எனக்கு கடுமையான விமர்சனங்களில் நம்பிக்கையில்லை. சொல்லப்போனால் எனக்கு இலக்கிய மதிப்பீடல், தரவரிசை, வெற்றி தோல்வியிலும் நம்பிக்கையில்லை. இன்னும் சொல்லப்போனால் என் கண் முன்னால் புத்தகங்களே உள்ளன, எழுத்தாளர்கள் இல்லை. ஒரு பிரதியின் போக்குகளை, அதில் தோன்றும் சிக்கல்களை அலசலாம். அதிலும் நம்மால் புறவயமாக சில தொழில்நுட்ப உள்ளோட்டங்களை மட்டுமே அடையாளம் காண முடியும். வாசிப்பில் விரியும் படைப்பானது தோன்றி விகசிக்கும் மானுடப் பிரக்ஞை. புத்தகம் என்பது எழுதப்பட்டதோ, வாசிக்கப்படுவதோ அல்ல என்று நினைக்கிறேன். அதனாலே அது உடலுறவுக்கு நெருக்கமான அனுபவம். அது நம்மை இன்மைக்கு வெகு நெருக்கமாகக் கொண்டு போகிறது. எழுதி முடிக்கையில் மட்டுமல்ல எழுதும்போது கூட ஒரு படைப்பாளி மரணித்துவிடுவது இதனாலே. நான் இவ்விசயத்தில் விதிவிலக்கானவன் என நினைக்கிறேன்.
செய்யறிவுக் குமிழ் உடையப் போகிறது எனப் பலரும் பேசிக்கொண்டிருந்த நிலையில் அமேரிக்க மென்பொருள் நிறுவனங்களில் செய்யறிவைப் பயன்படுத்தி எழுதப்பட்ட நிரல்களில் பல பிரச்சினைகள் வருகின்றன, செய்யறிவு தனக்குத் தெரியாத பகுதிகளில் பகற்கனவு காண்கிறது (hallucinate) என்றும், அதைச் சரிசெய்வதில் அனுபவமிக்க நிரலாளர்கள் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அவர்களுடைய வேலை 30% அதிகரித்துவிட்டது என்றும் ஒரு யுடியூப் சேனலில் வந்த செய்தித்தொகுப்பில் சொன்னார்கள். இன்னொரு தகவல் செய்யறிவால் செய்ய முடியாத நிரலாக்கப் பணியை இந்திய நிரலாளர்களைக் கொண்டு செய்ததாகவும் அச்செய்தி அம்பலமானதில் நிறுவனங்களுக்கு அசிங்கமாகி விட்டது என்பது. செய்யறிவின் பிரச்சினை அது ஒரு நிரலை வேகமாக எழுதிவிடும், ஆனால் அதில் வரும் கோளாறுகளைக் குறித்து அது கவலைப்படாமல் தனக்குத் தெரியாத இடங்களில் தெரிந்ததைப் போல பழைய நிரலின் பாணியில் எதையோ இட்டு நிரப்பிவிடும் என்பதே, செய்யறிவுக்கு 'பொறுப்புணர்வு' இல்லை என்றும் கூறுகிறார்கள். அங்கு இரண்டு சிக்கல்கள் - பெருநிறுவனங்கள் செய்யறிவுத் துறையில் 52 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு பன்ணியிருக்கிறார்கள்....
Comments