினைவுகள் தோன்றித்தோன்றி அழியத் தோன்றும் நகர வெளியாகவும், அதில் சுவையூற வாயில் கரையும் வாழ்வாகவும் இருக்கிறது. நாம் நம் நகரங்களையும் அதன் தினசரி வரலாற்றையும் தின்று செரிக்கிறோம். அதன் சுவையில் திளைக்கிறோம். வரலாறு அழிந்து மறைகையில் அதைக் கைப்பற்றி நிறுத்த எத்தனிக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் கிளர்ச்சியும் மலர்ச்சியுமே நமக்கு எஞ்சுகிறது. வரலாற்றைப் பேணுகிறவர்கள் இருக்கும்போதே அதைப் புசித்தபடி நகர்ந்து போகிறவர்களும் இருக்கிறார்கள். வரலாறு தோன்றியபடியே இருக்கிறது. அதை நாம் உட்செரித்தபடி அந்த உணர்வே இல்லாமல் இருக்கிறோம். அதன் ரசனையான அனுபவம் கதையின் முடிவில் முன்னிலைப்படுத்தப்பட கதை 360 பாகையில் சட்டெனத் திரும்பி விடுகிறது. 

இக்கதையில் ஒரு விமர்சனம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. அதைக் கடந்த அவதானிப்பும் உள்ளது. வழக்கமாக அம்பை தன் கதையின் முடிவில் சாட்டையொன்றுடன் தோன்றுவார். ஆனால் இக்கதையில் ஒரு கனிவு இருக்கிறது. உறுத்தாத நுட்பமான கோபமும் உள்ளது. நல்ல கதைகள் புலனுலகில் இருந்து ஒரு தருணத்தை எடுத்து அதை கவித்துவமாக மாற்றும். அதன் பொருளை நம் வசம் விடும். இக்கதையும் அதைச் செய்கிறது: சோளமணிகள் வாயில் நிரம்புவது. நகரத்து வெளி உதிர்ந்து நம் மனத்தில் நிறைவதை அது உணர்த்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...