நேற்றைய சி.எஸ்.கே போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சன் ரைசர்ஸ்ஸ் அணி ஒரு சிரமமான ஆடுதளத்தில் கொஞ்சம் நெருக்கடியான நிலையில் இருந்தார்கள். கிளாஸன் வந்தது ஒரு முக்கியமான தருணம். அவர் அவுட் ஆகியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருக்கும். அவர் கிட்டத்தட்ட ரன் அவுட் ஆக வேண்டியது. தட்டுத்தடுமாறி தப்பித்தார். அவரை அது எரிச்சலூட்டியது. "என்ன இது! நம்ம ரேஞ்சுக்கு இப்படி டொக் டொக் என்று டொக்கு வைத்து ஒற்றை ஓட்டம் எடுக்கவே சிரமப்படவா?" என்று நினைத்து அவர் நூர் அஹமதை குச்சிகளை விட்டு இடத்தை உருவாக்கி மட்டையை நேராக வீசி பவுண்டரி அடித்தார். அப்போதுதான் அவர் அந்த ஆடுதளத்தில் அடிக்க வேண்டிய வேகத்தை உணர்ந்து கொண்டார். டைமிங் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் இப்படித்தான் அவர் ஒற்றை ஓட்டங்களை எடுக்க முடியாதபடி களத்தடுப்பு அமைய அவர் பந்தைத் தூக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த அதிரடி ஓட்டங்களே சன் ரைசர்ஸுக்கு ஒரு செலுத்துவிசையை அளித்தது. ஒருவேளை களத்தடுப்பாளர்கள் ஒற்றை ஓட்டத்தை அவருக்குக் கொடுத்திருந்தால் அந்த அடியைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்றும் கூட நினைத்தேன். கிளாஸனின் ஈகோ சீண்டப்பட்டது சன் ரைசர்ஸுக்கு மறைமுகமாக உதவியது. ஆனால் சி.எஸ்.கேயின் முக்கியமான தவறு அதுவல்ல - பந்து வீச்சுத் தேர்வுதான்.
கிளாஸன் சுழல் பந்தை செமையாக அடிக்கக் கூடியவர். சர்வதேச போட்டிகளிலே பலமுறை அவர் இந்திய சுழல் பந்தாளர்களைத் துவம்சம் பண்ணிப் பார்த்திருக்கிறேன். அவர் வந்ததும் பந்து என்னதான் நின்று வந்தாலும் ருத்துராஜ் அவர் சுழலர்களை விளாசுவதைக் கண்டதும் உடனே வேக வீச்சாளர் ஒருவரைக் கொண்டு வந்து பவுன்சர்கள், வைடான பந்துகள் என வீச வைத்திருக்க வேண்டும். முகேஷ், ஜான்ஸன் என யார் வேண்டுமானாலும் அந்த நேரத்தில் ரன் ரேட்டை இறக்கி அழுத்தத்தைப் போட்டிருப்பார்கள். ஆம், நூர் அஹமதின் பந்தில் மிட் விக்கெட்டில் கிளாசனின் ஒரு கேட்சை விட்டார்கள். அதேநேரம் அந்த ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை கிளாசன் அடிக்கச் சிரமப்படவில்லை. சரியாக மட்டையில் படவில்லை. அவ்வளவுதான். ருத்துராஜ் அப்போது பார்த்து கிளாஸனுக்கு சுழல் பந்தைக் கொடுப்பது சேட்டன்களுக்கு பரோட்டா பீப் கொடுப்பதைப் போன்றது என உணர்ந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து புதிய வியூகத்தைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரோ மேட்ச் அப் என்று சொல்வார்களே அதில் மோசமாகச் சொதப்பி விட்டார். சுழல் பந்து பரோட்டாவைக் கிளாஸன் கறியில் போட்டுத் தொய்த்து எடுத்து சாப்பிட்டு முடித்துவிட்ட பின் வேக வீச்சாளர்கள் வந்தபோது தட்டு காலியாகி விட்டிருந்தது. விளைவாக சி.எஸ்.கே ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வி. குவாலிபையருக்குப் போகும் வாய்ப்பு கிட்டத்த பூஜ்யம்.
ருத்துராஜின் பிரச்சினை அவரால் சரளமாக ரன் அடிக்க முடியாதது. இதனால் அவரது தன்னம்பிக்கை குலைந்து விட்டது. நெருக்கடியான் நேரத்தில் புத்திசாலித்தனமாக புது விசயங்களை முயல்வதற்கு மூளை இயங்க மாட்டேன் என்கிறது. பயத்தில் உறைந்து போகிறார். ரிஸ்க் எடுக்காமல் ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தின் படி கள அமைப்பு, பந்து வீச்சுத் தேர்வு எல்லாம் செய்கிறார்.
அணிக்குள் சாம்சனின் தேர்வும் அவரைத் தொந்தரவு செய்கிறது என நினைக்கிறேன். கண்முன்னால் ஒரு போட்டியாளர் இருக்க அவரால் எப்படி தன்னம்பிக்கையுடன் தலைமை தாங்க முடியும்?
கிளாஸன் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸ்டார்தான். எங்குமே இல்லாத இடத்தில் இருந்து எப்படி தன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்!
ருத்துராஜ் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் தலைமை தாங்குவதற்கு மின்னணு எந்திரத்தில் மோசடிதான் செய்ய வேண்டும். ஆனால் இருங்கள் கிரிக்கெட்டில் துரதிஷ்டவசமாக மின்னணு எந்திரம் இல்லையே!
கருத்துகள்