Skip to main content

நம் சட்டம் ஏன் திருமணம் மீறிய உறவைக் குற்றமாகப் பாவிப்பதில்லை?



உலகம் முழுக்கவே மக்கள் எந்த விழுமியத்தையும் முழுமையாக நம்புவதோ கடைபிடிப்பதோ இல்லை. பாலியல் ஒழுக்கமும் அப்படியானது. பாதிக்கு மேல் திருமணங்களைக் காப்பாற்றுவதே திருமணத்தை மீறிய பாலுறவுகள்தாம். எதாவது ஒரு கட்டத்தில் மீறாதவர்கள் இருக்க மாட்டார்கள்.
ஏனென்று கேட்போம். மனிதன் மட்டுமல்ல எந்த விலங்கும் பாலியல் ஒழுக்கத்தைத் தம் இயல்பாகக் கொண்டவர்கள் அல்லர். அதாவது பாலியல் ஒழுக்கம் இயற்கை நியதி அல்ல. அது குடும்பத்தை அமைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் - "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்" நூலில் ஏங்கல்ஸ் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட உருவாக்கப்பட்டது என்கிறார். நிலம் என் உரிமை என்பதை நிலைநாட்ட அது நிரந்தரமாக எனதாக இருக்க வேண்டும், அதற்கு எனக்கு என்று ஒரு குழந்தை வேண்டும், அதற்கு என்னிடம் மட்டுமே பாலுறவு கொள்ளும் மனைவி வேண்டும் என இந்தத் தர்க்கம் போகிறது. விவசாயச் சமூகத்தில் இதற்கான தேவை இருந்தது (ஆனால் அன்றும் இந்த ஒப்பந்தத்தை எல்லாரும் மீறி இருப்பார்கள். அதனால் தான் தே.பையா எனும் வசைச்சொல் எல்லார் நாவிலும் உள்ளது. இது ஒரு நிலவுடைமைச் சமூகப் பதற்றம்தானே ஒழிய ஆணாதிக்க மனநிலை அல்ல.) இன்று இந்த ஒப்பந்தத்தால் சொத்து சார்ந்த பயனில்லை - சொத்தைச் சேர்ப்பது மிகவும் கடினமாக இன்று உள்ளது. பணமும் பணவீக்கத்தால் சீக்கிரம் விரயமாகி விடும். சமூக மதிப்பு ஒன்றுதான் இன்று பாதுகாக்கப்பட வேண்டியது என நினைக்கிறோம்.

கூடுதலாக மற்றொன்றும் உள்ளது - நமது காதலரோ காதலியோ இணையரோ நம்முடன் மட்டுமே பாலுறவு கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் ஒரு பாதுகாப்பு உள்ளது; அது உறவை நீடிக்க சில நேரங்களில் உதவுகிறது; நோய்த்தொற்றில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறது. மனம் திடீர் திடீரென அலைபாயக் கூடியது, ஒரு அற்ப உறவுக்காக நாம் ஒரு சிறந்த உறவைத் தொலைக்க சில நேரங்களில் துணிச்சலைக் காட்டுவோம். பாலுறவு விரைவில் இதை நோக்கி நம்மைத் தள்ளக் கூடும். இன்னொரு பக்கம் ஒருவர் மனம் மாறும்போது அதற்கு இன்னொருவர் உடன்படவில்லை எனில் அவரிடம் இருந்து விடுதலை பெறவும், சொத்தையும் பணத்தையும் களவாடவும் வன்முறையைப் பயன்படுத்துவார்கள், கொலையும் செய்வார்கள். முதிர்ச்சி உள்ளோரும் நாணயமானவர்களும் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு திருமணத்தை மீறிய உறவுகளில் ஈடுபட்டால் ஒருவேளை சிக்கல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எப்படியும் பிரதான உறவு சாரம் இழக்கவே செய்யும். ஆகையால்தான் நாம் திருமணம் செய்கிறோமோ இல்லையோ குறைந்தபட்ச ஒழுக்கத்தை அதனுள் செயல்படுத்துகிறோம், ஏதோ ஒரு மெல்லிய ஒப்பந்த்தத்தைப் பின்பற்றுகிறோம்.

இதனிடையே எந்த நீடித்த உறவும் தன் நிறத்தை இழந்து வெளுத்துப் போகிறது. அலுப்பு ஏற்படுகிறது. என்னதான் தெரப்பி எடுத்துக் கொண்டாலும் சரி செய்ய முடியாது. விலகி விடலாம் என்றால் குழந்தை, உறவுகள் என ஏகப்பட்ட கால்விலங்குகள். ஆண்களுக்குக் கூடுதலாக வக்கீல் செலவு, ஜீவனாம்சம், ஒன் டைம் செட்டில்மெண்ட், குழந்தையைப் பறிப்பது என ஜட்டி வரைக்கும் உருவி விட்டு விடுவார்கள். இது நிம்மதியாக விவாகரத்து செய்ய முடியாமல் அவர்களைத் தடுத்து வைக்கிறது. இதனாலே இன்று பெண்களே அதிகமாக உலகம் முழுக்க விவாகரத்தை நாடுகிறார்கள். காரணம் கேட்டால் கணவனுக்கு ஆண்மை இல்லை, அவன் வேறு பெண்களை நாடுகிறான் எனப் பொய் சொல்வார்கள். நிஜக்காரணம் அலுப்பும் கசப்பும்தான். நம் சமூகம் திருமண உறவையும் விவாகரத்தையும் லகுவாக்கி விவாகரத்தைப் பாலினப் பாகுபாடற்றதாக்கவரை (gender neutral) இது தொடரும்.

நாம் இன்று மெல்ல மெல்ல இதைக் குறித்து குற்றவுணர்வில் இருந்து கூட மீண்டு வருகிறோம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள். பொதுவெளியில் ஒப்புக் கொள்ள மட்டும் முடியாதவிதம் ஒருவித கண்காணிப்பு நிலவுகிறது. பாலியல் கண்காணிப்பு ஒருவித அதிகாரத்தை நமக்கு வழங்குகிறது. ஆகையால் அதைப் பயன்படுத்துகிறோம். ஆகையால் ஒருவிதமாக கலந்து கட்டி வாழ்கிறோம்.

நாம் ஏன் செலிபிரிட்டிகளின் ஒழுக்கம் விசயத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறோம் என்றால் அவர்களை ஒழுங்குபடுத்த நமக்கு அது ஒரு உளவியல் வாய்ப்பை அளிக்கிறது என்பதால்தான். அதே நேரத்தில் இதே அக்கறையை யாராவது நம்மிடத்தே காட்டினால் பயந்து போவோம்? கேட்டால் செலிபிரிட்டுக்கு அந்தரங்கம் இல்லை, அரசியல் தலைவருக்கு அந்தரங்கம் இல்லை என்பார்கள். இங்கு எல்லாருக்கும் அந்தரங்கம் உண்டு - விஜய்க்கும், உதயநிதிக்கும், மோடிக்கும் கூட உண்டு; அவர்கள் பொதுவெளியில் இருப்பது ஒரு பணியை ஆற்ற. அவர்களைக் கண்காணிக்க, மதிப்பிட நமக்கு உரிமையில்லை.

பாலியல் ஒழுங்கீனம் வேறு, பாலியல் குற்றம் (பலாத்காரம், கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது, கொல்வது) வேறு எனும் தெளிவு கூட நமக்கு இல்லை.

சட்டம் பொதுவாக சமூகத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் நடைமுறை நிலையைக் கருத்திற்கொண்டே உருவாகும். திருமணத்தை மீறிய உறவு ஒரு குற்றமில்லை என்று சட்டம் ஏன் சொல்கிறது என்று நீங்கள் ஏன் இதுவரை ஒருமுறை கூட கேட்டதில்லை. நான் இதுவரை எங்குமே இதை யாரும் கேள்வி கேட்டுப் பார்த்ததில்லை. ஏனென்றால் இது குற்றமானால் திருமணம் செய்தவர்களில் பாதிக்கு மேலானவர்கள் எப்போதாவது சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். (இந்தப் பாதிக்கு மேல் என நான் சொல்வது கூட படிப்பவர்களின் மனநிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்பதற்குத்தான்.) ஆகையால் சட்டம் நீங்கள் கல்யாணப் பந்தத்துக்குள் இருந்தபடி 'தவறு' செய்யுங்கள், ஆனால் உங்கள் இணையரிடம் ஒரு நல்லுறவில், புரிதலில் இருந்துகொண்டு செய்யுங்கள் என்கிறது. உங்கள் பிறழ்வு அவர்களைத் தொந்தரவு செய்தால் அவர்கள் அதைக் காரணம் காட்டி அவர்கள் உங்களை விவாகரத்துச் செய்யலாம் என்கிறது.

சுருக்கிச் சொல்வதானால், 'திருமணத்துக்குள் ஒழுக்க மீறல் உங்களுக்குச் சிரமமாக இருந்தால் மட்டுமே விவாகரத்துக் கோருங்கள்' என்கிறது நீதிமன்றம், அது தன்னளவில் தவறில்லை, இயல்பானது என்கிறது. இப்போது நடிகர் விஜய் விசயத்துக்கு வருவோம் - அவர் ஒரு நட்சத்திர நடிகர் என்பதால் பல பெண்களின் அணுக்கம் அவருக்குச் சுலபத்தில் கிடைத்திருக்கும் என சிலருக்கு அவரிடம் பொறாமை இருக்கலாம். ஆனால் எந்தப் பணமோ அதிகாரமோ இல்லாதவர்களுக்கு கூட பல்வேறு உறவுகள் அமைவதைப் பார்க்கிறோம். ஆகையால் இது பொருட்படுத்தத்தக்கது அல்ல. திருமணத்தை மீறி எத்தனைப் பெண்களுடன் உறவு வைப்பதும் அவரது விருப்பம், உரிமை, அது சட்டப்படி குற்றமும் அல்ல, நடைமுறையில் நிகழாததும் அல்ல.

நம் விஜய் வெளிநாட்டுக் காருக்கு இறக்குமதி வரி செலுத்தாமலே அதற்காக பல வருடங்கள் நீதிமன்றம் சென்றவர். ஆகையால் அவர் தன் பாதிச் சொத்தை தன் மனைவிக்குக் கொடுக்க மனமில்லாமல் நீதிமன்றத்தில் இழுத்தடித்திருப்பார். அவரைப் போன்ற பணக்காரர்களுக்கு இது சுலபம். இழுத்தடித்தால் அமெரிக்கா வாழ் மனைவி வெறுத்துப் போய் பேரத்தில் ஒன் டைம் செட்டில்மெண்ட் குறையும் என வக்கீல் சொல்லியிருப்பார். அப்போதுதான் சங்கீதா தரப்பு தேர்தல் சமயம் என்பதால் அழுத்தம் போடுவதற்காக நீதிமன்ற ஆவணங்களை வெளியே விட்டிருப்பார்கள். இதில் திமுகவுக்கும் ஏதோ ஒரு பங்கிருக்க வேண்டும் - ஏனென்றால் திமுக ஆதரவாளர்களும் கட்சி உறுப்பினர்களும் நேரடியாகவே சங்கீதாவை ஆதரிப்பதைப் பார்த்தால் இது தேர்தல் பரப்புரையின் பகுதியோ எனத் தோன்றுகிறது. விஜய் ஆரரவுப் பெண் வாக்காளர்களைக் கசப்படைய வைக்கலாம் என அவர்கள் நினைக்கலாம். எனக்கு இந்த அரசியல் நரேட்டிவ் செட்டிங்கில் ஆர்வம் இல்லை.

நான் வலியுறுத்துவது ஒன்றைத்தான் - இந்தப் பிறழ்வை ஒரு பெரிய குற்றமாகப் பாவித்துச் சாடுவது நமது பாலியல் சுதந்திரத்தை எதிர்காலத்தில் பாதிக்கும். நாம் ஏற்கனவே மோசமான கண்காணிப்புச் சமூகமாக மாறி வருகிறோம். எதிர்காலத்தில் யார் எந்த சமூகத்து, மதத்து ஆளுடன் பிறழ்வுறவில், காதலுறவில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஒன்றிய, மாநில அரசுகள் கண்காணிக்கும் நிலை வரும் (அது இன்று மிக மிக சுலபமானது). விஜய்-சங்கீதா விவாகரத்து விசயத்தில் இப்போது நாம் காட்டும் கண்காணிப்பு ஆர்வம் நாளை நம் எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதகமாகும். அவர்கள் அன்று ஒரு மிகு-பாலியல் ஒழுக்க அரசால், கட்சியினரால், இயக்கங்களால் வேட்டையாடப்படுவார்கள். மேலும் இன்று விஜய்யை நோக்கி நீளும் கரம் விரைவில் உதயநிதி, மாநில அரசிலுள்ள அதிகாரிகள், அமைச்சர்கள், ஒன்றிய அரசு அமைச்சர்கள் மீதும் நீளும்.

இது ஒரு செயற்கையான நியதி, விழுமியம் என்பதைப் புரிந்துகொண்டு நாம் நம் மனப்பிறழ்வைக் கைவிட வேண்டும். சதா நேரமும் பாலியல் ஒழுக்கம் பற்றிக் கவலைப்படுவோருக்கு நிச்சயமாக தெரப்பி அவசியம்.

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...