நூல் : #me too சில விமர்சனங்கள்
ஆசிரியர் : ஆர். அபிலாஷ்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 96
வகை : கட்டுரை
#me too என்பது சமூக வலைத்தளங்களில் பிரபலமான இயக்கம். இதன் பிரதான நோக்கம் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கும் பெண்கள் தங்களின் மோசமான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது. இதன் மூலம் அக்குற்றங்களை செய்த ஆண்களை சமூகத்தின் முன் வெளிச்சம் போட்டு காட்டுவது. சரி, இதில் அபிலாஷிற்கு என்ன வேலை என்றால், மீ டு இயக்கம் எதற்காகத் தொடங்கப்பட்டது? என்னென்ன சிக்கல்களைப் பேசியது? எதைத் தவறவிட்டது? அவ்வியக்கத்தின் சந்தர்ப்பவாதங்கள், போலிகள், ஆணாதிக்கம், பெண்ணியம் என நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தர்க்கத்தோடு விளக்கியுள்ளார்.
பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாகிறார்கள். உண்மைதான், ஆனால் பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகிறார்களா? ஆண்களின் குற்றச்சாட்டுகளை ஏன் அவ்வியக்கம் ஏற்பதில்லை? போலவே குற்றம் சாட்டப்பட்டதற்காகவே அவர் குற்றவாளி இல்லை. அவரின் தரப்பு விளக்கங்களை ஏன் மீ டு இயக்கம் செவிமடுக்கவில்லை? மேலும் ஒரு பாலின ஈர்ப்பாளர்களை அது ஏன் கணக்கில் கொள்ளவில்லை? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அதற்கான பின்புலத்தை விளக்கிய விதத்தில் ஆர்.அபிலாஷ் இந்நூலை சுவாரஸ்யமாக்குகிறார்.
ஆரம்பத்தில் நூலை ஆர்வமின்றியே வாசிக்க தொடங்கினேன். ஆனால் இந்த மீ டு இயக்க பெண்கள் ஒரு ஆண் தன் விருப்பத்தை தெரிவிப்பதை எப்படி எல்லாம் தவறாகக் கொள்கிறார்கள் என்று விளக்கிய முறையில் நூலின் மீது பிடிப்பை கொண்டு வருகிறார். அதாவது அலுவலகத்தில் பணிபுரியும் தன் சக பெண் ஊழியரிடம் ஒரு ஆண் ‘உங்கள் ஹேர் ஸ்டைல் நல்லாருக்கு’ என்று சொன்னதற்கே அந்த நபரை பிடிக்காத பெண் அவருக்கு எதிராக #me too வில் பதிவிடுவதாக கவலை தெரிவித்துள்ளார். இதை போலி பெண்ணியக்கவாதிகள் பார்த்தியா! ஆண்கள் எல்லாருமே ரேப்பிஸ்டுகள்தான் என்று அதற்கு கொதித்தெழுவதாக கோபப்படுகிறார். இதே பெண்ணிக்கவாதிகள் பெண்ணால் பெண்ணுக்கு நேரும் பாலியல் தொந்தரவுகளை கண்டு கொள்ளாமல் செல்கிறார்கள் என்பதற்கு உதாரணங்களையும் பட்டியலிடுகிறார். கேள்விகளுக்கு உட்படுத்தாத எந்த அமைப்பும் சரியான பாதையில் செல்வதில்லை என்பதற்கு மீ டு இயக்கமும் இருப்பதை தரவுகளோடு விளக்கி இருக்கிறார்.
குறிப்பாக ஆணாதிக்கம் என்பது ஆண் மட்டுமே சம்பந்தப்பட்டதல்ல. எங்கெல்லாம் அடக்குமுறைகள், பழிவாங்கல்கள், அடிபணிய வைத்தல் நிகழ்கின்றதோ அங்கிருக்கிறது என்கிறார். கட்டுரையில் மீ டு இயக்கத்தின் போலித்தன்மையை வரலாற்றோடு இணைத்த விதம் அருமை. பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படுவதை பெரிதாய் பேசும் சமூகம் ஆண் குழந்தைகள், ஆண்கள் பெண்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுவதை பேசுவதில்லை; அப்படி நிகழ்ந்தால் அதை ‘அனுபவித்துவிட்டு போ’ என்று கடக்கிறது. உண்மை அதுவல்ல. அப்படி அந்த பெண்களிடம் அகப்படும் ஆண்கள் அப்பெண்களின் உத்தரவிற்கு கட்டுப்படாத போது கூர்மையான கருவிகளால் தாக்கப்படுதல்; விலங்குகளோடு உறவு கொள்ள மிரட்டப்படுதல்; மீறினால் ஆண் தன்னை பலாத்காரம் செய்ய வந்தான் என பகிரங்கப்படுத்துதல் என்பனவற்றை தரவுகளோடு கூறியதற்கு போலி பெண்ணியவாதிகளிடம் பதில் இருக்குமா எனத் தெரியவில்லை. உண்மையில் கட்டாயத்தின் பேரில் தான் படித்தேன். ஒரு சிறந்த எழுத்தாளராக என்னை ஈர்த்துக் கொண்டார் அபிலாஷ். வாசியுங்கள் அபிலாஷ் உங்களையும் தன் எழுத்துகளின் வழி ஈர்ப்பார். நன்றி சார்.
புத்தகத்தை இணையத்தில் வாங்க: புத்தகத்தை இணையத்தில் வாங்க: https://uyirmmaibooks.com/product/metoo-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
Comments