முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டு பெருந்துன்பங்கள்

 

நவீன வாழ்க்கையை ஆக்கிரமித்திருக்கும் பெருந்துன்பங்கள் என்று இரண்டைச் சொல்வேன்:

1) நம் வாழ்க்கை மீது நமக்கு எந்தக் கட்டுப்பாடும் இருப்பதில்லை. பணம், சுற்றுச்சூழல், குடும்ப அமைப்பு, உறவுகள், உற்பத்தி உறவு என எதிலும் நமக்கென ஒரு முகமையோ அதிகாரமோ இல்லை. நாம் அதிலெல்லாம் இருக்கிறோமோ அல்லது மாயாவியாகத் திரிகிறோமா என்பதே தெரியவில்லை. இதனால் சதா ஒருவிதப் பதற்றத்திற்கு ஆட்பட்டிருக்கிறோம். அதைப் போக்க வன்முறை, போதை, கேளிக்கை, துய்ப்பு என உள்ளுக்குள் குறுகிக் கொண்டே போகிறோம், வெறுப்பாலும் கசப்பாலும் நிரம்பியிருக்கிறோம். நமது கொண்டாட்டங்கள் தப்பித்தல் மட்டுமே. அசலான நிம்மதியான தன்னம்பிக்கை ததும்பும் கொண்டாட்டங்கள் அல்ல.

2) நம் திறமைக்குப் பொருந்தாத வேலைகளைச் செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறோம். நீங்கள் டெலிவரி பாய்ஸைப் பாருங்கள். விற்பனைப் பிரதிநிதிகள், சேவைத் தொழிலில் உள்ளோரைப் பாருங்கள். அவர்களுக்கும் அவர்கள் செய்யும் வேலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. வேலைக்கு அதனளவில் முன்பிருந்த மரியாதை இன்றில்லை. வேலையென்பது அது ஈட்டித் தரும் பணத்தினால் மட்டுமே மரியாதையைப் பெறுகிறது. ஒரு டாஸ்மாக்கை நடத்துபவர் ஒரு ஆசிரியரை விட பலமடங்கு மேலானவர் இங்கு. சவுக்கு சங்கர் அவருடைய சொத்து மதிப்பினாலே ஒரு அரசியல் போராளியை விட அதிக அதிகாரமும் மதிப்பும் பெற்றவர். மோசடிப் பேர்வழிகள் தம் அதிகாரத்தாலும் பணத்தாலும் கொண்டாடத்தக்கவர்கள் ஆகிறார்கள். இப்படி எல்லாமே தலைகீழாகி விட நாம் நம் வேலையில் இருந்து வேலையைச் செய்யும் முன்பே வெளியேற்றப்படுகிறோம். அவநம்பிக்கையுற்று வேலையை அசிரத்தையாகச் செய்வோர் பெருகி விட்டனர். இது தமக்கான வேலையல்ல எனும் எண்ணமே அவர்களைச் செலுத்துகிறது.

இக்காரணங்களாலே பெரும்பாலானோர் ஒருவித சமூக மனவியாதிக்கு ஆட்படுகிறார்கள். கடும் வறுமையால் மக்கள் துன்புறும்போது அது பசிப் பிரச்சினை. போரினால் நிலையழியும்போது அது அழிவின் பிரச்சினை. ஆனால் தன்னிலிலும் பிறரிலும் பொருந்த முடியாமல் போகும்போது, வேலை, குடும்பம், சமூகம் எல்லாமே மனிதர்களை வெளியேற்றும்போது அது சமூகப் பைத்தியமாக வெடிக்கிறது. இந்தப் பைத்தியத்திற்கு மருந்து மாத்திரைகள் தீர்வல்ல.

சமூகப் பொருளாதார, சமூகக் கலாச்சார தீர்வுகளே நமக்குத் தேவை. மனிதர்களுக்கு தாம் வாழும் வெளியில் - அகவெளியிலும் புறவெளியிலும் - உரிமையும் முகமையும் வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.