முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோலி: வயதில் பின்னுக்குப் போவது



நடந்து முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி மட்டையாடியதைப் பார்த்தபோது அவர் மீது எனக்கு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகமான மரியாதை ஏற்பட்டது. அவரது வயதுக்கும் தொழில்வாழ்க்கையில் உள்ள சரிவுக்கும் இது ஒரு மகத்தான சாதனை. இழப்பதற்கு ஏதுமில்லை என்பதாக ஆடினார். தொழில்நுட்பரீதியாகவும் மிகச்சிறந்த இடத்தில் இருக்கிறார் - என்னை மிகவும் கவர்ந்தது லாங் ஆனிலோ கவர் பகுதியிலோ சிக்ஸர் அடிக்க அவர் முன்பைப் போல இறங்கி வர இப்போது தேவையிருக்கவில்லை என்பது. அவரது இடதுகால் முன்னே வர பந்தின் திசைக்கு ஏற்ப அவரது காலும் தோளும் சரிய தலை மிகச்சரியான இடத்தில் இருக்க பந்தை அந்த நிலையில் இருந்து தரையோடு விரட்டவோ தூக்கி சிக்ஸர் அடிக்கவோ முடிகிறது. அவ்வளவு சீக்கிரமாகப் பந்தை கணித்துத் தயாராகி விடுகிறார். இந்த வயதில் ரோஹித் நன்றாக ஆடினாலும் அவரால் கூட இவ்வளவு மின்னல் வேகத்தில் தயாராக பந்தை எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருவர் ஆடும்போது அவர் பந்து வீச்சாளரின் மனதுக்குள் புகுந்து அவரைக் கட்டுப்படுத்துவதான ஒரு பிரமை ஏற்படும். இதற்கு முன்பு சச்சினும் லாராவும் இப்படி ஆடிப் பார்த்திருக்கிறோம். டிவுல்லியர்ஸும் கூடத்தான். அவர்களுக்கும் இவருக்கும் ஒரே வித்தியாசம் அவர்களால் மட்டையின் கிரிப்பை நினைத்த நேரத்தில் மாற்றி ஆடப்ப்போகும் ஷாட்டை மாற்ற முடியும் என்பது. ஒரே நிலையில் இருந்து நான்கு ஷாட்களை ஆட முடியும் என்பது. கோலியும் அந்த இடத்துக்கு வந்தால் அபாரமாக இருக்கும்.
இன்னும் இரண்டாண்டுகள் இப்படி ஆடினால் நிச்சயமாக ஐ.சி.சி ரேட்டிங்கில் மேலே போய்விடுவார். அவரால் இப்போதைக்கு டெஸ்டிலும் ஆட முடியும் என்றாலும் அது அவரது ஆட்டத்தின் துணிகரத்தை, சரளத்தை குறைத்துவிடும். பந்தை ஆப் ஸ்டம்புக்கு மேல் விடுவதிலே கவனம் செலுத்தி ஒருநாள், டி20யில் பின்னுக்குப் போய் விடுவார். அடுத்த இரண்டாண்டுகளிலும் அவர் வெள்ளைப் பந்தில் கவனம் செலுத்துவதே நல்லது. அதில் மிகப்பெரிய உச்சங்களை அவர் அடைய முடியும். எளிதாக 200 ஸ்டிரைக் ரேட்டில் ஆட முடியும். இந்த தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தைப் பார்க்கையில் வரப்போகும் ஐ.பி.எல்லில் ரன்களை வேகமாகக் குவிக்கப் போகிறார் என்பது தெரிகிறது.

ஒருவரால் ஸ்டம்புக்கு குறுக்கே விளாசாமல் இப்படி மின்னல் வேகத்தில் ஆட முடியும் எனப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. வயது என்பது ஒரு கற்பனைதானே, உடற்தகுதி இருந்தால் எதுவும் முடியும் என்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சச்சினின் மிகச்சிறந்த ஆட்டத்தை 35 வயதுக்கு மேல் தந்ததைக் கண்டது மீண்டும் கண்முன்னே வருகிறது. இந்த வயதில் அவர்களால் தம் ஆட்டத்தை எளிமைப்படுத்தி அதிலொரு துல்லியத்தைக் கொண்டு வருவதும் முடிகிறது. மிகக்குறைந்த ஆற்றலை ஒற்றைப் புள்ளியில் குவித்து சாதிக்கத் தெரிகிறது. கிட்டத்தட்ட குழந்தைகளைப் போல ஆடுகிறார்கள். சரியாகப் பந்தின் திசையைப் பிடித்து அதை அடிப்பதில், இன்பம் அடைவதில் கவனம் செலுத்துகிறார்கள். வயதில் பின்னுக்குப் போய் விடுகிறார்கள். ஆட்டதை விட இதைக் கவனிக்கவே மனம் துள்ளுகிறது.

(7 டிசம்பர் 2025)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...