முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உண்மையான சிறுபான்மை 'ஆதிக்கம்'

பெங்களூரில் மலையாளிகளின் ஆதிக்கத்தின் விளைவாக மாட்டுக்கறி தாராளமாகக் கிடைத்து வந்தது. அங்கு அரசு தடைவிதித்தபோதும் கூட முதிய மாடுகளை அறுக்கலாம் எனும் நிபந்தனைகளுடன் அனுமதித்தது. அங்கு இக்கடைகளை நடத்தி வரும் இஸ்லாமியர்களும் ஓரளவுக்கு சுதந்திரமாக செயல்பட முடிகிறது. அதாவது பாஜக அரசு இருந்தபோதும் கூட இதுவே நிலை. ஆனால் மைசூர் அப்படி அல்ல. மைசூர் மன்னர்களின் காலத்தில் பிராமணர்களுக்கு அதிகமாக நிலத்தையும் செல்வத்தையும் பதவிகளையும் வழங்கினார்கள். பிராமணர்களுக்கு இங்கு ஒரு கலாச்சார முக்கியத்துவம் உள்ளது. அடுத்து மார்வாரி ஜெயின்களின் ஆதிக்கமும் அதிகம். அவர்கள் வசமே பெரும்பாலான கடைகளும் வீடுகளும் உள்ளன. இதனால் மறைமுகமாகவே இறைச்சி உணவுகள் பரவலாகக் கிடைக்காமல் தடை செய்துவிடுகிறார்கள். ஒருமுறை சுற்றி வந்தாலே இதுவொரு சைவ உணவு நகரம் எனும் உணர்வு ஏற்படும். ஆனால் அது உண்மையல்ல, இறைச்சி உணவை உண்போர் குறிப்பிடத்தக்க அளவில் உள்கிறார்கள். தாம் உண்ணும் உணவைக் கொண்டாடும் உரிமை மட்டும் அவர்களுக்கு இருப்பதில்லை. கூச்சம், குற்றவுணர்வு இங்குள்ள பொதுப்பண்பாட்டில் உள்ளது.

நாங்கள் இங்கு வந்தபோது மாட்டுக்கறியைத்தான் தேடினோம். அது கிடைக்காது என்றே எல்லாரும் சொன்னார்கள். கூகிளும் கூடச் சொன்னது. அதன்பிறகு நாங்கள் உள்ளூரில் ஒவ்வொருவரிடமாக விசாரித்தோம். ஒரு கடையைக் கண்டுபிடித்தோம். அங்கும் ஒளித்தே விற்கிறார்கள். அக்கடைக்காரரிடம் கேட்டால் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதால் வெளிப்படையாக விற்க முடியவில்லை என்றார். இன்னும் அப்பிரச்சினை சரியாகவில்லை. ஒருவிதத்தில் மைசூரின் உண்மையான சிறுபான்மை பிராமணர்களும் ஜெயின்களுதாம். ஆனால் அவரக்ள்தாம் பெரும்பான்மையினரின் மென்னியை இறுக்கிப் பிடித்து வைத்திருக்கிறார்கள். (இன்னொரு காரணம் இங்குள்ள பிராமணமயமாகிவிட்ட லிங்காயத்துகள். ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையும் இஸ்லாமியர்களின் கூட்டுத்தொகைக்கு குறைவுதான். மேலும் அவர்களும் ரகசியமாக இறைச்சி உண்கிறார்கள்.)
(அரசு வெளியிட்டுள்ள SES ஆவணத்தின்படி)கர்நாடகாவிலே மொத்தமாகவே அவர்கள் 17 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியரோ 70 லட்சம் பேர்கள் இருக்கிறார்கள். மைசூரில் இஸ்லாமியர் 2 லட்சத்துக்கு மேல் இருக்கிறார்கள். இங்குள்ள பிராமணர்களுக்கு சில ஆயிரங்களுக்குள்ளே இருப்பார்கள். ஜெயின்களின் மக்கள் தொகையோ 1.13%.
எதற்கு மக்கள் தொகையைக் குறிப்பிடுகிறேன்? வரிப் பங்களிப்பைச் சொல்லத்தான். பெரும்பான்மையினரே அதிகமாக உழைத்து வருமானத்தைப் பெருக்கி ஒரு மாநிலலத்தை, நகரத்தை வளமாக வைக்கிறார்கள். அரசுக்கு அதிகமாக வரியளிக்கிறார்கள். இங்கு என்ன சிக்கலென்றால் நிலமும் வணிக முதலீடுகளும் 1-3% கீழுள்ள மக்களிடம் அதிகமாக உள்ளது. கலாச்சார விழுமியங்கள் மீதும் அவர்களுக்கு கட்டுப்பாடு உள்ளது. விளைவாக பெரும்பான்மையினரை மாற்றுவழியில் சென்று முந்திக்கொண்டு ஆதிக்கம் செலுத்த முடிகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனம் மோனோபொலிதான். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களுக்கு புரதச் சத்து அதிகமான உணவு கிடைப்பதில்லை. தமது உணவு விருப்பங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடிவதில்லை.
இத்தரவைப் பாருங்கள் - தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு, ஆந்திராவுடன் ஒப்பிடுகையில் கர்நாடகாவில் இறைச்சி உண்போர் எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் அதுவொன்றும் சாதாரண தொகை அல்ல - மாநிலத்தின் 81.2% பேர்கள். 40,000 டன்களுக்கு மேல் கோழிக்கறியையும் மாட்டுக்கறியையும் மக்கள் கர்நாடகாவில் உண்கிறார்கள்.
ஆனால் இதை வெளிப்படையாக பெங்களூரில் பார்க்க முடியாது. இஸ்லமியர் வசிக்கும் பகுதியில் மட்டுமே காண முடியும். அங்குதான் இந்துக்களும் போய் பரவலாக இறைச்சியை உண்ண வேண்டும். அதாவது இறைச்சிக் கடைகளையும், இறைச்சி உணவுக் கடைகளையும் ஒருவித 'சேரியாக' பெருநகரத்திற்குள்ளேயே மாற்றி வைத்திருக்கிறார்கள்.
சிறுபான்மையினரின் (18%) கையில் இந்துப் பெரும்பான்மையினர் போவதும், அவர்களின் கைப்பாவைகளாக இவர்கள் மாறுவதும் இந்துத்துவாவின் செயல்திட்டம்தான். ஆனால் அப்போதும் கூட பண்பாட்டு அரசியல்தான் மக்களின் அன்றாட வாழ்வின் அடையாளத்தைத் தீர்மானிக்கிறது. அதன் குடுமி எப்போதும் சிறுபான்மையினர் கையிலே இருக்கிறது.
இன்னொரு சிக்கல் வெளிப்படையாக ஒன்றைச் செய்ய முடியாமல் போகையில் மக்கள் சுதந்திரமாக தம் வாழ்வை அனுபவிக்கும், இருத்தலை முழுமையாக உணரும் உரிமையை கைவிடுகிறார்கள். தமக்குள்ளேயே அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். சொந்த மண்ணில் குடியேறிகளாக உணர்கிறார்கள். முன்பு பிரிட்டீஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியர்கள் இப்படித்தான் உணர்ந்தார்கள் என்பதால் இதை ஒரு 'நவகாலனிய நிலை' என்றும் சொல்லலாம். நீங்கள் இதை பெரும்பாலான கன்னடர்களின் உடல்மொழியில் தென்படும் கூச்சத்தில், மென்மையில், சிறுபிரச்சினைகளுக்கு எல்லாம் உணர்ச்சிவசப்படும் போக்கில் காணலாம்.
பிடித்த உணவை வெளிப்படையாக உண்ணாமல் போவதன் பின்னால் கூட்டு உளவியலில் இவ்வளவு விசயங்கள் நடக்கின்றன. அது பின்னர் ஒரு நோய்மையாகவே மாறிப் போகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...