"பெட்ரோ பரோமா" நாவலைக் குறித்து இப்படியொரு தகவல் உள்ளது: "Initially, the novel met with cool critical reception and sold only two thousand copies during the first four years." அதாவது நாவலை ஆரம்பத்தில் வாசகர்களுக்குப் பிடிக்கவில்லை. சரியான கவனம் இல்லை. அதனால் 2000 பிரதிகள் இரண்டாண்டுகளில் விற்பனையாகின. இதுவே தமிழ்நாடு என்றால் இந்த 2000 பிரதிகள் எவ்வளவு பெரிய வெற்றியாகக் கொண்டாடப்பட்டிருக்கும்? மெக்ஸிக்கர்களுடன் ஒப்பிடுகையில் நாம் எவ்வளவு பண்பாட்டு நுண்ணுணர்வற்றவர்களாக இருக்கிறோம் பாருங்கள். இந்த நாவல் அங்கு எழுதப்பட்டபோது நாம் தியாகராஜ பாகவதருக்கு அடுத்தபடியாக எம்.ஜி.ஆரை சூப்பர் ஸ்டாராக ஏற்றுக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். "பொன்னியின் செல்வன்" போன்ற மேலோட்டமான பொழுதுபோக்கு நாவல்கள் தொடராக கல்கியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருந்தன. பு.பி போன்றவர்கள் அப்போது எழுதி சாப்பிட முடியாமல் சினிமாவில் எழுத முயன்று பசியில் இறந்தார்கள். சி.சு செல்லப்பா கல்லூரி கல்லூரியாக பண்டல் பண்டலாகத் தன் நூல்களைத் தூக்கிக் கொண்டு போய் விற்று கஷ்டப்பட்டார்.
இந்தளவுக்கு மலிவான ரசனை கொண்டவர்கள் எப்படி ஒரு காலத்தில் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், திருக்குறள் எல்லாம் இயற்றினார்கள் என்பது ஒரு புரியாத புதிராக உள்ளது.
1950களில் மெக்ஸிக்கோவும் ஒரு மூன்றாம் உலக நாடுதான். நாம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம்? உண்மையில் பணத்திற்கும் வளர்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
19ஆம் நூற்றாண்டு முதலே வாசிப்பு, படிப்பு குறித்த விழிப்புணர்வும் வலுவான பண்பாடும் மெக்ஸிக்கோ மக்களுக்கு இருந்தாலும் 1920களில் நடந்த மெக்ஸிக்கப் புரட்சிதான் திருப்புமுனை. புரட்சிக்குப் பின் வந்த அரசு பொதுக் கல்வியிலும் நூலகங்களிலும் பெரும் முதலீட்டைச் செய்தது. கல்வி ஒரு தேசிய இலக்கானது. அதை அவர்கள் ஒரு புரோஜெக்டாகவே எடுத்து நடத்தினார்கள். José Vasconcelos எனும் கல்வி அமைச்சர் இதில் முக்கியப் பங்காற்றினார். மெக்ஸிக்கோ மட்டுமல்ல க்யூபா, கோஸ்டா ரிக்கா போன்ற நாடுகளிலும் கல்வியிலேயே பெருமை கண்டார்கள். 1940-70கள் வரை அங்கு இதனால் ஒரு மத்திய வர்க்க அதிசயம் எனப்படும் சமூகப் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இம்மக்கள் நம்மூர் மத்திய வர்க்கத்தினரைப் போல சினிமா, சம்பாத்தியம், பைக், டிவி எனப் பெருமைப்படாமல் கல்வியையும் வாசிப்பையும் முதன்மைப்படுத்தினார்கள். படிக்கும் பழக்கம் அங்கு தனிமனிதப் பெருமையாகப் பார்க்கப்பட்டது. வாசிப்பு குடிமக்களின் கடமையாகியது. குடிமைச் சமூகத்தின் அடையாளமாகியது. இந்திய அரசோ சுதந்திரத்துக்குப் பின் தொழில்மயமாக்கலிலும் தேசிய உணர்வைப் பரப்புவதிலும் மட்டுமே கவனம் செலுத்தியது. கல்வி பின்னுக்குச் சென்றது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியால் வளம் பெற்ற மாநிலங்களில் மட்டுமே (தனியார் முதலீட்டாலும் பொதுக்கல்வியாலும்) கல்வியும் அதை ஒட்டிய வளர்ச்சியும் சாத்தியப்பட்டது என்றாலும் நம் துவக்கமே தவறாக இருந்ததால் தேசப்பற்றும் செல்வச் செழுமையுமே குடிமை அடையாளமாகியது. மேலும், பொதுக்கல்வி, வாசிப்பு, சுயசிந்தனை, பண்பாடு மீது ஒன்றிய அரசு நீண்ட காலமாகவே பாராமுகம் காட்டுவதால் ஏற்றத்தாழ்வான, பண்பற்ற சமூகத் திரள்கள் இங்கு தோன்றின. இந்தியர்கள் மீது உலகெங்கும் அருவருப்பு நிலவுகிறது - எங்கு போனாலும் குடித்து நடனமாடி பான்பராக் துப்பி குப்பையை வீசி எரிச்சலூட்டுகிறார்கள். அவர்களுக்குத் தம்மிடம் உள்ள பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியவில்லை. பணமுள்ள நாட்டுப்புறத்தான்களாக படித்த இந்தியர்கள் உள்ளனர் என்றால் பணமில்லாதவர்களோ சினிமாவினால் தம் வாழ்க்கையின் பிரச்சினைகள் தீரும், வெறுமைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறார்கள்.
ஒரு நாடு மூன்றாம் உலகத் தேசமாக இருந்தாலும் அது முன்னேற அவசியம் பரவலான கல்வியும் வாசிப்பைக் குறித்த பெருமிதமுமே. இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சி மேலானதாக இருந்ததாலும் பண்பாட்டையும் அறிவையும் பொறுத்தமட்டில் நாம் காட்டான்களாகவே இருக்கிறோம். ஒரு சிறிய நாட்டில் உள்ள ஜனங்களைப் போல உயர்-பண்பாட்டு ஆர்வத்துடன் இவ்வளவு பெரிய நாட்டில் வாழ்வோரால் முடியவில்லை. எப்போதும் பண்பாடு, அடையாளம் எனப் பெருமைப்படும் தமிழர்களோ மட்டமான ஒரு நடிகரை முதல்வராக்கி அவரைப் பார்த்துப் பெருமைப்படுகிறார்கள். அதிலும் இளைஞர்களில் கணிசமானோருக்கு 'சங்கம்' எனும் வார்த்தையே தெரியாது. அவர்கள் தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கோ தமிழைத் தவறின்றி படிக்கவே தெரியாது. ஆங்கிலம் அதைவிட மட்டம். ஆங்கில மீடியாவிடம் ஒரே ஐ ஸ்பீக் இங்கிலீஷ், ஐ வாக் இங்கிலீஷ்தான். (வீட்டுக்குள் புகுந்து கட்டையெடுத்து அடிக்க மட்டுமே தெரியும்).
நாம் நிஜத்தில் தமிழ்நாடு அல்ல, சினிமா நாடுதான். இம்மாநிலத்தின் பெயரை அப்படி மாற்றினால் நான் புகார் சொல்ல மாட்டேன்
கருத்துகள்