முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"மனுஷ்ய புத்திரன்: எளிய மனங்களில் பாணன்" - மதிப்புரை - மா. அண்ணாமலை


 

நூல் : மனுஷ்ய புத்திரன்: எளிய மனங்களில் பாணன்

ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : உயிர்மை
பக்கங்கள் : 80
வகை : கட்டுரை
நூலாசிரியரான ஆர். அபிலாஷை முகநூலின் வழி அழுத்தமான, கவனக்குவிப்பை கோரும் நீண்ட கட்டுரைகளுக்காக எனக்குப் பரிச்சயம். அவ்வகையில் இந்நூலும் ராணுவ கட்டுப்பாட்டோடு எழுதப்பட்டது எனலாம். மனுஷை யாருக்குத்தான் பிடிக்காது?. எனக்கான அவரின் முதல் அறிமுகமே ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியே. நீண்ட வருடங்களுக்கு முன்பு பார்த்தது. அதில் பெருத்த சத்தத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார். அதைத் தாண்டியும் அவரிடம் ஈர்த்தது, குடைராட்டினத்தில் வரிசையாய் தொங்கவிடப்பட்ட நூலிழையாய், சீராக அங்குமிங்கும் அலைபாயும் கேசமே. முதலில் நான் அவரின் ஹேர் ஸ்டைலின் ரசிகன். பின்பே அவரின் கவிகளுக்கு. என் பள்ளி மாணவனொருவன் மூலம் அறிமுகமான அவரின் ‘காதலின் நூறு சம்பவங்கள்’ நூல்தான் எனக்கு அவரின் முதல் நூல். அதற்கு முன்னதாக முகநூலில் கவிதைகளை வாசித்திருக்கிறேன். இந்த அறிமுகங்களைக் கொண்டே அவருக்கான ஒரு கவிதையையும் புனைந்தேன். மனுஷும், ஆர். அபிலாஷும் பொறுத்துக் கொள்வார்கள் என நினைக்கிறேன்.
வெட்டிப்பறிக்கும் வலிகளினூடே
கொட்டிக் கிடக்கும் பணிகளுமுண்டு
தூக்கம் கேட்கும் கண்களுக்கு
உறக்கம் துறக்கும் உறவுமுண்டு
கரைகளின் தென்றலில்
அசைந்திடும் நாணல்கள் கவிழ்ந்திடும்
உன் கழுத்துத் திருப்பலின்
குடைராட்டின காரிருள் சிகைக்கு
ஓய்வொன்றறியா உடலிது
கவிதைகளைப் படைத்து படைத்து இளமையில் இருக்குது
குளிர் நிலவு கண்ணக் குழிகளில்
இதழ் பதித்தெழுதிட வேண்டும்
முத்தமெனும் கவிதை
அப்போதது காமத்தில் சேராது
மனுஷின் அன்பில் சேரும்.
உடலியக்க செயல்பாட்டில் அனுதினமும் சவால்களை சந்திக்கும் ஒரு மனிதன் இப்படி வருடம் முழுக்க சலிப்பின்றி எப்படி இயங்க முடிகிறது?. இது என்னை ஒரு பக்கம் ஆச்சரியமூட்டினாலும் மறுபக்கம் என் செயல்பாட்டின் மேல் கழிவிரக்கும் கொள்ளவும் செய்கின்றது. இவை யாவும் ஒரு சாதாரண வாசகனின் பார்வைகளே. இங்கிருந்து பல படிகள் உள்நோக்கி மனுஷ்ய புத்திரனின் கவி மனதை ஆராய்ந்து ஒரு தத்துவ ஞானியாய் எழுதியுள்ளார் ஆசிரியர். அது இந்நூலை வாசிக்க கடுமையாக்கினாலும் முப்பதாண்டு காலம் கவிதைகளை எழுதி வரும் கவி மனதில் ஊறுபவைகளை அப்படித்தானே அணுக வேண்டும் எனச் சொல்கின்றன.
கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் உளக்கிளர்ச்சியினூடே எழுதப்படும் மதிப்புரைகள் ரசிக மனப்பான்மையாய் நின்றுவிடும். இந்நூல் அவ்வாறு எழுதப்படவில்லை என்பதை வாசிக்கும் எவரும் உறுதியாக சொல்ல முடியும்.மேலும் நான் எழுதிய கவிதை நூல் மதிப்புரைகளில் பெரும்பாலானவை ரசிக மனப்பான்மையோடு எழுதப்பட்டவை என்பதாலும் நான் அம்முடிவிற்கு வருகிறேன். அதற்கு முன் அவ்வகையான கவிதைகளுக்கு பரிச்சயம் இல்லாத என்னை அவைகள் அவ்வாறு இயங்க வைத்தன. ஆர். அபிலாஷ் அவ்வாறு எங்கும் மனுஷை பார்க்கவில்லை. அவரே சொல்வது போல நுட்பமாக அணுகியுள்ளார்.
ஒரு கவிதையை எழுதி முடித்ததும் அக்கவிதையிலிருந்து எழுதிய கவிஞன் வெளியேறி விடுகிறான். பின்னர் ஏற்படுபவை எல்லாம் கவிதையின் அனுபவங்களே. நூலாசிரியர் மனுஷின் கவிதைகளில் அதன் ஆன்மாவை தேடிப்போகிறார். அதன் மூலம் மனுஷின் கவி மனக்கிடங்கை திறந்து பார்க்க முயல்கிறார். நூலின் ஒரு இடத்தில் அதற்கான உவமையை அழகாகக் கையாளுகிறார். அதை அவரின் மொழியில் படிப்பது நன்றாக இருக்கும். கவிஞராக, பேச்சாளராக, பதிப்பாசிரியராக, விமர்சகராக, பயணிப்பவராக இன்னும் பலதாய் இருப்பவராக எப்படி மனுஷால் இயங்க முடிகிறது என்பதற்கான ஒரு அழகான விளக்கம்.
மனுஷின் மன அமைப்பு சிறு சிறு அறைகளாக பகுக்கப்பட்ட ,அவற்றை இணைக்கிற ஊடுபாதைகள் கொண்ட ஒன்று என நினைக்கிறேன். ஒவ்வொன்றிலும் அவரால் இருக்க முடிகிறது. இவற்றின் அடையாளத்தில் எங்கோ கவிதைக்கான பாதாள அறை இருக்கிறது. சரியான / தேவையான நேரத்தில் அங்கு போய் இருந்து கொண்டு அவரால் தீவிரத்துடன் செயலாற்ற முடிகிறது. ஒரு கதவைத் திறந்து கொண்டு அறைக்குள் போவதைப்போல சுலபமாக அவரால் அந்த அறைக்குள் போக முடிகிறது என்பதை ஆச்சரியம். சமூக வலைதள அறை, காதல்களின் நட்புகளின் எளிய அலுப்பான அன்றாட உறவுகளின் அறை, அரசியல் அறை, செய்திகளின் சர்ச்சைகளின் வம்புகளின் அறை, கருத்துக்களின் அறை, அன்றாடங்களின் அறை என எங்கு நேரம் செலவிட்டாலும் தன்னை அங்கு அழித்துக் கொள்ளாமல் கவிதைக்கு மீண்டு வருகிறார். அது அவருடைய இயல்பு. அவரை ஒரே ஒரு அறையில் பூட்டி வைத்தால் போரடித்து செத்துவிடுவார். என்னால் இப்படி பத்து தலைகளுடன் இருக்க முடிவதில்லை. ஒருநாள் ஒன்றில் ஈடுபட்டால் அதில் மட்டுமே இருந்து அதிலேயே எறிந்து சாம்பலாகி விடுகிறேன். அதனால் நான் கவனமாக எழுத்தைத் தவிர பிற விஷயங்களில் உன்மத்தமாய் ஈடுபடாமல் இருக்க முயல்வேன். மனுஷ் இதற்கு நேர் எதிரான இயல்பு கொண்டவர். அவர் ஒரு ராவணன்.
தான் ஒரு படைப்பாளியாகவே இருந்தாலும் மனுஷை மிகுந்த கவனத்தோடு அதேசமயம் எதற்காக இந்நூல் எழுதப்படுகிறது என்ற அக்கறையோடு எழுதி இருக்கிறார். சரி நூலில் பேசி இருக்கும் முக்கியமான விஷயத்திற்கு வருவோம். இது முழுக்க முழுக்க மனுஷின் கவிதைகளை வெகுஜன பார்வையில் இருந்து விலக்கி அதன் மற்றொரு பரிமாணத்தை காட்டுவதற்கான திறப்பு. உதாரணமாக ‘கவிதையில் மிகைச் சொற்களின் அவசியம் – மனுஷ்யபுத்திரனை முன்வைத்து’ என்ற கட்டுரைக்கான கவிதையைக் கூறலாம்.
இந்த நகரத்தில்
நம் வழிகள்
ஒவ்வொரு நாளும்
வேறுவேறு இடங்களில் பிரிகின்றன
நமக்கிடையே மூடும் கதவுகள்
நமக்கிடையே வளரும் சுவர்கள்
நம் நீங்குதலின் நடுவில் மின்சார ரயில்
நமக்கு நாமே இல்லாமலாகும் அந்தியின் இருள்
நாம் அமர்ந்திருந்து எழுந்து வந்துவிட்ட
நிலங்களின் மீது
நிலவொளி இந்நேரம்
பெரும்தனிமையில் படர்ந்திருக்கும்
திரும்பும் வழியில்
நான் என் பொறுப்புகளை நினைத்துக் கொள்கிறேன்
நீ நிச்சயமற்ற உன் நாளையை நினைத்துக் கொள்கிறாய்
நம் வாழ்விடங்களுக்கு
அவரவர் வழியில் மீளும் துயரங்களெங்கும்
ஒரு சிறிய துயரம்
நம்முடன் ஒரு வார்த்தை பேசாமல்
மௌனமாக கூடவே நடந்து வருகிறது.
மனுஷ்ய புத்திரன் இக்கவிதையில், நாம், நமது, நமக்கானது என ஏன் சுட்டுப் பெயர்களை மீள மீள பயன்படுத்துகிறார் என்பதனையும்; அதனால் ஏற்படும் கவிதையின் ஓசைநயம், இசையொழுங்கு என ஒரு கவிதையை எவ்வாறு அலாதியாய் அணுகுவது என்பது பற்றியும் ஒரு அருமையான பாடம் எடுத்துள்ளார். இயல்பான ரசிக மனம் அதை காதலன், காதலியின் உளக்கிடக்கையாய் கடந்து போகச் சொல்லும். ஆனால் மனுஷின் உள்ளத்தை படித்த ஒரு உயர் வாசகனாலேயே அதன் அடுக்குகளை பிரித்து அதன் உட்பகுதியின் சுவைகளை ருசித்திடச் செய்ய முடியும். அவ்வகையில் இந்நூலில் இது ஒரு அற்புதமான கட்டுரை.
மொத்தத்தில் மனுஷின் கவிதைகளின் மீது ஆழ்ந்த அனுபவம் உள்ளோருக்கு விருப்பமான மற்றும் வேறோர் விதமான பார்வையாக இந்நூல் அமையும் என்பது என் எண்ணம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...