திருமணத்தை மீறிய உறவைக் காரணம் காட்டி விவாகரத்து வாங்கலாம் எனும் நிபந்தனை பெண்களுக்கு மட்டுமே உண்மையில் சாதகமானது, ஆண்களுக்கு அல்ல - பிறழ்வைக் காரணம் காட்டி கணவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்தாலும் அப்பெண் புதிய திருமணத்திற்குள் போகும்வரைக்கும் ஜீவனாம்சம் வாங்க முடியும். ஒன் டைம் செட்டில்மெண்ட் வாங்க முடியும். இதைக் கொண்டு அவனைப் பழிவாங்க முடியும். ஆனால் ஆண் அதே தவறைச் செய்தால் அவன் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுத்து வக்கீலுக்கும் செலவு செய்து அழிய வேண்டும். கூடுதலாகத் தன் குழந்தையை அவன் அவளுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அவள் தன் காதலனை மணந்து கொண்டு தன் பிள்ளை அவனை அப்பா என்று அழைப்பதை அவன் வேடிக்கைப் பார்க்க வேண்டும். அவனால் அவளைப் பழிவாங்க முடியாது. எல்லாவற்றையும் இழக்க மட்டுமே முடியும். ஆகையால் முடிந்தவரைக்கும் அவன் மனைவியிடம் கெஞ்சித்தான் பார்க்கிறான். அவர்கள் உடன்படாதபோதே விவாகரத்துக்கு முன்வருகிறான். அப்போதும் அவனுக்கு இந்த நீதிமன்ற அமைப்பு தன் அண்டிராயரை உருவப் போகிற விசயம் தெரிந்திருக்காது; ஆனால் அவனது மனைவி படித்தவராகவும் தந்திரமானவராகவும் இருந்தால் இதையெல்லாம் ஏற்கனவே விசாரித்து வைத்திருப்பார். அவர் சகல தயாரிப்புகளுடனும் உற்சாகமாக களமிறங்குவார். அது மட்டுமல்ல விவாகரத்து வாங்கி 'செட்டில்' ஆனது கூந்தலைக் கத்தரிப்பது, ஆடையணியும் பாணியை மாற்றுவது ஆகியவற்றைச் செய்து சடங்கார்த்தமாக சில விசயங்களைச் செய்து தான் ஒரு புதுப்பெண்ணாகப் பிறந்துவிட்டதாக கற்பனையும் பண்ணிக் கொள்வார். ஆனால் ஆணோ சோர்ந்து போய் இருட்டறையில் முகட்டைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும். கடன், தனிமை, தோல்வி, அவமானம்... இதையெல்லாம் நான் நூற்றுக்கணக்கான கேஸ்களைப் பார்த்தும், பல ஆயிரம் பேர்களின் கதைகளைப் படித்தும் சொல்கிறேன்.
இன்று சவுக்கு சங்கரின் இணையராக உள்ள ஒரு பெண் சில வருடங்களுக்கு முன் தன் முதல் கணவரிடம் அவரது குழந்தையைக் கொடுக்க 35 லட்சங்கள் பெற்றார். இல்லாவிட்டால் அப்பிள்ளை சதா போதை மருந்து, கட்டப்பஞ்சாயத்து, விபச்சாரம் என வாழும் சவுக்கு சங்கரின் வீட்டில் வளர வேண்டி வந்திருக்கும். இதை அந்த அப்பாவின் கண்ணோட்டத்தில் இருந்து பாருங்கள், எவ்வளவு கொடூரமாக அவருக்கு இருந்திருக்கும். இன்று அதே பெண் சில நூறு கோடிகள் மோசடிச் சொத்துக்களின் அதிபதி (அதாவது பினாமி). சென்னையில் பல வீடுகள் வைத்திருக்கிறார் என நக்கீரன் பிரகாஷ் சொல்கிறார். சவுக்குடன் சேர்ந்து பணத்துக்காக மிரட்டலில் ஈடுபட்டதாக அவர் மீதும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. யோசித்துப் பாருங்கள் - இப்பெண் ஒரு சராசரி குற்றவாளி அல்லள். படித்த பெண், ஊடகத்தில் பணியாற்றிய பெண், ஆனால் பணத்துக்காக, வசதிக்காக தலைகீழாக மாறுகிறார். அவரிடம் தன் குழந்தையைக் கொடுக்காமல் காப்பாற்ற அந்த மனிதர் தன் மொத்தச் சேமிப்பையும் இழந்தார். அவரது வீட்டில் அவர் சொந்த உழைப்பில் வாங்கிய அறைகலன்கள் உள்ளிட்ட அனைத்தையும் அப்பெண் ஒருநாள் எடுத்துக் கொண்டு போய் விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அவர் லட்சக்கணக்கில் பணத்தை அழுது தன் குழந்தையுடன் வீடு வந்தால் அவர் வீட்டை காலியாக வைத்திருக்கிறார். கொஞ்சம் கூட நீதியுணர்வோ குற்றவுணர்வோ இல்லாத பெண்கள் இப்படி பலர் இருக்கிறார்கள். இது ஒரு தீவிர எதிர்நிலை வழக்குதான்; இதற்கு 50% சமானமான கொடூர ஆண் ஒடுக்குமுறை வழக்குகள்தாம் குடும்ப நல நீதிமன்றங்களில் இன்று வருவன. நம் சட்டம் எவ்வளவு பாரபட்சமானது எனப் பாருங்கள். இவர்களுக்கு எதிராக இச்சட்டத்தில் ஒன்றுமே பண்ண முடியாது. 35 லட்சம் தர முடியாவிட்டால் அக்குழந்தை இப்பெண்ணிடம்தான் வளர வேண்டும் எனச் சட்டம் சொல்லியிருக்கும். அவர் மீதான வழக்கைக் காட்டிக் கூட வாதிட முடியாது. அதாவது ஒரு பெண் கடுங்குற்றவாளியாக, மோசடிக்காரராக, பிள்ளையிடம் பாசமே இல்லாதவராக இருந்தாலும் கூட சட்டம் அவருக்கே குழந்தையை வளர்க்கும் அதிகாரத்தைக் கொடுக்கும். அவர் அதைப் பயன்படுத்தி தன் கணவரை மிரட்டி அதிகப் பணம் பெறுவார்.
இதில் விதிவிலக்கு பெரும்பணக்காரர்கள் மட்டுமே - அவர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்து தம் பிள்ளைகளைத் தம் வசம் வைத்துக் கொள்கிறார்கள், வழக்கும் பெரிய அளவில் அவர்களைப் பாதிக்காது. ஆனாலும் இதிலும் விதிவிலக்கான பணக்காரர்கள் உள்ளனர். அவர்கள் நிலைகுலைந்து போகிறார்கள். ஆனால் செட்டில்மெண்ட் கொடுத்ததும் பெரும்பாலும் பிரச்சினைகள் முடிந்து போகின்றன - அதாவது ஒழுக்கம், ஒழுங்கீனம், துரோகம் எல்லாம் பணத்தின் முன் காணாமல் போகின்றன. பணத்தை வாங்கியதும் எல்லா கோபமும் மறைகிறது. இந்த மாயமந்திரத்தைப் புரிந்துகொள்வது சிரமமானது.
நம் நீதிமன்றத்துடன் துணையுடன் நவீனத் திருமணத்தை மல்டி லெவல் மார்க்கெட்டிங்காக மாற்றிவிட்டார்கள்.
Comments