முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ருத்துராஜின் தலைமை

 


நேற்றைய சி.எஸ்.கே போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சன் ரைசர்ஸ்ஸ் அணி ஒரு சிரமமான ஆடுதளத்தில் கொஞ்சம் நெருக்கடியான நிலையில் இருந்தார்கள். கிளாஸன் வந்தது ஒரு முக்கியமான தருணம். அவர் அவுட் ஆகியிருந்தால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்திருக்கும். அவர் கிட்டத்தட்ட ரன் அவுட் ஆக வேண்டியது. தட்டுத்தடுமாறி தப்பித்தார். அவரை அது எரிச்சலூட்டியது. "என்ன இது! நம்ம ரேஞ்சுக்கு இப்படி டொக் டொக் என்று டொக்கு வைத்து ஒற்றை ஓட்டம் எடுக்கவே சிரமப்படவா?" என்று நினைத்து அவர் நூர் அஹமதை குச்சிகளை விட்டு இடத்தை உருவாக்கி மட்டையை நேராக வீசி பவுண்டரி அடித்தார். அப்போதுதான் அவர் அந்த ஆடுதளத்தில் அடிக்க வேண்டிய வேகத்தை உணர்ந்து கொண்டார். டைமிங் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் இப்படித்தான் அவர் ஒற்றை ஓட்டங்களை எடுக்க முடியாதபடி களத்தடுப்பு அமைய அவர் பந்தைத் தூக்கி அடிக்கத் தொடங்கினார். இந்த அதிரடி ஓட்டங்களே சன் ரைசர்ஸுக்கு ஒரு செலுத்துவிசையை அளித்தது. ஒருவேளை களத்தடுப்பாளர்கள் ஒற்றை ஓட்டத்தை அவருக்குக் கொடுத்திருந்தால் அந்த அடியைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்றும் கூட நினைத்தேன். கிளாஸனின் ஈகோ சீண்டப்பட்டது சன் ரைசர்ஸுக்கு மறைமுகமாக உதவியது. ஆனால் சி.எஸ்.கேயின் முக்கியமான தவறு அதுவல்ல - பந்து வீச்சுத் தேர்வுதான்.

கிளாஸன் சுழல் பந்தை செமையாக அடிக்கக் கூடியவர். சர்வதேச போட்டிகளிலே பலமுறை அவர் இந்திய சுழல் பந்தாளர்களைத் துவம்சம் பண்ணிப் பார்த்திருக்கிறேன். அவர் வந்ததும் பந்து என்னதான் நின்று வந்தாலும் ருத்துராஜ் அவர் சுழலர்களை விளாசுவதைக் கண்டதும் உடனே வேக வீச்சாளர் ஒருவரைக் கொண்டு வந்து பவுன்சர்கள், வைடான பந்துகள் என வீச வைத்திருக்க வேண்டும். முகேஷ், ஜான்ஸன் என யார் வேண்டுமானாலும் அந்த நேரத்தில் ரன் ரேட்டை இறக்கி அழுத்தத்தைப் போட்டிருப்பார்கள். ஆம், நூர் அஹமதின் பந்தில் மிட் விக்கெட்டில் கிளாசனின் ஒரு கேட்சை விட்டார்கள். அதேநேரம் அந்த ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை கிளாசன் அடிக்கச் சிரமப்படவில்லை. சரியாக மட்டையில் படவில்லை. அவ்வளவுதான். ருத்துராஜ் அப்போது பார்த்து கிளாஸனுக்கு சுழல் பந்தைக் கொடுப்பது சேட்டன்களுக்கு பரோட்டா பீப் கொடுப்பதைப் போன்றது என உணர்ந்து கொஞ்சம் ரிஸ்க் எடுத்து புதிய வியூகத்தைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரோ மேட்ச் அப் என்று சொல்வார்களே அதில் மோசமாகச் சொதப்பி விட்டார். சுழல் பந்து பரோட்டாவைக் கிளாஸன் கறியில் போட்டுத் தொய்த்து எடுத்து சாப்பிட்டு முடித்துவிட்ட பின் வேக வீச்சாளர்கள் வந்தபோது தட்டு காலியாகி விட்டிருந்தது. விளைவாக சி.எஸ்.கே ஜெயிக்க வேண்டிய போட்டியில் தோல்வி. குவாலிபையருக்குப் போகும் வாய்ப்பு கிட்டத்த பூஜ்யம்.

ருத்துராஜின் பிரச்சினை அவரால் சரளமாக ரன் அடிக்க முடியாதது. இதனால் அவரது தன்னம்பிக்கை குலைந்து விட்டது. நெருக்கடியான் நேரத்தில் புத்திசாலித்தனமாக புது விசயங்களை முயல்வதற்கு மூளை இயங்க மாட்டேன் என்கிறது. பயத்தில் உறைந்து போகிறார். ரிஸ்க் எடுக்காமல் ஏற்கனவே போடப்பட்ட திட்டத்தின் படி கள அமைப்பு, பந்து வீச்சுத் தேர்வு எல்லாம் செய்கிறார்.
அணிக்குள் சாம்சனின் தேர்வும் அவரைத் தொந்தரவு செய்கிறது என நினைக்கிறேன். கண்முன்னால் ஒரு போட்டியாளர் இருக்க அவரால் எப்படி தன்னம்பிக்கையுடன் தலைமை தாங்க முடியும்?

கிளாஸன் உண்மையிலேயே ஒரு சூப்பர் ஸ்டார்தான். எங்குமே இல்லாத இடத்தில் இருந்து எப்படி தன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தினார்!

ருத்துராஜ் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் தலைமை தாங்குவதற்கு மின்னணு எந்திரத்தில் மோசடிதான் செய்ய வேண்டும். ஆனால் இருங்கள் கிரிக்கெட்டில் துரதிஷ்டவசமாக மின்னணு எந்திரம் இல்லையே!

கருத்துகள்

Boomi இவ்வாறு கூறியுள்ளார்…
CSK ல தோனியை விடுவிப்பதற்கே இன்னும் 2 வருடம் ஆகும். ருத்ராஜ் - அய் நீக்குவதற்கு இன்னும் 5 வருடம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.