முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ருத்துராஜின் தலைமை

 


நேற்றைய சி.எஸ்.கே போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சன் ரைசர்ஸ்ஸ் அணி ஒரு சிரமமான ஆடுதளத்தில் கொஞ்சம் நெருக்கடியான நிலையில் இருந்தார்கள். கிளாஸன் வந்தது ஒரு முக்கியமான தருணம். அவர் அவுட் ஆகியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருக்கும். அவர் கிட்டத்தட்ட ரன் அவுட் ஆக வேண்டியது. தட்டுத்தடுமாறி தப்பித்தார். அவரை அது எரிச்சலூட்டியது. "என்ன இது! நம்ம ரேஞ்சுக்கு இப்படி டொக் டொக் என்று டொக்கு வைத்து ஒற்றை ஓட்டம் எடுக்கவே சிரமப்படவா?" என்று நினைத்து அவர் நூர் அஹமதை குச்சிகளை விட்டு இடத்தை உருவாக்கி மட்டையை நேராக வீசி பவுண்டரி அடித்தார். அப்போதுதான் அவர் அந்த ஆடுதளத்தில் அடிக்க வேண்டிய வேகத்தை உணர்ந்து கொண்டார். டைமிங் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் இப்படித்தான் அவர் ஒற்றை ஓட்டங்களை எடுக்க முடியாதபடி களத்தடுப்பு அமைய அவர் பந்தைத் தூக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த அதிரடி ஓட்டங்களே சன் ரைசர்ஸுக்கு ஒரு செலுத்துவிசையை அளித்தது. ஒருவேளை களத்தடுப்பாளர்கள் ஒற்றை ஓட்டத்தை அவருக்குக் கொடுத்திருந்தால் அந்த அடியைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்றும் கூட நினைத்தேன். கிளாஸனின் ஈகோ சீண்டப்பட்டது சன் ரைசர்ஸுக்கு மறைமுகமாக உதவியது. ஆனால் சி.எஸ்.கேயின் முக்கியமான தவறு அதுவல்ல - பந்து வீச்சுத் தேர்வுதான்.

கிளாஸன் சுழல் பந்தை செமையாக அடிக்கக் கூடியவர். சர்வதேச போட்டிகளிலே பலமுறை அவர் இந்திய சுழல் பந்தாளர்களைத் துவம்சம் பண்ணிப் பார்த்திருக்கிறேன். அவர் வந்ததும் பந்து என்னதான் நின்று வந்தாலும் ருத்துராஜ் அவர் சுழலர்களை விளாசுவதைக் கண்டதும் உடனே வேக வீச்சாளர் ஒருவரைக் கொண்டு வந்து பவுன்சர்கள், வைடான பந்துகள் என வீச வைத்திருக்க வேண்டும். முகேஷ், ஜான்ஸன் என யார் வேண்டுமானாலும் அந்த நேரத்தில் ரன் ரேட்டை இறக்கி அழுத்தத்தைப் போட்டிருப்பார்கள். ஆம், நூர் அஹமதின் பந்தில் மிட் விக்கெட்டில் கிளாசனின் ஒரு கேட்சை விட்டார்கள். அதேநேரம் அந்த ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை கிளாசன் அடிக்கச் சிரமப்படவில்லை. சரியாக மட்டையில் படவில்லை. அவ்வளவுதான். ருத்துராஜ் அப்போது பார்த்து கிளாஸனுக்கு சுழல் பந்தைக் கொடுப்பது சேட்டன்களுக்கு பரோட்டா பீப் கொடுப்பதைப் போன்றது என உணர்ந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து புதிய வியூகத்தைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரோ மேட்ச் அப் என்று சொல்வார்களே அதில் மோசமாகச் சொதப்பி விட்டார். சுழல் பந்து பரோட்டாவைக் கிளாஸன் கறியில் போட்டுத் தொய்த்து எடுத்து சாப்பிட்டு முடித்துவிட்ட பின் வேக வீச்சாளர்கள் வந்தபோது தட்டு காலியாகி விட்டிருந்தது. விளைவாக சி.எஸ்.கே ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வி. குவாலிபையருக்குப் போகும் வாய்ப்பு கிட்டத்த பூஜ்யம்.

ருத்துராஜின் பிரச்சினை அவரால் சரளமாக ரன் அடிக்க முடியாதது. இதனால் அவரது தன்னம்பிக்கை குலைந்து விட்டது. நெருக்கடியான் நேரத்தில் புத்திசாலித்தனமாக புது விசயங்களை முயல்வதற்கு மூளை இயங்க மாட்டேன் என்கிறது. பயத்தில் உறைந்து போகிறார். ரிஸ்க் எடுக்காமல் ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தின் படி கள அமைப்பு, பந்து வீச்சுத் தேர்வு எல்லாம் செய்கிறார்.
அணிக்குள் சாம்சனின் தேர்வும் அவரைத் தொந்தரவு செய்கிறது என நினைக்கிறேன். கண்முன்னால் ஒரு போட்டியாளர் இருக்க அவரால் எப்படி தன்னம்பிக்கையுடன் தலைமை தாங்க முடியும்?

கிளாஸன் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸ்டார்தான். எங்குமே இல்லாத இடத்தில் இருந்து எப்படி தன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்!

ருத்துராஜ் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் தலைமை தாங்குவதற்கு மின்னணு எந்திரத்தில் மோசடிதான் செய்ய வேண்டும். ஆனால் இருங்கள் கிரிக்கெட்டில் துரதிஷ்டவசமாக மின்னணு எந்திரம் இல்லையே!

கருத்துகள்

Boomi இவ்வாறு கூறியுள்ளார்…
CSK ல தோனியை விடுவிப்பதற்கே இன்னும் 2 வருடம் ஆகும். ருத்ராஜ் - அய் நீக்குவதற்கு இன்னும் 5 வருடம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...