நான் அடுத்துச் சொல்லப் போவதெல்லாம் வெளியாகியுள்ள கணிப்புகளின் அடிப்படையிலே.
அனைத்து தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளின் சராசரியை எடுத்தால் திமுக கூட்டணி கிட்டத்தட்ட 120 இடங்களும், அதிமுக 80 இடங்களும் த.வெ.க 8-12 இடங்களும் பெறுகிறார்கள். அதாவது திமுகவினர் 2021 தேர்தலில் இருந்து ஒரு பின்னடைவைச் சந்தித்தாலும் ஆட்சியைத் தக்க வைக்கிறார்கள். வலுவான எதிர்க்கட்சி ஒன்று அமைகிறது. அதிமுக திமுகவுக்கு நெருங்கி வருகிறது. மற்றபடி அதிமுகவை த.வெ.க காலி பண்ணிவிட்டு இரண்டாவது இடத்தைப் பெறும் என்பது வெறுங்கனவாகிறது. அடுத்து 5-15 ஆண்டுகளில் நடைபெறும் தேர்தல்களில் ஒன்று அதிமுக முன்னேறி வந்து திமுகவைத் தாண்டிச் செல்லும் அல்லது த.வெ.க தன்னைத் தக்க வைத்து 25-30 இடங்களைப் பெறும் மூன்றாவது அணித் தலைமைக் கட்சியாகும்.
பொதுவாக சமூகத்தில் வரும் மாற்றங்கள் ஊடகங்களில் பெருக்கிச் சொல்லப்படுவதைப் போல ஊழிப்பேரலையாக வருவதில்லை. 1930களில் நீதிக்கட்சி தேர்தலில் நின்று வென்ற போது அது 17 வருடங்களாக ஆதிக்கம் பண்ணிய கட்சியாக இருந்தது. பின்னர் வந்த தேர்தல்களில் நீதிக்கட்சி தோற்று காங்கிரஸ் ஆட்சியமைத்து தி.க உருவாகி வளர்ந்து திமுக தோன்றி மெல்ல மெல்ல ஆட்சியைக் கவர 40 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. அலைகள் ஏற்கனவே உள்ள அலைகள் மீது தோன்றி மேலேறி வருமே அன்றி தனியாக சூன்யத்தில் இருந்து தோன்றுவதில்லை. புதிய மாற்றங்கள் (emergent) வரும்போது பழைய போக்குகளும் சமூகத்தில் வண்டலாக (residue) இருக்கும், படிவங்களாக போக்குகள் ஒன்றன் மீது ஒன்று படிந்து பிரித்தறிய முடியாதபடி கலவையாக இருக்கும் என்று பண்பாட்டு ஆய்வாளர் ரெய்மெண்ட் வில்லியம்ஸ் கூறுகிறார். இப்போக்குகளில் சில ஆதிக்கப் போக்குகளாகவும், சில புதிதாக எழுகிறவையாகவும், மீதமுள்ளவை ஏற்கனவே இருந்தவற்றின் எச்சப் போக்குகளாகவும் இருக்கும் என்கிறார். அதனாலே பின்நவீனம் தோன்றும்போது நவீனப் போக்குகளும் இருந்தன, மரபான எண்ணஙக்ளும் கூடவே செயல்பட்டன. இன்று நாம் குறிப்பிடுகிற பின்னைக் கருத்தியல் போக்குகள் (post-ideology) த.வெ.கவை விசையுற வைக்கின்றன என நாம் கூறினாலும் கருத்தியல் போக்குகளும் (திராவிட கட்சிகள்) பழமையான சிந்தனைகளும் (சாதி, தமிழ்த் தேசியம், தமிழ் மரபு, மதம் - நா.த.க மற்றும் சாதிக் கட்சிகள்) கூடவே சேர்ந்தே சமூக அசைவுகளைத் தீர்மானிக்கின்றன. அதாவது, கருத்தியலுக்குப் பிந்தைய வெற்றுக் கவர்ச்சி அரசியல், வெற்றுக் குறிப்பான்கள், இன்னும் ஆதிக்கப் போக்காகவில்லை.
இன்னொரு விசயம் இப்போக்குகளிலும் எவை ஆதிக்கப் போக்குகள் என்று இத்தேர்தலை வைத்துக் கூட யாராலும் நிச்சயமாகச் சொல்ல இயலாது என நினைக்கிறேன். வெல்லக் கூடிய கட்சியின் வாக்குகளை ஒரு புதிய அலை சிதறடிக்கிறது எனில் அந்த அளவில் இரண்டு போக்குகளும் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன என்று மட்டுமே சொல்ல இயலும். பாலினம், வயது, வெவ்வேறு பகுதிகள் சார்ந்து இந்த ஆதிக்கமும், புதுமையும், பழமையும் மாறுபடுகின்றன. த.வெ.க ஆதரவாளர் திமுக, அதிமுகவை பழமையென்று கருதலாம். பொதுப் பார்வையாளர் சீமானையும் மதவாதிகளையும் பழமையான மரபின் அடையாளம் எனக் கருதலாம். வெறும் எண்ணிக்கையின் அடிப்படையிலும் ஒரு முடிவுக்கு வர இயலாது.
முக்கியமான படிப்பினை: மாற்றங்களும் ஏற்கனவே உள்ள போக்குகளும் ஒன்றையொன்று ஆதிக்கம் செய்ய முயன்று கீழ்மட்டத்தில் புரண்டு புரண்டு ஏறி விழுந்து கொண்டிருக்கும்; மேலே ஏதோ ஒன்று ஆரவாரித்து விழும். இவை கலந்ததே சமூக விசை தோன்றுகிறது. மேலும், எந்தப் போக்கும் உடனடியாகத் தோன்றி ஆதிக்கம் செய்யாது. ஆதிக்கம் செய்பவை தொடரப் போவதில்லை. பின்னடைவு கொள்பவைக் காணாமல் போவதில்லை.
Comments