முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாவல் எழுத்தில் வந்துள்ள தேக்கம்?

 


புத்தகம் என்றாலே பண்டம்தான். அதைப் படைப்பாக்குவது வாசிப்பு. நல்ல வாசிப்பு நல்ல எழுத்தை உண்டாக்குகிறது. நல்ல எழுத்து நல்ல வாசிப்பை ஏற்படுத்துவதில்லை. நான் சொல்வது பரவலான வாசிப்பு கூட அல்ல. சிறுகுழுக்களுக்குள் நிகழும் தீவிர விவாதங்கள், பரிசோதனைகளுக்கான தேடல்கள், கடுமையான ஏற்புகள், மறுப்புகள், பரிசீலனைகள். துரதிஷ்டவசமாக இன்று சிறு வட்டத்துக்குள் நிகழும் கூட்டங்களுக்குள் கூட படைப்புகளை வாசித்து விமர்சிக்கும் திறன் உள்ளவர்கள் வருவதில்லை. அங்கும் அறிமுக வாசகர்களே அதிகம். அவர்களை வழிநடத்த ஆட்கள் மிகமிகக் குறைவு. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் நம் இலக்கிய இதழ்களில் புத்தக மதிப்புரைகள், இலக்கிய விவாதங்களில் வீழ்ச்சியைக் காண ஆரம்பித்தோம். அந்த இடத்தை சமூக, அரசியல், ஊடக விவாதங்கள் எடுத்துக் கொண்டன. பின்னர் சிறுபத்திரிகைகளிலும் துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளும் வெகுமக்கள் பண்பாடு, நாட்டுப்புறவியல் போன்ற விசயங்கள் மீதான விவாதங்கள் நடந்த அளவுக்குக் கூட இலக்கிய விவாதங்கள் இடம்பெறவில்லை என்பது என் புரிதல். மதிப்புரை எழுதுவோரும் ஒன்று தம் ஒருதலைப்பட்சமான கருத்தை எழுதுகிறார்கள், அல்லது போலியாகப் பாராட்டுகிறார்கள் அல்லது நூல்களின் கருத்துக்களையும் கதையையும் தொகுத்து எழுதுகிறார்கள். கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் கூட இன்று நூல்கள் நிராகரிக்கப்படுவதில்லை - வாசிப்புத்தன்மைக்காக மட்டுமே மறுக்கப்படுகின்றன. இதுவும் நம் வாசிப்பில் நேர்ந்துள்ள வீழ்ச்சிதான். 60-70களில் துவங்கி 90கள் வரையிலும் வெவ்வேறு விதமான மதிப்புரைகள், அளவுகோல்களின்படி செய்யப்பட்ட விமர்சனங்கள் அதற்கு அடுத்த இரு பத்தாண்டுகளில் மறைந்துவிட்டன. இந்த விமர்சகர்களை நாம் கேலி செய்தும், நிராகரித்தும் ஒழித்துவிட்டோம். இவர்களுடைய வழித்தோன்றல்கள் இன்று இலக்கியத்தில் அனேகமாக இல்லை. மீதமுள்ளோர் அன்றாட அரசியலைக் குறித்தும், கோட்பாட்டு அரசியலை வைத்தும் எழுதுகிறார்கள். ஏனென்றால் நம் சமூகச் சூழல் தீவிர இலக்கிய உரையாடல்களை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. அவற்றின் இடத்தில் நம் சூழல் வெகுஜனத்தன்மை கொண்ட எளிய உரையாடல்களைக் கொண்டு வந்தது. தீவிர எழுத்தாளர்களும் பதிப்பாளர்களாக, கல்ட் அமைப்பு ஒருங்கிணைப்பாளர்களாக, பேச்சாளர்களாக, அரசியல்வாதிகளாக மாறிவிட்டதில் அவர்களைப் பின் தொடர்ந்து போகவே அடுத்த தலைமுறையும் விரும்புகிறார்கள். இது ஏற்படுத்திய இடைவெளி மிகப்பெரியது. இதன் விளைவாக இன்று எழுதும் நாவலாசிரியர்களுக்கு எப்படி, எதை எழுதுவது, எதை லட்சியமாக வைத்து எழுதுவது என ஒன்றும் புரியவில்லை. அவர்கள் உலக இலக்கியம் படித்தும் எழுத வருவதில்லை. ஒரு வெற்றிடத்தில் இருந்து வருகிறார்கள். நம் இலக்கிய வரலாற்றில் வேறென்றுமே இல்லாத ஒரு நெருக்கடியை இன்று சந்திக்கிறோம்.

ஆகையால் இலக்கியம் பண்டமாக்கப்படுவது, அதன் தரம் குறைவதைப் பற்றி கவலைகள் அவசியமில்லாதவை. நமக்குத் தேவை நல்ல வாசிப்புக் கூட்டங்கள், நல்ல படைப்பாளிகளுக்கு அங்கீகாரம், பொருளாதார ஆதரவு, நாவலுக்கான நிதி நல்கைகள், தீவிர விவாதங்கள், உலக இலக்கிய உரையாடல்கள், மொழிபெயர்ப்புகள், ஊடக கவனம். நல்ல நாவல்கள் தாமாகவே தோன்றி நிலைகொள்ளும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.