வலதுசாரி பார்வையுடன் எழுதப்பட்ட ஒரு மோசமான கட்டுரை. நலத்திட்டங்களால் தமிழ்நாட்டு பொருளாதாரம் அழிவில் இருப்பதாக கட்டுரையாளர் சொல்வது உண்மையல்ல. வேறு எந்த மாநிலத்தையும் விட ஆரோக்கியமான நிலையில் தான் தமிழ்நாடு உள்ளது என்று தரவுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சி மற்ற மாநிலங்களை விட பலமடங்கு அதிகம். அது மட்டுமல்ல, நலத்திட்டங்கள் மக்களிடம் பணத்தைக் கொண்டு சேர்ப்பதால் மக்கள் செலவு செய்கிறார்கள், இதனால் சந்தையில் பணப்புழக்கம் ஏற்படுகிறது, பொருளாதாரம் வருகிறது என்று சொன்னவர் முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம். அதை இம்மாதிரி வலதுசாரிகள் ஏற்பதில்லை. அவர்கள் அதிக வரி போட்டு மக்களை வாட்டி, மொத்தப் பணத்தையும் பிடுங்கி கடனாகவும், கட்டமைப்புப் பணிகளுக்கான ஒப்பந்தங்களாகவும் தனியாருக்குக் கொடுப்பதைக் கொண்டாடுவார்கள். அதனால் நாட்டுக்கு கிடைக்கும் லாபம் என்ன, எவ்வளவு வருவாய் எனக் கேட்க மாட்டார்கள். இங்கிருந்து கடனாகப் பெற்ற பணத்தை வெளிநாடுகளில் முதலீடு பண்ணுகிறேன் என்று பணத்தை வெள்ளையாக்குவதைக் கேள்வி கேட்க மாட்டார்கள். நலத்திட்டங்களை மட்டும் 'இலவசம்' என விமர்சிப்பார்கள்.
ஆதி வள்ளியப்பன் தமிழ் ஹிந்துவில் கோணங்கி பற்றி எழுதிய அபத்தமான கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் கோணங்கி இனி சாகும் வரை இதழ் நடத்தக் கூடாது, எழுதக் கூடாது, அவருடைய இதழுக்கு யாரும் படைப்பு அனுப்பக் கூடாது, அதை யாரும் படிக்கக் கூடாது எனும் கணக்கில் எழுதியிருக்கிறார். ஒருவரை சட்டரீதியாக விசாரித்து தண்டிக்கலாம். ஆனால் அவரை சமூக விலக்கம் செய்ய வேண்டும், கரும்புள்ளி செம்புள்ளி குத்த வேண்டும் எனக் கோருவது மைக்ரோ லெவலில் செயல்படும் பாசிச மனப்பான்மை. மிகப்பழமையான இனக்குழு மனநிலை இது. அதுவும் பாலியல் குற்றங்களுக்கு மட்டுமே இப்படியான பஞ்சாயத்து தீர்ப்பை நம் மக்கள் வழங்குவார்கள். வேறெந்த குற்றமும் - திருட்டு, கொலை, தாக்குவது, சொத்துப் பறிப்பு, ஏமாற்றுவது, பொருளாதாரக் குற்றம் - இவர்களுடைய அகராதியில் ஊர்விலக்கம் கோரத்தக்க குற்றமாக இருக்காது. ஏனெனில் வேளாண் சமூகங்களில் பாலியல் உடலே நிலத்தின் பதிலீடு. பாலியல் கண்காணிப்பைக் கொண்டே சொத்தைக் கண்காணிக்க முடியும். அதனால் தான் பாலியல் அத்துமீறல் என வரும் போது ஊர் விலக்கத்தை அறிவிக்கிறார்கள். அதனாலே இதை நிலப்பிரபுத்துவ மனநிலை என்கிறேன்...
கருத்துகள்